விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Friday, 28 September 2012

மின்சாரம் சமூகத்தரத்திற்கான ஆதாரம்!


கூடங்குளம் போராட்டம் எப்போதெல்லாம் தீவிரம் அடைகிறதோ அப்போதெல்லாம், தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. உண்மையில் இப்போது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம்  வழங்கப்படுகிறது.
      
ஒரு நாளைக்கு ஏறத்தாழ இருபது மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டால் மொத்தத் தமிழகமும் செயலிழந்து போய் கிடக்கிறது. குறைந்தது குடிநீர் தேவையைக் கூட தற்போது வழங்கப்படும் மின்சாரத்தால் ஈடுசெய்ய இயலவில்லை.


      
தமிழகத்தின் கொங்குமண்டலத்தில் இயங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இப்போதைய மின் வெட்டால் தமது நூற்பு ஆலைகள் முற்றாக செயலிழந்துவிட்டது. ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு டீசல் விலை உயர்வு அமைந்து விட்டது என்று குமுறுகிறார்கள்.
     
 ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட விவசாயம் இந்த மின்வெட்ட்டால், மேலும் அழிந்துவிடப்போவதில்லை என்பதால் விவசாயிகள் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
      
 மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டாலும் ஒப்பாரி. புலம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போராட்டங்களைத்தவிர, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை காணவேண்டிய நிர்பந்தத்தை , ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அடிப்படையை கொண்ட போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்று கூட நடைபெறவில்லை.
     
 ஈழத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காரணமாக மின்சாரம் அம்மக்களுக்கு எட்டாக்கனியாகிப் போனதை நாம் அறிவோம். இன்னமும் கூட அங்கு மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
      
ஆனால் தமிழகத்திலோ ஈழத்தைப் போன்று போர் எதுவும் நடக்காமலேயே, மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக்கப்படுட்டு விட்டது!
     
  தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறை 6500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறைவாரியம் அறிவித்துள்ளது.
     
 கூடங்குளம் அணு உலை முழுமையாக இயங்க ஆரம்பித்தாலே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகும் என்கிறார்கள். அதிலும்  உலக அளவில் அணு உலை மின் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவில் 30 % -  40 % மட்டுமே ஆகும். அப்படியானால் கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கினாலும் கூட 400 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பரிசோதனை மட்டுமே நடைபெறப்போகிறது.
      
இதுதான் நிலைமையாக இருக்கும்போது கூடங்குளம்  செயல்பட ஆரம்பித்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்துவிடும் என்று பச்சையாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் கூச்சமும் இன்றி வெளிப்படையாக புளுகுகிறார்கள். அதிகார பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
      
இப்படிச் செய்வதன் மூலம் கூடங்குளம் மக்களுக்கு எதிராக தமிழக மக்களை  திசை திருப்ப பார்க்கிறார்கள். இவர்கள் தமது முயற்சியில் ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு நிலவுகிறது.
      
தற்போதைய மின்வெட்டைப்பற்றி மத்திய ஆட்சியாளர்கள் வாயே திறப்பதில்லை. மின்சாரம் மாநில அரசின்  பட்டியலில் உள்ளதால் அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வில்லை என்று மட்டுமே பெரும்பாலோர் கருதுகின்றனர். மின்சாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் என்றாலும், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிடமுடியுமா?
      
மின்பற்றாக் குறையால் ஒரு மாநிலம் செயலிழந்து  கிடக்கும்போது , அம்மாநில மக்களின் நலனில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்றால், இந்தியா என்ற கூட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட மாநிலம் உணர்வுபூர்வமாக இருக்க முடியுமா?
     
 மக்கள் நலன் என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கோ, மாநில ஆட்சியாளர்களுக்கோ எப்போதுமே  இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எனவே அந்த நிலையிலிருந்து இப்பிரச்சனையை நாம் பார்த்தால்  து நமது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
      
இவர்களுக்கு வேறொரு கோணத்தில் இந்த மின்பற்றாக்குறை அத்தியாவசியமானது என்பதால் அதன் மீது ஆட்சியாளர்களுக்கு  அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்.
      
அந்த  வகையிலும் எவ்வித வெளிப்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. இதைப்பார்க்கும் போது அவர்களுக்கு அக்கரையுள்ள குறிப்பிட்ட அந்தத் துறைக்கும், இந்த மின்பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
      
ஆட்சியாளர்களின் அக்கறையுள்ள அந்த துறை அந்நிய  முதலீட்டு துறையே ஆகும். தமிழகத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  தற்போதைய மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக்கணமே மத்திய ஆட்சியாளர்கள் அலறியிருப்பார்கள்.
      
ஆனால் அவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களும் இதுபற்றி  மூச்சுவிடவில்லை. இதிலிருந்தே பன்னாட்டு  நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
      
ஆனால் மின்பற்றாக் குறைபற்றி பேசுகிற ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் உட்பட யாருமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரத்தை பற்றி பேசுவதில்லை. இதிலிருந்தே ஆட்சியாளர்கள் மட்டுமல்ல . தங்க்ளை சமூக அக்றை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் அனைவருமே மக்களின் கவனத்தை உண்மைக்கு புறம்பான வழியிலேயே திசை திருப்புகின்றனர்.
     
 தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரத்தை தடுக்கப்போவதாக் கூறி பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத குழுக்கள் வாய்த்தவறி கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை தடுக்கப்போவதாக கூறுவதில்லை,
      
இனவாத குழுக்கள் மட்டுமல்ல தங்களை சர்வதேசவாதிகள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள் என்று  கூறிக்கொள்வோரும் கூட இதுபற்றி மக்களிடையே பேசுவதில்லை.
      
இப்படி நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், மக்களின் உயிராதாரமான பிரச்சனையில் உண்மைக்கு புறம்பாக நடந்து கொண்டு, மக்களுக்கு துரோகமிழைக்க முடிகிறது என்றால், இவைகளை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு உள்ளது என்பதின் வெளிப்பாடே ஆகும்.
     
 சமூகத்தின் இந்த உண்மையான நிலைக்கு ஏற்பத்தான் எல்லா அமைப்புகளும் நடந்து கொள்கின்றன. இந்த அடித்தளத்தில் இருந்துதான் அனைத்து அமைப்புகளும் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன.
      
ஆட்சியாளர்கள் தம்மை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும் தமது வாழ்வாதாரத்தை அழித்தாலும், அதற்கெதிராக போராடி அதை முறியடிப்பதற்கு மாறாக,அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்வது என்பதே இந்திய சமூகத்தின் பாரம்பரிய மரபாகும். இதுவே இன்றுவரையிலான  சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது  தற்போதைய மின்பற்றாக்குறையையும், அதை சமூகம்  எதிர் கொள்ளும் விதத்திலும் இயலாமையை மட்டுமல்ல, அது தனது தரத்தையும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
     
 எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற இந்த சிந்தனா  முறையின் தவிர்க்க வியலாத  விளைபொருள்தான் பிழைப்புவாதமாகும்.
     
 மொத்த சமூகத்தின் வாழ்வியலே பிழைப்புவாத அடித்தளத்தை கொண்டிருப்பதால் தான், இந்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அமைப்பும் பிழைப்பு வாத அமைப்புகளாகவே உருவெடுக்கினறன. சமூகத்தன்மையின் காரணமாக  பிழைப்புவாதம் முரணான, தவறான ஒன்றாக பார்க்கப்படுவதில்லை.
      
சமூகத்தின் இந்த அடித்தளத்தைப் பற்றிய வரையறை, கண்ணோட்டமில்லாத  அமைப்புகள் எதுவனாலும், அவைகள் எவ்வளவு தான் உணர்வுபூர்வமாக, தியாக மனப்பான்மை உடையவைகளாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே தங்களையே  அறியாமல், உணரமுடியாமல் பிழைப்பு வாதத்தையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
      
தம்மிடையே உள்ள இந்த தன்மையை உணராதவர்கள், குறிப்பிட்ட  காலத்திற்கு பின்னர் சமூகத்தின் மீது எழும் விரக்தி மனப்பாண்மை காரணமாக மிக எளிமையாக, வெளிப்படையான பிழைப்பு வாதிகளாக மாறிக் கொள்கிறார்கள்.
      
எனவே இந்திய சமூகத்தின் இந்த யதார்த்தமான நிலையை, சமூக அடித்தளத்தை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே சமூக மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை புரிந்து கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள் அனைவரும் பிழைப்புவாதிகளாக மாறுவது தவிர்க்க வியலாத நிகழ்வாகும்.
      
பிறக்கும் போது தெரியாவிட்டாலும் மூக்கு வெளுத்ததும் தெரிந்துவிடும் அது கழுதையா, குதிரையா என்பது!

Wednesday, 19 September 2012

கூடங்குளம்: வெற்றி விரிவாக்கத்தில்....!

இந்தியாவிலிருந்து 1947- ல் வெள்ளை ஆட்சியாளர்கள் வெளியேறியது, காந்தி தலைமையிலான காங்கிரசின் அகிம்சை போராட்டத்தின் விளைவாகத்தான் என்று நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இந்தக் கதையை கூடங்குளம் போராட்டக்குழுவும் நம்புவதில் அதிசயம் ஏதுமில்லை. திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு மட்டுமல்ல, குறுகிய மனப்பான்மை உள்ள அனைவராலும் அப்படியே மறுமொழி ஏதுமில்லாமல் ஏற்கப்படும் தாரகமந்திரமாகி விட்டது இந்தக் கதை.  இந்து மத கடவுளர்களின் கதைகள் எப்படி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதோ அதே  போன்றதுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்ததாக கூறப்படும் கதையுமாகும்.


     
திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவை குறுகிய மனப்பான்மை உடையது என்ற எமது விமர்சனம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் நாங்கள் இப்போது வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை, இப்போராட்டத்தை விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் வளர்த்தெடுத்து நடத்தி வரும் போராட்டக் குழுவையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
     
அணு சக்தி, அணு உலை சம்பந்தமான போராட்டக் குழுவின் கருத்தை, கண்ணோட்டத்தை நாங்கள் குறுகிய மனப்பான்மையிலானது என்று கூறவில்லை. அதன் சமூக கண்ணோட்டத்தைத்தான் குறுகிய மனப்பான்மை உடையது என்று கூறுகிறோம்.
     
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போட்டத்தின் வெற்றி, போராட்ட விரிவாக்கத்தில் தான் அடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தின் விரிவாக்கம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.ஆனால் நமது சமூகமோ ஜனநாயக உணர்வு படைத்த சமூகம் அன்று. இதன் காரணமாக கூடங்குளம் வட்டார மக்களின் போராட்டத்தை தமக்கு சம்பந்தமுள்ள போராட்டமாக நமது சமூகம் கருதவில்லை.
     
தமது சொந்த பாதிப்புகளுக்கு எதிராகக் கூட போராட தயாராக இல்லாத  சிந்தனாமுறையை கொண்டுள்ள ஒரு சமூகம், பிறரின் பாதிப்பாக கருதும் ஒன்றுக்கு எதிராக போராட முன்வரும் என்றுக் கருதுவது கற்பனையே ஆகும். இந்த சிந்தனா முறைக்கு  அப்பாற்பட்டது அல்ல கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவும்! இதனாலேயே அதை குறுகிய மனப்பான்மை உடையது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.
     
போராட்டக்குழுவின் குறுகிய மனப்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரத்தைத் தேடி வேறு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்போது இந்திய மக்கள் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள டீசல் விலை உயர்வு, பல கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வை சூறையாடும் சிறு வணிகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் சமூக விரோத செயலுக்கு எதிராக போராட்டக் குழுவின் பாராமுகமே இதை நிரூபிக்க மிகச்சிறந்த உதாரணமாகும்.
     
தமது போராட்டத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள கூடங்குளம் போராட்டக்குழு, நாட்டின் ஏனையப் பிரிவு மக்களை அழிவுக்குள்ளாக்கக் கூடிய அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை தமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதுகிறது. ஏற்கனவே போராட்டக் களத்தில் நிற்கும் இக்குழுவும், இக்குழு தலைமையிலான மக்களும், நாட்டின் ஏனைய பிரிவு மக்களோடு உணர்வு பூர்வமாக ஒருங்கிணைவதற்கு மிச்சிறந்த வாய்ப்பாகும் இது. இதை போராட்டக் குழு புரிந்து கொண்டிருந்தால் ஏற்கனவே  களத்திலுள்ள மக்களை அரசின் சமூக விரோத இந்த செயல்களுக்கு எதிராகவும் போராட வைத்திருக்க வேண்டும்.
    
 இப்படிச் செய்திருந்தால் தற்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பழங்குடி மக்களின் உணர்வு  நிலையிலிருந்து   உறுதியாகப் போராடும் மீனவ மக்களின் உணர்வு மட்டத்தையும், ஜனநாயக மட்டத்திற்கு உயர்த்த முடியும். அதோடு உணர்வு பூர்வமாக தாழ்ந்து கிடக்கும் சமூகத்தின் பிறத்தட்டு மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கும் இது அடித்தளமாகவும் அமையும்.
     
ஆனால் இப்படியொரு சிந்தனா முறையே இல்லாத போராட்டக்குழு இந்திய சுதந்திர போராட்டம் சம்பந்தமாக கொண்டிருக்கும் கருத்தும், கண்ணோட்டமும் இதற்கு மாறான ஒன்றாக இருக்க முடியாது.
     
இரண்டாம் உலகப் போரில் இட்லரின் நாஜிப்படையை எதிர்த்து போரிட்டு 1 கோடி மக்களின் உயிர்களை இழந்து ஜெர்மனை முறியடித்தது சோவியத் யூனியன்.  சோவியத் யூனியனின் இந்த வெற்றி உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர, சுதந்திர தாகம் கொண்ட அனைவரையும் எழுச்சி பெற செய்தது. இதனால் உலகம் முழுவதும் இருந்த காலனி நாட்டு மக்களின் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் வீறு கொண்டெழுந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌன் பேட்டன் பிரபு தமது நாட்டிற்கு இந்திய நிலைமை பற்றிய அனுப்பிய அறிக்கையில் இந்தியா வெடிகுண்டுகள் ஏற்றிய கப்பல்  தீ பிடித்தது போன்று உள்ளது, என்று குறிப்பிட்டிருந்தார்
     
மௌன் பேட்டன் பிரபுவின் மேற்கண்ட வர்ணணை, காந்தி வழி நடத்திய போராட்டத்தால் உருவானதல்ல. இந்நிலை முற்றிலும் காந்திக்கும், காங்கிரசுக்கும் அப்பாற்பட்டு எழுந்த ஒன்றாகும்.
    
 இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான நாஜிப்படையே வெற்றி பெறும் என்று கணித்திருந்த காந்தி புதிய  எஜமானை வரவேற்க தயாரானார். இதற்காகவே வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தையும் ஆரம்பித்தார்.
    
ஆனால் காந்தியின் எதிர்பார்ப்புக்கு மாறாக  நேச நாடுகளின் வெற்றி, உலக மக்களை உற்சாக மடைய வைத்ததைப் போன்றே இந்திய மக்களையும் எழுச்சி பெற செய்தது. இதனால்  காந்தியின் வழிகாட்டுதலை மீறி நாடெங்கும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு  பதிலடி தந்தனர்.
     
போரில் நேச நாடுகளின் வெற்றியால் திகைத்த காந்தி, தமது பழைய எஜமானனின் நம்பிக்கையை பெற  தாம் அறிவித்தப் போராட்டத்தை வன்முறை என்று கூறி திரும்பப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு துரோகமிழைத்தார்.
     
ஆனாலும் மக்களின் போராட்டமோ  மௌன் பேட்டன் பிரபுவின்  வர்ணணைக்கு ஏற்ப தொய்வில்லாமல் முன்னேறியது.
     
இப்படிப்பட்ட சூழலில் தான் வெள்ளை ஆட்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிவு செய்தனர். இதற்காகவே தமது நலனை பாதுகாக்கும், தனது நம்பகமான  காவலனான காங்கிரசிடம் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து விட்டு வெளியேறினார்கள்.
     
1947 - ஆகஸ்ட் - 15 ல், ஆட்சி அதிகாரத்திலிருந்து  ஆட்கள் மட்டுமே மாற்றப்பட்டனர்.  ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும் சட்டங்களும், நிர்வாக இயந்திரமும் அன்றிலிருந்து இன்று வரை வெள்ளையர்கள் விட்டுச் சென்றவைகள்தான.
     
வெள்ளையர்கள் அன்று விட்டுச்சென்ற சட்டத்தின் அடிப்படையில் தான் இன்று கூடங்குளம் போராடும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர்.
    
இன்று ஆட்சியாளர்கள் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர், நயவஞ்சகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை போராட்டக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். இவை அனைத்துமே வெள்ளை ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவைகள்தான்.
     
அன்றும்,இன்றும் ஏகாதிபத்திய நலனை உள்ளடக்கிய சட்டத்தையும், நிர்வாக முறையையும் கொண்டதுதான் இந்திய ஆட்சி முறை.
     
கூடங்குளம் போராட்டக்குழு இந்திய சட்டங்களும், நிர்வாக முறையும்  சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறது என்றால், அதன் அடிப்படையில் இந்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் எப்படி தவறு என்று கூறமுடியும்!?
     
இங்கே முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது போராட்டக்குழு தான். ஆனால் இந்திய ஆட்சியாளர்களை பொருத்த வரை அவர்களை இயக்கும் சட்டத்திற்கு ஏற்ப முரணற்ற வகையில் தான் இயங்கி வருகின்றனர்.
     
எனவே கூடங்குளம் போட்டக்குழுதான் முரணற்ற வகையில் செயல்பட முன் வரவேண்டும். அந்த வகையில் இப்போராட்டத்தை வரிவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இனி பார்ப்போம்.
     
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களிடையே தார்மீக ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மீனவ மக்களிடையே  இந்த ஆதரவு பெருமளவு அதிகரித்துள்ளது.  இந்த தார்மீக ஆதரவை போராட்டத்திற்கான நேரடி ஆதரவாக ஒருக் குடையின் கீழ் ஒன்று திரட்டப்படவேண்டும்.
     
இரண்டாவதாக  தமிழகம், புதுவை கடற்கரை நெடுக உள்ள மீனவ மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
     
மூன்றாவதாக சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாகவும் தமது தலைமையிலான மக்களை போராடத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும்.
     
இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உடைய அணுகு முறைகள் மூலமே கூடங்குளம் போராட்டம் மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் முன்னேற்றத்தை  காண முடியும்.
     
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுடன் ஒருங்கிணைய கூடங்குளம் போராட்டக்குழு தனது சிந்தனா முறையை , பரந்து விரிந்த ஒன்றாக மாற்றிக் கொள்ள இனியாவது தயாராகுமா?   

தொடர்புடைய கட்டுரைகள்:

Thursday, 13 September 2012

கூடங்குளம் : உயிர் வாழ ஒன்று சேர்வோம்!

              தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும் மக்கள், போலீசின் கடுமையான  தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.




     போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார் போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

     சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.  நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத் தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை  காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம் மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர். தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில் முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை செய்கின்றன.

     போராட்டக்குழு தலைவர் தன்னை  காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து சென்றுள்ளார்.

     இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு,  கைதாவது என்பது வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இருந்தது.

     கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை. அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது முட்டுச்சந்தில்  சிக்கிக் கொண்டுவிட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு, முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள்  அனுமதிக்க போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன் உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.

     இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட வழிமுறையை  தொடரப் போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின் இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற  தன்மையைத்தான்  கோருகிறது. கடல் தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.

     போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.

     அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம் வட்டார மக்களின்,  அதிலும் மீனவ மக்களின் போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும் முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.

     ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும் அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

     தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன. மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத  புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப்  போனது.மொத்தத்தில் இவர்கள் தமது இயலாமையை, சமவெளிப்பகுதியில் வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”, என்கின்றனர்.

     இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை  ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி  மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.

     இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு மாற்று ஏதுமில்லை.

     ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல. இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்  நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும். மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில் நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.

     எனவே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது.  இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள் மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

     தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும் மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன் ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.


     எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம் செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்: