விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label அதிகாரிகள். Show all posts
Showing posts with label அதிகாரிகள். Show all posts

Friday, 30 September 2011

அதிகார வர்க்கம் இருக்கும் வரை,வாச்சாத்திகளும் இருக்கும்!

கால தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.1992-ம் ஆண்டில் வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது ஏவி விடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத, பாலியல் தாக்குதல்களுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர்தான் செத்தவன்களை போக உயிரோடு இருக்கும் 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதில் 198 பேருக்கு உடனடியாகவே பிணை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லாமல் 17 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி பழங்குடி கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்திய 269 பேரும் தமிழக அரசின் வனத்துறை,காவல்துறை,வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இந்த பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட 269 பேரில் எவனும் மக்களுக்கு எதிராக இப்படிபட்ட அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று எதிர்ப்போ,மறுப்போ தெரிவிக்கவில்லை.அந்த அளவிற்கு கடைமை உணர்ச்சி! இவர்களில் எவனிடமும் நம் சொந்த மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதும் இருக்கவில்லை.ஈழத்தமிழர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும்,சிங்கள ராணுவத்திற்கும்,இந்த அயோக்கியர்களுக்கும் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.


அரசு வேலையில் சேரந்தவுடனே, தான் சராசரி மனிதன் என்பதையே முற்றாக மறந்துவிடுகிறார்கள் என்பதைதான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.எந்த மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்களோ அந்த மக்களைத்தான் இவர்கள் தமது பொது எதிரியாக கருதும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.இப்படி இவர்களை பயிற்றுவிப்பது யார்?


இவ்வளவு பெரிய பயங்கரவாத, பாலியல் தாக்குதலை இந்த அளவுக்கு திட்டமிட்டு,இவ்வளவு பேரை திரட்டி செய்ய முடிகிறது என்றால்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுதான் இது பற்றி தெரியுமா? இவர்களின் மேலதிகாரிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதா? அப்போது இருந்த அரசுக்கும் தெரியாதா?இவர்களுகெல்லாம் தெரியாமல்தான்,இவர்களுக்கு உடன்பாடு இல்லாமல்தான்,இவர்களின் அனுமதி இல்லாமல்தான் இப்பயங்கரவாத பாலியல்தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இவர்களை பாதுகாக்க இவர்களின் உயர் அதிகாரிகளும்,அரசாங்கமும் முயன்றது எதற்காக? இப்படி இவர்களை பாதுகாக்க முயன்றது குற்ற நடவடிக்கையா இல்லையா? இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை, யார் கொடுப்பது?
இப்படிப் பட்ட சம்பவங்கள் வாச்சாத்தியோடு முடிந்துவிட்டதா அல்லது முடிந்துவிடுமா? அண்மையில் பரமக்குடியில் இதே  போன்ற திட்டமிட்ட தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டதே! அது எந்த வகையான தாக்குதலாம்? இது மட்டுமா அன்றாடம் ஒவ்வொரு போலிசு நிலையத்திலும் சிறிதும்,பெரிதுமான சட்டத்திற்கு புறம்பான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவருகின்றனவே அவைகளை இந்த தீர்ப்பு தடுத்துவிடுமா?

ஒவ்வொரு அரசு அலுவலகமும்  மக்கள் விரோத கூடாரமாகத்தானே திகழ்கின்றன.இலஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலாவது எந்த ஒரு காரியத்தையாவது மக்கள் சாதித்துவிட முடியுமா? லஞ்சம் கொடுப்பது என்பது நடுத்தர,மேட்டுக்குடி கும்பலை பொருத்தவரை அவர்களின் வாழ்வையே சிதைத்துவிடும் அளவுக்கு பெரிய விவகாரமில்லை.ஆனால் ஒருநாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெரும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு இந்த லஞ்சம் சதாரண விவகாரமா?உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் அங்கேயே துடிதுடித்து செத்துபேகிறார்களே இதற்கும் வாச்சாத்திக்கும் என்ன வேறுபாடு உள்ளது! வாச்சாத்தி பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின், மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கும் இதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

மொத்தமாக பார்த்தால் அதிகாரவர்க்க கும்பலே மக்கள் மீது அணுதினமும் தனது வெறுப்பையும்,ஆத்திரத்தையும் கொட்டி தீர்க்கிறது.மக்களை பழிவாங்குகிறது.இவைகள் அனைத்தும் தனி மனித பண்புகளோ,குற்ற செயல்களோ அல்ல.இது இந்த கட்டமைப்பின் பண்பாகும்.அது வெளிப்படும் விதத்தில்,வடிவத்தில்தான் வேறுபாடு உள்ளதே தவிர,அதன் சிந்தனா முறையில் எவ்வித மாற்றமும், வேறுபாடும் இருப்பதில்லை.ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்டு விடுவதால் அந்த அலுவலகத்தில் லஞ்சம் அன்றோடு ஒழிந்துவிடுவதில்லை.அதற்கு நேர்மாறாக பிடிபட்டவனுக்கு திறமையில்லை என்று ஏளனம் செய்யப்பட்டு மேலும்,மேலும் நுட்பமாக, முன்னிலும் தீவிரமாக லஞ்சம் தலைவிரித்தாடி மக்களை பழிவாங்குகிறது.

ஆகவே இப்படி பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நாம் அகமகிழ்ந்து போவதற்கு எதுவுமில்லை! மக்களுக்கு விரோதமாக மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே, சட்டப்படி பயிற்றுவிக்கப்படுகின்ற அதிகாரவர்க்க கும்பல் இருக்கும்வரை இப்படிபட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்!

சட்டமன்ற,நாடாளும் மன்ற உறுப்பினர்கள் முதல் அரசுத்துறையில் பணி புரியும் அனைவரும் மக்களால் தேர்ந்தேடுக்க படுபவர்களாகவும்,அவர்கள் தவறு இழைக்கும் போது திருப்பி அழைக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப் படுபவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும்.மொத்தத்தில் அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் கைகளுக்கு வரவேண்டும்.இப்போது இருக்கும் அனைத்து அதிகார அமைப்புகளும் குழிதோண்டி புதைக்கப் பட வேண்டும்.இது நடக்காத வரை வாச்சாத்திகளை எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்புகளாலும் தடுத்து விட முடியாது!