ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மரண தண்டனை,இன அடிப்படையில் ஆனது என்றால்,மத்தியில் அஃப்சல் குருவிக்கு வழங்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை மத அடிப்படையில் ஆனது.இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.பணம் படைத்தவனுக்குதான் நீதி; கை ஏந்துபவனோ நிர்க்கதியில் தான்.சமூகத்தில் கீழ்த்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிய சட்டமே.அவனை அழித்து,ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.
இன்றைக்கு மரண தண்டனைக் கைதிகளைப் பாருங்கள்….. அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக,ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?அல்லது இதுவரை எந்த ஒரு பணக்காரராவது தூக்குமேடை ஏறி இருப்பாரா?
நமது சட்டங்கள் ஒரு வகையில் பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் இன்னொரு தனி நபருடன் வாதாடலாம்.ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது,ஒவ்வொரு குற்ற வழக்கும் போலீசால் பதிவு செய்யப்பட்டு,அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.வழக்கில் ஒவ்வொரு நகர்வையும் போலீசுதான் தீர்மானிக்கிறார்கள்.வாக்குமூலம் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?
’அரிதிலும்,அரிதான’ குற்றங்களில் தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள்.போலீசாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படிகிறார்களே…..அதுவும் கூட ’அரிதிலும் அரிதானது’ தானே? ஆக சட்டத்துக்கு புறம்பாக போலீசார் கொலை செய்தால்,அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால்,அதற்குப்பெயர் மரண தண்டனை.இது தான் உங்கள் நீதி?
பண்டைய கிரேக்க,எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கிகரிக்கப்படவில்லை.அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிகளாக அங்கிகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டுமேதான் சட்டம்,நீதி,நியாயம்,தீர்ப்பு எல்லாம்…………………அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்.தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கே இருந்து வந்ததிருக்கிறது.இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருனை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கையில்,ஒருவகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டில் அடிமைகள் தானோ?
சாமன்யன் செய்த குற்றம் ஒன்றுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொறு குற்றம் செய்வது எப்போதும் சமமாகாது;நீதியும் ஆகாது

