கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பும்,பின்பும்
தனியார் ஆங்கிலப்பள்ளிகளின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ,நகரங்கள்,கிராமங்கள்
வரை ஒவ்வொரு சந்து,பொந்துகளிலும் நமது கண்களும்,செவிப்பறைகளும் கிழிபடும் அளவுக்கு
கொட்டிக்கிடக்கின்றன.இந்தக் களேபரங்கள் ,சந்தைக் கூச்சல்களுக்கிடையே இவைகளுக்கு எதிரான
சில குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் கடந்த 07.06.2014 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம்
நகரில் கல்வி தனியார் மய எதிர்ப்பு மாநாட்டை, மகஇக குழுமத்தின் ஓர் அங்கமான மனித உரிமை
பாதுகாப்பு மையம் நடத்தியது.இதனோடு கடந்த மாதம் விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள பல
கிராமங்களில் தமிழ் வழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்ற பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர்.
இதைப்பற்றியச் செய்தியை இக்குழும இணையதளமான வினவு கடந்த 11.04.2014 அன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்வழிகல்வியின் அவசியத்தையும், கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்தும்
பிரச்சாரம் செய்யும் மகஇக குழுமம் தமது குழும உறுப்பினர்களின் குடும்ப பிள்ளைகளை தனியார்
ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை அம்பலப்படுத்தி, ”தமிழ்வழிக்கல்வியும் மகஇகவுக்கு
பிழைப்புக்கான சாதனமே! “ என்றக் கட்டுரையை கீற்று மற்றும் சூறாவளி இணையதளத்தில் நாங்கள்
வெளியிட்டிருந்தோம்.
அவர்களின் கல்வி தனியார் எதிர்ப்பு மாநாட்டிற்கு பிறகாவது தமது
பிள்ளைகளை அவர்கள் அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள் என்று நாங்கள்
நம்பினோம்.
எம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டு செய்தியை வினவு
இணையதளம் கடந்த 11.06.2014 அன்று கல்வி உரிமை மாநாடு சாதித்தது என்ன? என்றத் தலைப்பில்
ஆரவாரமாக வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில்
இருந்து தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில், அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துள்ளதாகவும்
, இதுவே மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனோடு இவ்வமைப்பினர் மாநாட்டிற்காக வெளியிட்ட துண்டு பிரசுரம்
தோற்றத்தில் விஞ்ஞான பூர்வமாகவும்,உணர்ச்சி பூர்வமாகவும் அமைந்திருந்தது.
·
“அரசுப்பள்ளிக்காக போராடாமல் விட்டில் பூச்சிகளாய்
தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்?”
·
“ காசுக்கான வேசியும், கட்டிய மனைவியும் ஒன்றா?
அரசுப்பள்ளிகளோடு கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுவதா?”
·
” ஆங்கில வழியில் படித்துவிட்டா திருவள்ளுவர்
1330 குறல் படைத்தார்?”
ஆகிய முழக்கங்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது
.
இவர்களின் கல்வி தனியார்மய எதிர்ப்பு, தாய்மொழிக் கல்வியின்
அவசியம் குறித்த பிரச்சாரத்தை கேட்டு எத்துனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்
தாய்மொழியில் படிக்க வைக்கப் போகிறார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்பதை வினவு
கட்டுரையை பார்க்கும் போதே நமக்கும் புலப்படுகிறது.
மாநாடு, பேரணி , பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதால் மட்டுமே
தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை மக்களிடையே உணர்த்திவிட முடியும் என்கிற அளவிற்கு நமது
சமூகம் விழிப்புணர்வு படைத்த சமூகம் அல்ல.
சமூகத்தில் – பொருளாதாரத்தில் மேல்நிலையில், மேல்சாதியில் உள்ளவர்கள்
எதை கடைபிடிக்கிறார்களோ அதை, அது சரியா? தவறா? என்பதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்,
அதை அப்படியே பின்பற்றுவதுதான் வாழ்வில் முன்னேறுவதற்கான சிறந்த பாதை எனக் கருதும்
சமூகம் இது.
ஒரு காலத்தில் கல்வி மற்றும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை
வர்ணதர்மத்தின் மூலமாக சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக்கி வைத்திருந்தனர்.ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக யார் இந்த நிலைக்கு தம்மை ஆளாக்கி வைத்திருந்தனரோ அவர்கள் கடைபிடித்த வாழ்வியல்
முறையை அடைவதும்,பின்பற்றுவதுமே தமது வாழ்வின் இலக்காக கொண்டுள்ளவர்களை பெரும்பான்மையாக
கொண்ட சமூகம் இது.
வர்ண தர்மத்தால் இன்றளவும் நசுக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களின்
வாழ்வியல் இலக்கும் பார்ப்பனியமே ஆகும்.
இதன் தவிர்க்கவியலாத அங்கம்தான் ஆங்கில கல்வி மோகம். சமூகத்தில்
கேடுகெட்ட சிந்தனாமுறையை தூண்டிவிடும், இதன்மூலம் வர்ணாசிரம வாழ்வியலை காலத்திற்கு
ஏற்ப உயர்த்தி பிடிப்பவைகள்தான் தனியார் ஆங்கிலப்பள்ளிகள்.
அன்று கல்வியையே தர மறுத்ததும், இன்று ஆங்கில மோகத்தை ஊட்டுவதும்
ஒரே நோக்கத்திற்காகத்தான் . சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்கள் தமது சுகமான சுகவாழ்வை
தக்க வைத்துக்கொள்வதுதான் அது.
எனவேதான் இவைகளைக்கு எதிராக போராடுபவர்கள், வெறுமனே வாய்வீச்சாளர்களாக இருந்தால் மட்டும் போதாது.
அவர்கள் தாம் பிறர்க்கு உபதேசிப்பதை தமது சொந்த வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்.தந்தை
பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தாம் சமூகத்திற்கு எதை போதித்தார்களோ அதை தமது வாழ்விலும்
கடைபிடித்தனர்.அதனால் தான் இன்றுவரை அவர்கள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக திகழ்கிறார்கள்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எதை மக்களுக்கு போதித்தனரோ,
எதற்கு எதிராக தமது வாழ் நாள் முழுக்க போரிட்டனரோ அவைகளை அவர்களின் வாரிசுகளாக இன்றைய
நிலையில் தம்மை கூறிக்கொள்வோர், அவற்றை தமது வாழ்வில் கடைபிடிக்காமல் மேடைக்கு ஒன்றும்
, குடும்பத்தில் வேறொன்றுமாக இரட்டை வாழ்க்கை வாழ்வதால் பார்ப்பனிய சக்திகள் இப்போதைய
நிலையில் வலிமைப்பெற்று வருகின்றன.
கல்வி தனியார் மயத்தை எதிர்த்தும், தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை
வலியுறுத்தியும் விண்ணுக்கும் , மண்ணுக்கும் எகிறிக்குதிக்கும் மகஇக குழும உறுப்பினர்களோ,
அவற்றை தமது வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பது
விருதை மாநாட்டுக்கு முன்பு மட்டுமல்ல, மாநாட்டிற்கு
பின்பும் மாறாத உண்மையாய் இருப்பதால் இம்மாநாடு தாய்மொழிக்கல்வியின் நலன்களுக்கு எதிராகவே
அமையும் என்பதை வரலாறு நிரூபிக்கும்.
விருதை மாநாட்டின் சாதனையாக தமது அமைப்பின் நிர்வாகிகள் அரசுப்பள்ளியில்,
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் தமது பிள்ளைகளை சேர்த்திருப்பதாக அப்பட்டமாக
புளுகியிருக்கிறது வினவு.
மகஇக குழும நிர்வாகிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின்
செயலர் செந்தாமரை கந்தன் ஆகிய இருவரும் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளியில் இருந்து
அரசு உதவி பெறும் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள்
என்பது உண்மைதான்.இதன் மூலம் தாங்கள் எப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்கள் என்பதை அவர்கள்
நிரூபித்துள்ளனர்.
டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவிபெறும் பள்ளி தமிழ்வழியில் பயிலும்
மாணவர்களைக் கொண்டது மட்டுமல்ல, அதே வளாகத்தில்,
அதே நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறாத ஆங்கில வழி தனியார் பள்ளியும் செயல்படுகிறது.
மகஇக குழும உறுப்பினர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி பிரிவில்தான் சேர்த்துள்ளனர். இவர்களின்
ஏனைய நிர்வாகிகளோ தமது பிள்ளைகளை சென்ற ஆண்டைப் போன்றே நடப்பாண்டிலும் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில்
தான் படிப்பை தொடரவைத்துள்ளார்கள்.
அரசுப்பள்ளியில், தாய்மொழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்று
ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதது மட்டுமல்ல, தனியார் ஆங்கில பள்ளியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளி என்ற போர்வையில் ஆங்கில வழியிலேயே
தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டு சமூகத்தை ஏய்க்கும்
செயலைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்துள்ளனர். இவர்களின் இந்த செயல் இழிவும், கேவலமும்
நிறைந்ததாகும்.
ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதவர்கள் இழிவான
இச்சமூக அமைப்பை பாதுகாக்கும் பிழைப்புவாதிகள் என்பதுதான் எமது நிலைபாடு.
தமது பிள்ளைகளை தாய்மொழியில் , அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்காத
இவர்களின் பிரச்சாரம் நடைமுறைக்கானது அல்ல. அது இவர்களின் பிழைப்புக்கானதே ஆகும்.
தாம் சொல்வதற்கு நேர்மையாக நடந்து கொள்ளாத இரட்டை வேடதாரிகளான
இவர்களை பார்த்து எவரும் அரசுப்பள்ளிகளில்
, தாய்மொழியில் தமது பிள்ளைகளை சேர்க்கப்போவதில்லை.
இவர்கள் மட்டுமல்ல இவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய
பெரும்பான்மையினரும் தமது வாரிசுகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பவர்களாத்தான்
உள்ளனர்.
நிலவுகிற சமூகத்தில் ஆட்சியாளர்களுக்கு தேவையான பொய், பித்தலாட்டம்,
நேர்மையின்மை உட்பட அனைத்து அவசியமான திறமைகளையும் தாங்கள் எட்டிப்பிடித்துவிட்டோம்
என்பதை இம்மாநாட்டின் மூலம் சமூகத்திற்கு இவர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே இவர்கள் விரைவிலேயே
பெரும் திரளினராக பொங்கி பெருகி தமிழகத்தின் ஆம் ஆத்மியாக ஆட்சியை கைப்பற்றவும் கூடும்…..!
தொடர்புடைய கட்டுரைகள்:
-சூறாவளி ,தமிழ்நாடு.
தொடர்பு எண்:9842529188.
