தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.
மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.
ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.
நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.
மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.
எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,
வ.எண் | ஆண்டு | மின் பயன்பாட்டு அளவு மெகாவாட்டில் | மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில் |
1 | 1951 | 110 | - |
2 | 1951-61 | 301 | 191 |
3 | 1961-74 | 1470 | 1169 |
4 | 1974-80 | 2224 | 954 |
5 | 1980-90 | 3344 | 920 |
6 | 1990-97 | 6019 | 2675 |
7 | 1997-2002 | 7924 | 1905 |
8 | 2002-2007 | 10100 | 2176 |
9 | 2007-2011 | 12000 | 1900 |
மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.
வ.எண் | நுகர்வோர் பட்டியல் | மின்சார பயன்பாடு சதவிகிதத்தில் | மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில் |
1 | தொழிற்சாலை | 34.92 | 2.41 |
2 | வர்த்தக நிறுவனங்கள் | 10.43 | 12.63 |
3 | வீடுகள் | 27.5 | 66.56 |
4 | விவசாயம் | 20.93 | 8.83 |
5 | பிற | 6.67 | 9.57 |
மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%
மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%
விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில் 8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே
ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.
அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.
இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.
ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.
எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.
ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.
இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.
இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.
மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.
மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.
ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.
மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.
இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்…..
18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்:
தொடர்புடைய கட்டுரைகள்:






