விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label ஜெயா. Show all posts
Showing posts with label ஜெயா. Show all posts

Monday, 13 October 2014

ஜெயாவுக்கான தண்டனை ஊழலுக்கு அல்ல; ஆணவத்திற்கு….

செப்- 27 கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாராவில் ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்கா அளித்த தீர்ப்பு இந்தியா முழுக்கவே பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதுவரை இந்திய வரலாற்றில் பொருப்பில் இருந்த முதல்வர் ஒருவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்திய மாநிலங்களிலேயே வேறு எவரும் கற்பனையிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத வல்லமை மிக்கவர் என்று அவரும், அவரின் கட்சியினராலும் கருதப்படுபட்டவருக்கு நான்கு ஆண்டுகால சிறை தண்டனை!

ஜெய சர்வ வல்லமை மிக்கவர் என கருதிக்கொண்டதில் ஏதேனும் பொருள் உண்டா இல்லையா என்பதை செப்-27-க்கு பின்னர் தமிழகத்தில் ஜெயாவின் அமைச்சரவை சகாக்களும், அவரின் கட்சியினரும் வெளிப்படுத்திய உணர்வுகளிலிருந்தே நாம் கணிக்க முடியும்.

ஜெயாவை சகல வல்லமை மிக்க கட்சித்தலைவராக, முதல்வராக மட்டுமல்ல, அவரின் சகாக்கள் அவரை சகல வல்லமை மிக்க கடவுளாகவும் சித்தரித்ததை தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அவரின் கட்சியினர் செய்துக் காட்டிய செயல்களில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடிந்தது.இந்த உணர்விலேயே 1990- களுக்கு பின்னர் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த ஜெயாவுக்கும், அவரது சகாக்களுக்கும் இந்தத் தீர்ப்பு நம்பமுடியாததாக, தமது கால் நூற்றாண்டு கால இனியக் கனவு கலைந்து போன அதிர்வலைகள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்,வெளிப்படுவதில் வியப்பேதும் இல்லை.










ஜெயாவின் இந்தப் பெரும்கனவுக்கும், இதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் அவரின் கட்சிகாரர்களுக்கு மட்டுமே பங்கிருப்பதாக நாம் கருதிவிடமுடியாது,கூடாது. அவரை சகல வல்லமை மிக்க தலைவராக மட்டுமல்ல கடவுளாகவும் உசுப்பேற்றி விட்டதில், அவருக்கு வாக்களித்த தமிழக பெருங்குடி மக்களுக்குத்தான் மிகமுக்கிய பங்கிருக்கிறது.
அவர் திரைப்பட நடிகையாக இருந்து, அதன்மூலம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்தவராக ,கட்சியின் பொதுச்செயலாளராக, அவரின் வாரிசாக 1991-ல் ஆட்சிக்கட்டிலை பிடித்த போதே, அவரை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்த போதே தமிழ்ச்சமூகம் தனது தரத்தை வெளிப்படுத்திக் கொண்டது.

சமூக அக்கறையோ,அரசியல் ஈடுபாடோ இவைகளில் எவ்வித அனுபவமோ அற்ற ஒருவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர் அதிலும் ஆசைநாயகி என்கிற சமூகத்தால் இழிவாக சித்தரிக்கப்படும் நிலையில் இருந்த ஒருவரை தமிழக முதல்வராக இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்த தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுதான், அவர் தன்னை சகல சக்திமிக்கவராக, நிலவுகிற சமூகத்தின் சட்டம்,அரசு இயந்திரம்,நீதிமன்றம்,பாராளுமன்றம்,சட்டமன்றம் இன்னபிற ….. இவை எதுவுமே தன்னைவிட உயர்ந்தது அல்ல.இவைகள் அனைத்தும் தனக்கு கீழ்பட்டவையே . இந்த அமைப்புகள் எதுவும் தன்னை எதுவும் செய்துவிடமுடியாது என்ற ஆணவமே அவறை மிக அப்பட்டமான தவறுகளை கூட எவ்வித ஒளிவும்,மறைவும் இன்றி அனைத்தையும் மிக வெளிப்படையாக செய்ய வைத்தது.

ஜெயாவின் கட்சியினர் மட்டுமல்ல , அரசு அதிகாரிகள் கூட அவர் நினைத்த போதெல்லாம் பந்தாடப்பட்டனர்.அவரின் அபிமானத்தை, நம்பிக்கையை பெறுவதற்கான விசுவாசத்தின் அளவுகோல் என்னவென்று தெரியாமல் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் நித்தம்,நித்தம் ஆடித்தான் போயினர்.அந்த அளவுகோலை இலக்கண சுத்தமாக அறிந்த சிந்தாந்தவாதி இந்தியாவில் சோ மட்டுமே என்றால், அதன் வடிவ அடையாளம் தற்போதைய முதல்வர் மட்டுமே.
ஜெயாவிற்கு சட்டவிரோதமாக வந்த பணத்தை சட்டபூர்வமாக்கும் செயல் படாத பங்குதாரர்களாக 1990- களில் சசிகலா,இளவரசி,சுதாகரன் என்றால் இப்போதைய செயல்படும் பங்குதாரர் OPS.இந்த உண்மையும் ஒரு காலத்தில் வெளிச்சத்திற்கு வரும்……..

தானே சகலத்திலும் வல்லமை மிக்கவர் என்ற ஜெயாவின் ஆணவமே அவரின் தவறுகளுக்கான மூலமாகவும்,தண்டனைக்கான காரணியாகவும் அமைந்துவிட்டது.இந்த உண்மை பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளடங்கியிருப்பதை நாம் தெளிவாக காண முடியும்.
1.ஜெயா முதல்வராக 1991- ல் பதவியேற்ற போது அவரின் சொத்துமதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 –க இருந்தது.

அதுவே 1996- ல் பதவி காலத்தின் முடிவில் அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 – ஆக உயர்ந்துவிட்டிருந்தது.

2.இந்த சொத்துமதிப்பு உயர்வுக்கான வருமானம் தனக்கு சரியான வழியில்தான் வந்தது என்பதை ஜெயாவால் நீதிமன்றத்தில் எந்த நிலையிலும் நிரூபிக்கவே இயலவில்லை.மாறாக அவைகள் தவறான வழியில்தான் வந்தது என்பதற்கான ஆதாரங்களை மிகத்தெளிவாக எவ்வித குழப்பமோ ,ஒளிவு மறைவோ இன்றி வெளிப்படையாக வைத்திருந்தார்.அந்த அளவிற்கு ஆணவம் அவரின் கண்களை மறைத்திருந்தது.

3.அதே போன்று தனது வீட்டில் வைத்திருந்த 27.588 கிலோ தங்க நகையில் வருவாய்க்கு பொருந்தாத வகையில் 20 கிலோ தங்கத்திற்கு அவரால் கணக்கேதும் காட்ட இயலவில்லை.

இப்படி அவரின் ஒளிவு, மறைவற்ற மிகவும் துணிச்சலான தவறுகளின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம்,
சட்டத்திற்குட்பட்ட,சமூக நியதிகளுக்கு உட்பட்டவராக தன்னை ஜெயா கருதியிருந்தால் 1 ஏக்கர் விளைநிலத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கும் , 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வெறுமனே ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும் வாங்கியதாக சட்டபூர்வமாகவே பதிவு செய்திருப்பாரா?

எனவேதான் அவர் தனது ஆணவத்திற்கு கொடுத்த விலைதான் ஊழல் வழக்கில் அவர் அடைந்த இந்த சிறை தண்டனை.

ஆனால் அவரின் கட்சிக்காரர்களோ இன்னமும் அவரை உசுப்பேற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே மொட்டையடித்து, தேங்காய் உடைத்து………………………..

அல்லாகு அக்பர்- அல்லாவே அனைத்திலும் பெரியவர் என்ற திருக்குரானின் புனித வாசகத்தை அவரின் கட்சியில் உள்ள சில கழிசடைகள் சிறைவளாகத்தில் ஓதுகின்றன. அதாவது ஜெயாவே அல்லாவிலும் பெரியவர் என்று……….
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக தாங்களே தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்பதை மறந்து சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆடியக்கூத்துக்களை நாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஜெயா சகாக்களின் இந்த ஆட்டங்களும் ,கூத்துக்களும் எதிர்பாரா நிகழ்வுகள் அல்ல.பொய்வழக்கு, வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா,கருணாநிதி குடும்பம் ஊழல் செய்யவில்லையா போன்றக் கேள்விகள் அவர்கள் கேட்காமல் இருந்திருந்தால் மட்டுமே நாம் அதிசயப்பட வேண்டும்.

ஆனால் பிரச்சனையே தம்மை முற்போக்குகள் , புரட்சியாளர்கள் என்றுக் கருதிக் கொள்வோர் ஜெயா மீதான தீர்ப்பு பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் ஊதிப்பெருக்கி காட்டுவதுதான்!

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஒரு வக்கீல் குமாஸ்தாவோ (அ) முதலாமாண்டு சட்டகல்லூரி மாணவரோ படித்தால் கூட மிக எளிமையாக இவ்வழக்கில் தீர்ப்பு சொல்லிவிட முடியும்.பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டாலும் மிகச்சாதாரண வழக்கு இது என்பதை ஒரு பாமரன் கூட சொல்லிவிட முடியும்.ஆனால் இவர்களோ இந்த தீர்ப்புக்கு பின்னால் பெரும் பூகம்பங்கள் ஒளிந்திருப்பதாக சரடு விடுகின்றனர்.தமது பங்குக்கு இவர்களும் ஜெயாவை அசகாய சூரராக ஊதிப்பெருக்கிக் காட்டி ஆனந்த மடைகின்றனர்..
அரசியல் பழிவாங்கல்,கார்ப்பரேட்டுகளின் சதி,காங்கிரசின் சதி,கருணாநிதியின் சதி,பாஜக விடம் மோதியதின் எதிர் விளைவு ……………….  போன்ற வெளிப்படுத்தல்களின் மூலம் இவர்கள் தம்முடைய மேதாவித்தனத்தை காட்டுவதாக கருதிக்கொள்கினறார்கள்.

எது எப்படியோ இவ்வளவு கலேபரத்திலும் இவர்கள் ஜெயாவும், அவரை சார்ந்தோரும் அனைவரும் தம்மையே அறிந்தும்,அறியாமலும் ஒரு உண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியாவில் அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அங்கமும் நிர்வாக எய்ட்ஸ் நோயான லஞ்சம்-ஊழலால் பாதிப்பிற்குள்ளாகிவிட்டதைப் போன்றே நீதித்துறையும் ஆகிவிட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தமது குற்றவழக்குகளில் நீதித்துறையை விலைக்கு வாங்கியதை போன்றே இந்த வழக்கிலும் அதை விலைக்கு வாங்கிவிடலாம்,மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்ற அவர்களின் கணக்குத்தான் தவறாகிப் போனது.இதுதான் இவர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

நீதிபதி குன்கா வளைந்து கொடுக்காத நேர்மையாளராக கூட இருக்கலாம்,இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறை என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது சாராயம் காய்ச்ச அனுமதி தந்துவிட்டு அதற்கு மாமுலும் வாங்கும் போலிசு,சில நேரங்களில் கள்ளச்சாராய கும்பலை பிடித்ததாக கூறி பரப்பரப்பாக ஊடகங்களுக்கு செய்தி தரும் நடவடிக்கைக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு!.

                 

Wednesday, 2 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-5 (அண்ணாவின் பரிணாமம் ஜெயா))

சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தில் ,தமிழ்ச்சமூகம் நிலபிரபுத்துவ சமூக வளர்ச்சியை நெருங்கிக்கொண்டிருந்த போது, பார்ப்பனியம் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சியாளர்களின் செல்வாக்கைப் பெற்றது.வட இந்தியாவில் பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் தமிழ்ச்சமூகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.இதனோடு தமிழ்ச்சமூகம் பார்ப்பனியத்தின் அடிப்படையில் சமூகம் நால்வருண அடிப்படையில் முதல் முறையாக பல நூறு சாதிகளாக கூறுபோடப்பட்டது.


வட இந்திய சமூகங்களைப் போன்று தமிழ்ச் சமூகம் ஆரியபார்ப்பனர்களால் வெற்றிகொள்ளப்பட்ட சமூகமல்ல.மாறாக ஆளுவோரை வென்றெடுத்து அவர்களின் மூலமே பார்ப்பனியம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் மூலம் பார்ப்பனியம் திணிக்கப்பட்டது, ஆட்சியாளர்களின் பார்ப்பனிய மயமாக்கம் ஆகியவை அன்றைய தமிழ்ச் சமூகத்தால் துரோகமாக கருதப்பட்டதன் விளைவுதான் களப்பிரர்களின் ஆட்சியாகும்.




பார்ப்பனியத்தை சகிக்காத தமிழ்ச் சமூகம் அதை தூக்கியெறிந்து,பார்ப்பன மதத்திற்கு எதிராக சமண,பௌத்த சமயங்களை தமக்குரியதாக வரித்துக்கொண்டனர்.தமிழர்கள் ஏற்றுக்கொண்ட சமண,பௌத்த சமயங்களும் பண்பாட்டு துறையில் பார்ப்பனியத்தைசாதியத்தை - நிராகரித்தனவே அன்றி, பொருளாதாரத்தில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே ஏற்றிருந்தன.


எனவே,களப்பிர ஆட்சியாளர்களும்,சங்க காலத்தின் இறுதிக்கட்டத்தில், தமிழகத்தை  ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் ஏனைய குலக்குழு ஆட்சியாளர்கள் திணித்திருந்த ஆசிய சொத்துடைமை வடிவத்தையே மாற்றமின்றி ஏற்று நடைமுறைப்படுத்தினர்.


சமணமும்,பௌத்தமும் பண்பாட்டு ரீதியில் புராதன பொதுவுடைமை சமூகத்தின் மேலாண்மையின் கூறுகளையே கொண்டிருந்தன. ஆசிய சொத்துடைமை வடிவத்தில் நிலங்கள் அனைத்தும் சமூக உடைமையாக இருந்தது என்பது புராதன பொதுவுடைமைச் சமூகத்தின் கூறாகும்.ஆசிய சொத்துடைமை வடிவத்தில் அரசனின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் சமூக உடைமை போன்று தோற்றம் அளித்தாலும், உண்மையில் அது பார்ப்பனிய மேல்வருணத்தாரின் ஆதிக்கத்தையே அடிப்படையாக கொண்டது.அரசன் நால்வருணத் தருமத்திற்கு கட்டுப்பட்டவன் என்பதால் மேல்வருணத்தாரே நிலங்களின் உண்மையான உடைமையாளர்களாக விளங்கியதை இவர்கள் காணத்தவறினர்.இந்த தவறான புரிதல் காரணமாக சமூக அடித்தளமான சொத்துடைமையில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே அவைகள் அங்கீகரித்தன.பண்பாடு என்பது சமூக அடித்தளத்தின் தன்மை,தேவைகளுகேற்பவே எழக்கூடியதாகும்.இதன் காரணமாக சமண,பௌத்த சமயங்கள் போதித்த பண்பாட்டு வடிவங்கள் சமூக அடித்தளத்திற்கு முரணாக அமைந்திருந்தது.இதன் மூலம் சமண,பௌத்த சமயங்கள் போதித்த வாழ்வியல் முறைகள் கற்பனையானதாகவும்,அகநிலை விருப்பமும் உடையதாகவே அமைந்திருந்தன.

களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான மக்களின் தேவை என்றாலும் இவர்களும் சமூக அடித்தளத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்களுக்கு உரிய அடிப்படையை கொண்டிருப்பதும்,அவைகளை வளர்த்துக்கொள்வதும் தவிர்க்கவியலாத அம்சங்களாகும்.


ஆசிய சொத்துடைமையின் அடிப்படையிலிருந்து சமூகம் ஏற்றத்தாழ்வாக வளர்வது,வளர்க்கப்படுவது என்பது தவிர்க்கவியலாத நிகழ்வுகளாகும்.


தவிர்க்க வியலாத இந்த அம்சத்திலிருந்து ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தை தழுவிக்கொள்வது என்பதும் இயல்பான செயலே ஆகும்.இதற்கு ஏற்ப சமூகம் சாதியாக கூறுபோடப்படுவது நடந்தேறுவதும் நிச்சயமான ஒரு நிகழ்வே ஆகும்.


களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தின் ஒரு அங்கமானதும்,சமூகம் சாதியாக வளர்ந்து நிலைபெற்றதும் போன்ற நிகழ்வுகள் களப்பிர ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்படும் நிகழ்வுக்கு அடிகோலியது.

களப்பிரர்கள் தமது ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து, இறுதி வரையிலும் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே கடைபிடித்து நிலைபெறச்செய்தனர்.இதன் மூலம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் நிரந்தரமாக தடுத்து நிறுத்தினர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த களப்பிரர்கள், தம்மை ஆட்சியாளர்களாக உயர்த்திய தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு நிரந்தர முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதன் வாயிலாக பார்ப்பனியத்துடனான போரில், தமிழர்களின் முதல் தோல்வியை தொடங்கி வைத்ததோடு, தமது அழிவையும் உறுதி செய்துகொண்டனர்.


இன்றிலிருந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிலைநாட்ட, அதன் பிரதிநியாக இருந்து பாண்டியர்களும்,பல்லவர்களும், களப்பிரர்களையும்  அவர்களோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும், அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் அழித்தொழித்தனர்.


மேற்கண்டவாறு களப்பிரர்களின் அழிவுக்கு பின்னர், தந்தை பெரியாரின் காலத்தில் தான் தமிழர்களின் தன்மானத்திற்கும் ,சுயமரியாதைக்கும் பார்ப்பனியத்தால் ஏற்பட்ட இழிவுக்கு எதிராக மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டது.


ஆனால் தந்தை பெரியாரின் இந்தப் இயக்கமும் உள்முரண்பாடுகளையும்,பலவீனங்களையும் கொண்டதாகவே இருந்தது. சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் தான் ரயத்துவாரி, ஜமீன்தாரி ஆகிய வடிவங்களாக மாற்றப்பட்டது.


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவிய ஆசிய சொத்துடைமை வடிவம் மாற்றப்பட்டாலும், இதுவும் ஆங்கில ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தை, சுரண்டலை உறுதிப்படுத்தும் உள்ளடக்கத்தையே கொண்டிருந்தது. இந்த உள்ளடக்கம் காலனி ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பார்ப்பனிய பண்பாட்டுக்கும் அதன் மேலாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும்அமைந்திருந்தது.

நிலங்கள் அனைத்தும் முன்பு மன்னர்களுக்கு உடைமையாய் இருந்தற்கு மாறாக, இப்போது அந்நிலங்கள் ஜமீன்தார்கள் வசம் சென்றது. இவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பனிய நலன்களுக்கும் உகந்தவர்களாக இருப்பதே இப்பொருப்பிற்கான தகுதியாக கொள்ளப்பட்டது. ஏனென்றால் பார்ப்பனியம், பார்ப்பனர்கள் மற்றும் அதற்கடுத்த மேல் சாதிகளின் நலன்களுக்கு மட்டுமல்ல, அதுவே தமதுநலன்களுக்கும் மிகச்சிறந்த கவசம் என்பதாலேயே, அதை பாதுகாக்கும் பணியையும் ஆங்கில ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முதன்மையான அடிப்படையாக நிலமே விளங்கியது. அதோடு இப்போது நவீன தொழிற்துறையிலான வேலை வாய்ப்புகளும், அரசு எந்திரத்திலான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.


வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பார்ப்பனிய மேலடுக்குகளில் இருந்தவர்கள் நிலவுரிமையோடு, அரசு எந்திர வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்துறை வேலைவாய்ப்புகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.


பார்ப்பனர்களும் இவர்களை அடுத்த மேல் சாதியினரும் அரசுப் பணிகளில் எந்த அளவிற்கு ஆதிக்கம் பெற்றனரோ, அந்த அளவிற்கு தாம் காலம், காலமாக அனுபவித்து வந்த சுகபோகங்களை தக்கவைத்துக் கொண்டனர். இதனால் இவர்கள் விவசாயத்தில் இருந்தும் தம்மை படிப்படியாக விடுவித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன்படி முதலில் பார்ப்பனர்களும் இவர்களைத்  தொடர்ந்து அடுத்தடுத்த மேல் சாதியினரும் விவசாயத்தில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வெளியேற ஆரம்பித்தனர். விவசாயம் அல்லாத பிற தொழில்களே ஆட்சியாளர்களின் நலனை உள்ளடக்கியது என்பதால் விவசாயம் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தொழிலாக ஆகிப்போனதையே இவ்வெளியேற்றங்கள் நிரூபித்தன.


சமூகத்தின் மேல் அடுக்குகளில் இருந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தாம் அனுபவித்து வந்த வாழ்க்கையை, அதன் தரத்தை புதிய நிலைமைகளிலும் தக்க வைத்துக்கொண்டனர். மேல் சாதியினரின் இப்போதைய புதிய வாழ்வும் சாதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அமைந்தது.இந்திய சமூக அமைப்பில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இந்நடவடிக்கை அவசியமானது என்பதால் அவர்கள் இதை திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

1947 ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் விவசாயத்தை புறக்கணிக்கும்பார்ப்பன ஆட்சியாளர்களின் செயல் மேலும் தீவிரமானது. இது எந்தளவிற்கு ஆட்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டதோ, அந்த அளவிற்கு விவசாயத்திலிருந்து எஞ்சிய மேல் சாதியினரும் வெளியேறும் நடவடிக்கை அமைந்தது. மேல் சாதியினர் விவசாயத்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு எந்த அளவிற்கு நடந்தேறியதோ அந்த அளவிற்கு நிலங்கள் இப்போது சூத்திர சாதிகளின் கைகளுக்கு மாறியது.

ஆசிய சொத்துடைமை வடிவமே இந்தியாவில் சாதிகள் நிலை பெறுவதற்கு மிகச்சிறந்த வடிவமாக இருந்தது. இன்று ஆசிய சொத்துடைமை வடிவம் ஆற்றியப் பணியை நவீன தொழிற்துறை வேலைவாப்புகளும், அரசுத்துறை வேலைவாய்ப்புகளும் ஆற்றி வருகின்றன. மேற்கண்ட இரு புதிய வேலைவாய்ப்புகளுக்கான தளங்களும் சாதி அடிப்படையிலேயே உத்திரவாதம் செய்யப்படுவதால்தான் சாதிக்கான தேவை இன்னமும் மறைந்துவிடாமல் சமூகத்தில் நீடித்து நிற்கிறது. புதிய தேவைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ப சாதி கூர்மையாகவும், நயவஞ்சகமானதாகவும், நேர்மையற்றதாகவும் வடிவமாற்றம் அடைந்துள்ளது.


புதிய சமூக நிலைமைகளிலும் பார்ப்பனியத்தின் மேல் அடுக்குகளில் இருப்பவர்கள் தமது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான உத்தரவாதத்தை சாதி அடிப்படையிலேயே கொண்டிருப்பதால்தான் சாதியை  புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

தமது நயவஞ்சகமான நடவடிக்கைகள் அனைத்தையும் இப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் மூடி மறைத்துக் கொள்கின்றனர்.

இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு சிறுத்துப் போய்விட்டது.


சாதி நீடிக்கும் போதே, சாதி அடிப்படையிலான சமூக இழிவுகள் மாறிவிடும் என்ற பொய்மையான தோற்றத்தை ஆளும் கும்பலும், மேல் சாதியினரும் சமூகத்தில் இன்று நிலைபெறச்செய்துள்ளனர்.

மேலே நாம் கண்ட விடயத்தில் தான் தந்தை பெரியாரின் இயக்கம் பலவீனத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே அவ்வியக்கம் உள் முரண்பாடுகளால் ஆதிக்கம் செய்யப்பட்டது. இதனால் அவ்வியக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த பார்ப்பனியத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதற்கு பதிலாக சமூக, பொருளாதார வளங்களை பங்கிட்டுக்கொள்ள, பார்ப்பன சாதியுடன் பிற மேல்சாதிகள் நடத்திய போராட்டத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தது.

இதன் காரணமாக தந்தை பெரியாரின் காலத்திலேயே,அவரின் கண்ணெதிரிலேயே அவர் தொடங்கிய இயக்கம் தோல்வியைத் தழுவியது.


தந்தை பெரியாரின் இயக்கம், பார்ப்பனிய நலன்களுக்காக அண்ணாதுரையால் காட்டிக்கொடுக்கப்பட்டு இன்று அது ஜெயலலிதாவாக பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறது!


ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்திய மேலாண்மைக்காக டக்ளஸ் தேவானந்தா,கருணா ஆகியோரால் 
காட்டிக்கொடுக்கப்பட்டு, சிங்கள ஆட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்த்து அவர்களின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.


தந்தைப் பெரியாரின் இயக்கத்திற்கு பின்னர்,கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமும் இந்திய மேலாண்மைக்காக-பார்ப்பனிய மேலாணமைக்கு -  கருணாநிதி,ஜெயலலிதா போன்றோரால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

·           

    *களப்பிரர்கள் ஆட்சி அழிக்கப்பட்டது….

·          *தந்தை பெரியார் இயக்கத்தின் பின்னடைவு….
·          *ஈழப்போராட்டத்தின் பின்னடைவு.........
·          *கூடங்குளம் போராட்டத்தின் பின்னடைவு ஆகியவை

களப்பிரர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு காரணமான எழுச்சிக்கு பின்னர், மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் தமிழர்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தோல்வியும்,பின்னடைவுகளுமாகும்.


மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் பார்ப்பன மேலாதிக்கத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டே அழிவையும்,பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.மொத்தத்தில் சங்க காலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியத்திற்கு எதிரான எழுச்சி,வெற்றிக்கு பின்னர் தமிழ்ச் சமூகத்தின் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்துவருகின்றன.


அப்படியானால் இந்தியாவிலுள்ள ஏனைய தேசிய இனங்கள் தமது கோரிக்கைகளில் வெற்றி பெறுகின்றனவா?இல்லை.போராட்டமே இல்லாதபோது தோல்வி என்பது எப்படி ஏற்பட முடியும்?

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே, தமிழ் தேசிய இனத்தைத் தவிர, ஏனைய அனைத்து தேசிய இனங்களும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டு,செரிக்கப்பட்டுவிட்டது.இதில் அவைகள் பார்ப்பனியத்தின் பிரிக்கவியலாத அங்கங்களாகிவிட்டன.

இதற்கு நேர்மாறாக அன்றிலிருந்து, இன்று வரை பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த,எதிர்க்கும் மரபை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது.


இந்த மரபிற்கான அடிப்படை தமிழ் மொழியின் தன்னிறைவான வளமும்,தமிழர்களின் செழுமையான பண்பாடும்,நாகரீகமுமே காரணமே தவிர, நவீன தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கான உந்துதல்களில் இருந்து உருவான போராட்டங்களின் மரபல்ல.இந்த உந்துதல்கள் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படாததற்கு நிலபிரபுத்துவம், பின்தங்கிய ஆசிய சொத்துடைமை வடிவமாக பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும்,வெள்ளையர்களால் திணிக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறை காலனிய ஆட்சியாளர்களின் நலன்களுக்காவும், தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டதேயாகும்.இதனால்தான் நவீன கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி ஆகியவை மக்களின் சிந்தனாமுறையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.


இதன் காரணமாகவே எத்துனை முறை தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டாலும், அது மீண்டும்,மீண்டும் சங்ககாலத்தில் இயல்பான சமூக வளர்ச்சியின் ஊடாக அடைந்த வளர்ச்சியான மொழி.பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே எழுகிறது.


இந்த வளமான பெருமிதம்தான் தமிழினத்தின் பலம் என்றாலும், இந்த பெருமிதத்தை காட்டிக்கொடுப்பவர்களும்,காட்டிக்கொடுப்பவர்களை ஏற்பவர்களும் தமிழ்ச் சமூகத்தில் பாதிக்கும் மேலாக இருப்பதுதான் நமது தோல்விகளுக்கான இருக்கிறது.


இதிலிருந்து பார்க்கும் போது, நாம் இதுவரை சந்தித்த தோல்விகள் அனைத்தும் நமது எதிரிகளின் பலத்தால் ஏற்பட்டதல்ல.இவைகள் அனைத்தும் கருங்காலிகளால் காட்டிக்கொடுத்ததனால் ஏற்பட்டவைகளேயாகும்.

சமூகத்தில் நிகழும்,நிகழ்த்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் சாதியாக பார்க்கும் கண்ணோட்டமே  
தமிழ்ச்சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது.


எனவே தமிழ் மக்களை சமூக மாற்றத்திற்காக,வளர்ச்சிக்காக ஒருங்கிணைக்கும், ஒன்றுப்படுத்தும் காரணிகள் எதுவும் அத்துனை தெளிவானதாக இல்லை.


தமிழ்ச்சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை தம்மை முற்போக்கு என்றும்,புரட்சிகர சக்திகள் என்றும் கூறிக்கொள்வோர் யாரும் கணக்கிலெடுக்க தயாரில்லை,இதற்கு மாறாக தமது அகநிலை விருப்பதற்கு ஏற்ப எடுக்கும் முடிவுகளையும்,தீர்வுகளையுமே சமூகத்தின் மீது திணிக்க முயல்கின்றனர்.


இதன் காரணமாகவே தமிழ் தேசியம் பேசுவோரும்,புதிய ஜனநாயக புரட்சியை பேசுவோரும், கையடக்க சக்திகளை கூட வென்றெடுக்கவோ,வென்றெடுத்த சக்திகளை தக்க வைக்கவோ முடியாமல் தவிப்பதும்,இந்த தவிப்பு இவர்களிடையே சமூகத்திற்கு எதிரான வெறுப்பும்,ஆத்திரமுமாக மாறி பிழைப்புவாத சகதியில் மூழ்கி சமூகத்தை காட்டிக்கொடுப்பதுமாக மாறுகிறது.எனவே தமிழ்ச்சமூகத்தின் தேவை இவைகள் அல்ல.இவைகள் இதை பேசும் அமைப்புகளின் அகநிலை விருப்பமே தவிர சமூகத்தின் தேவையல்ல.மேற்கண்ட மாற்றங்களுக்கான தேவை ஏற்படும் அளவிற்கு அவைகளுக்குரிய சமூக அடித்தளம் இன்னமும் உருவாகிவிடவில்லை. எனவே இப்போதைய நிலையிலிருந்து அடுத்தக்கட்ட   சமூக வளர்ச்சிக்கான தேவை என்னவோ அதை எட்டுவதற்கான பணியைத் தொடங்குவதுதான். இப்பணி முற்றிலும் நமது சமூகத் தன்மையின் தேவையிலிருந்து எழக்கூடியதாக அமைய வேண்டும்.இந்தத் தேவை இவ்வுலகில் உள்ள ஏனைய சமூகங்கள் இதுவரை காணாத புதிய வடிவையும், தன்மையையும் கொண்டதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் நமது சமூகம் உலகில் வேறெங்கும் இல்லாத தனித்தன்மையைக் கொண்டதாகும்.இந்நிலை தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல மொத்தத்தில் இந்திய நாட்டிலுள்ள  அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான தன்மையாகும்.இதிலிருந்து இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களை  பொதுவாக ஒருங்கிணைப்பதற்கான, ஒரே சமூக அடித்தளமாக இன்றும் விளங்குவது விவசாயம் மட்டுமே!


பார்ப்பனிய படிக்கட்டில் கீழே அழுத்தப்படும் பெரும்பான்மை மக்களின் தொழிலாகவும்,இதன் காரணமாக அரசுகளால் புறக்கணிக்கப்படும் தொழிலாகவும்  விவசாயமே விளங்குகிறது.


இப்படி ஆட்சியாளர்களின் புறக்கணிப்பிற்கும்,ஒதுக்குதலுக்கும் ஆட்பட்டுள்ள விவசாயமே, நாட்டின் பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைக்கும் கூறாகவும் இருக்க முடியும்.


ஆகவே நமது தோல்விகளை வெற்றிகளாக மாற்ற, பெரும்பான்மை மக்களை அணிதிரட்டும் சமூக அடித்தளம் விவசாயத்தை தவிர வேறதுவும் இல்லை,இருக்கவும் முடியாது!


தொடர்புடைய கட்டுரைகள்:



 முற்றும்.