விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பாலியல் வன்கொடுமை. Show all posts
Showing posts with label பாலியல் வன்கொடுமை. Show all posts

Thursday, 3 January 2013

பாலியல் வக்கிரம் : முற்போக்குகளும், பிற்போக்குகளும் ஓரணியில்......!

புதுதில்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இறந்துபோனார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பாகிஸ்தான் உடனான எல்லை பிரச்சனை மற்றும் அந்நாட்டுடனான, கிரிக்கெட் விளையாட்டு ஆகியவற்றில்தான் நாடே ஒன்றுபட்டு நிற்கும்! அந்த வரிசையில் இப்போது மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்கார விவகாரமும் சேர்ந்துள்ளது.




பாரதிய ஜனதா கட்சி முதல் கம்யூனிச கட்சிகள் வரை  பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று ஒருமித்து குரல் கொடுக்கிறார்கள். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஊடகங்களும் அன்றாடம் இதைப்பற்றிய செய்தியையே, மிக முக்கியமான ஒன்றாக கருதி வெளியிடுகின்றன. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் இதை நோக்கியே திருப்பியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மேலும்  அதிகரித்துவிட்டன என்றும் செய்திகளை  பரப்புகின்றனர்.
வேறு எப்போதும்  இல்லாத அளவுக்கு தற்போது அன்றாடம் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் போலீசால் பதிவு செய்யப்படுகிறது. இது பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் நன்கு திட்டமிட்டே பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், நாட்டில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்தோட்டங்களுக்கு நேர் எதிராக, தமது வக்கிரச் செயலை தீவரப்படுத்தியுள்ளதைப் போன்ற நிலையை  ஏற்படுத்தி வருகின்றனர்.  உண்மையில் பாலியல் குற்றச் செயல்கள் இப்போது உள்ள நிலையில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறையவேச் செய்யும். இது நாள் வரை நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் போலீசின் முந்தைய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய அளவு மாற்றத்தின் விளைவுதான், தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதை போன்ற தோற்றமாகும்.கடுமையான சட்டங்கள் தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கவே இப்படிச்செய்யப்படுகிறது.

எந்த ஊடகங்கள் பாலியல் வக்கிரங்களே இப்போது நாட்டு மக்கள் விவாதிப்பதற்கான முக்கிய பொருளாக ஆக்கியுள்ளனவோ, அதே ஊடகங்கள்தான் பாலியல் வக்கிரங்கள் அதிகரிப்பதற்கான கூறுகளை சமூகத்தில் பரப்புகின்றன.  இத்திருப்பணிக்கு இவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயர் தொழில் தர்மம்.

தமது தொழில் தர்மத்தின்படி யாரிடமிருந்து தமது கல்லாவை நிரப்பிக்கொண்டு, இச்சேவையை செய்கிறார்களோ, அவர்களை மறந்தும் கூட இவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு நேர்மாறாக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று முழங்குகிறார்கள்.

இதைப் போன்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம், இவர்கள் மறவாமல் செய்யும் ஒரு வேலை  இதுவாகத்தான் இருக்கிறது.
நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாதது தான் இப்படிப்பட்ட 
குற்றங்கள் பெருகுவதற்கு காரணங்களா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு என்றே பெண்கள் வன்கொடுமைச்சட்டம் ஏற்கனவே உள்ளதே அது என்னவாயிற்று?
இந்தச் சட்டத்தை எத்துனைபேர் மீது இதுவரை பயன்படுத்தி, தண்டனைப் பெற்றுத் தந்துள்ளார்கள்?

பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முற்பட்டால்,  முதலில் இதை போலீஸ் துறையின் மீதுதான் பயன்படுத்த வேண்டும்! நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்னணி பாத்திரம் வகிப்பவர்கள் போலீசார்தான். இந்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களும் இவர்கள்தான்.

இப்படிப்பட்ட போலீஸ் இச்சட்டத்தை பயன்படுத்துமா? இது மட்டுமல்ல இப்படிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் இவர்களுக்கு வலுவான நிர்ப்பந்தங்களும் உள்ளது. இதை ஏற்படுத்துபவர்கள் ஆட்சியாளர்கள்.
ஆட்சியின் உறுதித்தன்மைக்கும், நற்பெயருக்கும் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டியது ஆட்சியாளர்களுக்கு அவசியமான தேவையாகும்.
இதன் காரணமாக குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டும்படி இவர்கள் போலீஸ் துறைக்கு உத்தரவிடுகின்றனர். இதன் மூலம் போலீஸ் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகிய இருவரின் சிந்தனையும், செயல்பாடும் ஒன்று கலந்து விடுகின்றன. தமக்கு வழங்கப்படும்  இலக்குக்கு மேல் போலிசு வழக்குகளை பதிவு செய்வதில்லை. அவைகள் வேறு பிரிவுகளில் சாதாரண வழக்குகளாகவோ அல்லது சட்டத்திற்கு வெளியில் சமரசப்படுத்தவோப்படுகின்றன.

எந்த அளவிற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதை கொண்டு வருபவர்களின், நடைமுறைப்படுத்துபவர்களின் பழிவாங்கும் மற்றும் பேரம் பேசும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

போலீசுக்கும்,  இவர்களின் கூட்டாளிகளுக்கும்,எஜமானர்களுக்கும் ஆகாதவர்களை பழிவாங்குவதற்கும், மிரட்டுவதற்கும் தேவையான கருவியாகத்தான்  இப்படிப்பட்ட சட்டங்கள் உருமாற்றப்படுகின்றன.
எப்படிப்பட்ட கடுமையான  சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றை,  அவைகளை நடைமுறைப்படுத்தும்  அமைப்புகளே தோல்வி அடைய செய்து விடுகின்றன.

ஒரு வேளை இப்படிப்பட்ட சட்டங்களை சரியான வகையில் நடைமுறைப்படுத்தினாலும் குற்றங்களை முற்றாக தடுத்து விடவும் முடியாது. இதற்கு மாறாக குற்றங்களின் வடிவங்கள் மட்டுமே மாறிப்போகும்.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இவைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என கோருபவர்கள் இவ்விரு பிரிவினரின் சொல்லும், செயலும் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை நமது இந்தியச் சமூகம் ஜனநாயக சமூகம் இல்லை என்பதைத்தான். 

எனவே மொத்த சமூகத்தின் சிந்தனையும் ஜனநாயக பூர்வமாக உயர்த்துவதற்கு தேவையான செயல்பாடுகளே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களை மட்டுமல்ல, இதைப்போன்ற அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும்.


Friday, 30 September 2011

அதிகார வர்க்கம் இருக்கும் வரை,வாச்சாத்திகளும் இருக்கும்!

கால தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.1992-ம் ஆண்டில் வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது ஏவி விடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத, பாலியல் தாக்குதல்களுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர்தான் செத்தவன்களை போக உயிரோடு இருக்கும் 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதில் 198 பேருக்கு உடனடியாகவே பிணை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லாமல் 17 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி பழங்குடி கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்திய 269 பேரும் தமிழக அரசின் வனத்துறை,காவல்துறை,வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இந்த பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட 269 பேரில் எவனும் மக்களுக்கு எதிராக இப்படிபட்ட அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று எதிர்ப்போ,மறுப்போ தெரிவிக்கவில்லை.அந்த அளவிற்கு கடைமை உணர்ச்சி! இவர்களில் எவனிடமும் நம் சொந்த மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதும் இருக்கவில்லை.ஈழத்தமிழர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும்,சிங்கள ராணுவத்திற்கும்,இந்த அயோக்கியர்களுக்கும் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.


அரசு வேலையில் சேரந்தவுடனே, தான் சராசரி மனிதன் என்பதையே முற்றாக மறந்துவிடுகிறார்கள் என்பதைதான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.எந்த மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்களோ அந்த மக்களைத்தான் இவர்கள் தமது பொது எதிரியாக கருதும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.இப்படி இவர்களை பயிற்றுவிப்பது யார்?


இவ்வளவு பெரிய பயங்கரவாத, பாலியல் தாக்குதலை இந்த அளவுக்கு திட்டமிட்டு,இவ்வளவு பேரை திரட்டி செய்ய முடிகிறது என்றால்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுதான் இது பற்றி தெரியுமா? இவர்களின் மேலதிகாரிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதா? அப்போது இருந்த அரசுக்கும் தெரியாதா?இவர்களுகெல்லாம் தெரியாமல்தான்,இவர்களுக்கு உடன்பாடு இல்லாமல்தான்,இவர்களின் அனுமதி இல்லாமல்தான் இப்பயங்கரவாத பாலியல்தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இவர்களை பாதுகாக்க இவர்களின் உயர் அதிகாரிகளும்,அரசாங்கமும் முயன்றது எதற்காக? இப்படி இவர்களை பாதுகாக்க முயன்றது குற்ற நடவடிக்கையா இல்லையா? இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை, யார் கொடுப்பது?
இப்படிப் பட்ட சம்பவங்கள் வாச்சாத்தியோடு முடிந்துவிட்டதா அல்லது முடிந்துவிடுமா? அண்மையில் பரமக்குடியில் இதே  போன்ற திட்டமிட்ட தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டதே! அது எந்த வகையான தாக்குதலாம்? இது மட்டுமா அன்றாடம் ஒவ்வொரு போலிசு நிலையத்திலும் சிறிதும்,பெரிதுமான சட்டத்திற்கு புறம்பான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவருகின்றனவே அவைகளை இந்த தீர்ப்பு தடுத்துவிடுமா?

ஒவ்வொரு அரசு அலுவலகமும்  மக்கள் விரோத கூடாரமாகத்தானே திகழ்கின்றன.இலஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலாவது எந்த ஒரு காரியத்தையாவது மக்கள் சாதித்துவிட முடியுமா? லஞ்சம் கொடுப்பது என்பது நடுத்தர,மேட்டுக்குடி கும்பலை பொருத்தவரை அவர்களின் வாழ்வையே சிதைத்துவிடும் அளவுக்கு பெரிய விவகாரமில்லை.ஆனால் ஒருநாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெரும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு இந்த லஞ்சம் சதாரண விவகாரமா?உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் அங்கேயே துடிதுடித்து செத்துபேகிறார்களே இதற்கும் வாச்சாத்திக்கும் என்ன வேறுபாடு உள்ளது! வாச்சாத்தி பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின், மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கும் இதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

மொத்தமாக பார்த்தால் அதிகாரவர்க்க கும்பலே மக்கள் மீது அணுதினமும் தனது வெறுப்பையும்,ஆத்திரத்தையும் கொட்டி தீர்க்கிறது.மக்களை பழிவாங்குகிறது.இவைகள் அனைத்தும் தனி மனித பண்புகளோ,குற்ற செயல்களோ அல்ல.இது இந்த கட்டமைப்பின் பண்பாகும்.அது வெளிப்படும் விதத்தில்,வடிவத்தில்தான் வேறுபாடு உள்ளதே தவிர,அதன் சிந்தனா முறையில் எவ்வித மாற்றமும், வேறுபாடும் இருப்பதில்லை.ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்டு விடுவதால் அந்த அலுவலகத்தில் லஞ்சம் அன்றோடு ஒழிந்துவிடுவதில்லை.அதற்கு நேர்மாறாக பிடிபட்டவனுக்கு திறமையில்லை என்று ஏளனம் செய்யப்பட்டு மேலும்,மேலும் நுட்பமாக, முன்னிலும் தீவிரமாக லஞ்சம் தலைவிரித்தாடி மக்களை பழிவாங்குகிறது.

ஆகவே இப்படி பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நாம் அகமகிழ்ந்து போவதற்கு எதுவுமில்லை! மக்களுக்கு விரோதமாக மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே, சட்டப்படி பயிற்றுவிக்கப்படுகின்ற அதிகாரவர்க்க கும்பல் இருக்கும்வரை இப்படிபட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்!

சட்டமன்ற,நாடாளும் மன்ற உறுப்பினர்கள் முதல் அரசுத்துறையில் பணி புரியும் அனைவரும் மக்களால் தேர்ந்தேடுக்க படுபவர்களாகவும்,அவர்கள் தவறு இழைக்கும் போது திருப்பி அழைக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப் படுபவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும்.மொத்தத்தில் அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் கைகளுக்கு வரவேண்டும்.இப்போது இருக்கும் அனைத்து அதிகார அமைப்புகளும் குழிதோண்டி புதைக்கப் பட வேண்டும்.இது நடக்காத வரை வாச்சாத்திகளை எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்புகளாலும் தடுத்து விட முடியாது!