விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label இந்திய புரட்சி. Show all posts
Showing posts with label இந்திய புரட்சி. Show all posts

Thursday, 10 January 2013

விவசாயிகளின் தற்கொலையே நாட்டின் முன்னேற்றம்(!?)

நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் கருவியாக ஆட்சியாளர்கள் நமக்கு காட்டுவது பங்குச் சந்தையைத்ததான். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பதினைந்து விழுக்காட்டிற்கும் மேலான இழப்பை சந்தித்தாலும், இந்திய பங்குச் சந்தைகள் வெறுமனே 1.8 விழுக்காடு அளவுக்கு மட்டுமே சரிவை சந்தித்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இருபது ஆயிரம் புள்ளிகளைத் தொடும் நிலைக்கு உயர்ந்து, உலகப் பொருளாதார வளர்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாகவும் மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது.
agriculture_200இந்திய பங்குச் சந்தை உயர்வுதான் நாட்டின் பொருளாதார உயர்வின் அடையாள சின்னமாக ஆக்கபட்ட 1990களில் தொடங்கி 2010 வரையிலான காலகட்டம் வரை, அதாவது கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஆணையத்தின் புள்ளி விவரங்களை மத்திய அரசோ, மாநில அரசுகளோ ஏற்றுக் கொள்வதில்லை.
1995 – 2010 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் 1995 – 2002 வரையிலான முதல் எட்டு ஆண்டுகளில் 1,21,157 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை அடுத்த எட்டு ஆண்டுகளில் அதாவது 2002 – 2010 வரையிலான கால கட்டத்தில் 1,35,756 ஆக உயர்ந்துள்ளது.
முதல் எட்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டின் சராசரி விவசாயிகளின் தற்கொலை 15,144 என்றால் அடுத்த எட்டு ஆண்டுகளில் இதுவே ஆண்டுக்கு 16,969 ஆக உயர்ந்துள்ளது. இதை நாள்வாரியாக கணக்கிட்டால் முறையே முதல் பாதி ஆண்டில் நாளொன்றுக்கு 41 பேராகவும், அடுத்தப்பாதியில் நாளொன்றுக்கு 46 ஆகவும் தற்கொலைகள் உயர்ந்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலையில் மகாராஷ்டிராதான் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது! 1995 - 2002 வரையிலான காலத்தில் 20,066 ஆக இருந்த தற்கொலை அடுத்த 2002 – 2010 வரையிலான காலத்தில் 30,415 ஆக உயர்ந்து சாதனை புரிந்துள்ளது இந்த மாநிலம்.
விவசாயிகளின் தற்கொலையில் முதல் மாநிலமாகத் திகழும் மகாராஷ்டிராதான் நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் என்று நாம் கருதினால், அது முட்டாள்தனம் என வேறொரு புள்ளி விவரம் நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறது.
தனிநபர் வருவாயில் அரியானா, கோவா ஆகிய மிகச்சிறிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மகாராஷ்டிரா இடத்தில் உள்ளதாம்! இம்மாநிலத்தின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ. 74,027/ = என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளின் தற்கொலையில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலம், தனிநபர் ஆண்டு வருவாயிலும் முன்னணி மாநிலமாக திகழமுடியுமா? என்றால் முடியும் என்றுதான் உண்மை நமது செவுளில் அறைந்தாற்போன்று கூறுகிறது.
இது எப்படி சாத்தியமானது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இது கடினமான, புதிரான விடயமல்ல. அதாவது விவசாயிகளின் அழிவுதான் இந்த வளர்ச்சியாக மாற்றமடைந்துள்ளது.
நாடு முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் அழிய வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் சித்தாந்தம். இதை உங்களால் நம்ப முடியாவிட்டால் மீண்டும் ஒரு முறை புள்ளிவிவரங்களை கூர்ந்து கவனியுங்கள்!
விவசாயிகளையும், விவசாயத்தையும் இந்திய அரசு அழிவை நோக்கி தள்ளி விட்டுள்ளதால் 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் அதிகமான விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காகியிருக்கும் என்பது மிகையல்ல!
indian_famers_600
நாட்டிலேயே விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் எண்ணிக்கையிலும், விவசாயம் அல்லாத வேறு வகையான பயன்பாட்டுக்கு விவசாய நிலங்கள் ஆட்படுத்துவதிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
1990 – 91 ம் ஆண்டில் 18,35,000 ஏக்கர் நிலம் விவசாயம் அல்லாத வேறுவகை பயன்பாட்டில் இருந்தது. இதுவே 2008 – 09ம் காலப்பகுதியில் 26,67,396 ஏக்கராக உயர்ந்து விட்டது. 1990 – 2009 ஆகிய 19 ஆண்டுகளில் 8,32,396 ஏக்கர் நிலம் விவசாயம் செய்வதிலிருந்து வேறுவகை பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா? மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட பின்புதான் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளார்களா? என்றால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள விவசாயிகள் பெருநகரங்களில் கட்டுமானத்துறையில் தான் மாற்று வேலைத்தேடிக் கொள்கின்றனர்.
கிராமங்களோடு ஒப்பிடும்போது நகரங்களில் அதிகக் கூலி கிடைத்தாலும், நகர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த கூலிக்கு தமது, உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து நகரங்களை மேம்படுத்திய தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், அவைகளுக்கு பெரும் சுமையாகி வேண்டப்படாதவர்களாக ஆகிப் போனார்கள்! இந்த சுமையைக் குறைத்து அவர்களை மீண்டும் கிராமங்களுக்கே துரத்தும் இந்திய அரசின் நடவடிக்கை தான் நூறுநாள் வேலைத்திட்டமாகும்.
இன்று நாட்டிலேயே தமிழகம்தான் கட்டுமானப் பணிகளில் முன்னணியில் உள்ளதால் வட இந்திய மாநிலங்களில் விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் அலை, அலையாய் தமிழகம் நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் தமது உயிரையாவது தக்க வைத்துக் கொள்கின்றனர். வெளியேற முடியாதவர்கள் தற்கொலைக்கு தள்ளப் படுகின்றனர்.
கோடிக்கணக்கானோர் விவசாயத்திலிருந்து வெளியேறினாலும் இன்னமும் நாட்டில் 60 கோடி மக்கள் தமது வாழ்வுக்கான ஆதாரமாக விவசாயத்தைத்தான் நம்பி உள்ளனர். 2026 – ல் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 70 கோடிக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே சார்ந்திருப்பார்கள் என்றும் ஐநாவின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால் 2026ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறுமனே 15% மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்பு 34 விழுக்காடாக இருந்த விவசாயத்தின் பங்கு, தற்போது 21 விழுக்காடாக சரிவடைந்து விட்டது. இந்த சரிவின் எதிர் விளைவுதான் விவசாயிகளின் தற்கொலைகள். இதுவே 15 விழுக்காடாக மேலும் சரிவடையும்போது விவசாயிகளின் தற்கொலைகள் லட்சத்திலிருந்து கோடியாக உயர்ந்து கோரத்தாண்டவம் ஆடப்போகிறது.
நிலைமை இவ்வளவு தீவிரமடைந்த பின்னரும் கூட, விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளை, அதாவது விவசாயத்தை இழப்பில்லாத தொழிலாக ஆக்குவதற்கான எந்த திட்டத்தையும் ஆட்சியாளர்கள் உருவாக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலையால் எழக்கூடிய உணர்வலையைத் தணிப்பதற்கான சித்து வேலைகளைத்தான் செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பதன் மூலம் தனது கடமை முடிந்துவிட்டதாகவே ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இழப்பீடு தருகிறோம் என்ற பெயரிலும் விவசாயிகளை மேலும், மேலும் இழிவுபடுத்தி வெந்தப் புண்ணில் வேலைத்தான் பாய்ச்சுகின்றனர்.
விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கும், மத்திய விவசாய அமைச்சரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் குடும்பத்தாரிடம் 40 கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்விகள் தற்கொலையால் ஏற்பட்ட வேதனையைவிட மிகப்பெரியதாக இருப்பதாக விவசாயிகள் நொந்து கொள்கின்றனர். இதனால் பல விவசாய குடும்பங்கள் தமது குடும்பத்தில் நடைபெறும் தற்கொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை. இதுதான் ஆட்சியாளர் எதிர்பார்ப்பதுமாகும்.
அரசுத் தரப்பில் 40 கேள்விகள் என்றால் அன்றாடம் செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல் விக்கித்து நிற்கின்றனர், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்தினர்.
  • ஆந்திராவிலோ விவசாய தற்கொலை என்று நிரூபிக்க 13 வகை ஆவணங்களை தரவேண்டும். இவற்றைப் பெறுவதற்கும், அலைவதற்கும் இதற்காக அதிகார வர்க்கத்திற்கு கொட்டி அழுவதற்கும் முடியாமலேயே தற்கொலையை பதிவு செய்வதையே விட்டு விடுகின்றனர் பல விவசாய குடும்பத்தினர்.
  • நிலமற்ற குத்தகை விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது விவசாய தற்கொலை அல்ல.
  • தாய், தந்தை பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ நிலம் இருந்து மகனோ, கணவனோ தற்கொலை செய்து கொண்டாலும் அதுவும் விவசாய தற்கொலை அல்ல.
  • ஒரு குடும்பத்தில் யார் பேரில் நிலம் உள்ளதோ அவர் தற்கொலை செய்து கொண்டால்தான் அது விவசாய தற்கொலை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்டாலும் அது விவசாய தற்கொலை இல்லையாம்.
விவசாய தற்கொலை என்று நிரூபிக்க மேலே கண்ட வழிமுறையைத்தான் அரசுகள் கடைபிடிக்கின்றன. இவைகளை ஆழ்ந்து, கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதல்ல. இவைகளைக் கேள்விப்படும் எவரும் கூறிவிடலாம், இவைகள் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல. மாறாக இவைகள் நாட்டுமக்களை திசை திருப்பும் வழிமுறைகள் என்று!
இவ்வளவு கோரமான அழிவுகளுக்குப் பின்னரும், இந்த அழிவை ஏற்படுத்தக் கூடிய அரசுகள்தான் இவைகளைத் தடுக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் சில மேதாவிகள். இதற்காக அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். ஆரவாரமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.
ஆனால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளிடையே இன்னமும் இவைகளுக்கு எதிரான உணர்வலைகள் எழவில்லை. இன்னமும் அவர்கள் அரசுகளையே நம்பி ஏங்கி நிற்கின்றனர். தமது பிரச்சனைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முழுமையாக, தொகுப்பாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும் – அப்படி அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது - அவைகளை தமது அனுபவத்தின் ஊடாக துண்டுத் துண்டாக அறிந்தே வைத்துள்ளனர்.
farmer_326ஆனாலும் இவைகளை தொகுத்து அமைப்பாக்கி, கொண்டு செல்வதற்கு எவரும் இதுவரை நாட்டில் இல்லாததும், தமது வாழ் நிலையிலிருந்து இனி அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏதுமில்லாததால், எப்படிப்பட்ட அவமானங்களை அரசும், அதிகார வர்க்கமும் ஏற்படுத்தினாலும் அவற்றை அனைத்தையும் சகித்துக் கொண்டு அவர்களிடம் கையேந்தி நிற்பதே இந்திய விவசாயிகளின் வாழ்வியல் பண்பாடாக உள்ளது.
விவசாயிகளை அமைப்பாக்குவது என்ற புரிந்து கொள்ள முடியாத, சவால் நிறைந்த பணியில்தான் இந்தியாவிலுள்ள முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள், சிந்தனையாளர்கள் அனைவரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்களில் எவருக்கும் விவசாயிகளை அணிதிரட்ட முடியும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
அதே நேரத்தில் நாட்டில் நடைபெறும் அனைத்து பிற்போக்கு செயல்பாடுகளுக்கும் இந்த விவசாயிகள்தான் ஆதாரமாக விளங்குகின்றனர்.
குறிப்பாக உலகிலேயே வேறு எங்கும் இல்லாத, இந்தியாவின் சிறப்புத் தன்மையான இந்துமதம் என்ற சாதிகளின் கூட்டணியின் உறுப்பினர்களான ஒவ்வொரு சாதியும், அதனின் உட்சாதி பிரிவுகளும் விவசாயிகளிடையே தான் - நகரவாசிகளோடு ஒப்பிடும் போது - மிகமிக குறைந்த அளவிளான, நெளிவு சுளிவுகளோடு (இதுவும் தவிர்க்க வியலாத காரணங்களால்) உயிர்ப்போடு உள்ளது.
இந்தக் கடினமான சூழலால் நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளைத் திரட்டுவதில் தான் ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தோல்வி கண்டுள்ளனர்.
விவசாயிகளைத் திரட்டுவதில் தாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து – வெளியில் சொல்லாவிட்டாலும் தமது செயல்பாடுகளின் ஊடாக – விவசாயம் என்ற பின்தங்கிய தொழிலில் இருக்கும் வரை இவர்களை அணிதிரட்ட இயலாது என்றும், விவசாயத்திலிருந்து எந்த அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்றுத் தொழில்களில் – நகரங்களில் – ஈடுபடுகிறார்களோ, அந்த அளவிற்குத்தான் அவர்களை தமது இலக்கிற்கு ஏதுவாக அணிதிரட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்களின் இந்த பாரதூரமான, பரிதாபகரமான முடிவிலிருந்து, முன்னேறிய முதலாளித்துவ உற்பத்தியின் விளைவாக பின்தங்கிய உற்பத்தியாகிய விவசாயம் அழிவைச் சந்திப்பது தவிர்க்க வியலாதது என தமது தோல்விக்கு இவர்கள் சித்தாந்த முலாம் பூசிக் கொண்டு தம்மைத்தாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
இதனடிப்படையில் கிராமங்களை கைவிட்டு, நகரங்களையே தமது முதன்மையான செயல்பாட்டுக்கான களமாக மாற்றிக் கொள்கின்றனர். இந்நடவடிக்கையின் தவிர்க்க விளைவாத விளைவாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை, அவர்கள் சிந்தனை ஓட்டத்தைப் பற்றி முழுமுற்றாக அறியாதவர்களாக, அறிவிலிகளாக அந்நியப்பட்டுக் கிடக்கின்றனர்.
கிராமங்களிலிருந்து நகரத்திற்கு ஓடியவர்களோடு ஓடிய இவர்கள், இப்போது அவர்கள் அரசுகளால் நிர்பந்தமாக மீண்டும் கிராமத்திற்கே துரத்தப்படும் போது செய்வதறியாது திகைத்துப் போகிறார்கள். ஆனாலும் தமது கொள்கை முடிவை நிலைநாட்ட, நகரம் விட்டு நகரம் இடமாற்றம் செய்து கொள்கின்றனர். மொத்தத்தில் இவர்கள் அனைவரும் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மாறி நிற்கிறார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போன்று காரசாரமாக விவாதிக்கின்றனர்.
விவசாயிகளை, விவசாயத்தைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன் வைக்கும் தீர்வுகளோ கொலைகாரனிடமே நீதி கேட்கச் சொல்கிறது.
புரட்சிகர அமைப்புகள் முன்வைக்கும் தீர்வுகளோ, புரட்சிக்குப் பின்னர் தாங்கள் செயல்படுத்தப் போவதைப் பற்றியதாக உள்ளது. விவசாயிகள் இப்போது சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து, விவசாயிகளையும், இதனூடாக சமூக வளர்ச்சியையும் பாதுகாக்கும், முன்னேற்றும் வழிமுறைகள்தான், தீர்வுகள்தான் இப்போதையை உடனடித் தேவையாகும்.
அந்த வகையில் கீழ்கண்ட வழிமுறைகளை, தீர்வுகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளே! 
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும், அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து! 
2.நிலப்பிரபுக்கள், மடங்கள், ஆதீனங்கள், கோயில்கள், நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்து வழங்கு!
3.விவசாய விளை பொருட்களுக்கான விலையைத் தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு! 
4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு! 
5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து. 
வாசகர்கள் இவைகளை பற்றிய தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள். மேலும் விவாதிக்க, இணைந்து செயல்பட எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.
- சூறாவளி ( moodakizhavan@gmail.com, தொடர்பு எண்:9842529188)
தொடர்புடைய பதிவுகள்:

2.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1

4.ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

Tuesday, 18 December 2012

ஆதிக்க சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்

'தாழ்த்தப்பட்டோர் - பல வண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தோம். அதில், "ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகள், நெசவாளிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆளும் கும்பலுக்கு எதிராக வெறுப்பும், ஆத்திரத்தையும் கொண்டுள்ளனர். ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் வெறுப்பும், ஆத்திரமும் கொள்வதற்கு எது காரணமாக உள்ளதோ அதே காரணம்தான் பாமக உட்பட அனைத்து சாதிவெறி அமைப்புகள், பிழைப்புவாதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கும், அவர்களிடமிருந்து விலகி நிற்பதற்கும் காரணமாக அமைகிறது. மேற்கண்ட இருதரப்பினருக்கும் ஏற்படும் நெருக்கடி ஒரே புள்ளியில் இருந்துதான் துவங்குகிறது. இதன் காரணமாகத்தான் பாமக ராமதாஸ் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு எதைத் தீர்வாக முன்னெடுக்கிறாரோ, அதுவே ஆளும் வர்க்கங்களின் நெருக்கடியை தீர்ப்பதற்குமான தீர்வாகவும் அமைகிறது. இதன் காரணமாக இவ்விரு பிரிவினரும் ஒன்றிணைந்து செல்வதும் தவிர்க்கவியலாத செயல்" என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.
dalith_colony_643
இக்கட்டுரையை படித்த செல்வன் என்ற வாசகர் “ ஐயோ.. படிக்க படிக்க தலை சுத்துதே.. எவனும் யோக்கியன் இல்லே – நு மக்களுக்கும் தெரியும். எந்தக் கழகமானாலும், கட்சியானாலும், தலைவரானாலும், அது புரட்சிகரமா இருந்தாலும் சரி, புரட்சி இல்லாம இருந்தாலும் சரி. அடுத்த சம்பவம் நடக்குற வரைக்கும் தர்மபுரிய வெச்சு ஓட்ட வேண்டியதுதான் ”, என்று தனது எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார்.
 சில வாசகர்கள் எமது கட்டுரையில் உள்ள செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் மகஇக குழும அமைப்புகளும் இப்படித்தானா என்று எண்ணும்போது மிகுந்த வேதனையாக உள்ளது என்றும் தொலைபேசி வாயிலாக எம்மோடு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
 மற்றொரு வாசகர், தங்களின் கட்டுரை ஒட்டுமொத்தமாக புரட்சிகர அமைப்புகளின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துவதைப் போன்று உள்ளது. எனவே கட்டுரையை வேறு வகையில் எழுதியிருக்கலாமோ என்று கருதுகிறேன் என்று கூறினார்.
 மொத்தத்தில் தமிழகத்தில் செயல்படும் ஒரே புரட்சிகர அமைப்பு தாங்கள்தான் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் மகஇக குழுமம், கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் இலக்கில் குறிப்பிடும் எதையுமே சாதித்து விடவில்லை. ஆனாலும் இந்த அமைப்பாவது இருக்கிறதே என்று ஆறுதல் பல தரப்பிலும் இருப்பதையும், அதுவும் இப்போது இல்லாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கமும் மேற்கண்ட வாசகர்களின் கருத்துகளில் வெளிப்படுவதையும் நாங்கள் உணர்கிறோம்.
 ஆறுதலை மட்டுமே தரக்கூடிய தன்மையை கொண்டிருக்கிற அமைப்பைக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் பல்வேறு அநீதிகளை எதிர்கொள்வதோ, இவைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி முறியடிப்பதோ, அதிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ சாத்தியமே இல்லை. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளின் மூலம் ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயலை மூடி மறைக்கவும், மக்களை சாந்தப்படுத்தவுமே முடியும்.
 மகஇக குழும அமைப்புகளின் இலக்கும் மக்களைத் திரட்டுவதோ, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் இலக்கு முன்னணியாளர்களை வென்றெடுப்பது மட்டுமே!
 இப்படி வென்றெடுக்கும் நபர்களைக் கொண்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றை விற்பனை செய்வது, பேருந்துகளில் மக்களுக்குப் புரியாத, விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களைப் பேச வைப்பது (இப்படிப் பேசுபவர்களே தாங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சநாளில் ஓடி விடுவது என்பது வேறு கதை) ஆகியவைதான். இவைகளை செய்வதும் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதற்காகத்தான். இப்படி வென்றெடுக்கும் முன்னணியாளர்களை சமூக யதார்த்தத்திற்குப் புறம்பானவர்களாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும், தாங்கள் உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் மாற்றுவதுதான். அதாவது அவர்களை சிந்தனை ரீதியாக காயடிப்பதுதான் இவர்களின் நாற்பதாண்டு கால புரட்சிகர சாதனை!
 மேலே கண்ட சாராம்சத்தை உடைய இந்த அமைப்பின் தன்மையைக் கொண்டுதான், இது புரட்சிகர அமைப்பு அல்ல என்பதையும் சமரச, சீர்திருத்தவாத அமைப்பாக சீரழிந்து போன இவர்கள், பிழைப்புவாத சகதியில் மூழ்குவதும் தவிர்க்க வியலாத ஒன்றாகி விட்டது. எனவே தான் தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி வெறியை எதிர்கொள்ள இப்போதைய நிலையில் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் ஏதும் இல்லை என்பதையே வரையறுத்துக் கூறியுள்ளோம்.
 இப்படி நாங்கள் வரையறுத்துள்ளதாலேயே தமிழகத்தில் புரட்சிகர சக்திகள் உருவாவதற்கான அடிப்படை இல்லை என்பதோ, இனியும் உருவாகாது என்பதோ இதன் பொருளல்ல. அதே வேளையில் புரட்சிகர அமைப்புகள் இனி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை தர்மபுரி நிகழ்வு நம் கண்ணத்தில் அறைந்தாற் போன்று நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
 நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஒன்றுபட்ட நக்சல்பரி இயக்கம் பின்னர், மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்டுகள் செயல்பட்டவரைதான் தாழ்த்தபட்டோருக்கு எதிரான வன்னிய சாதிவெறி வெளிப்படமால் இருந்துள்ளது. இதற்கு மேலே கண்ட நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களில் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் இருந்ததும், அதிலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்பதுதான் ஆதிக்க சாதி வெறி வாலை சுருட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது. இதை, இந்த சம்பவத்தைப் பற்றி நேரடி கள ஆய்வு செய்துள்ள அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
 நக்சல்பரி புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை மட்டுமே பெருமளவு சார்ந்துள்ளது. தம்மை மேல்சாதி என்றுக் கருதிக் கொள்வோரில் முன்னணியாளர்களை மட்டுமே இவர்களால் வென்றெடுக்க முடிந்துள்ளது. இது நமக்கு புலப்படுத்தும் செய்தி என்னவென்றால் மேல்சாதிகள் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் மக்களைத் திரட்டுவதில் புரட்சிகர அமைப்புகள் தோல்வியையேச் சந்தித்துள்ளன என்பதைத்தான்.
 இந்தத் தோல்வி சமவெளிப்பகுதி மக்களை வென்றெடுப்பதில் நக்சல்பரி இயக்கங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக வேறொரு வகையில் புரிந்துகொள்ளப்படுகிறது. இதை இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக, புரட்சிகர சக்திகள் அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.
 இந்த உண்மையை புரட்சிகர அமைப்புகள் ஒப்புக்கொண்டாலும், இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியோ, இதை எப்படி மாற்றுவது என்பதைப் பற்றியோ ஏதும் கூறுவதுமில்லை, விவாதிப்பதுமில்லை. இதற்கு இந்திய சமூக வரலாறு பற்றிய புரிதலோ, கண்ணோட்டமோ இவர்களுக்கு இதுவரை இல்லாததுதான் காரணமாகும்.
 உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் உற்பத்தித் துறையில் ஏற்படும் வளர்ச்சியும், முன்னேற்றமும் இந்திய மக்களின் சிந்தனையிலும் அதே அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இங்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சியும், முன்னேற்றமும் தவிர்க்கவியலாத சமூக வளர்ச்சியின் தேவையில் இருந்து ஏற்பட்டதா என்பதை இவர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. தவிர்க்க வியலாத சமூக வளர்ச்சி தேவையிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவைகள் மக்கள் செயல்பாடுகளின் விளைவாக அவர்களின் சிந்தனா முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை அனைத்து மாற்றங்களும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து சமூகத்தின் மீது திணிப்பவைகளே ஆகும். ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப உற்பத்தியில் திணிக்கும் மாற்றங்களில் மக்களின் பங்களிப்பு, செயல்பாடு ஏதுமில்லாததால், உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் அதே அளவிற்கு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதில்லை.
 மக்களின் சிந்தனா முறையில் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தை மக்கள் தமது செயல்பாடுகளின் ஊடாக – போராட்டங்களின் ஊடாக – கொண்டு வந்திருக்க வேண்டும்.
 மக்கள் தாங்கள் புதிதாக உருவாக்க விரும்பும் மாற்றங்களை, இதற்கு முந்தைய சமூக அடித்தளத்தின் மூலம் ஆதாயம் அடையக் கூடியவர்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே உருவாக்க முடியும்.
dharmapuri_attack_426
 இந்தப் போராட்டம் உற்பத்தியில் மட்டுமல்ல, இதைப் பாதுகாக்க ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள பண்பாடு, நாகரீகம், கலை, கலாச்சாரம் உட்பட அனைத்தையும் எதிர்த்து முறியடிப்பது என்பதோடு இவைகளுக்கு மாற்றாக தமது நலன்களுக்கு ஏற்ப புதியனவற்றையும் உருவாக்கிக் கொள்வதாகும்.
 இப்படியான ஒரு அனுபவத்தை இந்தியச் சமூகம் இதுவரை தனது வரலாற்றில் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. எனவே தான் உற்பத்தியில் எவ்வளவு பெரிய வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் கருவிகளில் ஏற்படும் மாற்றமாக மட்டுமே உள்ளது. இவைகள் திணிப்பின் ஊடாக உருவாக்கப்படுவதால், அதை திணிப்பவர்களின் நலனை உள்ளடக்கிய அளவிற்கு மட்டுமே முந்தைய பண்பாடு, நாகரீகம் உட்பட அனைத்திலும் மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவைகள் தவிர்க்கவியலாத வடிவ மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள் இன்று அனைத்து சாதியினரோடும், பேருந்து, ரயில்களில் சமமாக பயணம் செய்வது, பள்ளிக் கல்லூரிகளில் கல்வி கற்பது, அரசுத்துறைகளில் வேலைபார்ப்பது, செருப்பணிவது உட்பட அனைத்து உரிமைகளும் ஆதிக்க சாதிகள் தமது மனமாற்றத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனமுவந்து அளித்தவைகள் அல்ல.
 தவிர்க்கவியலாத சமூகத் தேவையும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான, வீரம் செறிந்த போராட்டங்களின் ஊடாகவும் வென்றெடுத்தவைகளே ஆகும்.
 சாதி, தீண்டாமையை சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் முன்பு திணித்து, தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கியவர்கள், இனி அது சாத்தியமில்லை என்பதால், அவைகளை தன்னளவில் – எல்லையை- சுருக்கிக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றனர்.
 தமது நலன்களுக்கு உகந்த வகையில் தாழ்த்தப்பட்டோரை சமூக செயல்பாடுகளில் ஈடுபட சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்கும் ஆளும் வர்க்கம், சாதி, தீண்டாமையை ஆதிக்கசாதிகள் தன்னளவில் கடைப்பிடிப்பதை பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கிறது. இதன் வாயிலாக தமக்கெதிராக மக்கள் ஒன்று திரள்வதைத் தடுத்து, தனது நலனை முழு அளவில் பாதுகாத்துக் கொள்கிறது.
 ஆனால் இந்தியாவில் உள்ள நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களோ, வாழ்நிலையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சிய இயங்கியலை யந்திர கதியாக புரிந்து கொண்டு, அதை சமூகத்தின் மீது திணிப்பதையே தமது செயல்பாடாகக் கொண்டுள்ளனர்.
 இந்திய சமூக வளர்ச்சி பற்றிய செழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே மார்க்சிய இயங்கியலை இங்கு சமூக மாற்றத்திற்கான கோட்பாடாக பயன்படுத்த முடியும். இவர்களால் மட்டுமே இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் – சமவெளிப்பகுதியில் உள்ள மக்களையும் - திரட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும்.
 சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் திரட்டுவதற்கான புரிதலையோ, வழிமுறையையோ கொண்டிராத புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் செயல்பாடுகளை வைத்துதான், தாங்கள் செயல்படும் காலம் வரை சாதிவெறியர்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக மட்டுமே முடக்கி வைக்க முடியும் என்பதைத்தான் தர்மபுரி நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.
 ஆதிக்க சாதிகளில் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதால் மட்டுமே ஆதிக்க சாதி வெறியை முறியடித்துவிட முடியாது. நாயக்கன் கொட்டாயில் தமிழ்வாணன், சித்தாநந்தன், பச்சியப்ன் போன்ற முன்னணியாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதும் அவர்கள் தமது மௌனம், ஒதுங்கிக்கொள்ளல் மூலம் வன்னிய சாதிவெறிக்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்கள் என்பதும்தான் நடந்துள்ளது.
 கீற்று இணையதளத்தில் 'வன்னிய சாதி வெறி சொல்வது என்ன?' என்ற கட்டுரையில் “ஆதிக்கசாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடமும் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், கட்டவிழ்த்து விடவேண்டும்”, என்று தோழர் குணா குறிப்பிட்டுள்ளார்.
 இப்படி ஆதிக்க சாதிகளிடமும் அமைப்பு பலம்பெற என்ன திட்டம் உள்ளது என்பதைக் கூறவில்லையே என்று தோழர் குணாவிடம் வாசகர் சுதிர் மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கான பதில் தோழர் குணாவிடம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள எந்த ஒரு புரட்சிகர அமைப்பிடமும் இல்லை என்பதுதான் உண்மை.
 இந்தியாவில் உள்ள அனைத்து புரட்சிகரக் குழுக்களும் ஆதிக்க சாதிகளில் உள்ள ஒன்றிரண்டு முன்னணியாளர்களை தாங்கள் வென்றெடுப்பதையே முன்னுதாரணமாகக் கருதி இதே போன்று ஆதிக்க சாதிகளில் உள்ள பெரும்பான்மை மக்களையும், உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் திரட்டிவிட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை தொடரும் வரை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நமது நாட்டில், சமூக மாற்றம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.
 புரட்சிகர இயக்கங்கள் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களையே பெருமளவு சார்ந்து தமது செயல்களைத் தொடரமுடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகள் தமக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் புரட்சியாளர்கள் தோள்கொடுக்கிறார்கள் என்பதால்தான் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.
dalith_colony_646
 தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைவதற்கு எது காரணமாக அமைகிறதோ, அதே காரணம்தான் ஆதிக்க சாதிகளை புரட்சிகர அமைப்புகளிடமிருந்து விலகி நிற்கவும் வைக்கிறது.
 கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவெங்கும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஏறத்தாழ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தமது உயிரையே பறிக்கும் அவலத்திற்கு எதிராக இம்மக்களை அமைப்பாக்கவோ, போராட வைக்கவோ புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் இயலவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் இவர்களை சாதிவெறியர்களால் அமைப்பாக திரட்ட முடிகிறது. இந்த அளவிற்கு இம்மக்களின் சிந்தனாமுறை - அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிந்தானா முறை - மிகவும் பிற்போக்கானதாக உள்ளதையும், இப்படிப்பட்ட நிலையிலும் இவர்களை தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராக அமைப்பாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையே இது நமக்கு உணர்த்துகிறது.
தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராகப் போராடும்போதுதான், தமது நலன்களுக்கு எதிரானவர்களையும், ஆதரவானவர்களையும் மக்களால் உணர்ந்து கொள்ளவும், இதன்மூலம் இவர்களின் சிந்தனைத்திறனை ஜனநாயக தன்மை உடையதாக மேம்படுத்த‌வும் முடியும்.
 இப்படி ஆதிக்க சாதிகளின் ஜனநாயக உணர்வு மேம்படுமேயானால் தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுடன் போராட்டக் களத்தில் இணைவதற்கு தடைக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.
 தம்மை மேல்சாதி என்று கருதும் மக்களை அமைப்பாக்குவதற்கும், இதன் ஊடாக இம்மக்களின் சிந்தனையை ஜனநாயகப் பூர்வமாக்குவதற்குமான உள்ளடக்கத்தை உடைய திட்டத்தையும், வழி முறைகளையும் உருவாக்க வேண்டும்.
 இக்கட்டுரையில் நாங்கள் கூறியுள்ள கருத்துகளும், 'தாழ்த்தப்பட்டோர் பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ள கருத்துகளும் யதார்த்தமான உண்மையான விவரங்களில் இருந்து கிடைக்கும் விடைகளேயாகும். இப்படி நாங்கள் உண்மைகளை பதிவு செய்வது பலருக்கும் சலிப்பையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குவது போலத் தோன்றினாலும் இப்படிபட்டவர்கள் இந்த சமூக யதார்த்தத்தை மூடிமறைப்பதால், இதுவரை ஏற்பட்டுள்ள, இனி எதிர்காலத்தில் ஏற்படப்போகிற எதிர்றை விளைவுகள் நமக்கு பெரும் இன்னல்களையும், அழிவையுமே தரப் போகிறது என்பதை உணர்வார்களேயானால், தமது அவநம்பிக்கை சிந்தனா முறையை மாற்றிக் கொள்வார்கள். இவைகளை முறியடிப்பதற்கான வழிமுறைகளைக் காண முற்படுவார்கள்.
 இதற்கு மாறாக நிலவுகிற சமூக யதார்த்தத்தை மூடி மறைக்க முயலும் செயல்பாடுகள் அனைத்தும் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கவும், பிழைப்புவாதிகளின் அடித்தளத்தை செழுமைப்படுத்துவதற்கும் பயன்படும்.
 நாம் விவாதிக்கும் சமூக சிக்கல்கள் எதுவானாலும், அவைகளை உண்மையிலேயே தீர்த்து சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைய விரும்புகிற புரட்சிகர அமைப்புகள், தனிநபர்கள், குழுக்கள் எவராயினும் அதற்குரிய தீர்வுகளை, உரிய வழிமுறைகளைக் கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திரட்டி, சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக உள்ள தடைக்கற்களை உடைக்க வேண்டியதே இன்றைய உடனடிக் கடமையாக ஆக்கிக்கொள்ள வேண்டும்!


தொடர்புடைய கட்டுரைகள்:

9.தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்!

Monday, 25 June 2012

நேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......! ஆய்வறிக்கை.

இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.

பிரசந்தா,பாபு ராம் துரோகக்கும்பலின் நடவடிக்கைகள் மீது தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் அவநம்பிக்கை கொண்டிருந்தாலும்,கட்சிக்கட்டுப்பாடு என்பதற்குள் மூழ்கி எதிர்த்து போராடி முறியடிக்காமல் இருந்துள்ளனர்.தற்போது நிலைமை கைமீறி சென்ற பிறகு துரோக கும்பலுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்.தமது இந்த நடவடிக்கை தாமதமானது எனபதை அவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய ஜனநாயக புரட்சிக்கும்,சோசலிசத்திற்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால், சந்தேகத்திற்கு இடமின்றி நேபாளத்திற்கு தற்போது புதிய ஜனநாயக புரட்சி தேவையற்றது என்றும் ,  அதில் நாம் பெருமளவு அடைந்து விட்டோம், மீதி சோசலிசம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வரும்போது அடைந்துவிடுவோம் , மேலும் தற்போது கட்சியின் முக்கியப் பணி முதலீட்டு நாடுகளுக்கு சாதகமான சூழலையும், உற்பத்தி சக்திகளையும் உருவாக்குவதுதான் பிரசந்தா எனவும் கூறி இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

மேற்கண்ட கருத்துகள் மூலம் பிரசந்தா,பாபு ராம் கும்பல் அப்பட்டமாக புரட்சியை ஆளும்வர்க்கங்களிடம் காட்டிக்கொடுத்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தாலும், இவர்களே கட்சியில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ண்மையில் நேபாள மாவோயிசக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பசந்தா அவர்கள் துருக்கி மா-லெ.கம்யூனிசக்கட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த கும்பலையும், இந்த துரோகக்கும்பலை தாங்கள் முழுமையாக நம்பி ஏமாந்து போனதை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

”அப்போது ஜனநாயக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக ஏற்றுக்கொண்டோம். அதனை நாங்கள்  செயல் தந்திர மாற்றம்  என்றே கூறினோம். அப்போது நாங்கள் எடுத்த பாராளுமன்ற பாதை நிச்சயமாக ஒரு திருப்புமுனை. அதுவே எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு நிச்சயமாக இந்த சுழல் உருவாக்கத்தின் ஒரு காரணி”.



”இன்றையச் சூழலில் திரும்பி பார்க்கும்போது எங்களது கட்சியின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக 2005 கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டது, நேபாள நாடாளுமன்றவாதிகளுடன் டில்லியில் 12 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஆகியவை இந்த மொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்த செயல் தந்திரம் மூலம், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் கிளர்ச்சி என்னும் சூழலை ஏற்படுத்தி, நகரங்களில் புரட்சிகர கட்டமைப்பை ஏற்படுத்த  உதவும் என்பதால் இது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் நகரங்களுக்கு வந்தோம். ஆனால் கொந்தளிப்பான கடந்த பத்துவருட மக்கள் யுத்தத்தில் நாங்கள் பெற்ற அனைத்தும் தற்போது எமது கைகளை விட்டு போய்விட்டது. அண்மையில் தலைவர் பிரசந்தா அந்த 12 அம்ச ஒப்பந்த்தை அடையும் முன்பாக,  இந்திய விரிவாக்கவாதிகளுடன் டில்லியில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இந்து பத்திரிக்கைக்கான ஏப்ரல் 16- நேர்காணலில் டில்லியுடன் பன்னிரெண்டு அம்ச ஒப்பந்தத்துடன் தொடங்கிய பயணம் தற்போது முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.  நேபாள ராணுவத்தை வைத்து மக்கள் விடுதலைப் படையின் முகாம்களை சதித்தனமாக சுற்றிவளைத்து சரணடையச்செய்ய உத்தரவு இட்டதற்குப் பின்னர்தான் இந்த நேர்காணலை அவர் தந்தார். இது பாபுராம், பிரசந்தா கும்பல் பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக விரிவாக்கவாதிகளின் முன் சரணடைந்ததையே காட்டுகிறது. இதனை இந்தக் கும்பல் புரட்சியை அடைவதற்கான செயல் தந்திரம் என்று சொன்னது. ஆனால் அது இந்திய ஆளும் வர்க்கங்கள், நேபாள நாடாளுமன்ற வாதிகள் மற்றும் பாபுராம், பிரசந்தா கும்பல் கூட்டு சேர்ந்து நேபாள புரட்சியை முறியடிக்க எடுத்த விரிவான நிலைப்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கும்பல் நேபாள உழைக்கும் மக்கள் மற்றும் உலக உழைக்கும் மக்களிடம் புளுகியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதையே காட்டுகிறது”, என்றும் கூறியிருக்கிறார்.


தோழர் பசந்தாவின் மேற்கண்ட கருத்துகளில் ஜனநாயக குடியரசு என்ற எமது செயல்தந்திரம் தான் இப்போதைய பின்னடைவுக்கு காரணம், இது இந்திய நேபாள ஆளும்வர்க்கங்கள் பிரசந்தா,பாபுராம் கும்பல் கூட்டுசேர்ந்து செய்த சதியாகும். ஆனால் நாங்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களும் பிரசந்தா,பாபுராம் துரோகக்கும்பலை தற்போது எதிர்த்து போராடுபவர்களுமான தோழர்கள் கிரண்,பசந்தா,கஜிரோல்,பாதல் போன்றவர்களால் கூட கட்சித்தலைமையின் சூழ்ச்சியை புரிந்துகொள்ள முடியாமல் அதற்கு பலியாகியிருக்கிறார்கள்.

இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத போது கட்சி அணிகளும்,நேபாள உழைக்கும் மக்களும் கட்சித்தலைமையின் துரோகத்தை புரிந்துகொள்ளாதது அதிசயமான நிகழ்வல்ல.

கடந்த 10 ஆண்டுகால புரட்சியின் பயன்கள் அனைத்தையும் முற்றாக இழந்த பின்னரும் கூட கட்சித்தலைமையின் துரோகத்தை, அதை எதிர்க்கும் புரட்சிகர குழுவினர் இன்னமும் தெளிவாக வரையறுத்து புரிந்துகொள்ளாமல்தான் உள்ளனர்.

தோழர் பசந்தாவினுடைய பேட்டியில் கட்சித்தலைமையின் துரோகத்தைப்பற்றியும்,  நேபாள புரட்சியை முறியடிக்க இந்திய, நேபாள ஆளும்வர்க்கங்களின் செயல்பாடுகளைப்பற்றியும் அதாவது முக்கியமாக புறநிலைசக்திகளின் செயல்பாடுகளைப் பற்றிய தமது குழுவின் கருத்துக்களையே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட பின்னடைவுகளுக்கு புறநிலை சக்திகளின் எதிர் வினையாற்றல்கள் இயல்பானவைகளாகும். இதற்கு எதிரான அகநிலை சக்திகளின் செயல்பாடுகளும், வினையாற்றல்களுமே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் தீர்மானகரமா காரணியாகும். இதன் அடிப்படையில் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் நேபாள புரட்சியின் பின்னடைவை பரிசீலக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட பேட்டியில் உள்ள அவரது கருத்துகள் நமக்குப் புலப்படுத்துகிறது.

எந்த ஒரு நாட்டிலும்  புரட்சிக்கு எதிராக பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருக்கும் ஆளும் வர்க்க பிரதிநிதிகளும், ஆளும் வர்க்கங்களும் பல்வேறு சதிகளின் மூலம் புரட்சியை முறியடிக்க முயற்சிப்பார்கள் என்பது இயல்பானதொரு நடவடிக்கையே தவிர அதிசய நிகழ்வல்ல.

நேபாள சமூகத்தை விட  மிகவும் முன்னேறியச் சமூகங்களான சோவியத் ஒன்றியத்திலும், சீனத்திலும் கூட கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ கும்பலின் சதிகளால் அந்நாடுகளில் புரட்சி பின்னடைவுக்குள்ளானதை வரலாற்றில் நாம் பார்த்தேதான் இருக்கிறோம்.
அவ்விரு நாடுகளிலும் புரட்சி வெற்றியடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பின்னர்தான், முதலாளித்துவவாதிகளால் அதை முறியடிக்க முடிந்தது. அந்நாடுகளில் இச்செயல் அவ்வளவு எளிமையான ஒன்றாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஏனென்றால் அவ்விரு நாடுகளின் மொத்த சமூகமும் இந்திய, நேபாள நாடுகளை  விட, சிந்தனாரீதியாக மிகவும் முன்னேறிய சமூகங்களாகும். இதன் காரணமாக கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் தோழர்கள் லெனின்,ஸ்டாலின் மற்றும் தோழர் மாவோ ஆகியோருக்குப் பின்னர் தான் கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. கட்சியில் இருந்த உண்மையான பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள் ஆயிரக்கணக்கானோரை நயவஞ்சகமாக கொலை செய்தும், சிறையில் அடைத்தும் தமக்கான நிலையை கட்சியிலும், ஆட்சியிலும் நிச்சயமான வகையில் உறுதி செய்து கொண்ட பின்னர்தான், தமது முதலாளித்துவ நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது. இதையும் கூட முழுக்க, முழுக்க ராணுவ ஒடுக்குமுறை மூலமே நிறைவேற்றிக்கொண்டனர்.

ஆனால் நேபாளத்திலோ புரட்சி முடிவடைவதற்கு முன்பாகவே மிகவும் வெளிப்படையாகவும், கட்சியில் உள்ள பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நெருக்குதலையோ, அழிவையோ ஏற்படுத்தாமலேயே முதலாளித்துவவாதிகள் தமது நோக்கத்தை எளிமையாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு நேபாளத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் முழு முற்றாக பொருந்தக் கூடியதாகும். இவ்விரு நாடுகளிலும் செயல்பட்ட, செயல்படும் புரட்சிகர சக்திகளின் செயல்பாடுகளை தொகுத்துப் பார்க்கும்போது இரண்டுமே உள்ளடக்கத்தில் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளது.

நேபாள, இந்திய புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளின் நடவடிக்கைகளில் உள்ள ஒரே வேறுபாடாக தோன்றுவது இந்திய புரட்சிகர சக்திகள், நேபாள புரட்சிகர சக்திகள் முன்னேறிய அளவிற்கு புரட்சியில் முன்னேறாமல் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர் என்பதே ஆகும்.

ஆனால் நேபாள புரட்சிகர சக்திகள் வெற்றியின் விளிம்புவரை சென்று பின்னடைவை சந்தித்துள்ளதைப், போன்று தோற்றமளித்தாலும், உள்ளடக்கத்தில் இவ்விரு நாடுகளின் புரட்சிகர சக்திகளின் பின்னடைவில் குறிப்பிடும்படியான தனித்துவம் ஏதுமில்லை
ஏனென்றால் நேபாள புரட்சிகர சக்திகளின் எழுச்சி, முன்னேற்றம் என்பது மன்னராட்சியை தூக்கியெறிவது என்பதில் மட்டுமே மேலாண்மை செலுத்தியுள்ளது. மன்னராட்சியை தூக்கியெறியும் அளவுக்கு மட்டுமே அது உள்ளடக்கத்தையும், வீரியத்தையும் கொண்டிருந்தது என்பதுதான் நேபாள படிப்பிணையில் இருந்து நமக்குத் தெளிவாக புலப்படுகிறது.

தோழர் பசந்தா அண்மையில் வெளியிட்ட கருத்துகளும்  கீழ்கண்டவற்றையே சாரமாக உள்ளடக்கியிருக்கிறது. மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டத்தையும் கூட நடத்துகின்ற திறனும், ஆற்றலும்  இல்லாத நேபாள முதாலாளித்துவவாதிகள், தம்மால் செய்ய வக்கற்ற ஒன்றை பாட்டாளி வர்க்க அமைப்பைக் கொண்டு சாதித்துக்கொண்டுள்ளன.

எனவேதான் மன்னராட்சிக்கெதிரான புரட்சிகர சக்திகளின் போராட்டத்தை இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களும் மறைமுகமாக ஆதரித்துள்ளன. அதை நேபாள மாவோயிசக் கட்சியில் ஒளிந்துக்கொண்டிருந்த தமது பிரதிநிதிகளான பிரசந்தா, பாபுராம் தலைமையிலான  கும்பலின் மூலமே சாதித்துக் கொண்டுள்ளன.

சீனத்தில்  பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க தோழர் மாவோ கலாச்சார புரட்சியை  முன்வைத்து நடைமுறைப்படுத்தினார். சீன சமூகத்திற்கு, முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க மக்கள் சக்தியைக் கொண்டு, ஒரு கலாச்சார புரட்சியை மட்டுமல்ல பல கலாச்சார புரட்சிகளை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார் தோழர் மாவோ. ஆனாலும் கூட முதலாளித்துவ பாதையாளர்கள் கலாச்சார புரட்சியையும் மீறி தோழர் மாவோவின் இறப்பிற்குப் பின்னால் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டனர்.

சோவியத் புரட்சியின் படிப்பினையிலிருந்துதான் முதாலாளித்துவ பாதையாளர்களை, மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்டு முறியடிக்க வேண்டும் என்ற முடிவிற்கு தோழர் மாவோ வந்தார். அதனடிப்படையிலேயே கலாச்சார புரட்சியை நடத்தினார். முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, புரட்சியின் அகநிலைச் சக்திகளான மக்களே முதலாளித்துவ பாதையாளர்களை இனம் கண்டுகொள்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிக்  களமாகவும் திகழ்வதுதான் கலாச்சார புரட்சியின் உள்ளடக்கமாகும்.

உழைக்கும் மக்களை  அப்படி தயார் செய்வதற்கு முன்பாகவே தோழர் மாவோவின் இறப்பும் முதலாளித்துவவாதிகள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுதலும் நிகழ்ந்துவிட்டது. சீனத்தின் இந்த அனுபவத்தில் இருந்து கட்சிக்கு வெளியில் உள்ள உழைக்கும் மக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட முதலாளித்துவ பாதையாளர்களை அடையாளம் காணமுடியாமலும், அப்படியே கண்டுபிடித்தாலும் அதை முறியடிக்க மக்கள் சக்தியை பயன்படுத்தும் ஆற்றலோ, திறமையோ இல்லாதவர்களாவே இருந்துள்ளனர்.

 இதிலிருந்து சீனத்தில் கலாச்சார புரட்சி, மக்கள் செல்வாக்குப் பெற்ற தோழர் மாவோவின் மீதான மக்களின் உயரிய நம்பிக்கையின் வெளிப்பாடாகவே  வெளிப்பட்டுள்ளது. சீனத்தில் மட்டுமல்ல உலக பாட்டாளி வர்க்க அமைப்புகள் அனைத்தின் செயல்பாடுகள், அனுபவங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது உறுதியான கட்சித்தலைமை என்பது குறிப்பிட்ட சமூகத்தின் நற்பயன் சார்ந்த ஒன்றை போன்றே தோற்றமளிக்கிறது.  சோவியத் யூனியனுக்கு தோழர்கள் லெனின், ஸ்டாலினை போன்று சீனத்திற்கு தோழர் மாவோ கிடைத்தது அந்நாடுகளின் நற்பயன்தான் போலும்!. ஆனால் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இதுவரை அப்படி ஒரு நற்பயன் வாய்க்கவே இல்லை!

 தவறு மற்றும் முதலாளித்துவ பாதையாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி,  கட்சித் தலைமையை மட்டுமே சார்ந்திராமல் பிரதான அகநிலைச் சக்திகளான  அணிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அரசியல், சித்தாந்த வளர்ச்சி   அடிப்படையிலான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே உலக புரட்சிகர அமைப்புகளின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இது சாத்தியமா? எப்படி இதை சாதிப்பது? இப்பணி உலக பாட்டாளி வர்க்கம் இது வரை சந்தித்தவற்றிலேயே மிகவும் சவாலான பணிதான் என்றாலும், இதை சாதிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் இல்லை.  

 ஆனால் இந்தப் புரிதலை கட்சி அணிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் தற்போது உலக கம்யூனிச இயக்கங்கள் கடைபிடிக்கும் சித்தாந்த பயிற்சி அளித்தல் என்ற வடிவத்தின் மூலம் கட்சி அணிகளின் உயர்ந்த புரிதல் மட்டத்தையே உயர்த்த இயலாதபோது, உழைக்கும் மக்களுக்கு அதை தருவது என்பது சாத்தியமே இல்லை.

உலகின் ஏனைய நாடுகளை விட இந்திய, நேபாள நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகளுக்கு இது பன்மடங்கு சவால் நிறைந்த பணியாகும். உலகில் ஏனைய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளிலே கூட, கட்சி அணிகள் அரசியல், சித்தாந்த புரிதலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுவதற்கு மாறாக தலைமை மீதான நம்பிக்கை, விசுவாசம் என்ற அடித்தளத்தின் மீதே பெருமளவு கட்டி எழுப்படுகிறது.

இந்த நம்பிக்கை, விசுவாசம் ஆகிய பண்புகள் சொத்துடைமை வர்க்கப் பண்பின் தொடர்ச்சியாகவே பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இத்தன்மை இந்திய, நேபாள நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இச்சமூகங்களுக்கே உரித்தான வகையில் தனித்தன்மையுடன் மேலாண்மைப் பெற்று விளங்குகிறது.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு நாடுகளிலும் உள்ள சமூகங்கள் பார்ப்பனிய பண்பாட்டையும் அதனடிப்படையிலான வாழ்வியலையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. பார்ப்பனியம் இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் மிகச் சிறந்த ஆயுதமாகும்.
எனவே இவ்விரு நாடுகளின் தனித்தன்மையான பார்ப்பனியத்தை பற்றிய தெளிவான வரையறையை இந்நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகள் கொண்டிருப்பது தவிர்க்கவியலாத தேவையாகும். இதைக்கொண்டிராத எந்த ஒரு புரட்சிகர அமைப்பும், தமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற இயலாது.

இவ்விரு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகள், தமது அணிகளுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி அளிக்க நடத்தும் வகுப்புகளின் மூலம் இதுவரை ஆதாயம் அடைந்து வருவது பார்ப்பனிய சக்திகளே ஆகும். இவர்களின் மூதாதையர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமக்கு எதிரான அனைத்து சித்தாந்தங்களையும் தின்று, செறித்துவிட்டதைப் போன்றுதான் மார்க்சியத்தையும் தின்று செறித்துவிடும் திசையை நோக்கி இதுவரை  வர்கள் வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தான் இந்திய, நேபாள புரட்சிகர அமைப்புகளின் பின்னடைவுகளும், தோல்விகளும் அமைந்துள்ளன. இதனடிப்படையில்தான் ஜனநாயக மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய பாட்டாளி வர்க்க உயரிய கோட்பாடுகளையும் இந்நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப, பார்ப்பனிய நடைமுறைகளின் மூலம் மடைமாற்றிக் கொண்டுள்ளனர். இப்படி இவர்கள் பாட்டாளி வர்க்க அமைப்பையும், அதன் உயரிய கோட்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதை புரிந்து கொள்வதில் உழைக்கும் மக்களிடையே உள்ள அரசியல், சித்தாந்த புரிதல் பற்றிய  போதாமை நீடித்திருக்க வேண்டியது இவர்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.

எனவே ஆளும் வர்க்கங்களின் இந்த நயவஞ்சகத்தை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள அவர்களின் வாழ்நிலையிலிருந்து, அதை அடையாளம் காண தேவையான அரசியல், சித்தாந்த புரிதலை தருவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு எப்படியான சமூக மாற்றம் தேவைப்படுகிறதோ, அதை அம்மக்களின் வாழ்வியலில் இருந்து, அவர்களுக்கு புரிந்த மொழியில் புரிய வைப்பதும், அதனடிப்படையில் அவர்களை போராட வைத்து, இப்போராட்டத்தின் ஊடே அவர்களுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பாக புதிய ஜனநாய புரட்சியின் சாரம் விவசாயிகளுக்கான விவசாய புரட்சி என்பதை நாம் அறிவோம். இந்த புதிய ஜனநாயக புரட்சியின் சாரத்தை உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தின் உள்ளே தோழர் மாவோ உள்ளடக்கியுள்ளார். இதைத்தான் இந்திய நக்சல்பரி புரட்சியாளர்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

இன்றைய நிலையில் இந்தியாவில் விவசாயம் லாபமற்ற தொழிலாக மட்டுமல்ல, அது தற்கொலைக்கான தொழிலாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களால் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெயியேறும் நிகழ்வு மிக விரைவாக  நிகழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி  விவசாயத்தில் இருந்து வெளியேறும் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய மாற்று ஏதும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரான விவசாயிகளுக்கு வாழ்வளிக்க வேறெந்த துறையிலும் வாய்ப்பேதும் இல்லை. அதிலும்  உலக ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் தரகு முதலாளித்துவத்திற்கு இதற்கான தகுதி முற்றாக இல்லவே, இல்லை.

எனவே, விவசாயமே இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிப்பதற்கான தகுதிப் பெற்ற ஒரே தொழிலாகும்.இதன் மூலமே பெரும்பானமை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து,  அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், போது மட்டுமே தேசிய சந்தை உருவெடுக்கும்.மக்களின் வாங்கும் சக்தி பெருகாத வரை நாடு தொழில்மயமாவது என்பது சாத்தியமேயில்லை.

ஆனால் ஆளும்வர்க்கங்களோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் முனைப்பில் விவசாயத்தை ஏறத்தாழ அழித்துவிட்டது.இதன் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்களை அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது.இப்படி அழிவின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள்தான் புரட்சியின் பிரதான சக்திகள் ஆவர்.விவசாயிகளை அவர்களின் வாழ்நிலைக்கோரிக்கைகளில் இருந்து தொடங்கி போராட வைப்பதும்,இதையே அவர்கள் அரசியல்,சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களமாகவும் உருவாக்குவதே புரட்சிகர அமைப்புகளின் அத்தியாவசிய பணியாகும்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனிய வாழ்வியலையே அடிப்படையாக் கொண்டுள்ள இந்திய,நேபாள சமூகங்களே உலகில் உள்ள சமூகங்களிலேயே, சிந்தானா ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகங்களாகும்.

இவைகளின் அன்றாட வாழ்வியலே  பார்ப்பனியமாக உள்ளதால், கொத்தடிமைத்தனமும் அதன் அடிப்படையிலான பற்று, விசுவாசத்தை தமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவைகள்.இந்திய நேபாள சமூகங்களின் இந்த தனித்தன்மையின் காரணமாக எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான சீனத்தின் கலாச்சாரப் புரட்சி என்ற வழிமுறை மட்டும் இங்கு போதுமானதல்ல.அதிலும் கலாச்சாரப் புரட்சி,புரட்சிக்கு பிந்தைய சமூகத்திலுள்ள எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இந்திய, நேபாள சமூகத்தன்மையின் அடிப்படையில் இருந்து மக்களை புரட்சிக்கு அணிதிரட்டும் போதே கட்சியில் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறோம்.

இதற்காக இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளிடம் விரிவான ஆய்வொன்றை நடத்தி கீழ்க்கண்ட கோரிக்கைகளை தொகுத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகளே!

1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!

2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் ,நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்காரர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு!

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து.


மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமது வாழ்நிலை அனுபவங்களில் இருந்து விவசாயிகளே  வந்தடைந்தவைகள்.இக்கோரிக்கைகள் பொருளாதார வடிவைக்கொண்டிருந்தாலும் இவைகள் நிலவுகிற சமூக அமைப்பில் தீர்க்க முடியாதவைகள் என்பதால் இவைகள் முழு முற்றாக அரசியல் கோரிக்கைகளாகும்.இவைகள்தான் இந்திய ஆளும்வர்க்கங்களால் அழிவின் விளிம்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இதனோடு இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் நலனையும், தேசிய முதலாளிகளின் நலனையும் உள்ளடக்கியதாகும்.இதன் காரணமாக இக்கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அந்தக்கணமே நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும் அவர்களின் விரோதிகளுக்குமான போர் தொடங்கிவிடுகிறது.

தமது கோரிக்கைகளின் சந்தேகத்திற்கு இடமில்லாத, மிகத்தெளிவான நியாயத்தில் இருந்து, இதற்கெதிரான தமது விரோதிகளின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.இந்த நீடித்த, இடைவிடாத போராட்டத்தின் ஊடாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களத்தை உருவாக்குவதே புரட்சிகர தலைமையின் தலையாயப் பணியாகும்.இப்பணி எந்த அளவிற்கு நேர்த்தியாக, உயரிய மட்டத்தில் செழுமைப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் புரட்சிகர ஆற்றல் பெருக்கெடுக்கும்.

எமது மேற்கண்ட நிலைப்பாட்டை நாங்கள் முன்பு செயல்பட்ட சி.பி.ஐ-எம்.எல்(மா.அ.க) தலைமையிடம் முன்வைத்தோம்.எமது இந்த முன்னெடுப்பு தமது நோக்கத்திற்கு எதிரானது என்பதால், எம்மை அவர்கள் நயவஞ்சகமான முறையில் விவசாய அமைப்பின் மாநில தலைமையைத்தந்து திசைத்திருப்ப பார்த்தனர்.அது முடியாது போகவே தமது வர்க்க தன்மைக்கு ஏற்ப அமைப்பில் இருந்து எம்மை ஒதுக்குதல்,ஓரங்கட்டுதல்,இழிவுபடுத்துதல் ஆகியவைகள் மூலம் பணிய வைக்க முயற்சித்தனர்.

இவைகளை புரிந்து கொண்ட நாங்கள் எமது நிலையில் மேலும் உறுதியாக நின்றோம்.இப்போதும் அதை விவசாயிகளிடையே கொண்டு செல்லும் பணியையே அடிப்படையாக்க் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மொத்தத்தில் இதுவரை நாம் பரிசீலித்தவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கான சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை வாழ்வியலாக கொண்டுள்ள இந்திய, நேபாள சமூகங்கள் தத்தமது சமூகங்களின் பின்தங்கிய நிலை,தனித்தன்மை ஆகியவைகளுக்கு ஏற்ப புரட்சியின் அகநிலை சக்திகளான நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களை புரட்சிக்கு அணி திரட்டுவதற்கும்,அரசியல் சித்தாந்த பயிற்சி அளித்து வளர்த்தெடுப்பதற்கும், இதன் மூலம் பாட்டாளிவர்க்க அமைப்புகளில் ஊடுருவி, அதை உள்ளிருந்தே சீர்குலைக்கும் எதிர்புரட்சியாளர்களை இனம் கண்டு முறியடிப்பதற்கான வழி முறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.

குறிப்பு:-
நாங்கள் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த பிரசந்தா,பாபுராம் கும்பலின் துரோகத்தை முறியடித்து,நேபாளத்தில் புதிய ஜனநாயக புரட்சியை தொடர்வதற்கு மீண்டும் ஆயுதப்போராட்ட பாதையில் போராடப் போவதாகவும்,புதிய கட்சியை துவக்கப்போவதாகவும் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டத்திற்கு பின்னர் முறைப்படி அறிவித்துள்ளனர்.புரட்சிகர பாதையில் முன்னேற துரோகக் கும்பலுக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சிக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதோடு தாங்கள் இதுவரை இருந்த ஒன்றுபட்ட கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்து தொகுத்து சரியான அடிப்படை நிலைப்பாடுகளை தீர்மானிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.விரைவில் மா-லெ-மா கோட்பாடுகளின் அடிப்படையில் புரட்சியில் முன்னோறுவதற்கும்,புரட்சியை பாதுகாப்பதற்கும் சரியான முடிவுகளுக்கு வந்தடைவதற்கு எமது மேற்கண்ட கட்டுரையும் அவர்களுக்கு உதவும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தோழமையுடன்: விவசாயிகள் விடுதலைப் பேரவை,தமிழ்நாடு.
நாள்:26.06.2012.


 தொடர்புடைய கட்டுரை: