விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label மின்வெட்டு. Show all posts
Showing posts with label மின்வெட்டு. Show all posts

Friday, 28 September 2012

மின்சாரம் சமூகத்தரத்திற்கான ஆதாரம்!


கூடங்குளம் போராட்டம் எப்போதெல்லாம் தீவிரம் அடைகிறதோ அப்போதெல்லாம், தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. உண்மையில் இப்போது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம்  வழங்கப்படுகிறது.
      
ஒரு நாளைக்கு ஏறத்தாழ இருபது மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டால் மொத்தத் தமிழகமும் செயலிழந்து போய் கிடக்கிறது. குறைந்தது குடிநீர் தேவையைக் கூட தற்போது வழங்கப்படும் மின்சாரத்தால் ஈடுசெய்ய இயலவில்லை.


      
தமிழகத்தின் கொங்குமண்டலத்தில் இயங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இப்போதைய மின் வெட்டால் தமது நூற்பு ஆலைகள் முற்றாக செயலிழந்துவிட்டது. ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு டீசல் விலை உயர்வு அமைந்து விட்டது என்று குமுறுகிறார்கள்.
     
 ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட விவசாயம் இந்த மின்வெட்ட்டால், மேலும் அழிந்துவிடப்போவதில்லை என்பதால் விவசாயிகள் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
      
 மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டாலும் ஒப்பாரி. புலம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போராட்டங்களைத்தவிர, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை காணவேண்டிய நிர்பந்தத்தை , ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அடிப்படையை கொண்ட போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்று கூட நடைபெறவில்லை.
     
 ஈழத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காரணமாக மின்சாரம் அம்மக்களுக்கு எட்டாக்கனியாகிப் போனதை நாம் அறிவோம். இன்னமும் கூட அங்கு மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
      
ஆனால் தமிழகத்திலோ ஈழத்தைப் போன்று போர் எதுவும் நடக்காமலேயே, மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக்கப்படுட்டு விட்டது!
     
  தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறை 6500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறைவாரியம் அறிவித்துள்ளது.
     
 கூடங்குளம் அணு உலை முழுமையாக இயங்க ஆரம்பித்தாலே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகும் என்கிறார்கள். அதிலும்  உலக அளவில் அணு உலை மின் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவில் 30 % -  40 % மட்டுமே ஆகும். அப்படியானால் கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கினாலும் கூட 400 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பரிசோதனை மட்டுமே நடைபெறப்போகிறது.
      
இதுதான் நிலைமையாக இருக்கும்போது கூடங்குளம்  செயல்பட ஆரம்பித்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்துவிடும் என்று பச்சையாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் கூச்சமும் இன்றி வெளிப்படையாக புளுகுகிறார்கள். அதிகார பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
      
இப்படிச் செய்வதன் மூலம் கூடங்குளம் மக்களுக்கு எதிராக தமிழக மக்களை  திசை திருப்ப பார்க்கிறார்கள். இவர்கள் தமது முயற்சியில் ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு நிலவுகிறது.
      
தற்போதைய மின்வெட்டைப்பற்றி மத்திய ஆட்சியாளர்கள் வாயே திறப்பதில்லை. மின்சாரம் மாநில அரசின்  பட்டியலில் உள்ளதால் அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வில்லை என்று மட்டுமே பெரும்பாலோர் கருதுகின்றனர். மின்சாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் என்றாலும், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிடமுடியுமா?
      
மின்பற்றாக் குறையால் ஒரு மாநிலம் செயலிழந்து  கிடக்கும்போது , அம்மாநில மக்களின் நலனில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்றால், இந்தியா என்ற கூட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட மாநிலம் உணர்வுபூர்வமாக இருக்க முடியுமா?
     
 மக்கள் நலன் என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கோ, மாநில ஆட்சியாளர்களுக்கோ எப்போதுமே  இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எனவே அந்த நிலையிலிருந்து இப்பிரச்சனையை நாம் பார்த்தால்  து நமது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
      
இவர்களுக்கு வேறொரு கோணத்தில் இந்த மின்பற்றாக்குறை அத்தியாவசியமானது என்பதால் அதன் மீது ஆட்சியாளர்களுக்கு  அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்.
      
அந்த  வகையிலும் எவ்வித வெளிப்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. இதைப்பார்க்கும் போது அவர்களுக்கு அக்கரையுள்ள குறிப்பிட்ட அந்தத் துறைக்கும், இந்த மின்பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
      
ஆட்சியாளர்களின் அக்கறையுள்ள அந்த துறை அந்நிய  முதலீட்டு துறையே ஆகும். தமிழகத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  தற்போதைய மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக்கணமே மத்திய ஆட்சியாளர்கள் அலறியிருப்பார்கள்.
      
ஆனால் அவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களும் இதுபற்றி  மூச்சுவிடவில்லை. இதிலிருந்தே பன்னாட்டு  நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
      
ஆனால் மின்பற்றாக் குறைபற்றி பேசுகிற ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் உட்பட யாருமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரத்தை பற்றி பேசுவதில்லை. இதிலிருந்தே ஆட்சியாளர்கள் மட்டுமல்ல . தங்க்ளை சமூக அக்றை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் அனைவருமே மக்களின் கவனத்தை உண்மைக்கு புறம்பான வழியிலேயே திசை திருப்புகின்றனர்.
     
 தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரத்தை தடுக்கப்போவதாக் கூறி பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத குழுக்கள் வாய்த்தவறி கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை தடுக்கப்போவதாக கூறுவதில்லை,
      
இனவாத குழுக்கள் மட்டுமல்ல தங்களை சர்வதேசவாதிகள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள் என்று  கூறிக்கொள்வோரும் கூட இதுபற்றி மக்களிடையே பேசுவதில்லை.
      
இப்படி நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், மக்களின் உயிராதாரமான பிரச்சனையில் உண்மைக்கு புறம்பாக நடந்து கொண்டு, மக்களுக்கு துரோகமிழைக்க முடிகிறது என்றால், இவைகளை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு உள்ளது என்பதின் வெளிப்பாடே ஆகும்.
     
 சமூகத்தின் இந்த உண்மையான நிலைக்கு ஏற்பத்தான் எல்லா அமைப்புகளும் நடந்து கொள்கின்றன. இந்த அடித்தளத்தில் இருந்துதான் அனைத்து அமைப்புகளும் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன.
      
ஆட்சியாளர்கள் தம்மை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும் தமது வாழ்வாதாரத்தை அழித்தாலும், அதற்கெதிராக போராடி அதை முறியடிப்பதற்கு மாறாக,அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்வது என்பதே இந்திய சமூகத்தின் பாரம்பரிய மரபாகும். இதுவே இன்றுவரையிலான  சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது  தற்போதைய மின்பற்றாக்குறையையும், அதை சமூகம்  எதிர் கொள்ளும் விதத்திலும் இயலாமையை மட்டுமல்ல, அது தனது தரத்தையும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
     
 எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற இந்த சிந்தனா  முறையின் தவிர்க்க வியலாத  விளைபொருள்தான் பிழைப்புவாதமாகும்.
     
 மொத்த சமூகத்தின் வாழ்வியலே பிழைப்புவாத அடித்தளத்தை கொண்டிருப்பதால் தான், இந்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அமைப்பும் பிழைப்பு வாத அமைப்புகளாகவே உருவெடுக்கினறன. சமூகத்தன்மையின் காரணமாக  பிழைப்புவாதம் முரணான, தவறான ஒன்றாக பார்க்கப்படுவதில்லை.
      
சமூகத்தின் இந்த அடித்தளத்தைப் பற்றிய வரையறை, கண்ணோட்டமில்லாத  அமைப்புகள் எதுவனாலும், அவைகள் எவ்வளவு தான் உணர்வுபூர்வமாக, தியாக மனப்பான்மை உடையவைகளாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே தங்களையே  அறியாமல், உணரமுடியாமல் பிழைப்பு வாதத்தையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
      
தம்மிடையே உள்ள இந்த தன்மையை உணராதவர்கள், குறிப்பிட்ட  காலத்திற்கு பின்னர் சமூகத்தின் மீது எழும் விரக்தி மனப்பாண்மை காரணமாக மிக எளிமையாக, வெளிப்படையான பிழைப்பு வாதிகளாக மாறிக் கொள்கிறார்கள்.
      
எனவே இந்திய சமூகத்தின் இந்த யதார்த்தமான நிலையை, சமூக அடித்தளத்தை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே சமூக மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை புரிந்து கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள் அனைவரும் பிழைப்புவாதிகளாக மாறுவது தவிர்க்க வியலாத நிகழ்வாகும்.
      
பிறக்கும் போது தெரியாவிட்டாலும் மூக்கு வெளுத்ததும் தெரிந்துவிடும் அது கழுதையா, குதிரையா என்பது!

Friday, 30 March 2012

மின்கட்டண உயர்வுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


மின்கட்டண உயர்வு



மின் வெட்டு


மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.

மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,

வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900

மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.

ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.

இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்….. 


 18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்:

தொடர்புடைய கட்டுரைகள்: