கூடங்குளம் போராட்டம் எப்போதெல்லாம் தீவிரம்
அடைகிறதோ அப்போதெல்லாம், தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. ஒரு
நாளைக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு
அறிவித்திருந்தது. உண்மையில் இப்போது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே
மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஏறத்தாழ இருபது மணி நேரம்
நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டால் மொத்தத் தமிழகமும் செயலிழந்து போய்
கிடக்கிறது. குறைந்தது குடிநீர் தேவையைக் கூட தற்போது வழங்கப்படும் மின்சாரத்தால்
ஈடுசெய்ய இயலவில்லை.
தமிழகத்தின் கொங்குமண்டலத்தில் இயங்கும்
ஜவுளி உற்பத்தியாளர்கள் இப்போதைய மின் வெட்டால் தமது நூற்பு ஆலைகள் முற்றாக
செயலிழந்துவிட்டது. ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு டீசல் விலை
உயர்வு அமைந்து விட்டது என்று குமுறுகிறார்கள்.
ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட விவசாயம் இந்த
மின்வெட்ட்டால், மேலும் அழிந்துவிடப்போவதில்லை என்பதால்
விவசாயிகள் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு
மக்களும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டாலும் ஒப்பாரி. புலம்பல் ஆகியவற்றை
வெளிப்படுத்தும் போராட்டங்களைத்தவிர, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை
காணவேண்டிய நிர்பந்தத்தை , ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அடிப்படையை கொண்ட
போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்று கூட நடைபெறவில்லை.
ஈழத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற
போரின் காரணமாக மின்சாரம் அம்மக்களுக்கு எட்டாக்கனியாகிப் போனதை நாம் அறிவோம்.
இன்னமும் கூட அங்கு மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
ஆனால் தமிழகத்திலோ ஈழத்தைப் போன்று போர்
எதுவும் நடக்காமலேயே, மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக்கப்படுட்டு விட்டது!
தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறை 6500
மெகாவாட் அளவிற்கு உயர்ந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறைவாரியம்
அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலை முழுமையாக இயங்க
ஆரம்பித்தாலே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகும் என்கிறார்கள்.
அதிலும் உலக அளவில் அணு உலை மின் உற்பத்தி
நிர்ணயிக்கப்பட்ட அளவில் 30 % - 40 % மட்டுமே
ஆகும். அப்படியானால் கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கினாலும் கூட 400
மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு
பரிசோதனை மட்டுமே நடைபெறப்போகிறது.
இதுதான் நிலைமையாக இருக்கும்போது
கூடங்குளம் செயல்பட ஆரம்பித்தால்
தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்துவிடும் என்று பச்சையாக மத்திய, மாநில
ஆட்சியாளர்கள் எந்தக் கூச்சமும் இன்றி வெளிப்படையாக புளுகுகிறார்கள். அதிகார பூர்வமாக அறிவிப்புகளை
வெளியிடுகிறார்கள்.
இப்படிச் செய்வதன் மூலம் கூடங்குளம்
மக்களுக்கு எதிராக தமிழக மக்களை திசை
திருப்ப பார்க்கிறார்கள். இவர்கள் தமது முயற்சியில் ஏறத்தாழ வெற்றியும்
பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களிடம்
மட்டுமே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு நிலவுகிறது.
தற்போதைய மின்வெட்டைப்பற்றி மத்திய
ஆட்சியாளர்கள் வாயே திறப்பதில்லை. மின்சாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளதால் அதுபற்றி மத்திய அரசு
கவலைப்பட வில்லை என்று மட்டுமே பெரும்பாலோர் கருதுகின்றனர். மின்சாரம் மாநில
அரசின் பட்டியலில் உள்ளது என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான்
என்றாலும், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று
கூறிவிடமுடியுமா?
மின்பற்றாக் குறையால் ஒரு மாநிலம்
செயலிழந்து கிடக்கும்போது , அம்மாநில மக்களின் நலனில் மத்திய அரசுக்கு
சம்பந்தமில்லை என்றால், இந்தியா என்ற கூட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட
மாநிலம் உணர்வுபூர்வமாக இருக்க முடியுமா?
மக்கள் நலன் என்பது மத்திய
ஆட்சியாளர்களுக்கோ, மாநில ஆட்சியாளர்களுக்கோ எப்போதுமே இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எனவே
அந்த நிலையிலிருந்து இப்பிரச்சனையை நாம் பார்த்தால் அ து நமது அறியாமையின் வெளிப்பாடாகத்தான்
இருக்கும்.
இவர்களுக்கு வேறொரு கோணத்தில் இந்த மின்பற்றாக்குறை
அத்தியாவசியமானது என்பதால் அதன் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்.
அந்த
வகையிலும் எவ்வித வெளிப்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. இதைப்பார்க்கும்
போது அவர்களுக்கு அக்கரையுள்ள குறிப்பிட்ட அந்தத் துறைக்கும், இந்த
மின்பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
ஆட்சியாளர்களின் அக்கறையுள்ள அந்த துறை
அந்நிய முதலீட்டு துறையே ஆகும். தமிழகத்திலுள்ள
பன்னாட்டு நிறுவனங்கள் தற்போதைய
மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக்கணமே மத்திய ஆட்சியாளர்கள்
அலறியிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களும் இதுபற்றி மூச்சுவிடவில்லை.
இதிலிருந்தே பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
ஆனால் மின்பற்றாக் குறைபற்றி பேசுகிற ஆளும்
கட்சி, எதிர்கட்சி, தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் உட்பட யாருமே பன்னாட்டு
நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரத்தை பற்றி பேசுவதில்லை. இதிலிருந்தே
ஆட்சியாளர்கள் மட்டுமல்ல . தங்க்ளை சமூக அக்றை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும்
அனைவருமே மக்களின் கவனத்தை உண்மைக்கு புறம்பான வழியிலேயே
திசை திருப்புகின்றனர்.
தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல்
மின்நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரத்தை தடுக்கப்போவதாக்
கூறி பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத குழுக்கள் வாய்த்தவறி கூட பன்னாட்டு
நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை தடுக்கப்போவதாக கூறுவதில்லை,
இனவாத குழுக்கள் மட்டுமல்ல தங்களை சர்வதேசவாதிகள்,
புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள் என்று
கூறிக்கொள்வோரும் கூட இதுபற்றி மக்களிடையே பேசுவதில்லை.
இப்படி நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும்,
இயக்கங்களும், மக்களின் உயிராதாரமான பிரச்சனையில் உண்மைக்கு புறம்பாக நடந்து
கொண்டு, மக்களுக்கு துரோகமிழைக்க முடிகிறது என்றால், இவைகளை ஏற்கும் திறன்
இச்சமூகத்திற்கு உள்ளது என்பதின் வெளிப்பாடே ஆகும்.
சமூகத்தின் இந்த உண்மையான நிலைக்கு
ஏற்பத்தான் எல்லா அமைப்புகளும் நடந்து கொள்கின்றன. இந்த அடித்தளத்தில் இருந்துதான்
அனைத்து அமைப்புகளும் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன.
ஆட்சியாளர்கள் தம்மை எவ்வளவு கீழ்த்தரமான
முறையில் நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும் தமது வாழ்வாதாரத்தை அழித்தாலும்,
அதற்கெதிராக போராடி அதை முறியடிப்பதற்கு மாறாக,அனைத்தையும் சகித்துக் கொண்டு
வாழ்வது என்பதே இந்திய சமூகத்தின் பாரம்பரிய மரபாகும். இதுவே இன்றுவரையிலான சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது தற்போதைய மின்பற்றாக்குறையையும், அதை சமூகம் எதிர் கொள்ளும் விதத்திலும் இயலாமையை மட்டுமல்ல,
அது தனது தரத்தையும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற
இந்த சிந்தனா முறையின் தவிர்க்க வியலாத விளைபொருள்தான் பிழைப்புவாதமாகும்.
மொத்த சமூகத்தின் வாழ்வியலே பிழைப்புவாத
அடித்தளத்தை கொண்டிருப்பதால் தான், இந்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அமைப்பும்
பிழைப்பு வாத அமைப்புகளாகவே உருவெடுக்கினறன. சமூகத்தன்மையின் காரணமாக பிழைப்புவாதம் முரணான, தவறான ஒன்றாக
பார்க்கப்படுவதில்லை.
சமூகத்தின் இந்த அடித்தளத்தைப் பற்றிய
வரையறை, கண்ணோட்டமில்லாத அமைப்புகள்
எதுவனாலும், அவைகள் எவ்வளவு தான் உணர்வுபூர்வமாக, தியாக மனப்பான்மை உடையவைகளாக
இருந்தாலும் அவைகள் அனைத்துமே தங்களையே
அறியாமல், உணரமுடியாமல் பிழைப்பு வாதத்தையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
தம்மிடையே உள்ள இந்த தன்மையை உணராதவர்கள்,
குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர்
சமூகத்தின் மீது எழும் விரக்தி மனப்பாண்மை காரணமாக மிக எளிமையாக, வெளிப்படையான
பிழைப்பு வாதிகளாக மாறிக் கொள்கிறார்கள்.
எனவே இந்திய சமூகத்தின் இந்த யதார்த்தமான
நிலையை, சமூக அடித்தளத்தை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே சமூக மாற்றத்திற்கான,
முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை புரிந்து
கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள் அனைவரும் பிழைப்புவாதிகளாக மாறுவது தவிர்க்க வியலாத
நிகழ்வாகும்.
பிறக்கும் போது தெரியாவிட்டாலும் மூக்கு
வெளுத்ததும் தெரிந்துவிடும் அது கழுதையா, குதிரையா என்பது!



