விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Tuesday, 29 January 2013

சாதி ஒழிப்புக்கு கம்யூனிசமே காலத்தின் கட்டாயம்

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 4
இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட இயலாத போதாமையைக் கொண்டுள்ளன. இந்தப் போதாமையே இவைகளை வலது, இடது விலகல்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் செயல்படும் மகஇக குழும அமைப்புகள் வலது விலகலுக்கு ஆட்பட்டு சீர்திருத்த பிழைப்புவாதக் கும்பலாக சீரழிந்து போய்விட்டதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
 இந்திய புரட்சிகர அமைப்புகளின் போதாமை மார்க்சிய சித்தாந்தத்தின் போதாமை அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்காதது, எந்திர கதியாக அதைப் புரிந்து கொண்டு சமூகத்தின் மீது திணிக்க முயலும் அமைப்புகளின் போதாமையைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
ramadoss_thirumavalavan_340மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை, இந்தியாவின் தனித்தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் திறன் மார்க்சிய அமைப்புகளுக்கு இல்லாவிட்டாலும், மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானம், ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் பல்வேறு செயல்களின் ஊடாக சமூக வளர்ச்சி என்ற வடிவில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு நிறைவேறுகிறது.
சமூக வளர்ச்சி ஆளும் வர்க்கங்களின் தேவை, நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப எந்த அளவிற்கு தடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு சாதியும், தீண்டாமையும் உயிர்வாழவே செய்யும். இந்திய சமுதாயத்திற்கு மார்க்சிய சித்தாந்தம் பொருந்தாது என்ற கருத்தின் உள்ளடக்கம், இந்திய சமுதாயத்திற்கு வளர்ச்சி என்பதும் பொருந்தாது என்பதே ஆகும்.
இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத சித்தாந்தம் மார்க்சியம் என்றால், அது உருவான அதே ஐரோப்பிய சமூகத்தில் உருவான ஜனநாயகம் மட்டும் இந்திய சமுதாயத்திற்குப் பொருந்துமா?
 தலித் அமைப்புகள் தமது பிழைப்புவாத தேவையிலிருந்து, எந்த ஜனநாயகத்தை இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் என்கிறார்களோ, அதை தமது ஆதிக்க சாதி வெறி தேவையிலிருந்து - மார்க்சியம் மட்டுமல்ல, ஜனநாயகமும் - பொருந்தாது என்கின்றனர் ஆதிக்க சாதியினர்.
ஜனநாயகம் காய் என்றால் மார்க்சியம் கனியாகும். பிழைப்புவாதம் என்ற மசக்கையிலிருந்து காயின் புளிப்பே மேலானது என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்பினர். ஆதிக்க சாதி வெறிப் போதையால் கல்லீரலையே இழந்து போன ஆதிக்க சாதி வெறியர்கள் காய் உருவாகவே விடமாட்டோம் என்கிறார்கள்.
 சமூக வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில் இவ்விருவருக்கிடையே அளவு ரீதியான வேறுபாடே உள்ளது. பண்பு ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். இந்த ஒற்றுமைதான் திருமாவளவனையும், ராமதாசையும் ஒன்றிணைக்கிறது.
எமது இதற்கு முந்தைய கட்டுரைகளை, மார்க்சிய விரோதம் என்ற லகானை மாட்டிக் கொண்டுள்ள சிலர், மார்க்சியம் வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டம் உடையது என்று முத்திரை குத்தியுள்ளனர். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக் கொள்ளுமாம். இதே போன்றுதான் மார்க்சிய விரோதப் பூனைகளும் கருதிக்கொள்கின்றன.
வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் இப்போது தர்மபுரியில் மட்டுமல்ல, அன்று 80களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார இலக்குகளையே குறிவைத்து தாக்கி அழித்தார்களே இந்நடவடிக்கைக்கு காரணம் என்ன?
அன்று 90 - களில் வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் பதிலடியாக ஆதிக்க சாதி வெறியர்களின் பொருளாதார இலக்குகள் மீது குறிவைத்துத் தாக்கினார்களே இந்நடவடிக்கையின் உள்ளடக்கம் என்ன?
ஒருவரின் பொருளாதார வளங்களைத் தாக்கினால், அது அவரின் சமூக பண்பாடு, கலாச்சாரம் உட்பட அனைத்திலும் சிந்தனா ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் இதைச் செய்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திற்கும், அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தமது பிழைப்புவாதத் தேவையிலிருந்து முன்னுக்குப்பின் முரணாக பிதற்றித் திரிகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளித்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு – திண்ணியம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை காட்டிக் கொடுத்து காசாக்கிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது என்பவர்களுக்கு மார்க்சியம் பொருந்தாத சித்தாந்தம்தான்!
 தன் அளவிலான நலனே ஜனநாயகம் என்ற சித்தாந்தம் தானே விழுப்புரம், கண்டமங்கலம் அருகிலுள்ள பள்ளி நேலியனூரில் அருந்ததியரைக் காதலித்த பறையர் சாதிப் பெண் கோகிலாவை, அப்பெண்ணின் பெற்றோரே கொலை செய்ய வைத்துள்ளது. நாங்கள் பெற்ற பெண்ணை கொலை செய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நியாயம் பேசவும் வைத்திருக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் பறையர் சாதி அமைப்பு என்பதால் தானே, இந்த அநீதியைப் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. சிறுத்தைகளின் ஜனநாயக சவடால்கள் பறையர் சாதிக்கு மட்டும்தானா?
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பள்ளி மாணவன் பாரத்தை படுகொலை செய்த விடுதிக்காப்பாளர், காவலர், சமையல்காரர் ஆகிய மூவரையும் வழக்கில்லாமல் பாதுகாத்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.
கொலையுண்ட மாணவனும், கொலை செய்த குற்றவாளிகளும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொலையுண்ட மாணவன் ஏழை என்பதால் தானே கொலையாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் பாதுகாத்தனர்! ஒரே சாதியானாலும் ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது தானே விடுதலைச் சிறுத்தைகளின் நீதி!
தனது சொந்த சாதி மக்களில் ஒரு சிலரின் நலனை மட்டுமே பிரதிபலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், ஆதிக்க சாதி வெறியை முறியடிப்பார்கள் என்று நம்புவது கேழ்வரகில் நெய்வடியும் கதை தான்!
ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இடஒதுக்கீடே தீர்வு என்றார்கள். அதை அடைந்த பின்னரும் அவைகள் தீர்ந்தபாடில்லை. அதற்கு மாறாக அவைகள் விவசாயத்தின் அழிவு, விவசாயிகளின் தற்கொலை என்ற வடிவில் சமூகத்தை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இப்போதும் இந்த அழிவை தடுப்பதற்கு மாறாக அதை திசை திருப்பி தீவிரப்படுத்தும் வழிமுறைகளைத்தான் ராமதாஸ் தலைமையிலான ஆதிக்க சாதி வெறிக் கும்பல் கையிலெடுத்துள்ளது. இந்த திருப்பணியைத்தான் ஆதிக்கச்சாதி வெறிக்கும்பலால் செய்யவும் முடியும்!
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் சாதி தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் இவைகளுக்கு உள்ள வரலாற்று பாத்திர வரம்பினாலும், சமூக அழிவை- பெரும்பான்மை மக்களை சாதி கடந்து அணிதிரட்டும்- தடுக்கும் நடவடிக்கைகளில் பாத்திரமாற்றவும் முடியாது.
நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்டுவதில் போதாமையைக் கொண்டிருந்தாலும், தனது இயலாமைக்கான காரணங்களை பரிசீலனைக்குட்படுத்தி, மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்பு தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து, ஆளும் வர்க்கங்களால் உண்டாக்கப்படும் சமூக அழிவை தடுக்கும், காக்கும் தமது ஆற்றலையும், திறனையும் புரட்சியாளர்கள் விரைவில் நிரூபித்துக் காட்டுவார்கள்.

Thursday, 10 January 2013

விவசாயிகளின் தற்கொலையே நாட்டின் முன்னேற்றம்(!?)

நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் கருவியாக ஆட்சியாளர்கள் நமக்கு காட்டுவது பங்குச் சந்தையைத்ததான். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பதினைந்து விழுக்காட்டிற்கும் மேலான இழப்பை சந்தித்தாலும், இந்திய பங்குச் சந்தைகள் வெறுமனே 1.8 விழுக்காடு அளவுக்கு மட்டுமே சரிவை சந்தித்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இருபது ஆயிரம் புள்ளிகளைத் தொடும் நிலைக்கு உயர்ந்து, உலகப் பொருளாதார வளர்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாகவும் மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது.
agriculture_200இந்திய பங்குச் சந்தை உயர்வுதான் நாட்டின் பொருளாதார உயர்வின் அடையாள சின்னமாக ஆக்கபட்ட 1990களில் தொடங்கி 2010 வரையிலான காலகட்டம் வரை, அதாவது கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஆணையத்தின் புள்ளி விவரங்களை மத்திய அரசோ, மாநில அரசுகளோ ஏற்றுக் கொள்வதில்லை.
1995 – 2010 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் 1995 – 2002 வரையிலான முதல் எட்டு ஆண்டுகளில் 1,21,157 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை அடுத்த எட்டு ஆண்டுகளில் அதாவது 2002 – 2010 வரையிலான கால கட்டத்தில் 1,35,756 ஆக உயர்ந்துள்ளது.
முதல் எட்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டின் சராசரி விவசாயிகளின் தற்கொலை 15,144 என்றால் அடுத்த எட்டு ஆண்டுகளில் இதுவே ஆண்டுக்கு 16,969 ஆக உயர்ந்துள்ளது. இதை நாள்வாரியாக கணக்கிட்டால் முறையே முதல் பாதி ஆண்டில் நாளொன்றுக்கு 41 பேராகவும், அடுத்தப்பாதியில் நாளொன்றுக்கு 46 ஆகவும் தற்கொலைகள் உயர்ந்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலையில் மகாராஷ்டிராதான் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது! 1995 - 2002 வரையிலான காலத்தில் 20,066 ஆக இருந்த தற்கொலை அடுத்த 2002 – 2010 வரையிலான காலத்தில் 30,415 ஆக உயர்ந்து சாதனை புரிந்துள்ளது இந்த மாநிலம்.
விவசாயிகளின் தற்கொலையில் முதல் மாநிலமாகத் திகழும் மகாராஷ்டிராதான் நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் என்று நாம் கருதினால், அது முட்டாள்தனம் என வேறொரு புள்ளி விவரம் நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறது.
தனிநபர் வருவாயில் அரியானா, கோவா ஆகிய மிகச்சிறிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மகாராஷ்டிரா இடத்தில் உள்ளதாம்! இம்மாநிலத்தின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ. 74,027/ = என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளின் தற்கொலையில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலம், தனிநபர் ஆண்டு வருவாயிலும் முன்னணி மாநிலமாக திகழமுடியுமா? என்றால் முடியும் என்றுதான் உண்மை நமது செவுளில் அறைந்தாற்போன்று கூறுகிறது.
இது எப்படி சாத்தியமானது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இது கடினமான, புதிரான விடயமல்ல. அதாவது விவசாயிகளின் அழிவுதான் இந்த வளர்ச்சியாக மாற்றமடைந்துள்ளது.
நாடு முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் அழிய வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் சித்தாந்தம். இதை உங்களால் நம்ப முடியாவிட்டால் மீண்டும் ஒரு முறை புள்ளிவிவரங்களை கூர்ந்து கவனியுங்கள்!
விவசாயிகளையும், விவசாயத்தையும் இந்திய அரசு அழிவை நோக்கி தள்ளி விட்டுள்ளதால் 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் அதிகமான விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காகியிருக்கும் என்பது மிகையல்ல!
indian_famers_600
நாட்டிலேயே விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் எண்ணிக்கையிலும், விவசாயம் அல்லாத வேறு வகையான பயன்பாட்டுக்கு விவசாய நிலங்கள் ஆட்படுத்துவதிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
1990 – 91 ம் ஆண்டில் 18,35,000 ஏக்கர் நிலம் விவசாயம் அல்லாத வேறுவகை பயன்பாட்டில் இருந்தது. இதுவே 2008 – 09ம் காலப்பகுதியில் 26,67,396 ஏக்கராக உயர்ந்து விட்டது. 1990 – 2009 ஆகிய 19 ஆண்டுகளில் 8,32,396 ஏக்கர் நிலம் விவசாயம் செய்வதிலிருந்து வேறுவகை பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா? மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட பின்புதான் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளார்களா? என்றால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள விவசாயிகள் பெருநகரங்களில் கட்டுமானத்துறையில் தான் மாற்று வேலைத்தேடிக் கொள்கின்றனர்.
கிராமங்களோடு ஒப்பிடும்போது நகரங்களில் அதிகக் கூலி கிடைத்தாலும், நகர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த கூலிக்கு தமது, உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து நகரங்களை மேம்படுத்திய தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், அவைகளுக்கு பெரும் சுமையாகி வேண்டப்படாதவர்களாக ஆகிப் போனார்கள்! இந்த சுமையைக் குறைத்து அவர்களை மீண்டும் கிராமங்களுக்கே துரத்தும் இந்திய அரசின் நடவடிக்கை தான் நூறுநாள் வேலைத்திட்டமாகும்.
இன்று நாட்டிலேயே தமிழகம்தான் கட்டுமானப் பணிகளில் முன்னணியில் உள்ளதால் வட இந்திய மாநிலங்களில் விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் அலை, அலையாய் தமிழகம் நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் தமது உயிரையாவது தக்க வைத்துக் கொள்கின்றனர். வெளியேற முடியாதவர்கள் தற்கொலைக்கு தள்ளப் படுகின்றனர்.
கோடிக்கணக்கானோர் விவசாயத்திலிருந்து வெளியேறினாலும் இன்னமும் நாட்டில் 60 கோடி மக்கள் தமது வாழ்வுக்கான ஆதாரமாக விவசாயத்தைத்தான் நம்பி உள்ளனர். 2026 – ல் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 70 கோடிக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே சார்ந்திருப்பார்கள் என்றும் ஐநாவின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால் 2026ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறுமனே 15% மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்பு 34 விழுக்காடாக இருந்த விவசாயத்தின் பங்கு, தற்போது 21 விழுக்காடாக சரிவடைந்து விட்டது. இந்த சரிவின் எதிர் விளைவுதான் விவசாயிகளின் தற்கொலைகள். இதுவே 15 விழுக்காடாக மேலும் சரிவடையும்போது விவசாயிகளின் தற்கொலைகள் லட்சத்திலிருந்து கோடியாக உயர்ந்து கோரத்தாண்டவம் ஆடப்போகிறது.
நிலைமை இவ்வளவு தீவிரமடைந்த பின்னரும் கூட, விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளை, அதாவது விவசாயத்தை இழப்பில்லாத தொழிலாக ஆக்குவதற்கான எந்த திட்டத்தையும் ஆட்சியாளர்கள் உருவாக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலையால் எழக்கூடிய உணர்வலையைத் தணிப்பதற்கான சித்து வேலைகளைத்தான் செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பதன் மூலம் தனது கடமை முடிந்துவிட்டதாகவே ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இழப்பீடு தருகிறோம் என்ற பெயரிலும் விவசாயிகளை மேலும், மேலும் இழிவுபடுத்தி வெந்தப் புண்ணில் வேலைத்தான் பாய்ச்சுகின்றனர்.
விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கும், மத்திய விவசாய அமைச்சரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் குடும்பத்தாரிடம் 40 கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்விகள் தற்கொலையால் ஏற்பட்ட வேதனையைவிட மிகப்பெரியதாக இருப்பதாக விவசாயிகள் நொந்து கொள்கின்றனர். இதனால் பல விவசாய குடும்பங்கள் தமது குடும்பத்தில் நடைபெறும் தற்கொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை. இதுதான் ஆட்சியாளர் எதிர்பார்ப்பதுமாகும்.
அரசுத் தரப்பில் 40 கேள்விகள் என்றால் அன்றாடம் செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல் விக்கித்து நிற்கின்றனர், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்தினர்.
  • ஆந்திராவிலோ விவசாய தற்கொலை என்று நிரூபிக்க 13 வகை ஆவணங்களை தரவேண்டும். இவற்றைப் பெறுவதற்கும், அலைவதற்கும் இதற்காக அதிகார வர்க்கத்திற்கு கொட்டி அழுவதற்கும் முடியாமலேயே தற்கொலையை பதிவு செய்வதையே விட்டு விடுகின்றனர் பல விவசாய குடும்பத்தினர்.
  • நிலமற்ற குத்தகை விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது விவசாய தற்கொலை அல்ல.
  • தாய், தந்தை பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ நிலம் இருந்து மகனோ, கணவனோ தற்கொலை செய்து கொண்டாலும் அதுவும் விவசாய தற்கொலை அல்ல.
  • ஒரு குடும்பத்தில் யார் பேரில் நிலம் உள்ளதோ அவர் தற்கொலை செய்து கொண்டால்தான் அது விவசாய தற்கொலை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்டாலும் அது விவசாய தற்கொலை இல்லையாம்.
விவசாய தற்கொலை என்று நிரூபிக்க மேலே கண்ட வழிமுறையைத்தான் அரசுகள் கடைபிடிக்கின்றன. இவைகளை ஆழ்ந்து, கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதல்ல. இவைகளைக் கேள்விப்படும் எவரும் கூறிவிடலாம், இவைகள் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல. மாறாக இவைகள் நாட்டுமக்களை திசை திருப்பும் வழிமுறைகள் என்று!
இவ்வளவு கோரமான அழிவுகளுக்குப் பின்னரும், இந்த அழிவை ஏற்படுத்தக் கூடிய அரசுகள்தான் இவைகளைத் தடுக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் சில மேதாவிகள். இதற்காக அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். ஆரவாரமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.
ஆனால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளிடையே இன்னமும் இவைகளுக்கு எதிரான உணர்வலைகள் எழவில்லை. இன்னமும் அவர்கள் அரசுகளையே நம்பி ஏங்கி நிற்கின்றனர். தமது பிரச்சனைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முழுமையாக, தொகுப்பாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும் – அப்படி அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது - அவைகளை தமது அனுபவத்தின் ஊடாக துண்டுத் துண்டாக அறிந்தே வைத்துள்ளனர்.
farmer_326ஆனாலும் இவைகளை தொகுத்து அமைப்பாக்கி, கொண்டு செல்வதற்கு எவரும் இதுவரை நாட்டில் இல்லாததும், தமது வாழ் நிலையிலிருந்து இனி அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏதுமில்லாததால், எப்படிப்பட்ட அவமானங்களை அரசும், அதிகார வர்க்கமும் ஏற்படுத்தினாலும் அவற்றை அனைத்தையும் சகித்துக் கொண்டு அவர்களிடம் கையேந்தி நிற்பதே இந்திய விவசாயிகளின் வாழ்வியல் பண்பாடாக உள்ளது.
விவசாயிகளை அமைப்பாக்குவது என்ற புரிந்து கொள்ள முடியாத, சவால் நிறைந்த பணியில்தான் இந்தியாவிலுள்ள முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள், சிந்தனையாளர்கள் அனைவரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்களில் எவருக்கும் விவசாயிகளை அணிதிரட்ட முடியும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
அதே நேரத்தில் நாட்டில் நடைபெறும் அனைத்து பிற்போக்கு செயல்பாடுகளுக்கும் இந்த விவசாயிகள்தான் ஆதாரமாக விளங்குகின்றனர்.
குறிப்பாக உலகிலேயே வேறு எங்கும் இல்லாத, இந்தியாவின் சிறப்புத் தன்மையான இந்துமதம் என்ற சாதிகளின் கூட்டணியின் உறுப்பினர்களான ஒவ்வொரு சாதியும், அதனின் உட்சாதி பிரிவுகளும் விவசாயிகளிடையே தான் - நகரவாசிகளோடு ஒப்பிடும் போது - மிகமிக குறைந்த அளவிளான, நெளிவு சுளிவுகளோடு (இதுவும் தவிர்க்க வியலாத காரணங்களால்) உயிர்ப்போடு உள்ளது.
இந்தக் கடினமான சூழலால் நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளைத் திரட்டுவதில் தான் ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தோல்வி கண்டுள்ளனர்.
விவசாயிகளைத் திரட்டுவதில் தாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து – வெளியில் சொல்லாவிட்டாலும் தமது செயல்பாடுகளின் ஊடாக – விவசாயம் என்ற பின்தங்கிய தொழிலில் இருக்கும் வரை இவர்களை அணிதிரட்ட இயலாது என்றும், விவசாயத்திலிருந்து எந்த அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்றுத் தொழில்களில் – நகரங்களில் – ஈடுபடுகிறார்களோ, அந்த அளவிற்குத்தான் அவர்களை தமது இலக்கிற்கு ஏதுவாக அணிதிரட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்களின் இந்த பாரதூரமான, பரிதாபகரமான முடிவிலிருந்து, முன்னேறிய முதலாளித்துவ உற்பத்தியின் விளைவாக பின்தங்கிய உற்பத்தியாகிய விவசாயம் அழிவைச் சந்திப்பது தவிர்க்க வியலாதது என தமது தோல்விக்கு இவர்கள் சித்தாந்த முலாம் பூசிக் கொண்டு தம்மைத்தாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
இதனடிப்படையில் கிராமங்களை கைவிட்டு, நகரங்களையே தமது முதன்மையான செயல்பாட்டுக்கான களமாக மாற்றிக் கொள்கின்றனர். இந்நடவடிக்கையின் தவிர்க்க விளைவாத விளைவாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை, அவர்கள் சிந்தனை ஓட்டத்தைப் பற்றி முழுமுற்றாக அறியாதவர்களாக, அறிவிலிகளாக அந்நியப்பட்டுக் கிடக்கின்றனர்.
கிராமங்களிலிருந்து நகரத்திற்கு ஓடியவர்களோடு ஓடிய இவர்கள், இப்போது அவர்கள் அரசுகளால் நிர்பந்தமாக மீண்டும் கிராமத்திற்கே துரத்தப்படும் போது செய்வதறியாது திகைத்துப் போகிறார்கள். ஆனாலும் தமது கொள்கை முடிவை நிலைநாட்ட, நகரம் விட்டு நகரம் இடமாற்றம் செய்து கொள்கின்றனர். மொத்தத்தில் இவர்கள் அனைவரும் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மாறி நிற்கிறார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போன்று காரசாரமாக விவாதிக்கின்றனர்.
விவசாயிகளை, விவசாயத்தைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன் வைக்கும் தீர்வுகளோ கொலைகாரனிடமே நீதி கேட்கச் சொல்கிறது.
புரட்சிகர அமைப்புகள் முன்வைக்கும் தீர்வுகளோ, புரட்சிக்குப் பின்னர் தாங்கள் செயல்படுத்தப் போவதைப் பற்றியதாக உள்ளது. விவசாயிகள் இப்போது சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து, விவசாயிகளையும், இதனூடாக சமூக வளர்ச்சியையும் பாதுகாக்கும், முன்னேற்றும் வழிமுறைகள்தான், தீர்வுகள்தான் இப்போதையை உடனடித் தேவையாகும்.
அந்த வகையில் கீழ்கண்ட வழிமுறைகளை, தீர்வுகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளே! 
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும், அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து! 
2.நிலப்பிரபுக்கள், மடங்கள், ஆதீனங்கள், கோயில்கள், நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்து வழங்கு!
3.விவசாய விளை பொருட்களுக்கான விலையைத் தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு! 
4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு! 
5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து. 
வாசகர்கள் இவைகளை பற்றிய தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள். மேலும் விவாதிக்க, இணைந்து செயல்பட எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.
- சூறாவளி ( moodakizhavan@gmail.com, தொடர்பு எண்:9842529188)
தொடர்புடைய பதிவுகள்:

2.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1

4.ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

Wednesday, 9 January 2013

பாமக‍-வின் ஆதிக்கசாதிவெறி அரசியலின் பின்னணி என்ன?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 3
ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை வாய்ப்பைப் பெற்று பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அதோடு ஏராளமான தாழ்த்தப்பட்டவர்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இவர்களில் பெரும்பாலோர் தமது முன்னோர்கள் செய்த விவசாய கூலி வேலைகளை கைவிட்டு நகர்ப்புறங்களில் வேலைதேடிக் கொண்டனர். இவ்வேலை வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் கிராமப்புற விவசாய கூலி வேலையை விட மேம்பட்ட தன்மை உடையவைகளாயினும் பெரும்பாலும் பார்ப்பனிய எல்லைகளை கடந்தது அல்ல. எவை எல்லாம் கடினமானதும் ஆதிக்க சாதிகளால் இழிவானவைகளாகவும் கருதுப்படுகின்றனவோ அவைகளே தாழ்த்தப்பட்டவர்களுக்கான வேலைகளாக அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. இப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புகளும் இந்த வறையறுப்பை முற்றாக நிராகரித்தவைகள் அல்ல. இவ்வரம்புகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தன.
குறிப்பாக மனித மலத்தை மனிதனே அகற்றும் வேலைகள் நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக்கானது. அரசின் அனைத்து துறைகளிலுமே துப்புறவு பணிகள், இட ஒதுக்கீடு இல்லாமலேயே முழுமையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டன. ஆயினும் இவ்வேலைவாய்ப்புகள் கிராமப்புற வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது அதிக கூலியைத் தரக்கூடியனவாக ஆகும். இதுவும் பலரை பொருளாதார ரீதியாக மேம்பட வைத்தது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகமே உணர்வு ரீதியான மேம்பாட்டை சிறிது சிறிதாக அடைய ஆரம்பித்தது.
anbumani_ramadoss_gkmani_guru
தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு கிராமப்புற ஆதிக்க சாதிகளை சார்ந்திருப்பதை தவிர்த்தன் மூலமும், மற்றும் நவீன கல்வியின் ஊடாகவும் தமது உணர்வுளை எந்த அளவிற்கு மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனரோ, அந்த அளவிற்கு சாதி, தீண்டாமைக்கு எதிராக போராடுபவர்களாகவும் உருவெடுத்தனர்.
 ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களில் வளர ஆரம்பித்தன. சாதி தீண்டாமைக்கு எதிரான தமது போராட்டத்தில் சட்டபூர்வ வாய்ப்புகளையும் பயன்படுத்த துவங்கினர். அரசு எந்திரம் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான கட்டமைப்பானாலும், பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துவதில், பாதுகாப்பதில் ஆதிக்க சாதி வெறியர்கள் கோரும், விரும்பும் வடிவில் ஏற்பதோ, நடைமுறைபடுத்துவதோ அதன் நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதால் தாழ்த்தப்பட்டவர்களை அதன் வரம்பிற்கு உட்பட்டு ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி தாழ்த்தப்பட்டோர் தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை போராட்டங்களின் ஊடாக முறியடிக்கவும் செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி, தீண்டாமைக்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடும் ஆதிக்க சாதிகளிடையே சகிக்க இயலாதவைகளாக மாறின. இதை முறியடிப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதிகள் கிராம அளவிலான தாக்குதலை மேற்கொண்டாலும், அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதை அவர்களால் தடுக்க இயலவில்லை. இந்த வெற்றிகளை ஆதிக்க சாதிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டன.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியைத்தான் பாமக அமைப்பாக்கியது. இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விட்டதாகவும், தங்களை மதிப்பதில்லை என்றும், நாமும் முன்னேற வேண்டுமானால் நமக்கும் தனியே இடஒதுக்கீடு வேண்டும் என்றும், இதுவே வன்னிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மாமருந்தாகவும் காட்டி சாதி வெறியூட்டியது.
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்றப் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி, தமது கண்களை உறுத்திய அவர்களின் குடியிருப்புகளை தீ வைத்து எறித்து சூறையாடி, அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கோரத்தாண்டிவமாடியது. பல பத்தாண்டுகளாக தாங்கள் அடக்கி வைத்திருந்த ஆதிக்க சாதி வெறியை இதன் மூலம் தணித்துக் கொண்டனர்.
ஆனாலும் இவைகளின் ஊடாகவும் ஆதிக்க சாதி வெறிக் கும்பல் எதிர்மறை விளைவுகளையே சந்தித்தது. இவர்களின் செயல்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் எழுச்சி பெறச் செய்ததே அல்லாமல் அடங்கிப் போக செய்யவில்லை.
வன்னிய ஆதிக்கசாதி வெறியூட்டல் செயல்பாடுகளின் மூலம் வன்னிய மக்களிடையே வலுவான அரசியல் சக்தியாக மாறிய பாமக தலைமை, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அரசியல் பேரங்கள் மூலம் பெருமளவிலான பொருளாதார ஆதாயங்களை அடைந்தது. அதோடு வன்னிய ஆதிக்க சாதி வெறியின் அடையாளமான பாமக, திருமாவளனோடு அரசியல் கூட்டு என்று கூறி – அது நயவஞ்சகமானதானாலும் – தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதி வெறிக் நடவடிக்கைகளை தொடராதது ஆகியவைகளினால் பாமக மீது வன்னிய சாதியினரிடையே அவநம்பிக்கை படிப்படியாக வளர காரணங்களாக அமைந்தன. இதனோடு தமக்கான இட ஒதுக்கீட்டை அடைந்து விட்ட பின்னரும் கூட, தமது வாழ்வாதார பிரச்சனைகள் தீரவில்லை என்பதையும், அவைகள் மேலும் தீவிரம் அடைந்து வருவதையும் அனுபவ ரீதியாக வன்னிய சாதியினர் உணரவும் ஆரம்பித்தனர்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தும் வேலைக்கு மாறாக, தனது குடும்ப பொருளாதார நலன்களை அதிகரித்துக் கொள்வதே ராமதாசின் பிரதான வேலையாக மாறியது. தன்னைத் தவிர தனது குடும்பத்தினர் எவரையும் கட்சி பொருப்புகளுக்கு கொண்டு வரமாட்டேன் என ஆரம்பத்தில் சவடால் அடித்த ராமதாஸ், மகன் அன்புமணியை தனது வாரிசாக கட்சியில் நிலைநாட்டினார். அவரின் இப்படியான செயல்பாடுகள் பாமக - வில் குழுச்செயல்பாட்டை தீவிரமாக்கியது.
தமது நடவடிக்கைகளை எதிர்க்க துவங்கிய பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் ஆகியோரை கட்சியிலிருந்து ராமதாஸால் இலகுவாக ஒதுக்கி விட முடிந்தது. ஆனால் ராமதாசுக்கு எதிரான வன்னிய சாதியினரின் கோபம் வேல்முருகன் வடிவில் வெடித்துச் சிதறியது. வன்னிய சாதியில் கணிசமானோர் வேல்முருகனோடு சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே, தமிழகத்தின் எந்த ஒரு இடத்திலும் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற அளவிற்கு பலவீனமைடைந்திருந்த பாமக, வேல்முருகனின் வெளியேற்றத்தினால் மேலும் பலவீனமாகியது.
இந்த இக்கட்டான சூழலில்தான், வன்னிய சாதி மக்களிடம் தான் இழந்து போன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட, கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியை பாமக மீண்டும் கையிலெடுத்துள்ளது.
இதற்கு முன்னமே வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்தி தோல்வி கண்டிருந்த பாமக, மீண்டும் அதை கையிலெடுத்திருக்கிறது. தனது இந்தச்செயல் தற்கொலைக்கு ஒப்பானது என்று பாமக தலைமைக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் பாமக உயிர் வாழ இதைத் தவிர அதற்கு வேறுவழியுமில்லை!
கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனோடு நயவஞ்சக நாடகமாடி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதன் செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாலும், அதன் தலைமை போராடும் குணத்தை இழந்து பிழைப்புவாத கும்பலாக மாறி விட்டதாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து உடனடி எதிர்தாக்குதல் சாத்தியமில்லை என்று பாமக தலைமை உறுதியாக நம்புகிறது. இதனால் தான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தனது செயல்பாடு எதிர்காலத்தில் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் கூட, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி அதை தெரிவு செய்து விட்டது.
தன்னுடைய இந்த செயல்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் எதிர் விளைவுகளை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி வெறி அமைப்புகளுடனும் பாமக கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் அறிக்கை போர் நடத்தும் அளவிற்கு மட்டுமே திறன் படைத்தவைகளாக இருப்பதும், பாமகவின் தற்போதைய நிலையை ஆளும் கும்பலும் தனது தேவையின் காரணமாக ஆதரிப்பதும் போன்ற காரணங்களால் தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய ஆதிக்க சாதி வெறியை தனித்து நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற யதார்த்தமான உண்மைகளைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் பதிவு செய்திருந்தோம்.
தொடரும்.....

Tuesday, 8 January 2013

 விடுதலைச் சிறுத்தைகளிடம் தலித்துகள் நம்பிக்கை இழந்தது ஏன்?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 2
வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வை அமைப்பாக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடு சாதி, தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தவிர்க்கவியலாத வரலாற்றுப் பாத்திரமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், தமது செயல்பாட்டின் ஊடாக, விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி தீண்டாமைக்கு எதிரான உணர்வை மேலும் மேம்படுத்தியது. இதனால் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு மிக்க அமைப்பாகவும் அது திகழ்ந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் கொண்டே வருகின்றனர். இந்த ஆதிக்க சாதிவெறி பார்ப்பனியமாக அமைப்பாக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல் தளம் கிராம அளவிலானதாக சுருங்கி இருந்தது.
thirumavalavan_ramadoss_500
ஆனால் வன்னிய ஆதிக்க சாதி வெறி பாமக - வினால் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் எல்லை பரந்து விரிந்த போது, இதற்கு முன்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து சட்டப்பூர்வமாக கிடைத்த வாய்ப்புகள், உரிமைகளினால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த வாழ்வாதார நலன்களை பல இடங்களில் அமைப்பாக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறி, தனது கோரப்பசிக்கு இறையாக்கிக் கொண்டது.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் போராடி முறியடிக்காவிட்டால், தாங்கள் உயிர் வாழக்கூட முடியாது என்ற நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த உணர்வை அமைப்பாக்கி, வன்னிய ஆதிக்க சாதிவெறிக்கு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சில இடங்களில் பதிலடி தந்தனர் விடுதலைச் சிறுத்தைகள். இந்த எதிர்தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியதே ஆயினும் காலம், காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தி இருமாந்திருந்த வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கும்பலுக்கு, இது முற்றிலும் புதியது என்பதால் இதை எதிர்கொள்ள முடியாமல் அது திணறியது, அஞ்சி நடுங்கியது.
 தமது இந்த சிறு எதிர்வினையாற்றலைக்கூட எதிர்கொள்ள வக்கற்ற ஆதிக்கசாதிவெறி கும்பலின் பலவீனத்தை அறிந்து கொண்டதால், ஏற்பட்ட உற்சாகம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே காட்டுத்தீயாய் பற்றிப் பரவியது பட்டி, தொட்டியெங்கும் விடுதலைச் சிறுத்தைகளாக அவர்கள் தம்மை அமைப்பாக்கிக் கொண்டனர்.
 இதன் காரணமாக வன்னிய ஆதிக்க வெறியின் அடையாளமான பாமக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தனது செயல்பாடு தற்கொலைப்பாதை என்பதை உணர ஆரம்பித்தது. இந்த உணர்வின் வெளிப்பாடுதான், பாமகவை தாழ்த்தப்பட்ட மக்களோடு அரசியல் ரீதியான கூட்டு என்ற நயவஞ்சக நாடகத்தை நடத்த வைத்தது. அமைப்பாக்கப்பட்டு மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறித்தாக்குதல் வடிவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு முந்தைய கிராம அளவிலானதாக சுருக்கிக் கொண்டது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது நயவஞ்சக நாடகத்தில் திருமாவளவனை பங்கேற்க வைத்ததன் மூலம், ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாடாக திகழ்ந்த விடுதலை சிறுத்தைகளை தனது பாத்திரத்தை கைவிட வைத்தது.
தமது செயல்பாட்டுக்கான தளத்தை கைவிட்டதும் வேறொரு ஆதாயத்தை அதாவது அரசியல் கட்சிகளோடு தேர்தல் கூட்டு என்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு பெற்றுத்தந்தது. இதன் மூலம் சிறுத்தைகள் பொருளாதார ஆதாயங்களை அடைந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே தம‌து செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்த பொருளாதார ஆதாயங்கள் பெருமளவில் அரசு எந்திரத்தோடு ஏற்பட்ட உறவின் மூலம் கிடைத்தது . இது படிப்படியாக வளர்ந்து அரசு எந்திரத்திற்கான தரகு வேலை பார்ப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் பிரதான வேலையாக, அலுவலாக மாறிப்போனது.
 சாராம்சத்தில் இது விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகமாகும். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து மேலும், மேலும் தனிமைப்பட்டு அவர்களிடையே செல்வாக்கை இழக்க ஆரம்பித்தனர்.
மக்கள் நலன்களைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடுவதற்கும், தம்மை அர்பணித்துக் கொள்வதற்கு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புகளுக்கும் உரிமை உண்டு. மக்கள் நலனை பாதிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை.
 சாதி தீண்டாமையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெடும்பயணத்தில் வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுப்பது என்பதோடு விடுதலைச் சிறுத்தைகளின் பாத்திரம் நிறைவு பெற்று விட்டது. இந்த அளவில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு தாழ்த்தப்ப‌ட்ட மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியும் இருந்தார்கள்.
 இந்த வரம்பிற்கு மேல் சாதி தீண்டாமை ஒழிப்பில் சிறுத்தைகள் பங்காற்றவும் முடியாது.
ஆதிக்க சாதி வெறித் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினையாற்றல் நடவடிக்கையின் உள்ளடக்கம் பெருமளவில் தற்காப்பு என்பதே ஆகும், இதுவே சாதி தீண்டாமையை ஒழித்து விடாது.
 சாதி, தீண்டாமை நீடிப்பதற்கான அடிப்படையை சமுக மாற்றத்தின் மூலமே அகற்ற முடியும், இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே தனித்து நின்று சாதித்து விடமுடியாது. இதை சமுகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஒருங்கிணைப்பின் முலமே அடைய முடியும்.
 விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், சாதி தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆதிக்க சாதி வெறியை கட்டுப்படுத்துதல் என்ற வகையிலான பாத்திரமே ஆற்ற முடியும்.
இது நிலவுகிற சமுக அமைப்பிற்கு உள்ளேயே ஆற்றும் பாத்திரமாகும். ஆகவே இது சாராம்சத்தில் நிலவுகிற சமுக அமைப்பை ஏற்கும் சீர்திருத்த நடவடிக்கையே ஆகும். நிலவுகிற சமுக அமைப்பை தூக்கி எறியாத சீர்திருத்த நடவடிக்கையின் உள்ளடக்கம், சாதி இருக்க சாதியினால் எழும் விளைவுகளை கட்டுபடுத்துவது என்பதே. அதாவது சாதியின் செயல்பாட்டு வடிவத்தை மாற்றுவதாகும்.
சாதிகள் இருக்கும் வரை அதன் பிரிக்க முடியாத அங்கமான தீண்டாமையும் நீடிக்கவே செய்யும். அவைகள் வடிவ மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் சாதி தீண்டாமை ஒழிப்பில் தமது வரலாற்றுப் பாத்திரத்தை தாண்டித் செயல்பட முனையும் செயல்பாடுகள் அனைத்தும் அவர்களைத் தவிர்க்கவியலாமல் பிழைப்புவாத புதைகுழிக்குள்தான் தள்ளிவிடும்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளின் பிழைப்புவாதத்திற்கான அடித்தளம் அவர்களின் அரசியல் பாதையில் தான் கருக்கொண்டுள்ளது.
எந்த ஒரு அமைப்பினதும், குழுவினதும் பிழைப்புவாதமும் தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளிலிருந்து உருவாவதில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாதமும் திருமாவளவன் என்ற தனி மனிதரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது எமது கண்ணோட்டமோ, கருத்தோ அல்ல. உண்மையிலேயே, மனப்பூர்வமாக தங்கள் சமூக நலன்களுக்காக பாடுபட வேண்டும், அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கூட, இவர்களின் இந்த விருப்பமே அதை நிறைவேற்றிவிடாது. அதற்கு மாறாக தாங்கள் அடைய விரும்பும் இலக்கும், அதை அடைவதற்கு அவர்கள் தெரிவு செய்து கொள்ளும் வழிமுறைகளுமே இதைத் தீர்மானிக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக தாம் தொடர வேண்டும் என திருமாவளவன் கருதியிருந்தால், வன்னிய ஆதிக்க சாதிவெறி அமைப்பான பாமக ராமதாசுடன் ஒப்புர‌வு நாடகமாடியிருப்பாரா?
வன்னிய ஆதிக்க சாதி வெறியால் அன்றாடம் பல்வேறு வடிவங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, இருசாதி மக்களிடையே எவ்வித ஒப்புர‌வும் ஏற்படாதபோது ராமதாசும், திருமாவளவனும் ஒப்புர‌வு கொண்டாடியதை தமது விருப்பத்திற்கு மாறானது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதியதில் என்ன தவறு இருக்கிறது?
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த கருத்தைத்தானே இப்போதுமட்டுமல்ல அப்போதும் எங்களைப் போன்றோர் வெளிப்படுத்தினோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கிய அங்கீகாரத்தை, தேர்தல் பங்கேற்பு, அரசியல் கட்சிகளோடு கூட்டு என்று அவர்கள் வரம்பு மீறி தவறாகப் பயன்படுத்திய போதே, இது உங்களை பிழைப்புவாத புதை சேற்றில் தள்ளிவிடும் என்று பலரும் எச்சரித்தபோது, இதை ஏற்க மறுத்து, 'போராட்டங்களினால் மேல்சாதி மக்களோடு பகையும், வழக்குகளுமே வந்து சேர்கிறது. அதற்கு மாறாக அவர்களோடு இணைந்து நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தால்தான் சாதி, தீண்டாமையைக் கட்டுப்படுத்த முடியும்' என்று தானே தமது செயலை நியாயப்படுத்தினார்கள்.
ஆதிக்க சாதி அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டாலும், மக்களிடம் தாம் இழந்த செல்வாக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதி வெறியை தூண்டுவதன் மூலம் மீண்டும் நிலை நாட்டி விட முடியும் என்பதை தர்மபுரி நிகழ்வின் ஊடாக பாமக நிரூபித்துள்ளது.
இதை எங்களைப் போன்றோர் அன்றே கூறி எச்சரித்தோமே, அதை ஏன் திருமாவளவன்கள் ஏற்கவில்லை?
'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டமுடைய' எங்களால் கூற முடிந்ததை, 'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் சித்தாந்த அடிப்படையைக்' கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தடுத்தது எது?
தொடரும்...
தொடர்புடைய கட்டுரைகள்:

Thursday, 3 January 2013

பாலியல் வக்கிரம் : முற்போக்குகளும், பிற்போக்குகளும் ஓரணியில்......!

புதுதில்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இறந்துபோனார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பாகிஸ்தான் உடனான எல்லை பிரச்சனை மற்றும் அந்நாட்டுடனான, கிரிக்கெட் விளையாட்டு ஆகியவற்றில்தான் நாடே ஒன்றுபட்டு நிற்கும்! அந்த வரிசையில் இப்போது மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்கார விவகாரமும் சேர்ந்துள்ளது.




பாரதிய ஜனதா கட்சி முதல் கம்யூனிச கட்சிகள் வரை  பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று ஒருமித்து குரல் கொடுக்கிறார்கள். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஊடகங்களும் அன்றாடம் இதைப்பற்றிய செய்தியையே, மிக முக்கியமான ஒன்றாக கருதி வெளியிடுகின்றன. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் இதை நோக்கியே திருப்பியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மேலும்  அதிகரித்துவிட்டன என்றும் செய்திகளை  பரப்புகின்றனர்.
வேறு எப்போதும்  இல்லாத அளவுக்கு தற்போது அன்றாடம் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் போலீசால் பதிவு செய்யப்படுகிறது. இது பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் நன்கு திட்டமிட்டே பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், நாட்டில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்தோட்டங்களுக்கு நேர் எதிராக, தமது வக்கிரச் செயலை தீவரப்படுத்தியுள்ளதைப் போன்ற நிலையை  ஏற்படுத்தி வருகின்றனர்.  உண்மையில் பாலியல் குற்றச் செயல்கள் இப்போது உள்ள நிலையில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறையவேச் செய்யும். இது நாள் வரை நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் போலீசின் முந்தைய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய அளவு மாற்றத்தின் விளைவுதான், தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதை போன்ற தோற்றமாகும்.கடுமையான சட்டங்கள் தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கவே இப்படிச்செய்யப்படுகிறது.

எந்த ஊடகங்கள் பாலியல் வக்கிரங்களே இப்போது நாட்டு மக்கள் விவாதிப்பதற்கான முக்கிய பொருளாக ஆக்கியுள்ளனவோ, அதே ஊடகங்கள்தான் பாலியல் வக்கிரங்கள் அதிகரிப்பதற்கான கூறுகளை சமூகத்தில் பரப்புகின்றன.  இத்திருப்பணிக்கு இவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயர் தொழில் தர்மம்.

தமது தொழில் தர்மத்தின்படி யாரிடமிருந்து தமது கல்லாவை நிரப்பிக்கொண்டு, இச்சேவையை செய்கிறார்களோ, அவர்களை மறந்தும் கூட இவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு நேர்மாறாக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று முழங்குகிறார்கள்.

இதைப் போன்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம், இவர்கள் மறவாமல் செய்யும் ஒரு வேலை  இதுவாகத்தான் இருக்கிறது.
நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாதது தான் இப்படிப்பட்ட 
குற்றங்கள் பெருகுவதற்கு காரணங்களா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு என்றே பெண்கள் வன்கொடுமைச்சட்டம் ஏற்கனவே உள்ளதே அது என்னவாயிற்று?
இந்தச் சட்டத்தை எத்துனைபேர் மீது இதுவரை பயன்படுத்தி, தண்டனைப் பெற்றுத் தந்துள்ளார்கள்?

பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முற்பட்டால்,  முதலில் இதை போலீஸ் துறையின் மீதுதான் பயன்படுத்த வேண்டும்! நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்னணி பாத்திரம் வகிப்பவர்கள் போலீசார்தான். இந்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களும் இவர்கள்தான்.

இப்படிப்பட்ட போலீஸ் இச்சட்டத்தை பயன்படுத்துமா? இது மட்டுமல்ல இப்படிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் இவர்களுக்கு வலுவான நிர்ப்பந்தங்களும் உள்ளது. இதை ஏற்படுத்துபவர்கள் ஆட்சியாளர்கள்.
ஆட்சியின் உறுதித்தன்மைக்கும், நற்பெயருக்கும் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டியது ஆட்சியாளர்களுக்கு அவசியமான தேவையாகும்.
இதன் காரணமாக குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டும்படி இவர்கள் போலீஸ் துறைக்கு உத்தரவிடுகின்றனர். இதன் மூலம் போலீஸ் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகிய இருவரின் சிந்தனையும், செயல்பாடும் ஒன்று கலந்து விடுகின்றன. தமக்கு வழங்கப்படும்  இலக்குக்கு மேல் போலிசு வழக்குகளை பதிவு செய்வதில்லை. அவைகள் வேறு பிரிவுகளில் சாதாரண வழக்குகளாகவோ அல்லது சட்டத்திற்கு வெளியில் சமரசப்படுத்தவோப்படுகின்றன.

எந்த அளவிற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதை கொண்டு வருபவர்களின், நடைமுறைப்படுத்துபவர்களின் பழிவாங்கும் மற்றும் பேரம் பேசும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

போலீசுக்கும்,  இவர்களின் கூட்டாளிகளுக்கும்,எஜமானர்களுக்கும் ஆகாதவர்களை பழிவாங்குவதற்கும், மிரட்டுவதற்கும் தேவையான கருவியாகத்தான்  இப்படிப்பட்ட சட்டங்கள் உருமாற்றப்படுகின்றன.
எப்படிப்பட்ட கடுமையான  சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றை,  அவைகளை நடைமுறைப்படுத்தும்  அமைப்புகளே தோல்வி அடைய செய்து விடுகின்றன.

ஒரு வேளை இப்படிப்பட்ட சட்டங்களை சரியான வகையில் நடைமுறைப்படுத்தினாலும் குற்றங்களை முற்றாக தடுத்து விடவும் முடியாது. இதற்கு மாறாக குற்றங்களின் வடிவங்கள் மட்டுமே மாறிப்போகும்.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இவைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என கோருபவர்கள் இவ்விரு பிரிவினரின் சொல்லும், செயலும் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை நமது இந்தியச் சமூகம் ஜனநாயக சமூகம் இல்லை என்பதைத்தான். 

எனவே மொத்த சமூகத்தின் சிந்தனையும் ஜனநாயக பூர்வமாக உயர்த்துவதற்கு தேவையான செயல்பாடுகளே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களை மட்டுமல்ல, இதைப்போன்ற அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும்.