விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label களப்பிரர்கள். Show all posts
Showing posts with label களப்பிரர்கள். Show all posts

Thursday, 8 August 2013

களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம்.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற நிலை தமிழக விவசாயிகளுக்கு எப்போது ஏற்பட்டது என்பதைப்பற்றி நாம் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.சென்றப் பகுதி-II- ல் சங்ககாலத்தில் விவசாயம் பற்றி ஆய்வு செய்தோம்.அதன் அடிப்படையில் இப்பழமொழி சங்ககாலத்தில் உருவாகவில்லை என்பதைப் பார்த்தோம்.

        சங்ககாலத்திற்கு பின்னர் கிபி.3 ம் நூற்றாண்டிலிருந்து 6 ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டுள்ளனர்.களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புர செப்பேடுகள் கிடைக்கும் வரை நாம் அறியாமல் இருந்தோம்.இச்செப்பேடுகள் கிடைக்கும் வரை களப்பிரர் காலம் இருண்டகாலம் என்றே வரலாற்றில் கூறப்பட்டு வந்தது.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டிருந்தாலும் அவர்கள் ஆண்டார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லாமலே இருந்தது.அப்படி சான்றுகள் இல்லாமல் போனது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வல்ல,நன்கு திட்டமிட்டு மூர்க்கமாக அவைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதைத்தான் மேற்கண்ட செப்பேடுகள் மற்றும் பார்ப்பன இலக்கியங்களில் உள்ள செய்திகளிலிருந்தும் நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

        சங்ககால தொடக்க காலத்தில் தமிழ்ச்சமூகம் சாதியற்ற சமூகமாகவே இருந்தது.வட இந்தியாவில் ஆரிய வருகையும்,பூர்வகுடி மக்களுடனான அவர்களின் போர், வெற்றி, இனக்கலப்பு நால்வருணக்கோட்பாடு, சாதியத்தின் வளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன.இந்த பார்ப்பனியத்தை எதிர்த்து சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய மதங்கள் வட இந்தியாவில் தோன்றின.வட இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு முன்னர் மதங்கள் தோன்றவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

        வட இந்தியாவில் பார்ப்பன நால்வருண-சாதியத்தை-பார்ப்பனியத்தை எதிர்த்து சமண,பவுத்த சமயங்கள் தோன்றின.ஆனால் இம்மதங்கள் தமிழகத்தில் பார்ப்பன வருகைக்கு முன்னரே வந்துவிட்டன.சாதியற்ற சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் சாதிய இழிவை எதிர்த்து உருவான சமயங்களான சமணமும்,பவுத்தமும் செல்வாக்கு எதையும் பெறமுடியவில்லை.

        இதன் பின்னர் தமிழகத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள் மிக விரைவில் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆனார்கள்.பார்ப்பனியம் அரச மதமாக உருப்பெற்றது.எந்த அளவிற்கு சாதியம் சமூகத்தை சிதைக்க ஆரம்பித்ததோ அந்த அளவிற்கு அதை எதிர்த்த சமணமும்,பவுத்தமும் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கியது.இந்த வளர்ச்சி தான் களப்பிரர்கள் தோன்றுவதற்கான அடிப்படைகளாக அமைந்தது.களப்பிரர்கள் தமிழகத்தை ஆளத்தொடங்கிய நிகழ்வு என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த பெரும்பான்மை மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.

        ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி,மு.ராகவய்யங்கர்,டி.வி.சதாசிவ பண்டாரகத்தார்,டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார்,எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் ஆகியோர் இன்று வரை அதிலும் வேள்விகுடி செப்பேடு,தளவாய்புர செப்பேடு ஆகிய ஆவணங்கள் கிடைத்த பின்னருங்கூட அவர்கள் தமிழர்கள் அல்லர் கருநாடகத்தில் இருந்து தமிழகத்தின் மீது போர்தொடுத்தவர்கள் என்றும் அன்னியர்கள் என்றும்,அவர்களின் ஆட்சி இருண்டகாலம் என்றும் கூசாமல் புளுகுகின்றனர்.இதில் மயிலைசீனு வேங்கடசாமி அவர்கள் களப்பிரர்கள் அன்னியர்கள் என்று கூறினாலும் அவர்கள் ஆட்சி இருண்டகாலம் இல்லை என்று கூறுகிறார்.

        மேற்கணட ஆய்வாளர்களின் நூல்களிலும்,வேள்விக்குடி மற்றும்தளவாய்புர செப்பேடுகளில் உள்ள செய்திகளை தொகுத்து பார்க்கும் போது களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட,நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் அது இருண்டகாலமா, இல்லையா என்பதை இப்போது பார்ப்போம்.

        (அ).கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று மேலே கண்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் களப்பிரர்கள் ஆட்சிகாலத்தில் தான்..........

        1.வளையாபதி
        2.சீவகசிந்தாமணி
        3.குண்டலகேசி
        4.சிலப்பதிகாரம்
        5.மணிமேகலை
ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும்,பதிணென்கீழ்கணக்கு நூல்களும்,நாலடியார் போன்ற நூல்களும் இன்னும் பல ஆயிரக்கணக்கான நூல்களும் உருவாகி உள்ளன.

        மேலே கண்ட விவரங்களில் இருந்து நாம் பார்க்கிற போது களப்பிரர்கள் ஆட்சிகாலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக திகழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.இவர்கள் காலத்தில் சமண.பவுத்த நூல்கள் மட்டுமல்ல சைவ சமய நூல்களும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன.அதை இயற்றிய புலவர்களுக்கும் எல்லாவகையான உதவிகளையும் களப்பிரர்கள் செய்துள்ளனர்.

        (ஆ).களப்பிரர்கள் தமது கொடியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் சின்னங்களான கயல்,வில்,புலி ஆகிய சின்னங்களையே பொறித்திருந்தனர்.தமக்கென தனித்த அடையாளம் எதையும் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

        (இ).சங்ககால ஆட்சியாளர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட கடல் கடந்த வணிகத்திற்கு மாற்றாக களப்பிரர்கள் ஆட்சியில் விவசாயமே மிகமுக்கிய தொழிலாக ஊக்குவிக்கப் பட்டது.

        இதைப்போன்ற பல தகவல்களை தமது நூல்களில் எழுதிவிட்டு களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் இருந்தே இவர்களின் நேர்மையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.

        இவ்வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் தமது பார்ப்பன மூதாதையரின் பணியையே அதாவது பார்ப்பனியத்திக்கு எதிரான களப்பிரரை எந்த வெஞ்சினத்தோடு அழித்தொழித்து ஆனந்த கூத்தாடினார்களோ அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட பார்ப்பன ஆய்வாளர்களும் தமது பணியை தொடர்ந்துள்ளனர்.முழுமுற்றான மூடனும்,அயோக்கியனும் மட்டுமே களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறமுடியும்.இப்படி களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறும் இவர்கள் மூடர்களா அல்லது அயோக்கியர்களா என்று கூறுவதற்கு இதற்கு மேலும் ஆய்வுகள் தேவையில்லை.

                களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறுவதற்கு இவர்கள் மொழியியல் ஆதாரங்கள் என்று சிலவற்றை கூறினாலும் அவைகள் அனைத்தும் மிகவலுவான ஆதாரங்கள் என்று எற்க இயலாது.ஏன் என்றால் களப்பிரர்கள் காலம் பொற்காலம் என்பதற்கு வெளிப்படையான விவரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை எதைப்பற்றியுமே எவ்வித மறுப்பும் கூறாமல் அவைகளை தமது நூல்களில் எழுதிக்கொண்டே முடிவை மட்டும் இருண்ட காலம் என்று கூறும் இவர்களின் மொழியியல் ஆதாரங்கள் எவ்விதத்திலும் நம்பதகுந்தவைகள் அல்ல.

        களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறும் இவர்கள்,அவர்கள் தமது தாய்மொழியை வளர்ப்பதற்கு எதும் செய்தார்களா என்பது பற்றி எதும் கூறவில்லை.அதே நேரத்தில் அவர்கள் பாலி,பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு ஊக்கம் அளித்ததாக கூறுகிறார்கள்.இவ்விரு மொழிகளுக்கும் ஆதரவு தந்தது.அவர்கள் கன்னடர்கள் என்று நிருபிப்பதற்கான ஆதாரமாக எப்படி கூற முடியும்?

        மேற்கண்ட மொழிகள் சமண,பவுத்தம் உருவான பகுதிகளின் மொழிகள் ஆகும்.இந்த சமயங்களை பரப்புவதற்கு தமிழகத்துக்கு வந்த துறவிகளின் தேவைக்காக அவைகளுக்கு களப்பிரர்கள் ஆக்கமும்,ஊக்கமும் தந்திருப்பார்கள் என்பது தான் பொருத்தமான,ஏற்புடைய காரணமாக இருக்கமுடியும்.

        ஆகவே களப்பிரர்கள் அன்னியர்கள் என்று இவர்கள் கூறுவது எதார்த்தமான ஒரு வரலாற்றுச்செய்தியை,நிகழ்வை பதிவு செய்வது என்ற நோக்கத்துக்காக அல்ல. அவர்களை தமிழர்களின எதிரிகள் என்று கொச்சைப்படுத்தி,இழிவுப்படுத்தும் நோக்கத்துக்காகத்தான் என்பதை நேர்மையான எவரும் எளிமையாக கூறிவிட முடியும்.

        மேலும் பூர்வகுடி இனம் என்ற அடிப்படையில் தமிழ்மொழி பேசுவோரும் கன்னடம் பேசுவோரும் ஒரே திராவிட பூர்வகுடி இனக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.இன்றைய நவீன தேசிய இனம் என்ற அடிப்படையில் தான் தமிழர்களும்,கன்னடர்களும் இருவேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்கள்.

        திராவிட மொழிக்குடும்பம் என்ற அடிப்படையில் இவ்விரு மொழிகளுக்கிடையில் பல்வேறு வார்த்தைகள் ஒன்றாய் இருப்பது தவிர்க்கவியலாதது ஆகும்.இன்றைய தமிழகம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்மொழி ஒரு பொது மொழியாக பொதுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்றும் கூட வட்டாரமொழிகள் இருக்கவே செய்கிறது.இதில் ஒரு வட்டாரமொழியை இன்னொரு வட்டாரத்தில் இருக்கும் மக்கள் புரிந்துகொள்வது சிரமம் என்பதை நாம் அறிவோம்.தமிழ்மொழியை பொருத்த வரை அதன் இலக்கண மற்றும் வார்த்தை வடிவத்திற்குள் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவி வளப்படுத்த தேவை ஏதும் இன்றி தமிழ்மொழி எல்லா வளங்களையும் கொண்டிருத்தது.ஆனால் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என்று இன்று அறியப்படும் அன்றைய திராவிட இனக்குடும்ப வட்டாரமொழிகள் போதிய வளர்ச்சி அடையாத வளம் குறைந்த அவைகளின் தேவைகள் தான் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவதற்கான வாய்ப்பாகவும் தேவையாகவும் அமைந்துவிட்டது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னர் தான் இம்மொழிகள் இன்றைய வடிவில் உருப்பெற்று எழுந்துள்ளன.இதன் பின்னரே இவைகள் இன்றைய பெயரிலும்,வடிவத்திலும் விளங்குகின்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன்னர் திராவிட இனக்குடும்ப வட்டார மொழிகள் என்ற வகையில் ஒரு வட்டாரத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை இன்னொரு வட்டாரத்தில் புழக்கத்தில் இருப்பது அதிசயமானதொரு நிகழ்வல்ல.ஆக இந்த வார்த்தைகளை கொண்டே களப்பிரர்கள் தமிழர் அல்லாத அன்னியர் என்று இவர்கள் கூறுவது எவ்வளவு நேர்மையற்ற செயல் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.ஆனால் தமிழ்மொழியோடு எந்த ஒட்டும் உறவும் இல்லாத சமஸ்கிருதமும்,ஆரிய பார்ப்பனர்களும் அன்னியர்கள் என்று இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.இது ஒன்றே இந்த பார்ப்பன வரலாற்று ஆய்வாளர்களின் நேர்மையின்மைக்கு தக்க சான்றாகும்.

        தமிழை வளப்படுத்துவதற்கு பார்ப்பன ,சமஸ்கிருத மொழியின் தேவைஇல்லாத காரணத்தால் தான் தமிழ்மொழி தனித்துவமாக நிமிர்ந்து நின்றது.பார்ப்பன பண்பாட்டு ஊடுருவல் இல்லாத வரை தமிழ்ப் பண்பாடும் உயர்ந்து நின்றது.பார்ப்பனியம் ஆளுவோரின் தேவைக்கான பண்பாடாக,மதமாக உருவெடுத்த போது தான் பார்ப்பனப் பண்பாடை மறுத்த மக்களின் ஆட்சியாக களப்பிரர்கள் ஆட்சி உருவெடுத்தது. இந்த ஆட்சி மூன்று நூற்றாண்டு நீடிக்கவும் செய்தது.பார்ப்பனியத்தை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சிகண்ட தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனியத்தை எற்றுக்கொணட ஆட்சி எற்ப்பட்டது எப்படி என்பதற்கான மிகதெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதும் இல்லை.கிடைத்திருக்க கூடிய சில தகவல்களை வைத்து பார்க்கும் போது அதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளமுடியும்.

        களப்பிரர்கள் ஆட்சி, பார்ப்பனியம் மக்களை சாதியாக கூறுபோட்டு  இழிவுபடுத்துவதற்கு எதிராக உருவானது.களப்பிரர்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களாகவே நீடித்துள்ளனர்.தமது செழிப்பான வாழ்வுக்கும் அரசியல் மற்றும் படைத்திரட்டலுக்கும் தேவையான எல்லா வளங்களையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும்,பண்பாட்டிற்கும் முற்றாக தடைவிதிக்கப்படவும் இல்லை.இதன் மூலம் அவர்கள் களப்பிரர்களை வெல்வதற்குரிய அனைத்து மூலவளங்களையும் பெற்று இருந்தனர்.அவர்களிடம் இல்லாத ஒரு வளம் மக்கள் மட்டுமே!

        ஆனால் பிற்கால களப்பிர அரசர்களில் சிலர் பார்ப்பன சைவ சமயத்தை பின்பற்றியுள்ளனர்.இது அவர்கள் பார்ப்பனியத்தை-சாதியத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் ஆகும்.பார்ப்பனியம் அரச மதமாக படிப்படியாக உயர்ந்துவிட்டிருந்தது.அதே நேரத்தில் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியில் பார்ப்பனியத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சியை தூக்கி எறிந்து களப்பிரர்கள் ஆட்சியை கண்ட மக்கள்,பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்துக்கு எதிராக சமண,பவுத்தத்தை தழுவிக்கொண்டனர்.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் சமண,பவுத்த சமயங்களின் அறம் சார்ந்து வாழ்ந்த மக்கள் சங்காலத்திய தமது போர்த்திறனை இப்பொது இழந்துவிட்டிருந்தனர்.

        இப்படிப் பட்ட சமூக சூழலில் தான் களப்பிர மன்னர்கள் சிலரின் பார்ப்பன மயம், பாண்டிய மன்னர் பரம்பரை வாரிசுகளின் எழுச்சி, பார்ப்பனர்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,மக்களின் சமண,பவுத்த அறம் சார்ந்த வாழ்வு ஆகிய அனைத்தும் சேர்ந்து களப்பிரர்கள் ஆட்சியை அதன் சுவடே இல்லாமல் துடைத்தெறிவதற்கு அடிப்படைகளாக இருந்துள்ளது.

        இன்றையை இலங்கை தமிழ்மக்களை காட்டிக்கொடுத்த டக்ளஸ் தேவானந்தா,கருணா,கே.பி போன்றவர்கள் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தூக்கிப் போட்ட பதவிகளை கவ்விகொண்டு சொகுசாக வாழ்வதைப் போன்று அக்காலத்தில் பார்ப்பனியத்துக்கு அடிபணிந்த சில களப்பிர அரசர்கள் சிற்றரசர்களாக தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர் என்ற செய்தியும் வரலாற்றில் காணக்கிடக்கிறது!

        ஆக மொத்தத்தில் களப்பிரர்கள் ஆட்சிபற்றி நமக்கு கிடைத்துள்ள ஒட்டு மொத்த தகவல்களையும் வைத்து ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது பார்ப்பனக்கும்பல் கூறுவதை போன்று களப்பிரர்கள் காலம் இருணடகாலம் இல்லை என்பது தெளிவாகிறது.

        களப்பிரர்கள் ஆட்சி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் விளைவு என்ற அடிப்படையில் மொழி,பண்பாட்டுத்தளத்தில் மட்டும் அல்ல, பொருளாதார தளத்திலும் பெரும்பான்மை மக்களின் தொழிலான விவசாயம் களப்பிரர்கள் காலத்தில் செழிப்பாக வளர்க்கப்பட்டுள்ளது.ஆகவே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது, என்ற பழமொழி களப்பிரர்கள் காலத்தில் உருவாவதற்கான அடிப்படை எதும் இல்லை என்பது தெளிவாகிறது!

மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III


(களப்பிரர்கள் காலம் கிபி 3-6) மீள்பிரசும்.

 தொடர்புடைய கட்டுரைகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:









Wednesday, 2 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-5 (அண்ணாவின் பரிணாமம் ஜெயா))

சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தில் ,தமிழ்ச்சமூகம் நிலபிரபுத்துவ சமூக வளர்ச்சியை நெருங்கிக்கொண்டிருந்த போது, பார்ப்பனியம் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சியாளர்களின் செல்வாக்கைப் பெற்றது.வட இந்தியாவில் பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் தமிழ்ச்சமூகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.இதனோடு தமிழ்ச்சமூகம் பார்ப்பனியத்தின் அடிப்படையில் சமூகம் நால்வருண அடிப்படையில் முதல் முறையாக பல நூறு சாதிகளாக கூறுபோடப்பட்டது.


வட இந்திய சமூகங்களைப் போன்று தமிழ்ச் சமூகம் ஆரியபார்ப்பனர்களால் வெற்றிகொள்ளப்பட்ட சமூகமல்ல.மாறாக ஆளுவோரை வென்றெடுத்து அவர்களின் மூலமே பார்ப்பனியம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் மூலம் பார்ப்பனியம் திணிக்கப்பட்டது, ஆட்சியாளர்களின் பார்ப்பனிய மயமாக்கம் ஆகியவை அன்றைய தமிழ்ச் சமூகத்தால் துரோகமாக கருதப்பட்டதன் விளைவுதான் களப்பிரர்களின் ஆட்சியாகும்.




பார்ப்பனியத்தை சகிக்காத தமிழ்ச் சமூகம் அதை தூக்கியெறிந்து,பார்ப்பன மதத்திற்கு எதிராக சமண,பௌத்த சமயங்களை தமக்குரியதாக வரித்துக்கொண்டனர்.தமிழர்கள் ஏற்றுக்கொண்ட சமண,பௌத்த சமயங்களும் பண்பாட்டு துறையில் பார்ப்பனியத்தைசாதியத்தை - நிராகரித்தனவே அன்றி, பொருளாதாரத்தில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே ஏற்றிருந்தன.


எனவே,களப்பிர ஆட்சியாளர்களும்,சங்க காலத்தின் இறுதிக்கட்டத்தில், தமிழகத்தை  ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் ஏனைய குலக்குழு ஆட்சியாளர்கள் திணித்திருந்த ஆசிய சொத்துடைமை வடிவத்தையே மாற்றமின்றி ஏற்று நடைமுறைப்படுத்தினர்.


சமணமும்,பௌத்தமும் பண்பாட்டு ரீதியில் புராதன பொதுவுடைமை சமூகத்தின் மேலாண்மையின் கூறுகளையே கொண்டிருந்தன. ஆசிய சொத்துடைமை வடிவத்தில் நிலங்கள் அனைத்தும் சமூக உடைமையாக இருந்தது என்பது புராதன பொதுவுடைமைச் சமூகத்தின் கூறாகும்.ஆசிய சொத்துடைமை வடிவத்தில் அரசனின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் சமூக உடைமை போன்று தோற்றம் அளித்தாலும், உண்மையில் அது பார்ப்பனிய மேல்வருணத்தாரின் ஆதிக்கத்தையே அடிப்படையாக கொண்டது.அரசன் நால்வருணத் தருமத்திற்கு கட்டுப்பட்டவன் என்பதால் மேல்வருணத்தாரே நிலங்களின் உண்மையான உடைமையாளர்களாக விளங்கியதை இவர்கள் காணத்தவறினர்.இந்த தவறான புரிதல் காரணமாக சமூக அடித்தளமான சொத்துடைமையில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே அவைகள் அங்கீகரித்தன.பண்பாடு என்பது சமூக அடித்தளத்தின் தன்மை,தேவைகளுகேற்பவே எழக்கூடியதாகும்.இதன் காரணமாக சமண,பௌத்த சமயங்கள் போதித்த பண்பாட்டு வடிவங்கள் சமூக அடித்தளத்திற்கு முரணாக அமைந்திருந்தது.இதன் மூலம் சமண,பௌத்த சமயங்கள் போதித்த வாழ்வியல் முறைகள் கற்பனையானதாகவும்,அகநிலை விருப்பமும் உடையதாகவே அமைந்திருந்தன.

களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான மக்களின் தேவை என்றாலும் இவர்களும் சமூக அடித்தளத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்களுக்கு உரிய அடிப்படையை கொண்டிருப்பதும்,அவைகளை வளர்த்துக்கொள்வதும் தவிர்க்கவியலாத அம்சங்களாகும்.


ஆசிய சொத்துடைமையின் அடிப்படையிலிருந்து சமூகம் ஏற்றத்தாழ்வாக வளர்வது,வளர்க்கப்படுவது என்பது தவிர்க்கவியலாத நிகழ்வுகளாகும்.


தவிர்க்க வியலாத இந்த அம்சத்திலிருந்து ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தை தழுவிக்கொள்வது என்பதும் இயல்பான செயலே ஆகும்.இதற்கு ஏற்ப சமூகம் சாதியாக கூறுபோடப்படுவது நடந்தேறுவதும் நிச்சயமான ஒரு நிகழ்வே ஆகும்.


களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தின் ஒரு அங்கமானதும்,சமூகம் சாதியாக வளர்ந்து நிலைபெற்றதும் போன்ற நிகழ்வுகள் களப்பிர ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்படும் நிகழ்வுக்கு அடிகோலியது.

களப்பிரர்கள் தமது ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து, இறுதி வரையிலும் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே கடைபிடித்து நிலைபெறச்செய்தனர்.இதன் மூலம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் நிரந்தரமாக தடுத்து நிறுத்தினர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த களப்பிரர்கள், தம்மை ஆட்சியாளர்களாக உயர்த்திய தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு நிரந்தர முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதன் வாயிலாக பார்ப்பனியத்துடனான போரில், தமிழர்களின் முதல் தோல்வியை தொடங்கி வைத்ததோடு, தமது அழிவையும் உறுதி செய்துகொண்டனர்.


இன்றிலிருந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிலைநாட்ட, அதன் பிரதிநியாக இருந்து பாண்டியர்களும்,பல்லவர்களும், களப்பிரர்களையும்  அவர்களோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும், அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் அழித்தொழித்தனர்.


மேற்கண்டவாறு களப்பிரர்களின் அழிவுக்கு பின்னர், தந்தை பெரியாரின் காலத்தில் தான் தமிழர்களின் தன்மானத்திற்கும் ,சுயமரியாதைக்கும் பார்ப்பனியத்தால் ஏற்பட்ட இழிவுக்கு எதிராக மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டது.


ஆனால் தந்தை பெரியாரின் இந்தப் இயக்கமும் உள்முரண்பாடுகளையும்,பலவீனங்களையும் கொண்டதாகவே இருந்தது. சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் தான் ரயத்துவாரி, ஜமீன்தாரி ஆகிய வடிவங்களாக மாற்றப்பட்டது.


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவிய ஆசிய சொத்துடைமை வடிவம் மாற்றப்பட்டாலும், இதுவும் ஆங்கில ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தை, சுரண்டலை உறுதிப்படுத்தும் உள்ளடக்கத்தையே கொண்டிருந்தது. இந்த உள்ளடக்கம் காலனி ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பார்ப்பனிய பண்பாட்டுக்கும் அதன் மேலாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும்அமைந்திருந்தது.

நிலங்கள் அனைத்தும் முன்பு மன்னர்களுக்கு உடைமையாய் இருந்தற்கு மாறாக, இப்போது அந்நிலங்கள் ஜமீன்தார்கள் வசம் சென்றது. இவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பனிய நலன்களுக்கும் உகந்தவர்களாக இருப்பதே இப்பொருப்பிற்கான தகுதியாக கொள்ளப்பட்டது. ஏனென்றால் பார்ப்பனியம், பார்ப்பனர்கள் மற்றும் அதற்கடுத்த மேல் சாதிகளின் நலன்களுக்கு மட்டுமல்ல, அதுவே தமதுநலன்களுக்கும் மிகச்சிறந்த கவசம் என்பதாலேயே, அதை பாதுகாக்கும் பணியையும் ஆங்கில ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முதன்மையான அடிப்படையாக நிலமே விளங்கியது. அதோடு இப்போது நவீன தொழிற்துறையிலான வேலை வாய்ப்புகளும், அரசு எந்திரத்திலான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.


வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பார்ப்பனிய மேலடுக்குகளில் இருந்தவர்கள் நிலவுரிமையோடு, அரசு எந்திர வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்துறை வேலைவாய்ப்புகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.


பார்ப்பனர்களும் இவர்களை அடுத்த மேல் சாதியினரும் அரசுப் பணிகளில் எந்த அளவிற்கு ஆதிக்கம் பெற்றனரோ, அந்த அளவிற்கு தாம் காலம், காலமாக அனுபவித்து வந்த சுகபோகங்களை தக்கவைத்துக் கொண்டனர். இதனால் இவர்கள் விவசாயத்தில் இருந்தும் தம்மை படிப்படியாக விடுவித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன்படி முதலில் பார்ப்பனர்களும் இவர்களைத்  தொடர்ந்து அடுத்தடுத்த மேல் சாதியினரும் விவசாயத்தில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வெளியேற ஆரம்பித்தனர். விவசாயம் அல்லாத பிற தொழில்களே ஆட்சியாளர்களின் நலனை உள்ளடக்கியது என்பதால் விவசாயம் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தொழிலாக ஆகிப்போனதையே இவ்வெளியேற்றங்கள் நிரூபித்தன.


சமூகத்தின் மேல் அடுக்குகளில் இருந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தாம் அனுபவித்து வந்த வாழ்க்கையை, அதன் தரத்தை புதிய நிலைமைகளிலும் தக்க வைத்துக்கொண்டனர். மேல் சாதியினரின் இப்போதைய புதிய வாழ்வும் சாதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அமைந்தது.இந்திய சமூக அமைப்பில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இந்நடவடிக்கை அவசியமானது என்பதால் அவர்கள் இதை திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

1947 ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் விவசாயத்தை புறக்கணிக்கும்பார்ப்பன ஆட்சியாளர்களின் செயல் மேலும் தீவிரமானது. இது எந்தளவிற்கு ஆட்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டதோ, அந்த அளவிற்கு விவசாயத்திலிருந்து எஞ்சிய மேல் சாதியினரும் வெளியேறும் நடவடிக்கை அமைந்தது. மேல் சாதியினர் விவசாயத்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு எந்த அளவிற்கு நடந்தேறியதோ அந்த அளவிற்கு நிலங்கள் இப்போது சூத்திர சாதிகளின் கைகளுக்கு மாறியது.

ஆசிய சொத்துடைமை வடிவமே இந்தியாவில் சாதிகள் நிலை பெறுவதற்கு மிகச்சிறந்த வடிவமாக இருந்தது. இன்று ஆசிய சொத்துடைமை வடிவம் ஆற்றியப் பணியை நவீன தொழிற்துறை வேலைவாப்புகளும், அரசுத்துறை வேலைவாய்ப்புகளும் ஆற்றி வருகின்றன. மேற்கண்ட இரு புதிய வேலைவாய்ப்புகளுக்கான தளங்களும் சாதி அடிப்படையிலேயே உத்திரவாதம் செய்யப்படுவதால்தான் சாதிக்கான தேவை இன்னமும் மறைந்துவிடாமல் சமூகத்தில் நீடித்து நிற்கிறது. புதிய தேவைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ப சாதி கூர்மையாகவும், நயவஞ்சகமானதாகவும், நேர்மையற்றதாகவும் வடிவமாற்றம் அடைந்துள்ளது.


புதிய சமூக நிலைமைகளிலும் பார்ப்பனியத்தின் மேல் அடுக்குகளில் இருப்பவர்கள் தமது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான உத்தரவாதத்தை சாதி அடிப்படையிலேயே கொண்டிருப்பதால்தான் சாதியை  புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

தமது நயவஞ்சகமான நடவடிக்கைகள் அனைத்தையும் இப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் மூடி மறைத்துக் கொள்கின்றனர்.

இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு சிறுத்துப் போய்விட்டது.


சாதி நீடிக்கும் போதே, சாதி அடிப்படையிலான சமூக இழிவுகள் மாறிவிடும் என்ற பொய்மையான தோற்றத்தை ஆளும் கும்பலும், மேல் சாதியினரும் சமூகத்தில் இன்று நிலைபெறச்செய்துள்ளனர்.

மேலே நாம் கண்ட விடயத்தில் தான் தந்தை பெரியாரின் இயக்கம் பலவீனத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே அவ்வியக்கம் உள் முரண்பாடுகளால் ஆதிக்கம் செய்யப்பட்டது. இதனால் அவ்வியக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த பார்ப்பனியத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதற்கு பதிலாக சமூக, பொருளாதார வளங்களை பங்கிட்டுக்கொள்ள, பார்ப்பன சாதியுடன் பிற மேல்சாதிகள் நடத்திய போராட்டத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தது.

இதன் காரணமாக தந்தை பெரியாரின் காலத்திலேயே,அவரின் கண்ணெதிரிலேயே அவர் தொடங்கிய இயக்கம் தோல்வியைத் தழுவியது.


தந்தை பெரியாரின் இயக்கம், பார்ப்பனிய நலன்களுக்காக அண்ணாதுரையால் காட்டிக்கொடுக்கப்பட்டு இன்று அது ஜெயலலிதாவாக பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறது!


ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்திய மேலாண்மைக்காக டக்ளஸ் தேவானந்தா,கருணா ஆகியோரால் 
காட்டிக்கொடுக்கப்பட்டு, சிங்கள ஆட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்த்து அவர்களின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.


தந்தைப் பெரியாரின் இயக்கத்திற்கு பின்னர்,கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமும் இந்திய மேலாண்மைக்காக-பார்ப்பனிய மேலாணமைக்கு -  கருணாநிதி,ஜெயலலிதா போன்றோரால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

·           

    *களப்பிரர்கள் ஆட்சி அழிக்கப்பட்டது….

·          *தந்தை பெரியார் இயக்கத்தின் பின்னடைவு….
·          *ஈழப்போராட்டத்தின் பின்னடைவு.........
·          *கூடங்குளம் போராட்டத்தின் பின்னடைவு ஆகியவை

களப்பிரர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு காரணமான எழுச்சிக்கு பின்னர், மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் தமிழர்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தோல்வியும்,பின்னடைவுகளுமாகும்.


மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் பார்ப்பன மேலாதிக்கத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டே அழிவையும்,பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.மொத்தத்தில் சங்க காலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியத்திற்கு எதிரான எழுச்சி,வெற்றிக்கு பின்னர் தமிழ்ச் சமூகத்தின் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்துவருகின்றன.


அப்படியானால் இந்தியாவிலுள்ள ஏனைய தேசிய இனங்கள் தமது கோரிக்கைகளில் வெற்றி பெறுகின்றனவா?இல்லை.போராட்டமே இல்லாதபோது தோல்வி என்பது எப்படி ஏற்பட முடியும்?

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே, தமிழ் தேசிய இனத்தைத் தவிர, ஏனைய அனைத்து தேசிய இனங்களும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டு,செரிக்கப்பட்டுவிட்டது.இதில் அவைகள் பார்ப்பனியத்தின் பிரிக்கவியலாத அங்கங்களாகிவிட்டன.

இதற்கு நேர்மாறாக அன்றிலிருந்து, இன்று வரை பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த,எதிர்க்கும் மரபை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது.


இந்த மரபிற்கான அடிப்படை தமிழ் மொழியின் தன்னிறைவான வளமும்,தமிழர்களின் செழுமையான பண்பாடும்,நாகரீகமுமே காரணமே தவிர, நவீன தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கான உந்துதல்களில் இருந்து உருவான போராட்டங்களின் மரபல்ல.இந்த உந்துதல்கள் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படாததற்கு நிலபிரபுத்துவம், பின்தங்கிய ஆசிய சொத்துடைமை வடிவமாக பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும்,வெள்ளையர்களால் திணிக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறை காலனிய ஆட்சியாளர்களின் நலன்களுக்காவும், தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டதேயாகும்.இதனால்தான் நவீன கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி ஆகியவை மக்களின் சிந்தனாமுறையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.


இதன் காரணமாகவே எத்துனை முறை தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டாலும், அது மீண்டும்,மீண்டும் சங்ககாலத்தில் இயல்பான சமூக வளர்ச்சியின் ஊடாக அடைந்த வளர்ச்சியான மொழி.பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே எழுகிறது.


இந்த வளமான பெருமிதம்தான் தமிழினத்தின் பலம் என்றாலும், இந்த பெருமிதத்தை காட்டிக்கொடுப்பவர்களும்,காட்டிக்கொடுப்பவர்களை ஏற்பவர்களும் தமிழ்ச் சமூகத்தில் பாதிக்கும் மேலாக இருப்பதுதான் நமது தோல்விகளுக்கான இருக்கிறது.


இதிலிருந்து பார்க்கும் போது, நாம் இதுவரை சந்தித்த தோல்விகள் அனைத்தும் நமது எதிரிகளின் பலத்தால் ஏற்பட்டதல்ல.இவைகள் அனைத்தும் கருங்காலிகளால் காட்டிக்கொடுத்ததனால் ஏற்பட்டவைகளேயாகும்.

சமூகத்தில் நிகழும்,நிகழ்த்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் சாதியாக பார்க்கும் கண்ணோட்டமே  
தமிழ்ச்சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது.


எனவே தமிழ் மக்களை சமூக மாற்றத்திற்காக,வளர்ச்சிக்காக ஒருங்கிணைக்கும், ஒன்றுப்படுத்தும் காரணிகள் எதுவும் அத்துனை தெளிவானதாக இல்லை.


தமிழ்ச்சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை தம்மை முற்போக்கு என்றும்,புரட்சிகர சக்திகள் என்றும் கூறிக்கொள்வோர் யாரும் கணக்கிலெடுக்க தயாரில்லை,இதற்கு மாறாக தமது அகநிலை விருப்பதற்கு ஏற்ப எடுக்கும் முடிவுகளையும்,தீர்வுகளையுமே சமூகத்தின் மீது திணிக்க முயல்கின்றனர்.


இதன் காரணமாகவே தமிழ் தேசியம் பேசுவோரும்,புதிய ஜனநாயக புரட்சியை பேசுவோரும், கையடக்க சக்திகளை கூட வென்றெடுக்கவோ,வென்றெடுத்த சக்திகளை தக்க வைக்கவோ முடியாமல் தவிப்பதும்,இந்த தவிப்பு இவர்களிடையே சமூகத்திற்கு எதிரான வெறுப்பும்,ஆத்திரமுமாக மாறி பிழைப்புவாத சகதியில் மூழ்கி சமூகத்தை காட்டிக்கொடுப்பதுமாக மாறுகிறது.எனவே தமிழ்ச்சமூகத்தின் தேவை இவைகள் அல்ல.இவைகள் இதை பேசும் அமைப்புகளின் அகநிலை விருப்பமே தவிர சமூகத்தின் தேவையல்ல.மேற்கண்ட மாற்றங்களுக்கான தேவை ஏற்படும் அளவிற்கு அவைகளுக்குரிய சமூக அடித்தளம் இன்னமும் உருவாகிவிடவில்லை. எனவே இப்போதைய நிலையிலிருந்து அடுத்தக்கட்ட   சமூக வளர்ச்சிக்கான தேவை என்னவோ அதை எட்டுவதற்கான பணியைத் தொடங்குவதுதான். இப்பணி முற்றிலும் நமது சமூகத் தன்மையின் தேவையிலிருந்து எழக்கூடியதாக அமைய வேண்டும்.இந்தத் தேவை இவ்வுலகில் உள்ள ஏனைய சமூகங்கள் இதுவரை காணாத புதிய வடிவையும், தன்மையையும் கொண்டதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் நமது சமூகம் உலகில் வேறெங்கும் இல்லாத தனித்தன்மையைக் கொண்டதாகும்.இந்நிலை தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல மொத்தத்தில் இந்திய நாட்டிலுள்ள  அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான தன்மையாகும்.இதிலிருந்து இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களை  பொதுவாக ஒருங்கிணைப்பதற்கான, ஒரே சமூக அடித்தளமாக இன்றும் விளங்குவது விவசாயம் மட்டுமே!


பார்ப்பனிய படிக்கட்டில் கீழே அழுத்தப்படும் பெரும்பான்மை மக்களின் தொழிலாகவும்,இதன் காரணமாக அரசுகளால் புறக்கணிக்கப்படும் தொழிலாகவும்  விவசாயமே விளங்குகிறது.


இப்படி ஆட்சியாளர்களின் புறக்கணிப்பிற்கும்,ஒதுக்குதலுக்கும் ஆட்பட்டுள்ள விவசாயமே, நாட்டின் பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைக்கும் கூறாகவும் இருக்க முடியும்.


ஆகவே நமது தோல்விகளை வெற்றிகளாக மாற்ற, பெரும்பான்மை மக்களை அணிதிரட்டும் சமூக அடித்தளம் விவசாயத்தை தவிர வேறதுவும் இல்லை,இருக்கவும் முடியாது!


தொடர்புடைய கட்டுரைகள்:



 முற்றும்.