விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Thursday, 14 June 2012

நேபாள புரட்சியின் பின்னடைவு :தோழர் பசந்தாவின் நேர்காணல்.

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கும் தெம்பூட்டும்,நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித்தலைமையின் காட்டிக்கொடுத்தலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.மக்கள் விடுதலை ராணுவமும் நயவஞ்சகமான முறையில் கலைக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும், நேபாள மாவோயிசக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களும்,அணிகளும் கட்சித்தலைமையின் துரோகக் காட்டிக்கொடுத்தலுக்கு எதிராக இன்று களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.அப்போராட்டத்தின் ஒரு அங்கமாக புரட்சிகர அணிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பசந்தா துருக்கி மா-லே-மா கட்சிக்கு அளித்துள்ள நேர்காணலை இங்கு வெளியிடுகிறோம்.




நேபாள் ஒருங்கிணைந்த மாவோயிசக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பசந்தாவுடனான நேர்காணல்:

கேள்வி1 .உங்களது கட்சிக்குள் வர்க்கப்போராட்டம் தொடர்பான தற்போதைய நிலை எப்படியுள்ளது? மிக முக்கியமான முரண்பாடுகள் ஏதேனும் தீர்க்கப்பட்டுள்ளதா (இங்கு இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் குறித்து முழுமையாக நீங்கள் விளக்கலாம்.மேலும் ஏற்கனவே நாங்கள் இந்த விவகாரத்தில் பொதுவான புரிதலைக்கொண்டிருந்தாலும் அதில் நீங்கள் உடன்படுகின்றவற்றை அடிக்கோடிட்டுக்காட்டுங்கள்.)

பதில்: வர்க்கப்போராட்டம் தான் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி உயிர்வாழ்வதற்கான அடிப்படை.கட்சிக்குள் வர்க்கப்போராட்டம் இல்லாவிட்டால் கம்யூனிசக்கட்சியே இருக்கமுடியாது.இருப்பினும் இந்த வர்க்கப்போராட்டம் எப்போதும் ஒரே அளவைக்கொண்டிருக்காது.அது பிரச்சனையின் தன்மையை பொருத்து மாறக்கூடியது.எமது கட்சிக்குள் வர்க்கப் போராட்டம் கூர்மை அடைந்தது,நாடாளுமன்றம் கூடி நேபாள ஜனநாயக குடியரசை உருவாக்கிய பின்னர்தான். தற்போது மன்னராட்சிதான் வீழ்த்தப்பட்டிருக்கிறதே தவிர நிலவுடைமை சுரண்டல் அல்ல.நேபாளம் இன்னும் அரைக்காலனி,அரை நிலப்பிரபுத்துவ நாடுதான்.வெளியில் இருந்து வரக்கூடிய நிர்பந்தங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

தற்போது நடைபெறும் வர்க்கப்போராட்டத்தின் சாரம், தற்போதைய சூழலை எப்படி புரிந்துகொள்வது என்பதில்தான் மையங்கொண்டுள்ளது.அதாவது ஜனநாயக குடியரசு என்றப்பெயரால் அலங்கரிக்கப்பட்டு,மூடி மறைக்கப்பட்டுள்ள அரைக்காலனி,அரை நிலபிரபுத்துவம் என்ற நிலைப்பாட்டை தொடர்வதா? அல்லது மக்கள் குடியரசை நிறுவ தொடர்ந்து போராடுவதா? என்பதுதான்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற எங்களது கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தலைவர் பிரசந்தா வர்க்கம் குறித்த கேள்விகள் தொடர்பான பல விடயங்கள் பற்றி விளக்கும் நீண்ட விளக்கத்தை கொடுத்திருந்தார். அதில் புதிய ஜனநாயக புரட்சிக்கும்,சோசலிசத்திற்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால், சந்தேகத்திற்கு இடமின்றி நேபாளத்திற்கு தற்போது புதிய ஜனநாயக புரட்சி தேவையற்றது என்றும் ,  அதில் நாம் பெருமளவு அடைந்து விட்டோம், மீதி சோசலிசம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வரும்போது அடைந்துவிடுவோம் எனவும் கூறி இருந்தார். மேலும் தற்போது கட்சியின் முக்கியப் பணி முதலீட்டு நாடுகளுக்கு சாதகமான சூழலையும் உற்பத்தி சக்திகளையும் உருவாக்குவது எனவும் கூறி இருக்கிறார். இந்த வகையில் தேசிய பொருளாதாரம்,தேசிய முதலாளிகளுக்காக கூட அவர் நிற்கவில்லை.உண்மையில் அவர் ஏகாதிபத்திய சக்திகளோடு ஒருங்கிணைந்திருக்கிறார். மக்கள் சக்தியை வலுவிழக்கச் செய்வது, ஏப்ரல் 10, 2012 அன்று மக்கள் விடுதலைப்படையை சதித்தனமாக நேபாள ராணுவத்திடன் ஒப்படைத்தது, புரட்சியின் போது நிலபிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே தந்தது, தேச நலனுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது மற்றும் இந்தியாவுடன் மற்றுமொரு கேவலமான நீர்வள ஒப்பந்தம் செய்துகொண்டது, ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய வல்லரசான இந்திய விரிவாக்கவாதிகளுக்கும், அவர்களின் நேபாள பொம்மைகளுக்கும் பிரசந்தா,பாபுராம் கும்பல் சேவை செய்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த க்கும்பல் நாட்டிற்கும் உழைக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது. தலைவர்கள் ஏகாதிபத்தியங்களின் உள்ளூர் தரகர்களோடு நிர்வாணமாக சரணடையும் போது வர்க்கப்போராட்டம் கட்சியின் பிரச்சனையாக மட்டும் இருக்க முடியாது. அது நாட்டினதும்,நாட்டு மக்களினதும் பிரச்சனையாகும். இந்த தேச விரோத, மக்கள் விரோத குற்றங்களை  நிச்சயமாக மக்களிடையே கொண்டு சென்று அம்பலப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பிரச்சனையை மக்களிடம் எடுத்துச்சொல்வது என்பது மொத்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மார்க்சியத்தின் பெயரால் துரோகமிழைக்கும் வலதுசாரி திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தி, முறியடித்து, புரட்சிகர சக்திகளின் பின் அணி வகுக்கச்செய்யும் கொள்கை மற்றும் அரசியல் பரப்புரையாகும்.

கடைசியாக நடைபெற்ற எங்களது கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் அமைப்பு பிரச்சனைகள் தொடர்பாக ஒரு முடிவை மேற்கொண்டது.

அது கட்சியில் உள்ள எந்த ஒரு கமிட்டியும் பெரும்பான்மைக்கு,சிறுபான்மை கட்டுபடல் மேல்கமிட்டிக்கு கீழ்கமிட்டி கட்டுப்படல் என்பதன் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளாது.

கட்சியில் ஒற்றுமை இல்லாத போது, எந்த ஒரு சித்தாந்தக் குழுவும் அவர்களின் கூட்டத்தை தனித்தனியாக நடத்தி முடிவுகள் எடுத்து அவற்றை செயல்படுத்த உரிமையுள்ளது.

தற்போது ஜனநாயக மத்தியத்துவம் என்பது எமது கட்சியில் இல்லை. கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சிபோராட்டங்கள் வெளிப்படையாக மக்களிடையே எடுத்துச்செல்லபட்டுள்ளது.

மொத்த நிகழ்வுகளையும் தொகுப்பது புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தேவையான,ஆழமான தத்துவார்த்த புரிதலை கொண்டவர்களாக எம்மை உருவாக்கும் என கருதுகிறோம்.

கேள்வி 2: மக்கள் விடுதலை படையின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது?அது முழுமையாக கலைக்கப்பட்டுவிட்டதா?

பதில்: மக்கள் விடுதலைப்படை உருவாக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநாட்டில் தலைவர் பிரசந்தா 21-ம் நூற்றாண்டின் எதிர்புரட்சியை தடுக்கவல்ல, உலக உழைக்கும் மக்களின் பலம் பொருந்திய ராணுவம் மக்கள் விடுதலைப்படை என்றார்.ஆச்சரியப்படும் வகையில் 12 ஆண்டுகளுக்கு பின் மக்கள் விடுதலைப்படையின் உயரிய கட்டளைத் தளபதியும்,அதற்கு உயிர் கொடுத்தவருமான தலைவர் பிரசந்தா ஏப்ரல் 10,2012 அன்று நேபாள ராணுவத்தைக்கொண்டு அதை  சதித்தனமாக சுற்றி வளைத்து கட்டாயப்படுத்தி சரணடைய உத்தரவிட்டார். இதனை தனது தைரியமான நடவடிக்கையாக அவர் கூறிக்கொள்கிறார். உண்மையில் இது ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்கவாதிகளின் நிழல் நடவடிக்கைகளினால் எடுக்கப்பட்ட கோழைத்தனமான முடிவாகும்.

கேள்வி 3: இந்த வர்க்கப்போராட்டம் தொடர்பாக உங்களது கட்சியின் சர்வதேச தொடர்புகளின் பிரதிபலிப்பு எப்படியுள்ளது? அவர்களின் விமர்சனம்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக இந்திய மாவோயிசக்கட்சி மற்றும் அதே நிலைப்பாடுகளை உடைய ஏனைய அமைப்புகளின் விமர்சனங்கள் தொடர்பாக................

பதில்: எமது கட்சிக்குள் இரு வகை நிலைப்பாடுகள் எழுவதற்கு முன்பாக சர்வதேச கம்யூனிசக்குழுக்கள் எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்களைக் கொண்டிருந்தன.சில கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருந்தன. எடுத்துக்காட்டாக இந்திய மாவோயிசக்கட்சி,ஈரான் மா-லெ-மா கட்சி ,அமெரிக்க புரட்சிகர கம்யூனிசக்கட்சி போன்றவை.சிலர் தமது விமர்சனங்களை எமக்கு அனுப்பி வைத்திருந்தனர்.சில திருத்தல்வாதக் கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருந்தனர். கட்சிக்குள் இருவகை நிலைப்பாடு எழுந்த பின்னர் உலக புரட்சிகர இயக்கங்கள் தமது சித்தாந்த ஆதரவை கட்சியின் புரட்சிகர பிரிவான தோழர் கிரணுக்கு தெரிவித்திருந்தனர். பல்வேறு குழுக்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் அடிப்படையில் சரியானவை. அதில் சில இப்பிரச்சனை சார்ந்த சூழலின் புரிதல் தொடர்பானவை. எப்படியாயினும் அந்த விமர்சனங்கள் புரட்சியையும்,புரட்சிகர நிலைப்பாட்டையும் தற்காத்து திரிபுவாதத்திற்கு எதிராக போராட எமக்கு உதவியாய் இருந்தன.

கேள்வி 4: 2005 ரோல்பா மாநாட்டை எதிர் அணி எவ்வாறு கருதியது? அது தற்போதைய சூழல் ஏற்பட ஏதாவது ஒரு வகையில் காரணமானதா?

பதில். அப்போது எமது கட்சி  மாநாட்டைக் கூட்டவில்லை. மத்தியக்குழு கூட்டத்தைத்தான் கூட்டியது. அப்போது ஜனநாயக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக ஏற்றுக்கொண்டோம். அதனை நாங்கள்  செயல் தந்திர மாற்றம்  என்றே கூறினோம். அப்போது நாங்கள் எடுத்த பாராளுமன்ற பாதை நிச்சயமாக ஒரு திருப்புமுனை. அதுவே எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு நிச்சயமாக இந்த சுழல் உருவாக்கத்தின் ஒரு காரணி. ஆனால் அந்த சொங்க்வாங் நிலைப்பாடு தோ வெற்றிடத்தில் இருந்து எழவில்லை. ஆதலால் கடந்த காலத்தை  முழுமையாக தொகுத்துப் பார்க்கவேண்டியுள்ளது, இதுவரை அதை நாங்கள் செய்யவில்லை. செழுமையான தொகுத்தலுக்கு அந்தக் கூட்டம், இரண்டாவது மாநாடு மற்றும் அதற்கு முந்தைய காலத்தையும் உற்று நோக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் நாங்கள் 21 ம் நுற்றாண்டில் ஜனநாயகத்தை உருவாக்குதல் என்ற எங்களது நிலைப்பாட்டையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி.5 கட்சி மாநாடு நடத்துவது குறித்து எதிர் அணி என்ன நினைக்கிறது? கட்சியில் உள்ளவர்கள் சட்டவாத பாதையை ஆதரிப்பதற்கு, பல ஆண்டுகளாக மாநாடு நடத்தப்படாததும் ஒரு காரணம் என கருதுகிறீர்களா?

பதில். ஆமாம் இருபது ஆண்டுகளாக கட்சி மாநாடு நடத்தப்படாததும் ஒரு காரணம். ஆனால் அதுவே முக்கியமான காரணமில்லை. தலைமையின் கொள்கை மற்றும் அரசியல் சறுக்கல்களே முக்கியக் காரணம். கட்சி மாநாடு பிரச்சனைகளை தீர்க்க உதவும். அது தொடர்ச்சியாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் அது நடக்க வாய்பில்லை. அது நாங்கள் நடைபெற வேண்டாம் என கருதுவதாகாது, மாறாக கட்சியில் எழுந்துள்ள இரு வேறு நிலைப்பாடுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்த உகந்த சுழல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி 6. இந்த முரண்பாட்டை கட்சியில் பிளவின்றி தீர்க்க முடியும் என்று கருதுகிறீர்களா? எதிர் அணியினர் இதற்கு எந்த அளவிற்கு துணிவார்கள்?

பதில். புரட்சியாளர்கள் தான் புரட்சியை முன்னெடுக்க வலிமையான கட்சியை விரும்புகிறார்கள். முதன்மையாக புரட்சிகர தலைமையின் வலிமை அதன் சரியான கொள்கை மற்றும் அரசியல் பாதையை கொண்டு அளவிடப்பட வேண்டியதாகும். இரண்டாவது அமைப்பு மற்றும் செயல் முறை பரிமாணம் சார்ந்ததாகும். ஆகவே புரட்சியாளர்கள் முதன்மையாக சரியான கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கட்டி எழுப்பும் உந்துதலையும், அதன் பிறகு சரியான அமைப்பு நிலைப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே பலரையும் கட்சியில் அணிதிரளச்செய்து வலிமையான பௌதீக அடித்தளத்தையும் கொடுக்கும்.

தலைவர் மாவோ உடைந்து செல்லும் உண்மையான சிறு துண்டுகள் தொடர்பாக  மிகச் சரியாக ஒளியை  பாய்ச்சியிருக்கிறார்.  உடைந்த அந்த துண்டுகள் மார்க்சியத்தில் இருந்து விலகி செல்பர்வர்கள் என கூறி இருக்கிறார். வலது திரிபுவாதிகள் சோசலிசம் என்னும் தொலைநோக்கு பார்வையில் இருந்து விலகிச் செல்வார்கள். இந்த வகையில் பாபுராம் மற்றும் பிரசந்தா கும்பல் உடைந்து செல்லும் துண்டுகள் ஆவார்கள். நாங்கள் தற்போது சரியான நிலைபாட்டை காக்கவும், வளர்தெடுப்பதற்குமான வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் விளைவாக தோழர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு புரட்சிகர பகுதி வலுப்பெறும். இந்தச் சூழலை உருவாக்குவதன் மூலம் புரட்சிகர சக்திகள் புரட்சியின் மையத்தை இனங்கண்டு புரட்சியை முன்னெடுக்க அணிதிரள்வார்கள். திரிபுவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் வழியில் பயணிப்பார்கள். கம்யூனிச கட்சியில் மார்க்சியமும், திரிபுவாதமும் ஒன்றோடொன்று இணையாக நீண்ட காலம் இணைந்து செல்ல முடியாது

கேள்வி 7. 21 ம் நுற்றாண்டு சோசலிசத்தின் உள்ளடக்கம் என்ன? இதுகுறித்து இருதரப்பும் என்ன நினைக்கிறார்கள்?

பதில். 21 ம் நுற்றாண்டின் சோசலிசம், ஜனநாயகம் என்ற கோட்பாட்டை 2001 ல் எமது கட்சி முன்னெடுத்தது. இந்த அரசியல் வழிமுறை உண்மையில் எதிர் புரட்சியை தடுக்க  புதிய ஜனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பழக்கப்படுத்த பரிந்துரைத்தது. அதோடு மேலும் சில அம்சங்களையும் அது உள்ளடக்கி இருந்தது. ஒன்று புரட்சிக்குப் பின்னர் கட்சி, அரசு, இராணும் ஆகிய இம்மூன்றின்  மீது மக்களின் மேற்பார்வையையும், கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்தும் அரசியல் பொறியமைவை முன்மொழிந்தது. இரண்டாவது பல கட்சிகள்  செயல்படும் முறை உத்திரவாதப்படுத்தப் படவேண்டும்.  மூன்றாவது கட்சித் தலைமை அன்றாட அரசியல் பணிகளில் ஈடுபடக்கூடாது. கொள்கை மற்றும் அரசியல் சார்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். நான்கவது, மூன்றாம், நான்காம் மட்ட தலைவர்கள் கூட நிரந்தரமாக அல்லாது சுழற்சி முறையில்தான் அரசமைப்பில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்தாவது மக்கள் விடுதலை ராணுவம் அளவில் சிறியதாகவும், மக்களை பயிற்றுவிக்க போதுமானதாகவும், தனித்த இடத்தில் அது வைக்கப்படாமல் மக்களோடு நேரடி தொடர்பிலும் இருக்க வேண்டும். இவைகள் புதிய ஜனநாயக மற்றும் சோசலிச சமூகத்திலும் நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

புரட்சி நிறைவடையாமல், மக்கள் விடுதலை இராணுவம் கலைக்கப்பட்டுவிட்ட சுழலில், 1,3,4, மற்றும் 5 வதாக சொல்லப்பட்ட அம்சங்களுக்கு தற்போது எந்த அர்த்தமும் இல்லை. எஞ்சிய இரண்டாவது நெறிமுறை மட்டும் பிரசந்தா கும்பலுக்கு சிறப்பாக பயன்பட்டு, ஏகாதிபத்தியத்தின் கீழ் பாராளுமன்ற அரசியலை செய்வதாக ஆடை கட்டி நிற்கிறது. ஆகவே திரிபுவாத கும்பலால் இது சத்தமாக பேசப்படுகிறது. ஏனென்றால் இது அந்த கும்பலுக்கு மக்களை குழப்பவும், பலகட்சி அமைப்பில் ஆழ்த்துவதற்கும் சிறப்பான கருவியாக பயன்படுகிறது.

கட்சியில்  இருவேறு நிலைப்பாடுகளுக்கு இடையிலான போராட்டத்தின் காரணமாக கட்சியில்  பிளவு ஏற்பட்ட பிறகு, தோழர் கிரணால் வழி நடத்தப்படும் பிரிவு இவைகளைப் பற்றி இன்னும் விரிவாக தொகுத்துப் பார்க்கவில்லை. பொதுவாக இப்பொழுதும் நாங்கள் இந்த கோட்பாடு கம்யூனிச கட்சியில் பதுங்கியிருக்கும்  திரிபுவாதிகளால்  முதலாளித்துவம் நிலைநாட்டப்படுவதை தடுக்கவும், புரட்சியை பாதுகாக்க மக்கள் விடுதலை ராணுவம் சட்ட வாத்த்தில் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கவும் பயன்படும் என நம்புகிறோம். ஆனால் இந்த கோட்பாடு கூட இரண்டு அம்சங்களை உடையது. ஆகவே சரியான, முழுமையான தொகுப்பை நாம் புதிய ஜனநாயப் புரட்சியை சாதித்து நடைமுறையில் அவற்றை பயன்படுத்தி பார்த்தப்பிறகே அடைய முடியும்.

நேபாள மாவோக்கள் பன்னிரண்டு அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியபோதும், அதைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக திறம்பட எடுக்கப்பட்ட ஒவ்வொரு முன்னெடுப்புகள் மற்றும் ஆயுதங்களை எவ்வாறு பாதுகாத்து வைக்க வேண்டும் மற்றும் பலவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் ஆதரித்தோம். ஏகாதிபத்தியவாதிகளும், நிலவுடைமை வர்க்கங்களும் எப்போதும் ஆயுதம் எடுக்கும் சூழலை உருவாக்குவார்க்ள் என்பதால் இதனை நாங்கள் மிகவும் ஆபத்து நிறைந்த  ஒன்றாக கருதினோம். நாங்கள் கருதியது போலவே நடக்கவும் செய்தது. அதனால் நிலவுடைமை வர்க்கங்களால் உடைக்கப்பட்ட ஒப்பந்தத்தை, புரட்சிக்கு இனி உதவாத ஒன்றை மாவோயிச கட்சி அதன்படி நடக்க வலியுறுத்தியது.

கேள்வி 8 :அதற்கு என்னக் காரணம்?  இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 பதில். இன்றைய சூழலில் திரும்பி பார்க்கும்போது எங்களது கட்சியின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக 2005 கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டது, நேபாள நாடாளுமன்றவாதிகளுடன் டில்லியில் 12 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஆகியவை இந்த மொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்த செயல் தந்திரம் மூலம், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் கிளர்ச்சி என்னும் சூழலை ஏற்படுத்தி, நகரங்களில் புரட்சிகர கட்டமைப்பை ஏற்படுத்த  உதவும் என்பதால் இது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் நகரங்களுக்கு வந்தோம். ஆனால் கொந்தளிப்பான கடந்த பத்துவருட மக்கள் யுத்தத்தில் நாங்கள் பெற்ற அனைத்தையும் தற்போது எமது கைகளை விட்டு போய்விட்டது. அண்மையில் தலைவர் பிரசந்தா அந்த 12 அம்ச ஒப்பந்த்த்தை அடையும் முன்பாக,  இந்திய விரிவாக்கவாதிகளுடன் டில்லியில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இந்து பத்திரிக்கைக்கான ஏப்ரல் 16- நேர்காணலில் டில்லியுடன் பன்னிரெண்டு அம்ச ஒப்பந்தத்துடன் தொடங்கிய பயணம் தற்போது முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.  நேபாள ராணுவத்தை வைத்து மக்கள் விடுதலைப் படையின் முகாம்களை சதித்தனமாக சுற்றிவளைத்து சரணடையச்செய்ய உத்தரவு இட்டதற்குப் பின்னர்தான் இந்த நேர்காணலை அவர் தந்தார். இது பாபுராம், பிரசந்தா கும்பல் பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக விரிவாக்கவாதிகளின் முன் சரணடைந்ததையே காட்டுகிறது. இதனை இந்தக் கும்பல் புரட்சியை அடைவதற்கான செயல் தந்திரம் என்று சொன்னது. ஆனால் அது இந்திய ஆளும் வர்க்கங்கள், நேபாள நாடாளுமன்ற வாதிகள் மற்றும் பாபுராம், பிரசந்தா கும்பல் கூட்டு சேர்ந்து நேபா புரட்சியை முறியடிக்க எடுத்த விரிவான நிலைப்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கும்பல் நேபாள உழைக்கும் மக்கள் மற்றும் உலக உழைக்கும் மக்களிடம் புளுகியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதையே காட்டுகிறது.

கேள்வி 9. பல முக்கிய அம்சங்களை குறித்து இந்திய மாவோக்கள் விமர்சித்திருந்தாலும், முக்கியமாக முதலாளித்துவ வாதிகள் குறித்து நீங்கள்  கவம் செலுத்த தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.  நாங்கள் புரிந்து கொண்டவகையில் நேபாள மாவோக்கள் நிலவுடைமை வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்த (மன்னர் ஆட்சியை தூக்கியெறிதல்) அளவிற்கு முதலாளித்துவ வாதிகள் குறித்து கவணம் செலுத்த தவறிவிட்டனர். அதுவே அவர்களுடன் முடிவுறாத உடன்பாடு ஏற்பட காரணமானதாக விமர்சித்துள்ளனர். இது குறித்து என்ன  நினைக்கிறீர்கள்?

பதில். மிக முக்கிய கேள்வியை சரியான நேரத்தில் கேட்டிருக்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் இந்திய மாவோ தோழர்கள் சரியான இடத்தை நோக்கி விரலை நீட்டியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். எங்களது கொள்கை  பிரிவை தலைமை தாங்கும் தோழர் கிரண் விரிவாக தொகுத்து பார்த்து முடிவை எடுக்காமல் இருக்கிறார். அதுவும் இந்த நிலைமை போராட்டம் எழ காரணமாக உள்ளது.

புதிய ஜனநாயகப் புரட்சி இரண்டு வகைத்தன்மையை கொண்டது. ஒன்று நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு, இரண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு. இவை இரண்டும் பிரித்தறிய இயலாதவாறு பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் எமது கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இதனை புரிந்து கொள்வதில் சில வேறுபாடுகள் உள்ளது. மற்றவர்களைப் போன்று அல்லாமல் வெளியில் இருந்து வரும் குறுக்கீடுகளுக்கு எதிராக போராடுவதை விட பாபுராம் மன்னராட்சிக்கு எதிராக போராடுவது குறித்தே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். மக்கள் இதனை இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடாக புரிந்து கொண்டனர். கூடுதலாக புதிய ஜனநாயக புரட்சிக்கு முன்னதாக ஜனநாயக குடியரசிற்கு துணை படிநிலை இருக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். 2004 புன்டிங்க்வங் தலைமை குழு கூட்டத்தில் மக்கள் யுத்தத்தை, தேசிய விடுதலை என்ற முழக்கத்தை வைத்து தீவிரப்படுத்த முடிவெடுத்தபோது, அதனை பாபுராம் கடுமையாக எதிர்த்தார். அதன் தொடர்ச்சியாக பாபுராம், பிரசந்தா ஆகிய இருவருக்கும் இருவகை நிலைப்பாட்டு போராட்டம் கூர்மையடைந்து இந்திய ஆதரவு, மன்னர் ஆதரவு என ஒருவரையொருவர் சாடிகொள்வது தொடர்ந்தது. கட்சி உடையும் நிலைக்கு சென்றது. ஒருவருடத்திற்குள்ளாக 2005 ல் ஜனநாயக குடியரசு என்னும் செயல் தந்திர நடவடிக்கை எனும் புள்ளியில் ஒற்றுமையாக நின்றார்கள். உண்மையில் இது பாபுராமின், பிரசந்தாவிற்கு எதிரான பெரிய அரசியல் வெற்றி. அந்தக் கூட்டத்தில் பாபுராம், தான் பிரசந்தாவினால் உள்வாங்கப் பட்டுவிட்டதாகவும் இனி தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு சவாலாக இருக்க மாட்டேன். இரண்டாவது மனிதனாக அவருடன் இருந்து உதவுவேன் என்றார்.

தற்போது நாங்கள் இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம். சுங்வங் கூட்டத்திற்குப் பின்னர் இப்போது பாபுராமின் நிலைப்பாடுதான் கட்சியை வழிநடத்துகிறது. தற்போது சுங்க்வாங் கூட்டத்தின் பின்னர்  பாபுராம், பிரசந்தாவினுள் உள்வாங்கப் படவில்லை. இவர்தான் அவருக்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இருவரும் ஜனநாயக குடியரசை செயல்தந்திரம் எனும் வடிவத்தில் ஒப்புக்கொண்டபோது, அவர்களின் நிலைப்பாடு மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இந்திய விரிவாக்கவாதிகளோடும், அவர்களின் நேபாள பொம்மைகளோடும் ஒரு நீண்டகால சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும்.

கேள்வி 10. கட்சிக்கெதிரான, இந்த அணியின் தவறான பாதைக்கெதிரான இந்தப் போராட்டம் மிகத்தாமதமானது என நீங்கள் கருதவில்லையா?

பதில். நாங்கள் எங்கள் கட்சித்தலைமையின் தவறை புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல. நாங்கள் அவரை தேவைக்கும் அதிகமாக நம்பிவிட்டோம். இது மிகவும் தாமதமானது அல்ல என்றாலும் தாமதமான ஒன்றுதான். இன்னும் இதனை நாங்கள் இரண்டாவது கட்ட நிலையாகவே பார்க்கிறோம். எங்கள் முதல் நோக்கம் புரட்சி வலது சந்தர்ப்பவாத பாதையில் நீர்த்துவிடாமல் பாதுகாப்பதே ஆகும். புரட்சி ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதும், எந்த நேரத்திலும் எங்களது விரலை இருவேறு நிலைப்பாட்டில் நிற்கும் தலைவர்களை நோக்கி உயர்த்துவோம். இந்த நீண்ட கூர்மையான இரு நிலைப்பாட்டு போராட்டத்தில், நாங்கள் பரிசோதிக்கப்பட்ட தலைவர்களையும், தொண்டர்களையும் கொண்ட குழுவை பெற்றிருப்பதோடு, எங்களின் புரட்சிகர நிலைபாடும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக, மார்க்சியம் திர்புவாதத்தை வெல்லும், நேபாளத்தில் புதிய சனநாயக புரட்சி வெற்றிவாகை சூடும். 

பேட்டி கண்டது மா. லெ. க. க. துருக்கி.

ஆங்கில மூலக்கட்டுரை:

Interview with Basanta - Politburo Member of the Central Committee Unified Communist Party of Nepal (Maoist)



 தொடர்புடைய கட்டுரை:

Wednesday, 22 February 2012

கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.

கூடங்குளம் அணு உலை நிலநடுக்கம்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களையும் தாங்கும் திறன் கொண்டது.ஆகவே இதனால் ஆபத்து ஏதுமில்லை என்று தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு கூறியுள்ளது.இந்தக் கருத்து திட்டமிட்டே மத்திய அரசு,மாநில அரசு செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அணு உலையினால் ஏற்படும் பாதிப்பு இயற்கை பேரிடர்களால் மட்டுமல்ல,இயற்கை பேரிடர் ஏற்படாவிட்டாலும், அணு உலையினால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைத்து தரப்பினரும் மூடி மறைத்து வருகின்றனர்.அதை அம்பலப்படுத்தும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு உதயக்குமார் எமக்களித்த நேர்காணலை மறுபிரசுரம் செய்கிறோம்.  



1. கூடங்குளத்தில் அணு உலை அமைக்கம் திட்டத்தை எந்த ஆண்டில் இருந்து எதிர்த்து வருகிறீர்கள்?என்ன,என்ன வடிவங்களில் எதிர்த்து போராடி வருகின்றீர்கள்?
1997-98 காலகட்டத்தில் இருந்து இந்த கூடங்குளத்திற்கு எதிரான ஒரு லிப்ட் சர்வ் வச்சிருந்த நான், கம்யுனிசம் வாட்ச் அன் கவர்னர் மானிட்டர் அப்படிங்கர ஒரு லிப்ட் சர்வ் அதுல கூடங்குளம் சம்பந்தமான செய்திகளை தொகுத்து ஒரு செய்தி மடல் மாதிரி தொகுத்து போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.இத்திட்டம் தொடங்கப்பட்ட 1988-89 காலக்கட்டதிலேயே இதற்கு எதிராக நாகர்கோவிலில் பல முயற்சிகள் செய்து இருக்கிறோம்.பிறகு சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு,கோர்ப்பசோவ் பதவி இழந்த பிறகும்,ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பிறகு 1997-98 காலகட்டத்தில் இதற்கு எதிரான லிப்ட் சர்வில் செய்திகளை தொகுத்து போட்டுகொண்டு இருந்தேன்..பிறகு 2001-ல் திரும்பவும் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பிறகு 2001 நவம்பர் மாதம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை மதுரையில்       தொடங்கினோம். இதில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.
2.அணு உலையால் மீன்வளம் எந்தளவிற்கு பாதிக்கப்படும்?
மீன் வளம் எந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அணு உலையின் மையப்பகுதியை கோர் என்று சொல்லுவார்கள்,அதை குளிர்விப்பதற்கு கடலில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள்.அந்த தண்ணீர் அணு உலையை சுற்றிவரும் போது சூடாகிவிடும்.பின்பு கடலில்  கொட்டுவார்கள்அப்படி கொட்டும் போது,அணு சக்தி துறை என்ன சொல்லுகிறது என்றால் தண்ணீர் 7 டிகிரி தான் சூடாகும் என்கிறது.கல்பாக்கத்தில் 12 டிகிரி தண்ணீர், சூடாகிறது.இந்த தண்ணீரை தொடர்ந்து 24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும்,வருடத்தில் 365 நாட்களும் முழுவதும் கடலில் கொட்டும் போது நிச்சயம் அது கடலில் மாற்றத்தை உண்டுபண்ணும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு இருக்கும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு அளவு குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் கொஞ்சம், கொஞ்சமாக சிறுக,சிறுக 60 ஆண்டுகளில் இதன் கதிர்வீச்சும் அதிகமாகிவிடும்.இந்த சூடான ,கதிர்வீச்சு கலந்த  தண்ணீர் 60 ஆண்டுகள் கடலில் விடுவதால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.கதிர்வீச்சால் கடலுக்கு ஆபத்தில்லை என்று சொல்லுவது பொய்.
அதே மாதிரி உப்பகத்தி ஆலை(Desalltation paln) 4 இடத்தில் வைத்துள்ளார்கள்,இதில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும் வெளிவரும்.இது 4 ஆலைகளில் இருந்தா அல்லது ஒரு ஆலையில் இருந்தா என்பது தெரியவில்லை.இப்படி ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும்,கழிவுகளும் உற்பத்தி செய்து இதையும் கொண்டு போய் கடலில் கொட்டினால்,இவைகள் கடலில் உப்பும்,அமிலத்தன்மையும் நிச்சயம் அதிகரிக்கும்.இதனால் இப்பகுதியில் உள்ள மீன் பிடி கிராமங்கள் மீன் பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.அதாவது மீன் வளம் குறையும்,அப்படியே மீன் கிடைத்தாலும் நோய்வாய் பட்டு இருக்கும்.கல்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் சொல்கிறார்கள், ”எங்கள் பகுதியில் மின்வளம் குறைந்துவிட்டது பல வகையான மின்கள் கிடைப்பதில்லை”, என்று கூறுகிறார்கள்.அங்கு கல்விரால் மீன்கள் தான் கிடைக்கிறது,இதை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை,அப்படியே கிடைத்தாலும் அது நோய்வாய் பட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.ஆகையால் இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் இப்பகுதியில் உள்ள தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்ட மீன்பிடி தொழில் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
3.அணு உலையால் விவசாயத் தொழிலில் என்ன,என்ன பாதிப்பு ஏற்படும்?
இதே மாதிரி தான்.கடலில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு போய் விடுகிறார்களோ,அதே மாதிரி தான்.அதாவது புகை போக்கிகளில் இருந்து ’ தொடர்ச்சியாக தினசரி வெளியேற்றுதல்’ என்ற முறையில் சாதாரணமாகவே கழிவுகள் வெளிவரும்.அதில் அயோடின்,சிசியம்,ஸ்ராந்தியம்,டெலோரியம் இந்த மாதிரியான கதிர்வீச்சு தன்மை கொண்ட தனிமங்கள் காற்றில் கரைந்து,மிதந்து கொண்டே இருக்கும்,அன்று காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் போய் இந்த கதிர்வீச்சு கணிமம் மண்ணில் போய் விழும்.கொஞ்சம் தப்பி வானத்துக்கு போகும்,அப்படி போவது கூட மேகங்களில் அமர்ந்திருந்து விட்டு மழை தண்ணீர் மூலம் மண்ணை அடைகிறது.இது போல தொடர்ந்து 60 ஆண்டுகள் நடைபெறும் போது மண்ணும் கதிர்வீச்சு தன்மையுள்ள மண்ணாகும்.இந்த மண்ணில் விளையும் பயிர்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.பசு மாட்டின் பால் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.நாம் சாப்பிடும் காய்கறிகள்,பழங்கள் என அனைத்து உணவு பொருட்களும் இப்படி விஷமாகி போகும்.இதனால் நிச்சயம் விவசாயம் பாதிக்கப்படும்.
4.அணு சக்தி சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
சுற்றுச்சூழல் என்று பார்க்கும் போது மேலே கூறியது போல், காற்று நாசமாகி போகிறது.காற்றில் கதிர்வீச்சு பொருள் மிதந்து வருகிறது.கடல் நாசமாகிப்போகிறது.நிலம் பாழாகிறது.நிலத்தடி நீர் பாழாகிறது.இப்படி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாழாகிப் போகும்.
5.சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
இப்படி பாதிப்புக்கு உள்ளாகும் போது,இது 60 ஆண்டுகளுக்கு நம்  மண்ணும்,தண்ணீரும்,காற்றும்  தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கும்.இதனால் நமது உணவு சங்கிலி(food chain) ஆன உணவிற்குள்ளும் கதிர்வீச்சு போகும்.இதனால் நாம் உண்ணும் உணவு,காற்று,குடிக்கின்ற தண்ணீர் அனைத்தும் விஷமாகும்.இதனால் நிச்சயமாக பலவித நோய்கள் உருவாகும்.பலவிதமான நோய் என்று பார்க்கும் போது கதிர்வீச்சு நோய்(Radiational ill) முக்கியமானது.கதிர்வீச்சு என்று பார்க்கும் போது அது எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளாது.
அது வந்தால் எல்லோருக்கும் காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு வரும்.கதிர்வீச்சு அதிகமாகும் போது தோல் கருத்து புண்ணாகிப்போகும்.உடல் அளவில் பலமாக இருப்பவர்கள் நாளடைவில் கதிர்வீச்சின் தாக்கத்தால் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் ஏற்படும்.இவர்களின் குழந்தைகள் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைபாடு,உடல் உறுப்புகள் குறைபாடு உடையவர்களாக பிறப்பார்கள்.
உதாரணமாக கைகால் குட்டையாக,விரல்கள் குட்டையாக அல்லது குறைவாக இருக்கும்.ரத்த புற்று நோய்,ஒருக்கண்ணோடு பிறக்கும்.இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வாழ்வில் அமைதி,நல்வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படும்.
6.அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மீண்டும் சரி செய்ய முடியுமா?
செய்யலாம்,ஆனால் அது மிகவும் சிரமமானப் பணியாகும்.செர்னோபில் விபத்து நடந்து பக்கத்து நாடுகளான பெலுரு,லாட்வியா,எஸ்டோனியா போன்ற நாடுகளில் எல்லாம் கதிர்வீச்சு கழிவுகளின் படிவம் படிந்து, அந்த நாடுகளின் மண்வளம் பாழாகிவிட்டது.அதற்கு பல லட்சம் டாலர் செலவு செய்து அம்மண்ணை சுத்தம் செய்து, கதிர்வீச்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இப்போது ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் விபத்து நடந்து 9 மாதங்கள் ஆகப்போகிறது.அங்கு புவியின் மேலடுக்கு மண் நீக்கப்பட்டு கதிர்வீச்சு இல்லாத மண்ணாக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இதற்கு மிகப்பெரிய பொருட் செலவு பிடிக்கும்.நம்மை போன்ற ஏழை நாடுகள் இது போன்ற தேவையற்ற செலவு செய்ய முடியாது.அப்படியே செய்தாலும் அது 100 சதவீதம் சுத்தமானதும் அல்ல.
7.மக்களை இந்த போராட்டத்தில் இவ்வளவு உணர்வு பூர்வமாக பங்கேற்க வைக்க
எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாண்டீர்கள்?
2001-ல் இருந்து கிட்டதட்ட ஒவ்வொரு மாதமும் கடலோர கிராமங்களுக்கு சென்று இளைஞர் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,விவசாய அமைப்புகளில் இந்த அணுமின்நிலையம் வந்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதைப்பற்றி பேசினோம்.அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன,அணுக்கரு பிளவு,சேர்ப்பு என்றால் என்ன,புற்றுநோய் இப்படி பல அடிப்படை தகவல்களை மக்களிடம் கொடுத்துள்ளோம்.இதை தொடர்பணியாக 11 ஆண்டுகள் செய்தோம்.இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தகவல்கள் சென்று சேர்ந்தது.இவ்வாறு நடந்துகொண்டு இருக்கும் போதே புகுஷிமா அணு உலை விபத்து நடந்தது.இதனால் நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.ஆகையால் நாங்கள் சொன்னது அனைத்தும் வெறும் சவடால் அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.மேலும் நாங்கள் வேறு ஆதாயத்துக்கோ,தேர்தலில் நின்று ஓட்டுவாங்குவதற்கோஅல்ல, என்று இதன் அடிப்படையில்தான் மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது வேறெந்த ஆதாயங்களுக்கும் அல்ல.தமது சொந்த வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வதர்குத்தான்.
8.இந்தப் போராட்டத்தில் மீனவ மக்கள் மட்டும் பங்கேற்கிறார்களா?விவசாயிகளும் பங்கேற்கிறார்களா?
மீனவ மக்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.இதற்கு காரணம் மீனவ மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொண்டவர்கள்.அவர்களுக்குத்தான் தெரியும்,இயற்கை கெட்டுப்போனால் தமது வாழ்வும் எதிர்காலமும் போய்விடும் என்று.அதனால்தான் அவர்கள் போராட்டத்தில் பெருமளவுன் பங்கேற்கிறார்கள்.
அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பத்தில் தவறாக நினைத்தார்கள்.பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இது மீனவர்களின் பிரச்சனை என்று எண்ணினார்கள்.குறிப்பாக,தலித்,முஸ்லிம் கிராமங்களுக்கு போனால் அவர்கள் தமது பிரச்சனையில்லை என கருதினர்.
புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகுதான் நமது,விவசாயமும் இதன் மூலம் தமது வாழ்வும் பாதிக்கப்படும் என்று உணர்ந்துகொண்டனர்.தாம் உற்பத்தி செய்யும் விலைபொருட்கள்,விலை போகாது அப்படியே போனாலும்,போதிய விலைகிடைக்காது,என்பதையும் உணர்ந்தனர்.
ஆனால் அணுசக்திதுறை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை தருவோம்.பேச்சுப்பறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம்,இதனால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்று பொய் சொன்னார்கள்.இது பொய் என்று மக்கள் உணர்ந்த பிறகு அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டார்கள்.
9.அணு உலை இயற்கை சீற்றத்தினால் மட்டும் பாதிப்பு ஏற்படுமா?மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படுமா?
மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படும்.செர்னேபில் அணு உலை விபத்து முழுக்க மனிதத் தவறுகளால் நடந்தது.
இந்திய உள்ள அணு உலைகளிலும் பல சிறு,சிறு விபத்துகள் மனிதத்தவறுகளால் நடந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள் மனிதத்தவறுகளால்தான் நடக்கிறது.
இந்தியாவில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கன நீரை குடிநீரில் கலக்கவிட்டு,அதனால் என்ன,என்ன வியாதிகள் ஏற்படுகிறது,என்ன சோதனையும் நடந்துள்ளது.இந்தியாவில் மனிதத் தவறுகள் தெரியாமல் மட்டுமல்ல,தெரிந்தே திட்டமிட்டும் நடந்துள்ளது.
10.அணு உலையில் இயல்பாகவே விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா?
மனித தவறுகள்,இயற்கை சீற்றம் ஆகியவற்றோடு இயல்பாகவே விபத்துக்கள் நடக்கலாம் என்று இப்போது கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகளும்,அதிகாரிகளும் சொல்கிறார்கள்.இப்போதே பல குழாய்கள் துருபிடித்துவிட்டது.ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் தரமற்றவைகளாக உள்ளன.இதனாலும் விபத்துக்கள் ஏற்படும்.மேலும்,இப்போதைய சோதனையின் போதே மனித கால் அளவு தடிமனான ஒயர்கள் எரிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.இப்படி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.நன்றி!
-சூறாவளிக்காக இடிந்தகரையில் இருந்துமுகிலன்.

தொடர்புடைய கட்டுரைகள்:


1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!