விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label அணு விபத்து. Show all posts
Showing posts with label அணு விபத்து. Show all posts

Wednesday, 19 September 2012

கூடங்குளம்: வெற்றி விரிவாக்கத்தில்....!

இந்தியாவிலிருந்து 1947- ல் வெள்ளை ஆட்சியாளர்கள் வெளியேறியது, காந்தி தலைமையிலான காங்கிரசின் அகிம்சை போராட்டத்தின் விளைவாகத்தான் என்று நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இந்தக் கதையை கூடங்குளம் போராட்டக்குழுவும் நம்புவதில் அதிசயம் ஏதுமில்லை. திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு மட்டுமல்ல, குறுகிய மனப்பான்மை உள்ள அனைவராலும் அப்படியே மறுமொழி ஏதுமில்லாமல் ஏற்கப்படும் தாரகமந்திரமாகி விட்டது இந்தக் கதை.  இந்து மத கடவுளர்களின் கதைகள் எப்படி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதோ அதே  போன்றதுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்ததாக கூறப்படும் கதையுமாகும்.


     
திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவை குறுகிய மனப்பான்மை உடையது என்ற எமது விமர்சனம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் நாங்கள் இப்போது வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை, இப்போராட்டத்தை விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் வளர்த்தெடுத்து நடத்தி வரும் போராட்டக் குழுவையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
     
அணு சக்தி, அணு உலை சம்பந்தமான போராட்டக் குழுவின் கருத்தை, கண்ணோட்டத்தை நாங்கள் குறுகிய மனப்பான்மையிலானது என்று கூறவில்லை. அதன் சமூக கண்ணோட்டத்தைத்தான் குறுகிய மனப்பான்மை உடையது என்று கூறுகிறோம்.
     
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போட்டத்தின் வெற்றி, போராட்ட விரிவாக்கத்தில் தான் அடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தின் விரிவாக்கம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.ஆனால் நமது சமூகமோ ஜனநாயக உணர்வு படைத்த சமூகம் அன்று. இதன் காரணமாக கூடங்குளம் வட்டார மக்களின் போராட்டத்தை தமக்கு சம்பந்தமுள்ள போராட்டமாக நமது சமூகம் கருதவில்லை.
     
தமது சொந்த பாதிப்புகளுக்கு எதிராகக் கூட போராட தயாராக இல்லாத  சிந்தனாமுறையை கொண்டுள்ள ஒரு சமூகம், பிறரின் பாதிப்பாக கருதும் ஒன்றுக்கு எதிராக போராட முன்வரும் என்றுக் கருதுவது கற்பனையே ஆகும். இந்த சிந்தனா முறைக்கு  அப்பாற்பட்டது அல்ல கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவும்! இதனாலேயே அதை குறுகிய மனப்பான்மை உடையது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.
     
போராட்டக்குழுவின் குறுகிய மனப்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரத்தைத் தேடி வேறு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்போது இந்திய மக்கள் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள டீசல் விலை உயர்வு, பல கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வை சூறையாடும் சிறு வணிகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் சமூக விரோத செயலுக்கு எதிராக போராட்டக் குழுவின் பாராமுகமே இதை நிரூபிக்க மிகச்சிறந்த உதாரணமாகும்.
     
தமது போராட்டத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள கூடங்குளம் போராட்டக்குழு, நாட்டின் ஏனையப் பிரிவு மக்களை அழிவுக்குள்ளாக்கக் கூடிய அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை தமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதுகிறது. ஏற்கனவே போராட்டக் களத்தில் நிற்கும் இக்குழுவும், இக்குழு தலைமையிலான மக்களும், நாட்டின் ஏனைய பிரிவு மக்களோடு உணர்வு பூர்வமாக ஒருங்கிணைவதற்கு மிச்சிறந்த வாய்ப்பாகும் இது. இதை போராட்டக் குழு புரிந்து கொண்டிருந்தால் ஏற்கனவே  களத்திலுள்ள மக்களை அரசின் சமூக விரோத இந்த செயல்களுக்கு எதிராகவும் போராட வைத்திருக்க வேண்டும்.
    
 இப்படிச் செய்திருந்தால் தற்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பழங்குடி மக்களின் உணர்வு  நிலையிலிருந்து   உறுதியாகப் போராடும் மீனவ மக்களின் உணர்வு மட்டத்தையும், ஜனநாயக மட்டத்திற்கு உயர்த்த முடியும். அதோடு உணர்வு பூர்வமாக தாழ்ந்து கிடக்கும் சமூகத்தின் பிறத்தட்டு மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கும் இது அடித்தளமாகவும் அமையும்.
     
ஆனால் இப்படியொரு சிந்தனா முறையே இல்லாத போராட்டக்குழு இந்திய சுதந்திர போராட்டம் சம்பந்தமாக கொண்டிருக்கும் கருத்தும், கண்ணோட்டமும் இதற்கு மாறான ஒன்றாக இருக்க முடியாது.
     
இரண்டாம் உலகப் போரில் இட்லரின் நாஜிப்படையை எதிர்த்து போரிட்டு 1 கோடி மக்களின் உயிர்களை இழந்து ஜெர்மனை முறியடித்தது சோவியத் யூனியன்.  சோவியத் யூனியனின் இந்த வெற்றி உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர, சுதந்திர தாகம் கொண்ட அனைவரையும் எழுச்சி பெற செய்தது. இதனால் உலகம் முழுவதும் இருந்த காலனி நாட்டு மக்களின் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் வீறு கொண்டெழுந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌன் பேட்டன் பிரபு தமது நாட்டிற்கு இந்திய நிலைமை பற்றிய அனுப்பிய அறிக்கையில் இந்தியா வெடிகுண்டுகள் ஏற்றிய கப்பல்  தீ பிடித்தது போன்று உள்ளது, என்று குறிப்பிட்டிருந்தார்
     
மௌன் பேட்டன் பிரபுவின் மேற்கண்ட வர்ணணை, காந்தி வழி நடத்திய போராட்டத்தால் உருவானதல்ல. இந்நிலை முற்றிலும் காந்திக்கும், காங்கிரசுக்கும் அப்பாற்பட்டு எழுந்த ஒன்றாகும்.
    
 இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான நாஜிப்படையே வெற்றி பெறும் என்று கணித்திருந்த காந்தி புதிய  எஜமானை வரவேற்க தயாரானார். இதற்காகவே வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தையும் ஆரம்பித்தார்.
    
ஆனால் காந்தியின் எதிர்பார்ப்புக்கு மாறாக  நேச நாடுகளின் வெற்றி, உலக மக்களை உற்சாக மடைய வைத்ததைப் போன்றே இந்திய மக்களையும் எழுச்சி பெற செய்தது. இதனால்  காந்தியின் வழிகாட்டுதலை மீறி நாடெங்கும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு  பதிலடி தந்தனர்.
     
போரில் நேச நாடுகளின் வெற்றியால் திகைத்த காந்தி, தமது பழைய எஜமானனின் நம்பிக்கையை பெற  தாம் அறிவித்தப் போராட்டத்தை வன்முறை என்று கூறி திரும்பப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு துரோகமிழைத்தார்.
     
ஆனாலும் மக்களின் போராட்டமோ  மௌன் பேட்டன் பிரபுவின்  வர்ணணைக்கு ஏற்ப தொய்வில்லாமல் முன்னேறியது.
     
இப்படிப்பட்ட சூழலில் தான் வெள்ளை ஆட்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிவு செய்தனர். இதற்காகவே தமது நலனை பாதுகாக்கும், தனது நம்பகமான  காவலனான காங்கிரசிடம் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து விட்டு வெளியேறினார்கள்.
     
1947 - ஆகஸ்ட் - 15 ல், ஆட்சி அதிகாரத்திலிருந்து  ஆட்கள் மட்டுமே மாற்றப்பட்டனர்.  ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும் சட்டங்களும், நிர்வாக இயந்திரமும் அன்றிலிருந்து இன்று வரை வெள்ளையர்கள் விட்டுச் சென்றவைகள்தான.
     
வெள்ளையர்கள் அன்று விட்டுச்சென்ற சட்டத்தின் அடிப்படையில் தான் இன்று கூடங்குளம் போராடும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர்.
    
இன்று ஆட்சியாளர்கள் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர், நயவஞ்சகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை போராட்டக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். இவை அனைத்துமே வெள்ளை ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவைகள்தான்.
     
அன்றும்,இன்றும் ஏகாதிபத்திய நலனை உள்ளடக்கிய சட்டத்தையும், நிர்வாக முறையையும் கொண்டதுதான் இந்திய ஆட்சி முறை.
     
கூடங்குளம் போராட்டக்குழு இந்திய சட்டங்களும், நிர்வாக முறையும்  சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறது என்றால், அதன் அடிப்படையில் இந்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் எப்படி தவறு என்று கூறமுடியும்!?
     
இங்கே முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது போராட்டக்குழு தான். ஆனால் இந்திய ஆட்சியாளர்களை பொருத்த வரை அவர்களை இயக்கும் சட்டத்திற்கு ஏற்ப முரணற்ற வகையில் தான் இயங்கி வருகின்றனர்.
     
எனவே கூடங்குளம் போட்டக்குழுதான் முரணற்ற வகையில் செயல்பட முன் வரவேண்டும். அந்த வகையில் இப்போராட்டத்தை வரிவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இனி பார்ப்போம்.
     
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களிடையே தார்மீக ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மீனவ மக்களிடையே  இந்த ஆதரவு பெருமளவு அதிகரித்துள்ளது.  இந்த தார்மீக ஆதரவை போராட்டத்திற்கான நேரடி ஆதரவாக ஒருக் குடையின் கீழ் ஒன்று திரட்டப்படவேண்டும்.
     
இரண்டாவதாக  தமிழகம், புதுவை கடற்கரை நெடுக உள்ள மீனவ மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
     
மூன்றாவதாக சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாகவும் தமது தலைமையிலான மக்களை போராடத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும்.
     
இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உடைய அணுகு முறைகள் மூலமே கூடங்குளம் போராட்டம் மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் முன்னேற்றத்தை  காண முடியும்.
     
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுடன் ஒருங்கிணைய கூடங்குளம் போராட்டக்குழு தனது சிந்தனா முறையை , பரந்து விரிந்த ஒன்றாக மாற்றிக் கொள்ள இனியாவது தயாராகுமா?   

தொடர்புடைய கட்டுரைகள்:

Thursday, 13 September 2012

கூடங்குளம் : உயிர் வாழ ஒன்று சேர்வோம்!

              தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும் மக்கள், போலீசின் கடுமையான  தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.




     போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார் போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

     சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.  நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத் தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை  காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம் மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர். தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில் முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை செய்கின்றன.

     போராட்டக்குழு தலைவர் தன்னை  காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து சென்றுள்ளார்.

     இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு,  கைதாவது என்பது வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இருந்தது.

     கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை. அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது முட்டுச்சந்தில்  சிக்கிக் கொண்டுவிட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு, முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள்  அனுமதிக்க போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன் உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.

     இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட வழிமுறையை  தொடரப் போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின் இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற  தன்மையைத்தான்  கோருகிறது. கடல் தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.

     போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.

     அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம் வட்டார மக்களின்,  அதிலும் மீனவ மக்களின் போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும் முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.

     ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும் அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

     தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன. மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத  புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப்  போனது.மொத்தத்தில் இவர்கள் தமது இயலாமையை, சமவெளிப்பகுதியில் வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”, என்கின்றனர்.

     இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை  ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி  மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.

     இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு மாற்று ஏதுமில்லை.

     ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல. இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்  நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும். மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில் நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.

     எனவே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது.  இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள் மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

     தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும் மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன் ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.


     எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம் செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

Saturday, 15 October 2011

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

“கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடு”,என்ற ஒற்றை கோரிக்கையுடன் இரண்டாவது கட்டப் போராட்டம் கூடங்குளத்தில்  நடைபெற்றுவருகிறது.முதற்கட்ட போராட்டம் போலல்லாது உண்ணாவிரதம் என்பதை தாண்டி அணுமின்நிலைய பணிகளை முடக்கும் வகையில், அங்கு வேலைக்கு செல்வோரை தடுப்பது,அணுமின்நிலையத்தை முற்றுகையிடுவது,சாலை மறியல் என போராட்டம் இறுக்கமடைந்து அடுத்தக்கட்டத்தை தொட்டுள்ளது.


இரண்டாவது கட்டப் போராட்டம்,போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு செல்வது ஆகியவை ’மாமா’ மன்மோகன் சிங்கின் தயவால்தான்! தலைநகரில் தமிழக அரசு பிரதிநிதிகளையும்,போராட்டக்குழு பிரதிநிதிகளையும் சந்தித்த ’மாமா’ மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என்று ’மாமா’க்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு பேசியுள்ளார்.

போராட்டக்குழுவினர் தமிழகம் வருவதற்குள்ளாகவே, கூடங்குளம் அணுமின்நிலையத்தை  திறப்பதற்கு உதவுமாறு ஜெயாவுக்கு கடிதமும் எழுதிவிட்டார்.இதன் மூலம் கூடங்குளம் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தி இருப்பதுடன்,போராட்டக்குழுவின் முகத்தில் கரியையும் பூசிவிட்டார்.இதை உடனடியாக புரிந்துகொண்ட போராட்டக்குழு அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

’மாமா’, ஜெயாவுக்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியை தொடங்கினால் 2000 மொகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யபடும் என்றும் இதில் தமிழகத்துக்கு 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்காவிட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்காமல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்றும் நைச்சியமாக எழுதியுள்ளார்.

இக்கடிதத்திற்கு பிறகு திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.இப்படி ஜெயா கூறி இருப்பதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா?,எந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பார்?,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கா அல்லது போராட்டக்குழுவிலிருந்து பிரிந்து வந்துள்ள பிரஜாதிபதிக்கு ஆசி வழங்கி இருக்கிறாரே அப்படிபட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்ப்போம்!


ஜெயா இப்படி பேசியிருப்பது மத்திய அரசோடும்,காங்கிரசோடும் தனக்குள்ள அரசியல் உறவு பற்றிய ராஜ தந்திர காய் நகர்த்தல்தான் ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்ட அறிவிப்பாகும்.

எது, எப்படி ஆயினும் இப்போராட்டத்தை கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.

உலக அளவில் அணுமின்சார உற்பத்தில் இந்தியா 15-வது இடத்தில் தான் உள்ளது.இந்தியா அணுசக்தியின் மூலம் 4780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.இது நாட்டின் மொத்த மின்சாரத்தேவையில் வெறுமனே 2.8 சதவீதம் மட்டுமே.

20 அணு உலைகளை கொண்டுள்ள இந்தியா ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 239 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.


ஆனால்,தனது நாட்டின் மொத்த மின் தேவையில் 74.12 சதவீதத்தை அணுமின்சாரத்தின் மூலம் பெறும் பிரான்ஸ் ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 916 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.இந்த நாடே ஜப்பானின் அணு உலை விபத்துக்கு பிறகு தனது நாட்டின் அணுமின்சார உற்பத்தியை விரைவில் பாதியாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.உலகின் பலநாடுகளும் இப்படி அறிவித்துள்ளன.


ஆனால் இந்தியாவோ இதற்கு நேர்மாறாக 2030-க்குள் 60 ஆயிரம் மெகாவாட்ஸ்  அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

உலக அளவில் காலாவதி ஆகிப்போன அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டும் ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாகத்தான் ’மாமா’ மன்மோகனும் இந்திய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக வாலாட்டுகின்றனர்.

அணு உலை விபத்து என்பது இயற்கை சீற்றங்களால் மட்டுமே ஏற்படும் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை இந்திய ஆட்சியாளர்கள் மக்களிடையே உருவாக்கப்பார்க்கிறார்கள்.இயற்கை சீற்றங்களால் ஏற்படும்  விபத்து எப்போதாவது ஏற்படுவது.ஆனால் பெரும்பாலான அணு உலை விபத்துகளும், அணு கசிவும் மனிதத்தவறுகளால் தான் ஏற்படுகிறது.


உலகில் உள்ள அனைத்து அணு உலைகளுமே மேம்படுத்தப்படாத பழமையான தொழிட்நுட்பத்தை கொண்டவைகள்தான்.அதிலும் ரஷ்யாவின் அணு உலை தொழிட்நுட்பம் தற்காப்பு திறனற்றதாகும்.இதனால் சிறு மனித தவறுகள் நேர்ந்தாலும் கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவுகொள்வதோடு.பல நூற்றாண்டுகளுக்கு கதிர்வீச்சின் அபாயத்தை எதிர்கொள்ளவும் நேரிடும்.
ஆகவே,கூடங்குளம் அணு உலை விவகாரம் அவ்வட்டார மக்களின் விவகாரம் மட்டுமல்ல.ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்தினால் ஐரோப்பா முழுவதுமே அணுக்கதிர்வீச்சு பரவியது.ஜப்பானின் அணு விபத்தின் மூலம் அணுக்கதிர்வீச்சு அமெரிக்காவிற்குள்ளும் பரவியுள்ளதாக செய்திகள் கூறிகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையில் ஏற்படும் விபத்து தமிழகம் கேரளம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுக்கவே அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ளது.

மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு போராட்டத்தை குறைந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும்.போராட்டத்தின் இறுக்கம் மட்டுமல்ல அதனோடு விரிவாக்கமும் சேரும் போதுதான் வெற்றிக்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது என்பதை போராட்டக்குழுவிற்கு இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! 

Tuesday, 27 September 2011

மின் உற்பத்தி:அணு உலைகள் வேண்டாம்! மாற்று இருக்கிறது!

கூடங்குளம்:ஆறப்போடுஅணைந்துவிடும்…! கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? ஆகிய இரு தலைப்புகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.இப்போராட்டம் அவ்வட்டார மக்களின் போராட்டமாகவும்,ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை வேடிக்கை பார்ப்பது,பரபரப்பான செய்தி அல்லது நாட்டின் தேவைக்கு அணுமின்சாரத்தை விட்டால் வேறு என்ன வழியிருக்கிறது, என்கிற அடிப்படையில் அணுமின்சார உற்பத்தியை ஆதரிக்கும் மெத்தப்படித்த மேதாவிகளிடம் கருத்து நிலவுகிறது.

மின்சாரம் இன்றி இனி நம்மால் வாழமுடியுமா? என்கிற அளவுக்கு நமது வாழ்நிலை மாறிவிட்டுள்ளது.மீண்டும் பழைய காலத்திற்கே திரும்பவும் முடியாது.ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் முக்கிய தாதுப் பொருளான நிலக்கரியின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.நீர் மின்சாரம் மழைக்காலத்தில் மட்டுமே தமிழகத்தை பொருத்தவரை பலன் தரக்கூடியதாக உள்ளது.காற்றாலை மூலமான மின்சாரம் மிகவும் குறைந்த அளவிற்கே கிடைக்ககூடிய வளமாகவும் உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் அணுமின்நிலையங்கள் மூலம் தான் நமது நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறமுடியும் என்பதுதான் ஆட்சியாளர்கள் மற்றும் இதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பிகளின் மூலம் அனுப்பும் போது வீணாவது,தரமற்ற மின் வினியோக எந்திரங்களால் வீணாவது,மின் திருட்டு,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவது ஆகியவற்றின் மூலமும் தமிழக மின்வாரியம் பல்லாயிரம் கோடி இழப்பில் இயங்கிவருகிறது.

ரஷ்யாவின் செர்னேபில்.ஜப்பானின் புகிஷிமா அணு உலைகளின் விபத்துக்குப் பின்னர் உலகம் முழுக்கவே அணுமின்நிலையங்களை முற்றாக மூடுகிற திட்டத்தை பிரான்ஸ் உட்பட பல நாடுகள் வெளியிட்டுவருகின்றன.அதோடு மாற்று மின்உற்பத்திக்கான ஆய்வுகளை தொடங்கிவிட்டுள்ளன.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகளில் ஆக்கபூர்வமாக செயல் பட்டு வருகின்றன.ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ நமது அணு உலைகள் அனைத்தும்  மிகவும் பாதுகாப்பானவை என மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.

யுரேனியம் அணு தொழில்நுட்பத்தை விட,தோரியத்தை அடிப்படையாக கொண்ட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை, தமது ஆண்டை அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து கைவிட்டுவிட்டு அமெரிக்கவின் மிகவும் பின் தங்கிய,அரதப்பழசான யுரேனிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு 123 என்ற ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது மன்மோகன்சிங் தலைமையிளான கும்பல்.உலக தோரிய இருப்பில் நமது நாட்டில்தான் 70 சதவிதம் தோரியம் உள்ளது என்பதை நாம் சிறிது நினைத்து பார்த்தாலே நமது ஆட்சியாளர்களின் தேசத்துரோகம் பளிச்சென நமக்கு புரிந்துவிடும்.யுரேனியமோ,தோரியமோ இவை இரண்டுமே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவைதான். அப்படியானால் மின் தேவைக்கு மாற்று ஏதுமில்லையா? இருக்கிறது! ஆனால் அவற்றை செயல் படுத்தும் ஆர்வமோ,ஆற்றலோ நமது தேசத்துரோக ஆட்சியாளர்களுக்கு சிறிதுமில்லை.

தற்போது ஏனோ,தானோ என்று செய்யப்படும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்,கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தற்போது பெய்யும் மழைநீரில் 90 விழுக்காட்டுக்கும் மேல் கடலில்தான் கலக்கிறது.இந்த நீர் அனைத்தையும் சேமித்து, அதன் மூலம் சிறு,சிறு நீர் மின்நிலையங்கள் மூலமும் நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் தயாரிக்க முடியும்.
மழைநீரை சேமிப்பதன்  மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு,பாசனத்திற்காக நிலத்தடி நீரை விவசாயிகள் சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துவிடவும் முடியும்.இதோடு ஏராளமான மின்சாரத்தையும் சேமிக்க முடியும் .


முதலாளித்துவ உற்பத்தி என்பதே நுகர்பொருள் உற்பத்திதான். இதை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள் உற்பத்தியாக மாற்றுவதன் மூலமும்,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவதை தடை செய்வதன் மூலமும் மிகப்பெரிய அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின் உற்பத்தியை புதிய,ஆபத்தற்ற தொழில்நுட்பத்தை கொண்டு செய்தல்.மின்சாரத்தை வினியோகிக்கும் போது ஏற்படும் மின் இழப்பை சரி செய்தல்,விவசாயத்திற்கு இயற்கையில் இருந்து பாசன வசதியை ஏற்படுத்துதல்,பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவச,சலுகை விலையில் மின்சாரம் தருவதை நிறுத்துதல்,நுகர்பொருள் உற்பத்திற்கு மாற்றாக அத்தியாவசிய தேவைக்கான உற்பத்தியாக தொழில்துறை உற்பத்தியை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் மின்பற்றாகுறை என்ற சொல்லையே நாட்டில் இருந்து தூக்கியெறிய முடியும்.நமக்கு தேவையான மின்சாரம் அனைத்தையும் இயற்கை வளத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாமல்,இயற்கை வளங்களில் இருந்தே மின்சாரம் தயாரித்து,மின் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடையவும் முடியும்.

(ஜப்பான் - ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி படுகொலை செய்த படங்கள்.முதல் படம் குண்டு வீச்சுக்கு முன்பு எடுக்கப்பட்டது.இரண்டாவது படம் குண்டு வீச்சுக்கு பின்பு எடுக்கப்பட்டது.)

ஆனால், இவைகளை பற்றியெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாளர்களான நமது ஆட்சியாளர்களிடம் நாம் ஒருபோதும் எதிர்பாக்க முடியாது.பெரும்பான்மை உழைக்கும்  மக்களுக்கான புதிய சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இவைகளை சாதிக்க முடியும். அதற்கு சமூக மாற்றத்திற்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவோம்! நம்மையும் நமது எதிர்கால தலைமுறையையும் மொத்தத்தில் மனித குலத்தையே பாதுகாப்போம்!     

தொடர்புடைய கட்டுரைகள்:

1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!


2. கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? 

Friday, 23 September 2011

கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!

கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக அவ்வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.இந்த போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்களும் ஆதரவு தந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட போலிஸ் தடைவிதிக்கும் அளவுக்கு போராட்டம் பரவ ஆரப்பித்தது.

தமிழக முதல்வர் ஜெயா கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது. ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏற்கவில்லை.முதல் நாள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிய ஜெயா மறுநாளே பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரட்டக்குழுவினருக்கு அழைப்புவிடுத்து பேசினார்.அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு போராட்ட குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அமைச்சரவைக்கூட்டத்தை 21.09.2011 அன்று கூட்டிய ஜெயா போராட்டக்குழு கோரியபடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இதனால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர் மக்கள்.



ஜெயா அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறுதான் கோரியுள்ளார்.மேற்குவங்கம்,ஹரிபூர் அணுமின்நிலையத்தை அம்மாநில முதல்வர் நிராகரித்ததை போன்று நிராகரிக்கவில்லை.அப்படி நிராகரிப்பதற்கான தார்மீக பலம் ஜெயாவிற்கோ முன்னால் முதல்வர் கருணாநீதிக்கோ சிறிதுமில்லை.ஏனேன்றால் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள் இருவருமே. மக்கள் ஏற்கும் வரை அணுமின்நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியதன் மூலம் இனி மத்திய,மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்குமாறு மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர்.போராட்டக்குழு மற்றும் மக்களிடையே துரோகிகளை உருவாக்கி போராட்டத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகளையும் செய்வார்கள். ஏதோ ஒரு வகையில் ஒருமுறை மக்களை சமாதானப் படுத்திவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்வதை தடுத்துவிட முடியும்,என்று தான் மத்திய,மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கும். போராட்டக்குழுவில் உள்ளவர்கள் ”எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது தானே தவிர, மாநில அரசுக்கு எதிரானது அல்ல”, என்று கூறியிருப்பதிலிருந்தே மாநில அரசின் மீது தங்களுக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.மாநில முதல்வரின் கருத்தோ அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தான்.எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதை மாநில அரசு விரும்பாது. அதற்கு மாறாக அவ்வட்டார மக்களை அணுமின்நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறுஇடத்தில் குடியமர்த்துவது போன்ற செயல்களில் தான் மத்திய அரசின் உதவியோடு செய்ய முற்படும்.இதையும் மீறி போராட்டம் நடத்தும் அளவிற்கு போராட்டக்குழுவிற்கு ஆற்றல் இல்லை என்பதைத்தான் அவர்களின் அண்மைய அணுகுமுறைகள் வெளிப்படுத்துகிறது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து அணுகதிர்வீச்சினால் அந்நாட்டு மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.உலகம் முழுவதுமே அணுமின்நிலையங்கள் பாதுகப்பற்றது என்பது மட்டுமல்ல,அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி அளவும் மிகவும் குறைவானதே!

உலகம் முழுவதிலும் உள்ள அணுமின்நிலையங்கள் மின்சார உற்பத்திக்கென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவைகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதே முழுமையான உண்மையல்ல. அணு மின்நிலையங்களால்  சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்,உலகம் முழுவதிலுமே அதனால் ஏற்படும் பாதகமே கூடுதலாகும். இதனால்தான் உலகம்முழுவதிலுமே அணுமின்நிலையங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்குதான் அணு உலை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும்,இங்கு ரஷ்யாவின் அணுக்கழிவுகளை கொண்டுவந்து சேமித்து வைப்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமுள்ளது. இந்த அணுமின்நிலையத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் பற்றி மிகக்குறைந்த அளவிற்கே மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாதிப்புகளோ மிகக்கடுமையானதாகவும், தலைமுறை,தலைமுறையாக நீடிக்ககூடியதாகவும் இருக்கும்.அணுமின்நிலையங்களால் நிலம்,காற்று,நீர் ஆகியவை வெப்பமடைகிறது.அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அற்றுப்போகும்.இவைகளை பற்றிய முழு பரிமாணங்களை கூட ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டுள்ள அளவிற்கு தமிழக மக்கள் உணரவில்லை என்பதே உண்மையாகும்.இதனால் தான் இப்போராட்டம் ஒருவட்டார பகுதியின் போராட்டமாக வெளிப்படுகிறது.தமிழகத்தின் ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை கூடங்குளம் சம்பந்தமான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான செய்தி மட்டுமேயாகும்.

ஆட்சியாளர்களை பொருத்தவரை ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பரில் செயல்பட தயாராக உள்ள ஒரு திட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதாகத்தான் இருக்கும்.தமிழக அமைச்சரவை ”மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு” தீர்மானம் நிறைவேற்றி  இருந்தாலும்,உண்மையில் இது இந்த விடையத்திற்காகத்தான் இயற்றாப்பட்டதாக நாம் முற்றிலும் நம்பிவிட முடியாது.மத்திய அரசை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து கொள்வதற்கான ஒரு தந்திரமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம்,என்பதையும் நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.ஏனேன்றால் இந்த அணுமின்நிலைய விவகாரத்தில் ஜெயா அரசுக்கு மத்திய அரசுக்கு மாற்றான கருத்தேதும் இல்லை,அதே பொன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபரும் ஜெயா இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்
ஈழ இறுதிக்கட்ட போரின் போது இந்திய நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது,அதே போன்று  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள,உள்ளாட்சித்தேர்தலை கணக்கில் கொண்டுதான் ஜெயா அரசு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பார் என்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈழமக்கள் மீதான தாக்குதலை மிகவும் மூர்க்கமாக நடத்தியதை போன்றே, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீதும் ஜெயா அரசு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் நிராகரித்துவிட முடியாது.ஆனால் இதை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதையை போராட்டக்குழுவிற்கு இல்லை என்பதே உண்மையாகும்.இதை எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் தலைமைக்கு மட்டுமே உண்டு.இப்படி போராட்டம் நடத்தப் பட்டால் மட்டுமே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி சொல்லும்!

தொடர்புடைய பதிவுகள்: