விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Wednesday, 29 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுமுடிவு: இந்திய சமூகத் தரத்தின் வெளிப்பாடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த சூலை-12ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 6,76,763 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த 6,74,000 பேருக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி மறுத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

எதிர்கால சமூதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் இந்த பரிதாபகரமான நிலையைக்  கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ஆசிரியர்களானால் நமது இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று வினா எழுப்புகிறவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக ஆகப்போகிறவர்கள் மட்டுமல்ல. இப்போதே இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள்தான்.



இவர்கள் தான் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்  என்றால் அப்பள்ளகளில் பயிலும் மாணவர்களின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தமது தகுதியையே நிரூபிக்க முடியாதவர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்?

அரசுப்பள்ளி ஆசிரியர்களை விட பல மணிநேரம்  கூடுதலாக தனியார் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள் இவர்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் போதே  தமது கல்வி போதிக்கும் திறனையும், தமது அறிவாற்றலையும் இவர்கள் உயர்த்திக்  கொள்ள முடியும, உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதைத்தான், இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் இவர்கள் எவ்வித  நுட்பத்தையும் கையாளவில்லை என்பதும், இதற்கு மாறாக மனப்பாடம் என்ற வடிவத்தை மட்டுமே வழிவழியாக கையாளுகிறார்கள என்பதும் தெரிகிறது. தாம் கற்பிக்கும் பாடத்தை முழுமையாக, உள்ளார்ந்து புரிந்து கொண்டு, அப்படி புரிந்து கொண்டதை ஒவ்வொரு மாணவர்களின் இயல்புக்கும், தனித்தன்மைக்கும் ஏற்ப போதிப்பதுதான் ஆசிரியர்களின் அடிப்படையான பணியாகும். ஆனால் இவர்களிடம் அதற்கான அறிகுறி எதுவுமே இல்லை என்பதைத்தான் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் பணிக்கான இந்த அடிப்படை பண்பு இவர்களிடம் உருவாகாததற்கு, இவர்கள் உருவாக்கப்பட்ட விதம் தான் அடிப்படையாகும்.

தற்போது தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்கள், தனியார் பள்ளிகளில் கல்வி கற்று, தனியார் ஆசிரியர் நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். இப்படிப்பட்டவர்களை  கொண்டு நடத்தப்படும் தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்று நாட்டு மக்களிடம் போதிக்கப்பட்டு, அவர்களும் அதை  எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் நம்புவதோடு அதையே உயர்வானதாகவும் கருதுகின்றனர்.

இவர்களின்  இந்த கண்ணோட்டமே அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இழிவாக பார்க்கவும் வைக்கிறது.  அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பதை தரக்குறைவாக கருதும் இவர்கள்தான், அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வேலைபார்ப்பதையே தமது இலக்காக வைத்துள்ளனர். தற்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 24,343 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வே ஆகும்.

அரசுப்பள்ளிகளில்  கல்வி கற்க விரும்பாதவர்கள் அதில் பணியாற்றுவதையே வாழ்க்கையின் இல்லக்காக கொள்கின்றனர். தனியாரிடம் கொட்டிக் கொடுத்தப் பணத்தை அரசிடம்  திருப்பி எடுக்க முயற்சிக்கிறார்கள்.

தனியாரிடம் தாம் பெற்ற திறமை இன்மையை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வெகுமதியாக தர விரும்புகிறார்கள்.

தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு தம்மை முட்டாள்களாக்கிக் கொண்டவர்கள், அதே பணத்தைக் கொண்டு அரசு பணியிடங்களை விலைக்கு வாங்கி, பணமில்லாத ஏழைப் பிள்ளைகளையும் முட்டாள்களாக்க துடிக்கிறார்கள். தம்மைப் போன்றே அனைவரையும் இருக்குமாறு இவர்கள் தமது செல்வாக்கின் மூலம் நிர்ப்பந்திக்கிறார்கள். இதே போல் உயர்கல்வி என்று வந்து விட்டாலும், குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு அரசுக்கல்லூரிகளில் உள்ள இடங்களை இவர்கள்தான் முதலில் ஆக்கரமித்துக் கொள்கிறார்கள். இப்படி நேர்மையற்ற வகையில் நடந்து கொள்வதுதான்  இந்திய சமூகத்தின் இயல்பாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமூகத்தை இழிநிலையில் வைத்திருப்பதும்  இந்த இழிந்த பண்புதான்.

படிநிலையாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள சாதிகள்,  தமக்கு மேலே உள்ள சாதி தம்மை அழுத்துவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அதற்கு மாறாக தம்மால் அழுத்தப்படும், தமக்கு கீழே உள்ள சாதியை இழிவுப்படுத்திப் பார்த்து  ஆனந்தமடைகிறது.

தமக்கு மேலே உள்ள அழுத்தத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு, தமக்கு கீழே உள்ளவர்களை தமது  அழுத்தத்தை  அவர்கள் விரும்பாவிட்டாலும் ஏற்குமாறு நிற்பந்திக்கிறது.

தமக்கு மேலே உள்ளவர்களிடம் உள்ள இழிவை, தமக்கு கீழே உள்ளவர்களுக்கு கடத்தும் ஊடகமாக தம்மை மேல் சாதி என்று கருதிக்கொள்ளும்  ஒவ்வொரு சாதியும் செயல்படுகிறது.

மேற்கண்ட பண்புதான் இந்திய சமூகத்தின் இயல்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது. இதுதான் இச்சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் நேர்மை இன்மையே இந்திய சமூகத்தின் இயல்பான பண்பாக திகழ்ந்தது, திகழ்கிறது,திகழவும் அனுமதிக்க போகிறோமா?

Monday, 6 August 2012

வின(வு)விடம் வினவாதே விபரீதம்……!

ம.க.இ.க- வில் இருந்து விலகிய  சரவணராஜா, ரூபக்காந்த் காந்தன் மற்றும் ம.க.இ.க ஜனக்குமரன் ஆகியோருக்கிடையே அண்மையில் இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றுள்ளது.அதன் சுட்டி(https://www.facebook.com/photo.php?fbid=332810350143496&set=a.256342241123641.60945.100002436007436&type=1&theater) இதனூடாக சில சுவையான செய்திகள் வெளிவந்துள்ளது.



இந்தியாவிலேயே ஒரே புரட்சிகர அமைப்பு என்று தம்மை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மகஇக கும்பல் தம்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் கூறாததைப் பற்றியது அந்த விவாதம்.

மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய  பொதுவுடைமைக் கட்சி (மாலெ) என்ற  கட்சி ஆரம்பித்து ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு,ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளையும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்களையும், வினவு இணையத்தளத்தையும் நடத்தி வருகிறது.

மேலே கண்ட அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவைகளின் மூலம் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போவதாக இந்த கட்சி கூறிக்கொள்கிறது. இக்கட்சி தான் கூறிக்கொள்ளும் புதிய ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி எந்த அளவிற்கு சென்றுள்ளது  அதற்காக அது கையாளும்  அமைப்பு முறைகள் பற்றிய மேற்கண்ட தோழர்களின் விவாதத்தில் எம்முடைய கருத்துக்களை இனி பார்ப்போம்.  

ஒரு புரட்சிகர அமைப்பை பற்றி விமர்சித்தால் அதுவும் சூறாவளி, சரவணராஜா போன்றோர் எழுதிய கட்டுரைக்கு பதில் ஏன் கூறவில்லை என்று இந்த இணையதள புரட்சியாளர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தனி மனிதர்கள், தனி மனிதர்களின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் அளிப்பதெல்லாம் ஒரு புரட்சிகர அமைப்பிற்கு தேவையில்லாதது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் தனி மனிதர்கள் ஆயிரம் பொய்களை கூறுவார்கள் அதற்கு பதில் அளிக்க தேவையில்லாதது என்று கூறும் இவர்கள் அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக விமர்சனம் வந்தால் பதில் அளிப்பார்களாம்”

மகஇக கும்பலைப் பற்றி  ரூபக்காந்த் காந்தன்  கூறியுள்ள மேலே கண்ட செய்தியிலிருந்து தனி மனிதர்கள் அனைவரும் பொய் மட்டுமே சொல்வார்கள். அமைப்புகள் மட்டுமே உண்மையை பேசும் என்று பொருளாகிறது.ஆனால் பல நேரங்களில் தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் பொய் சொல்வதாக இவர்கள் கூறியிருக்கிறார்கள்.  இப்படி கூறியிருக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் அமைப்புகளும் பொய் சொல்லும் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் தனி மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்காக பதில் கூறமாட்டோம் என்பதை விட அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற இவர்களின் அகம் பாவமும், இருமாப்பும் தான் இப்படி கூறவைக்கிறது.

 முன் வைக்கப்படும் விமர்சனங்களும், கேள்விகளும் தனிமனிதர்களால் வைக்கப்பட்டதா அல்லது அமைப்பு ரீதியாக வைக்கப்பட்டதா என்பதை விட, அவைகள் சரியானவையா, இல்லையா, அவைகள் புரட்சியின் நலன்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்று பார்ப்பதுதான் நேர்மையான செயலாக இருக்க முடியும்.

சூறாவளி, சரவணராஜா போன்றோர் தனிமனிதர்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் அளிப்பது நம்முடைய வேலை இல்லை என்ற வதந்தியை இவர்கள் பரப்பினாலும் உண்மையில் இதற்கு நேர்மாறாகத்தான் அவர்களின் செயல்கள் அமைந்துள்ளது. தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறினாலும் உண்மையில் அவர்களைக் கண்டு இவர்கள் அஞ்சி நடுங்கவே செய்கிறார்கள். தமது பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அலறுகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் சரவணராஜா பற்றி அந்த அமைப்பு கூறியதாக அந்த அமைப்பை சேர்ந்த ஜனக்குமரன் எழுதியுள்ளதையும், அதற்கு சரவண ராஜா அளித்துள்ள பதிலையும்  கீழே தருகிறோம் பாருங்கள்.

மகஇக வின் அருள் வாக்கு கட்டுரையில் அரசியல் விமர்சனத்தை விட அமைப்பு தலைமையை திட்டித் தீர்க்கும் வன்மையும், இழிவுப்படுத்துவதும் இருந்தது.

மேலும் அந்தக் கட்டுரையை ஒட்டி உங்களைப் பற்றி கேட்டதற்கு சொந்த வாழ்க்கையை பார்க்க போகிறேன். அமைப்பின் மீது எந்த விமர்சனமும் இல்லை”, என சொல்லி வந்தீர்கள் என சொன்னார்கள்.

ஜனக் குமரனின் மேற்கண்ட செய்திக்கு, ”பொது வெளியில் ஒரு விமர்சனம் வைத்த பிறகு அது யார் வைத்தால் என்ன அதற்கு பதில் சொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு கடமை உண்டு. அதை விடுத்து என்னைப் பற்றி என்னென்ன அவதூறுகள் தனிப்பட்ட முறையில் பரப்பபடுகின்றன என நன்கறிவேன்” என்று சரவண ராஜா கூறியுள்ளார். இந்த அனுபவம் சரவண ராஜாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.

உண்மையில் தனி மனிதர்கள் என்று இவர்கள் கூறும் நபர்களைக் கண்டு இவர்கள் அஞ்சவில்லை என்றால் எதற்காக அவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பரப்புகிறார்கள்? அச்சம்தான் இப்படி வதந்தி பரப்ப இவர்களை தூண்டுகிறது.

தனி மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் தரமாட்டோம் என்பதும்,அமைப்பு ரீதியாக விமர்சனங்கள் வந்தால் மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறுவதும் தமது பிழைப்பிற்கு ஆதாரமான அணிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகத் தான். ஆனால் பாவம் இந்த அணுகுமுறை மிகவும் கிழடு தட்டி போனதாகும்.

ஏனென்றால் இது எழுபதுகளில் உருவாக்கப்பட்ட அணுகுமுறை.அன்று தனிமனிதர்கள் ஊடகங்களை நட்த்த முடியாது,இதன் காரணமாக தனி மனிதனின் செயல்பரப்பு மிகவும் குறுகியதாகும்.ஆனால் இன்றோ விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதளம் என்ற ஊடகம் ஒவ்வொரு மனிதனின் கைக்குள்ளேயே வந்து விட்டதால் இந்தக் கும்பல் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறது. இதன் மூலம் இக்கும்பலின் நேர்மையின்மையும் தவிர்க்க வியலாமல் வெளிப்பட்டு விடுகிறது.
அடுத்து அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் அளிப்போம் என்று கூறுவதும் இவர்களின் நேர்மையின் வெளிப்பாடல்ல. அது அமைப்பு ரீதியாக வைக்கப்படும் விமர்சனங்கள், அந்த விமர்சனங்களை வைக்கும் அமைப்புகளின் ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்படுவதால் அது தனது பிழைப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்பதால்தான் பதில் கூறுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு தந்திரத்தை இப்போது கையாள்கிறார்கள். அதாவது அவர்களின் கண்ணோட்டத்தின் படி அவர்களைத் தவிர தமிழகத்தில் வேறு புரட்சிகர அமைப்புகளே கிடையாது. இவர்களைத் தவிர வேறு புரட்சிகர அமைப்புகளே இல்லாதபோது அமைப்பு ரீதியாக விமர்சனங்களும் இல்லை, அதற்கு பதில் அளிக்க வேண்டிய தேவையும் இல்லை.
இதை அணிகளையும் ஏற்கவைத்துவிட்டால்,இப்போது இருக்கிற அணிகளை தக்கவைத்துக்கொள்வது,பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.ஆனால் புதிய அணிகளை உருவாக்குவதிலும்,அதிலும் குறிப்பாக மக்களைத் திரட்டுவதில் இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி அவர்களுக்கு எந்தவித கவலையுமில்லை.ஏனென்றால் இந்த முப்பதாண்டு காலத்தில் மக்களைத்திரட்டுவதற்கு அவர்கள் தவறுதலாகக் கூட சிந்தித்தது கிடையாது.இந்த நிமிடம் வரை கட்சிக்கு முழுநேர,பகுதி நேர ஊழியர்களை உருவாக்குவதுதான் அவர்களின் இலக்கு.

இதற்கு ஏற்பத்தான் வர்கள் தமது அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்கிறார்கள்.வெகுசன அமைப்புகள்,ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் மைய இயக்கங்கள்,பிரச்சாரங்கள்,தனிநபர்களை சந்திப்பது உட்பட அனைத்து செயல்பாடுகளும் இதற்காகத்தான்.இது நிறைவேறிய பிறகுதான் மக்களைத்திரட்ட முடியும் என்கிறார்கள்.

முழுநேர,பகுதி நேர ஊழியர்களை திரட்டிய பிறகுதான் மக்களை திரட்ட முடியும் என்று தலைமைக்கூறுவதை அந்த அமைப்பில் உள்ளவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதனடிப்படையில் தான் ஆண்டு இலக்குகளும்,மாதாந்திர வேலைத்திட்டமும் போடப்படுகிறது.இந்த முப்பதாண்டு காலத்தில் ஒரு ஆண்டில் கூட தம்முடைய இலக்கை இவர்கள் பத்து விழுக்காடு அளவுக்குக்கூட அடைந்ததில்லை.இப்படி இலக்கை அடைய முடியாததற்கு அணிகளின் திறமையின்மையும்,அற்பணிப்பு இன்மையும்தான் காரணம் என்று தலைமைக்கூறுவதை அணிகளும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

போகாத ஊருக்கு வழி சொல்லுவதைப் போன்று அடைய முடியாத, இயங்கியலுக்கு புறம்பான திட்டத்தை தருவதன் மூலம் அது தோல்வியடைகிறது.ஆனால் இந்த தோல்விக்கு அணிகள்தான் காரணம் என்றுக்கூறி அவர்களை குற்ற உணர்வுள்ளவர்களாக மாற்றுகிறார்கள்.அணிகளின் இந்த குற்றவுணர்வுதான் தலைமை மீதான விசுவாசமாக உருவெடுக்கிறது.

தாம் கொடுக்கும் திட்டம் நிறைவேறாது என்பது தெரியாமல் அல்ல,மிக நன்றாக தெரிந்தேதான் தருகிறார்கள்.இவர்கள் தரும் திட்டத்தின் உண்மையான நோக்கமே, இச்சமூகத்தில் சமூக உணர்வுள்ள ஒரு சிலரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களின் சிந்தனா சக்தியை இல்லாமல் ஆக்குவதுதான்.

கட்சியை பலப்படுத்தினால்தான் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.இப்படி கூறுவது தவறான கண்ணோட்டம் என்றும் கூறவில்லை.கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களை அணி திரட்டுவதையும் தனித்தனியான,இரு வெவ்வேறான நடவடிக்கைகளாக காட்டுவதுதான் இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் என்கிறோம்.
மக்களை திரட்டுவதற்கு முழு நேர,பகுதிநேர ஊழியர்கள் குறிப்பிட்ட அளவிற்கு தவிர்க்கவியலாத தேவையை,அவசியத்தை நாம் உணராதவர்களில்லை.இந்த குறிப்பிட்ட அளவு சக்தி கிடைத்த பிறகு,அதைக்கொண்டு மக்களை திரட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.இதன் மூலம்தான் வெகுசன அரங்கு வேலைகளின் மூலம் கட்சிக்கான முழுநேர,பகுதிநேர ஊழியர்களும் வென்றெடுக்கப்படுவதற்கான பரப்பு விரிவாக்கபடுகிறது.

இப்படி கட்சி ஊழியர்கள் மக்களைத் திரட்டுவதும்,இதன் ஊடாக கட்சி பலப்படுத்தப்படுவதுமான இயங்கியல் போக்கினால் புரட்சிகர செயல்பாடுகள் புதிய உத்வேகத்தோடு முன்னேற்றத்தைக் காணும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக கட்சி அணிகளை வென்றெடுப்பதையும்,மக்களைத் திரட்டுவதையும் இரு வெவ்வேறான, தனித்தனியான பணிகளாக பார்க்கும், இயங்கியலுக்கு புறம்பான இவர்களின் கண்ணோட்டமும்,செயல்பாடுகளுமே முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

இயங்கியலின் படி இவ்வுலகில் உள்ள அனைத்தும் இடைவிடாது இயங்கிக்கொண்டும்,மாறிக்கொண்டும்தான் உள்ளது.எதுவும் நிலையாக அப்படியே இருப்பதில்லை. இந்தக்கும்பல் இயங்கியலுக்கு புறம்பான தமது செயல்பாடுகள் மூலம் வளர்ச்சிக்கு பதில் தேய்வையே சந்தித்து வருகிறது.
இந்த தேய்வின் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு தவிர்க்கவியலாமல் முன்பு தான் கடைபிடித்த சில வழிமுறைகளுக்கு மாறாக, அதற்கு நேர்மாறான வழிமுறைகளை இப்போது கையாள தொடங்கிவிட்டனர்.

இதன்படிதான் மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பையும்,வினவு என்ற ஊடகத்தையும் உருவாக்கி புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்திப் பார்த்து அவற்றை பிற அரங்குகளுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தி வருகின்றனர்.
*
* ஆதிக்க சாதிவெறி,இலஞ்சம்,ஊழல்,கந்துவட்டி,ஆரம்பர வாழ்க்கை உட்பட எப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தோடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்துகொள்ளலாம்.இவைகளை கைவிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

* குடிக்கவே கூடாது,குடிப்பவர்களை அமைப்பில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று விதி வைத்திருந்தவர்கள்,இப்போது எப்போதாவது குடிப்பதில் தவறில்லை என்று அறிவித்து தம்மை தீவிரமான ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்கிறார்கள்.

* இழப்பதற்கு ஏதுமற்றவர்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இதன் படி கட்சி உறுப்பினர்கள் தமது வருவாயில் அத்தியாவசிய செலவுகள் போக ஏனையவற்றை கட்சிக்கு தரவேண்டும் என்று முன்பு விதி வைத்திருந்தனர்.

இப்போது இதற்கு நேர்மாறாக ஒருசில மாதங்களிலேயே அரைகோடி ரூபாய்க்கும் மேல் கட்சி உறுப்பினர் ஒருவர் சொத்து சேர்த்ததை,அது எப்படி வந்தது? என்றக் கேள்வியை அமைப்புரீதியாக நாங்கள் எழுப்பிய பின்னரும் கூட அந்த சொத்து தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”,என்று கேள்வி எழுப்பிய எங்களிடமே கேள்வி கேட்டதன் மூலம் அதை நியாயப்படுத்துகிறார்கள்.ஆனால் இப்படிபட்ட உத்தமர்கள்தான் தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல மாட்டோம்,அமைப்பு ரீதியாக கேட்டால்தான் பதில் சொல்லுவோம் என்கிறார்கள்.

* தங்கையை தாரமாக்கிக்கொண்ட தனது அண்ணனின் இழிசெயலை ஆதரித்த ஒருவனை அன்று நாங்கள் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம்.இப்போது அவனை தமது அமைப்பில் மீண்டும் இணைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்.தனது முந்தைய தவறுக்காக சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்கலாம், அதனால் அந்நபரை மீண்டும் அமைப்பில் இணைத்துக்கொண்டிருக்கலாம் என்று பலரும் நினைத்துக்கொள்ளலாம்.ஆனால் அவனோ மேலும் இரு அண்ணன்,தங்கை தகாத உறவுக்கு ஆதரவளிப்பதுடன்,இப்படிபட்டவர்களை ஒருங்கிணைக்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகிறான்.

மேலே நாங்கள் பட்டியலிட்டுள்ளவைகளின் மூலம் இந்த கும்பல் அனைத்து பிற்போக்குதனங்கள் மூலமே தம்மை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.இவைகள் புத்தகங்களில் எழுத்தாக உள்ள கோட்பாட்டு விவகாரங்கள் மட்டுமல்ல,நடைமுறையில் அசைக்க முடியாத ஆதாரங்களாகவும் உள்ளன.

தனி மனிதர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுவதன் மூலம் தம்முடைய தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கருதுகிறது இந்தக்கும்பல்.நாங்கள் இவைகளை இப்போது எழுப்பவில்லை.அமைப்பில் இருந்த போதே எழுப்பினோம்.ஆனால் இவைகளுக்கு அவர்கள் தந்த பதில் எங்களை அமைப்பை விட்டு வெளியேற்றிவிட்டோம் என்பதுதான்.நாங்கள் குழுவாகத்தான் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.அன்றில் இருந்து அமைப்பாகவும்தான் செயல்பட்டுவருகிறோம்.         

இவர்களுக்கு வெளியில் புரட்சிகர அமைப்புகளே இல்லை என்று இவர்கள் கருதுவதால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் இவர்களின் அமைப்பிற்குள்ளே இருந்து வந்தால்தான் உண்டு. அப்படி வருமா? அப்படி வந்தால் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதை இனி பார்ப்போம்.

இவர்களிடம் கட்சி, வெகுசன அரங்கு என்று இரண்டு உள்ளது.இதில் ஆதரவாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகள், அரங்கு பொருப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விகு,கதுகு, பகுதி பொருப்பாளர்கள், மாவஅக,மாஅக, புஜ, புக பத்திரிக்கை ஆசிரியர் குழு, வினவு ஆசிரியர் குழு இப்படி எல்லாருமாக சேர்த்து ஒரு ஐநூறு பேர் தேறுவார்கள்.
இவர்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கான தகுதியே கேள்வி கேட்காத விசுவாசம் தான். அதாவது சுயமாக சிந்திக்கும் தகுதியை இழந்து விடுவதுதான் அந்த விசுவாசம். இவ்வளவு கடுமையான கோட்டைக்குள்ளே தான் சூறாவளி, சரவண ராஜா போன்றோர் நுழைந்து விடுகிறார்கள். தமது குழுக்களில் கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்புகிறார்கள். அவைகள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டும் விடும்.

தப்பித் தவறி எம்மைப்போன்ற போன்ற குழுவினர் ஒரு மனதாகவோ அல்லது பெரும்பான்மையாகவோ விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி விட்டால் அவைகள் பகுதி பொருப்பாளர் அல்லது மாஅக  ஆகியோரால் நிராகரிக்கப்பட்டு விடும்.

இதன் பிறகும் தமது விமர்சனங்களின் மீது,  எழுப்பியவர்கள் உறுதியாக நின்றால் ஜனநாயக மத்தியத்துவ மீறல் என்று கதையை முடித்து விடுவார்கள். மொத்தத்தில் அங்கே விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்களாகி விடுவார்கள்.

அமைப்பிற்குள்ளவே விமர்சனம் வைப்பவர்கள் தனி மனிதர்கள் என்றால் அமைப்பிற்கு வெளியில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இவர்களின் கோட்பாட்டின்படி தனி மனிதர்கள் தானே!?

எனவே இவர்களை கேள்வி கேட்கவோ, இவர்கள் மீது விமர்சனம் வைக்கவோ இந்த நாட்டில் எவருக்கும் தகுதி இல்லை. ஏனென்றால் இவர்கள் அகராதியில் கேள்வி கேட்பவர்கள், விமர்சனம் வைப்பவர்கள் அனைவரும் தனி மனிதர்கள்.

அமைப்பில் உள்ளவர்கள் விமர்சனங்கள் வைத்தால் அவர்கள் தனி மனிதர்களாக்கப்படுவதோடு, தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள். இப்படி தீண்டத்தகாதவர்களோடு அமைப்பில் உள்ள யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இதை மீறுபவர்களும் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கு பயந்துதான் அங்கே உள்ளவர்கள் அதை மீறுவதே இல்லை.(இந்த பயத்திற்கான காரணம் பற்றி யாராவது தெரிந்து கொள்ள கேளுங்கள் அப்போது அதைப்பற்றி விவாதிப்போம்)

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் அவர்கள் தனி மனிதர்களான மக்களிடத்திலே தொடர்பு வைத்துக் கொள்வதும் இல்லை.
ம்ம்..... என்றைக்கு நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையினர் இவர்களின் அணிகளைப் போன்று சிந்திக்கும் திறனை மூட்டைக் கட்டி வைப்பது.... அதன் பிறகு இவர்கள் அவர்களை அமைப்பாக்கி புரட்சி நடத்துவது!

பிறகு எதற்காக மக்கள் திரள் பாதை என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

மக்கள் திரள் பாதை என்றால் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்று மக்களை திரட்டி புரட்சியை நடத்துவது அல்ல. பேருந்துகளிலும்,ரயில்களிலும் உண்டியல் குலுக்குவதற்கு பெயர்தான் மக்கள் திரள் பாதை!

அங்கேயும் எவனாவது கேள்வி கேட்டு விட்டால் என்ன செய்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? சந்தேகமே வேண்டாம். அப்படிப் பட்டவர்களிடம் உண்டியலை காட்டவே மாட்டார்கள் நமது தோழர்கள்! வற்புறுத்தி தந்தாலும் புரட்சிகர உறுதியோடு அவற்றை நிராகரித்து விடுவார்கள்! அவ்வளவு கொள்கை உறுதியுடையவர்கள் அவர்கள்.
அமைப்பில் கேள்விகள், விமர்சனங்கள் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்குவதில் இவர்களின் நிபுணத்துவம் உங்களை மலைக்க வைக்கிறதா?

அந்த நிபுணத்துவம் அவர்களின் ரத்தத்தில் அவர்களின் பார்ப்பன மூதாதையர்களின் வழியே வந்ததாகும்.

சங்க காலத்தில் தமிழகத்தில் ஊடுருவிய இவர்களின் பார்ப்பன மூதாதையர்கள் தமது சாதிய சித்தாந்தத்தை ஆளுவோர் மூலம் மக்கள் மீது திணித்தார்கள். அதை ஏற்காமல் கேள்வி கேட்டவர்களையும், விமர்சனம் வைத்தவர்களையும் தீண்டத்தகாத சாதிகளாக வட இந்தியாவைப் போன்றே ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர்.

சாதிய சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக படிநிலை வடிவத்தின் மூலம் இன்று வரை அவர்களால் பாதுகாக்க முடிகிறது. இதே போன்று தான் மகஇக கும்பலும் கீழிருந்து மேலாக படியடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குழுவும் எதில் உறுதியாக இருக்கிறதோ, இல்லையோ விமர்சனம் வைப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதுவதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்து தமது விசுவாசத்தை தலைமைக்கு நிரூபிக்கின்றனர்.இதன் பிறகும் அவர்களோடு விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது?இந்த கழிசடைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விரட்டியடிக்கின்ற பணிதான் நம்முன்னே காத்திருக்கின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      


4.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2