விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 27 October 2011

விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1

நடப்பு சம்பாப்பருவ நடவுப்பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது.இந்த ஆண்டிற்கான நெல்கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது.மோட்டாரகம் கிலோவுக்கு ரூ 11.30 சன்னரகம் ரூ 11.80 என்றும் அறிவித்துள்ளது.இந்த விலை போதுமானது அல்ல என்று விவசாய சங்கப் பிரதிநிகள் வழக்கம் போல கூறியுள்ளனர்.

நடப்பு சம்பா பருவத்தில் 1 ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ 14.500/- வரை செலவாகிறது.அதாவது 1 கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ6.70 செலவாகிறது.உற்பத்தி செலவை விட தமிழக அரசு மோட்டா ரகத்திற்கு ரூ 4.60,சன்னரகத்திற்கு ரூ5.10 என்றும் கூடுதலாக விலை தருகிறது.ஆனால் விவசாயிகள் சார்பில் பேசுவோர் ஒரு குவிண்டாலுக்கு ரூ 2100/- ரூபாயாவது தந்தால் தான் கட்டுபடியாகும். நடப்பு விலைவாசி உயர்வில் குவிண்டால் ரூ1130/- என்பது கட்டுபடி ஆகாது என்று கூறியிருக்கிறார்கள்.அதாவது கிலோவுக்கு ரூ21.00 என்று விலை கேட்கிறார்கள்.

இந்தியாவில் இன்றைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கைக்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்தான்.ஆனால் விவசாயிகளை தவிர வேறு எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், தமது உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியாகும் விலைகேட்டு அரசாங்கத்திடம் கெஞ்சுவதில்லை.தமது உற்பத்தி பொருளுக்கான விலையை தாமே தீர்மானிக்கும் உரிமையை சட்டபூர்வமாகவே பெற்றுள்ளனர்.ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அரசும்,தனியாரும்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.அவர்களிடம் விவசாயிகள் கையேந்தி நிற்கிறார்கள்.

விவசாய உற்பத்தியில் விவசாயி தனது சொந்த நிலத்திலேயே கொத்தடிமையாக உழல்கிறான்.மேலும் கடன்காரனாகவும் திட்டமிட்டு ஆக்கப்படுகிறான்.தனது சொந்த குடும்ப உழைப்பு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மட்டுமே கூலியாட்களுக்கு தர வேண்டிய கூலியை தான் பெற்றுக்கொண்டு சில ஆண்டுகள் சமாளிக்கிறான்.சொந்த உழைப்பு இல்லாதவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே நிலத்தை விற்றுவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

சொந்த உழைப்பில் விவசாயம் செய்யும் விவசாயி கூட கடனை தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலமே அடைக்கிறான்.இதற்கு எதற்கும் வசதியில்லாத விவசாயி தற்கொலையை தேர்ந்தெடுக்கிறான்.தமிழகத்து விவசாயிகளோ நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் விற்றுவிட்டு விவசாயத்திலிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.

இதையும் மீறி விவசாயம் செய்யும் விவசாயி,விவசாயம் அல்லாத வழிகளில் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவது,ஆடு,மாடு வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயத்தில் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு என்றாவது ஒருநாள் நல்லகாலம் பிறக்காதா? என்று காத்திருக்கிறான்.மொத்தத்தில் உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற விவசாயி தன்னையே இழக்கிறான்.

நடப்பு பருவத்தில் உற்பத்தி செலவை விட 1 கிலோவுக்கு கூடுதலாக விலையை அரசு தந்தும் கூட இது போதுமானது அல்ல என்று விவசாயிகள் கூறுவது சரியா? என்றுதான் சாதாரணமாக எல்லோரும் நினைக்கிறார்கள்.

விவசாயத்தில் ஆண்டு முழுவதும் ஈடுபடும் விவசாயிக்கு சம்பளம் வேண்டும் என்பதோ,நிலவாடகை,நடப்பு பருவ செலவுக்கு ஆகும் தொகைக்கு அதாவது மூலதனத்திற்கான வட்டி,ஆழ்துளை கிணறு தோண்ட செலவழிக்கப்படும் மூலதனத்தை திரும்ப எடுத்தல்,அதற்கான வட்டி,ஆழ்துளை கிணறு மின்சாதனங்கள் பராமரிப்பு இவை அனைத்திற்கு பிறகு லாபம் ஆகிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.விவசாயத்தை தவிர ஏனைய அனைத்து தொழில்களிலும் இந்த அம்சங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகிறது.


மேலே கண்ட அம்சங்களை கொண்டு திட்டமிட்டால்

2011 சம்பா பருவ நெல்சாகுபடிக்கான செலவு விவரம்.

                                                     ரூபாய்
1.நாற்றங்கால் ஏர்                                         500  
 நாற்றங்கால் அண்டை வெட்ட 1ஆள்                      150
 நாற்றங்கள் ஒழுங்கு செய்ய 1ஆள்                        150
 விதை நெல் 45 கிலோ                                   950
  உரம்                                                   110
2.நடவு வயல் ஏர்                                          2000
 நாற்று பறிக்க                                            1400
 அடியுரம் 2 மூட்டை                                      1400
 நடவு ஆள் கூலி                                         1680
 அண்டை வெட்ட 6 ஆள்                                  900
3.மேலுரம்                                                900
4.களை பறிக்க                                            1400
5.மருந்தடிக்க                                              1000
6.அறுவடை செலவு (1 ½ மணி நேரம்,இயந்திரம் மூலம்)      2000

மொத்தம்-             14,620


7.விவசாயி கூலி                                         10,000
8.நில வாடகை                                            9000
9.மூலதன வட்டி(5 மாதம்)                                   725     
10.ஆழ்துளை கிணறு மூலதனத்தை திரும்ப எடுத்தல்         2000
11.ஆழ்துளை கிணறு மூலதன வட்டி 1 போகம்              1000
12.ஆழ்துளை கிணறு பராமரிப்பு                             1000
13 லாபம் 20% (மிக குறைந்த லாப விகிதம் இது)            1861
                                
                                    மொத்தம்             40,206

மேற்கண்ட பட்டியல் அடிப்படையில் பார்த்தால் ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ40,206/- வரை செலவாகிறது.இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று நடப்பு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பவர்கள் கூறலாம்.

இதோடு மட்டுமல்ல விவசாய விலை பொருட்கள் விலை ஏறினால் மக்கள் எப்படி அவற்றை வாங்கி சாப்பிட முடியும்.இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விடும் என்று தேசபக்தி பொங்க குரல் எழுப்புகிறார்கள்.இவர்களிடம் நாம் கேட்போம் தேசம், நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அதாவது 80 கோடி பேர் விவசாயிகள்.இந்த 80 கோடி விவசாயிகளின் அழிவு நாட்டின் அழிவில்லையா?

சரி ஒரு கிலோ சன்னரக நெல்லின் விலை ரூ 11.80.ஒன்றரை கிலோ நெல்லில் 1 கிலோ அரசியை பெறமுடியும்.அப்படியானால் ஒரு கிலோ அரிசிக்கு தேவையான நெல்லின் விலை ரூ17.70 ஆகிறது.ஆனால் ஒரு கிலோ சன்னரக அரிசியின் விலை கடையில் ரூ40 வரை விற்கிறது.நெல்லை விவசாயிடமிருந்து விலைக்கு வாங்கி அதை அரிசியாக மாற்றி விற்கும் இடைத்தரகர்கள் நெல்லை அரிசியாக்கும் செலவு போக ஒரு கிலோவுக்கு ரூ20 வரை லாபம் பெறுகிறான்.
ஆனால் நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயி ஒரு பருவத்தில் 1 ஏக்கரில் மோட்டாரகத்தில் ரூ 6300/-ம் சன்னரகத்தில் ரூ4806/-ம் நட்டமடைகிறான்.ஆகவே விவசாயத்திலிருந்து ஒரு பைசா கூட வருமானம் பெறாத விவசாயி தனது குடும்பத்திற்கான உணவு,கல்வி,மருத்துவம்,திருமணம்,மொய்,திருவிழாக்கள் அனைத்திற்கும் கடன் வாங்கித்தான் செலவழிக்கிறான்.இப்படிப்பட்ட கடன்கள் வட்டியும் அசலும் சேர்ந்து நான்கைந்து ஆண்டுகளில் நிலத்தை விற்றுத்தான் அடைக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி மிகுநிலை பெற்றுள்ள ஒரு சமூகத்தில்,அதன் ஆதிக்கத்தில் விவசாயம் செய்யும் விவசாயி முதலாளித்துவ முறையில் தனது உற்பத்தியை திட்டமிடக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

உணவுப்பொருட்களின் விலை உயர்வு பற்றி நியாயமாக அரசிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.விவசாயி எவ்வளவு நட்டமடைந்தாலும்,உணவு பொருட்களின் விலை குறைவாகவா விற்கிறது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவக்கற்ற அரசுகள்தான் குற்றவாளிகள்!

உண்மையிலேயே நாட்டின் மீதும்,நாட்டு மக்கள் மீதும் அக்கறையுள்ளோர் உணவுப்பொருள் விநியோகம் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்றுதான் குரல் எழுப்ப வேண்டும்.உணவு பொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களை அகற்றப்பட வேண்டும்.


மேலும் விவசாயிகள் பெயரில் உரக்கம்பெனி முதலாளிகளுக்கும்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது என்றப்பெயரில் இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க வழங்கப்படும் மானியங்களிலிருந்து,மேலும் பல்வேறு வகையில் தரப்படும் மானியங்கள் அனைத்தையும் உணவுப் பொருளுக்கு ஒருமுகப்படுத்தி வழங்கினால்,இப்போது உள்ள உணவுப்பொருட்களின் விலையை விட பாதிவிலையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியும்.

ஆகவே விவசாயிகளுக்கு, தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்ற வாதத்தில் துளியும் உண்மை இல்லை என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.

மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டிய  கடமை அரசினுடையது என்பது தவிர்க்கவியலாத விதியாகும்.ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அரசு செயல்படுகிறது.உணவு பொருட்கள் அனைத்தையும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கிறது.இதுநாள் வரை இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான சிறு இடைத்தரகர்கள் பெற்றுவந்த லாபத்தை ஒருசில பன்னாட்டு பகாசூர கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிட்டு,இருக்கும் இந்திய அரசு விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும் ,நாட்டுமக்களுக்கும் ஆழக்குழித் தோண்டுகிறது,துரோகம் இழைக்கிறது.இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் தேவை மட்டுமல்ல,கடமையுமாகும்!      

Tuesday, 25 October 2011

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ
மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா?இல்லை மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை.அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன; உற்பத்திக்கான போராட்டம்,வர்க்க போராட்டம்,அறிவியல் ஆய்வு என்ற மூவகை நடைமுறையிலிருந்து வருகின்றன.


மனிதனின் சமுதாய வாழ்வே அவனது சிந்தனையை நிர்ணயிக்கின்றது.முன்னேறிய வர்க்கத்தின் பண்பாக விளங்கும் சரியான கருத்துகள் ஒருகால் மக்கள் திரளினால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும்,இக்கருத்து சமூகத்தை மாற்றுக்கின்றன.உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாயத சக்தியாக வடிவெடுக்கின்றன.




மக்கள்,தமது சமுதாய நடைமுறையில் பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு,தமது வெற்றிகள்.தோல்விகள் இரண்டிலிருந்தும் செழுமையான அனுபவங்களைப் பெறுகின்றனர்.புறநிலை உலகத்தில் எண்ணற்ற தோற்றப்பாடுகள் மனிதனின் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் ஊடாகச் சென்று,அவனுடைய மூளையில் பிரதிபலிக்கின்றன.ஆரம்பித்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றன.போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும்,அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது.அதுவே கருத்துகள் என்று அழைக்கப்படுகின்றது.இது அறிதலின் ஒரு வளர்ச்சி போக்கு. இது அறிதலின் முழு வளர்ச்சி போக்கில் முதலாவது கட்டம்,அதாவது புறநிலை பருப்பொருளிலிருந்து அகநிலை உயர்வுக்கு செல்லுகின்ற,வாழ்நிலையிலிருந்து கருத்துகளுக்கு செல்லுகின்ற கட்டம் ஆகும்.(தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் உட்பட)ஒருவரின் உணர்வு அல்லது கருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகை சரிவர பிரதிபலிக்கின்றனவா,இல்லையா என்பது இந்த கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா,இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது.பின்னர்,அறிதலினுடைய வளர்ச்சிப் போக்கில் இரண்டாவது கட்டம்.அதாவது உணர்விலிருந்து மீண்டும் பருப்பொருளுக்கு கருத்துகளிலிருந்து மீண்டும் வாழ்வுக்கும் செல்லும் கட்டம் வருகின்றது.இந்தக் கட்டத்தில் தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க,முதல் கட்டத்தில் ஈட்டப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது.பொதுவாகச் சொன்னால்,எவை வெற்றி பெருகின்றனவோ அவை சரியானவை ; எவை தோல்வியடைகின்றனவோ அவை பிழையானவை ;குறிப்பாக இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் இது உண்மையாகும்.சமுதாயப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சக்திகள் சில வேளையில் தோல்வியடைகின்றன;காரணம்,அவர்களுடைய கருத்துகள் தவறானவை என்பதல்ல; மாறாக ,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திகளின் சமநிலையில் தற்காலிகமாக முற்போக்கு சக்திகள் பிற்போக்கு சக்திகளைப் போல் அவ்வளவு பலம் பெற்றிருக்கவில்லை;எனவே அவை தற்காலிகமாக தோல்வியடைகின்றன.ஆனால் இன்றோ,நாளையோ அவை வாகை சூடுவது நிச்சயம்.அடுத்து,நடைமுறை சோதித்தல் மூலம் மனிதனுடைய அறிவில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்கின்றது.இந்த பாய்ச்சல் முன்னைய பாய்ச்சலிலும் பார்க்க முக்கியமானது.காரணம்,முதலாவது பாய்ச்சலில்,அதாவது பிறநிலை யதார்த்த உலகைப் பிரதிபலிக்கும் போக்கில் வகுக்கப்பட்ட கருத்துக்கள்,தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் ஆகியவற்றின் சரி பிழையை இந்த பாய்ச்சல் மட்டும் நிரூபிக்க முடியும்.இவை தவிர உண்மையை சோதித்தறியும் வழி வேறுகிடையாது.


பருப்பொருளிலிருந்து உணர்வுக்கும்,பின்னர் உணர்விலிருந்து பருப்பொருளுக்கும்,அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும்,பின்னர் அறிவிலிருந்து நடைமுறைக்கும் சொல்லும் போக்கு திரும்பத் திரும்பப் பல தடவை நிகழ்ந்த பின்னர் மாத்திரம் ஒரு சரியான அறிவுக்கு வரக்கூடிய நிலை அடிக்கடி ஏற்படுகின்றது.இத்தகையது தான் அறிவு பற்றிய மார்க்சிய தத்துவம் அறிவு பற்றிய இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவம்.

Saturday, 15 October 2011

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

“கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடு”,என்ற ஒற்றை கோரிக்கையுடன் இரண்டாவது கட்டப் போராட்டம் கூடங்குளத்தில்  நடைபெற்றுவருகிறது.முதற்கட்ட போராட்டம் போலல்லாது உண்ணாவிரதம் என்பதை தாண்டி அணுமின்நிலைய பணிகளை முடக்கும் வகையில், அங்கு வேலைக்கு செல்வோரை தடுப்பது,அணுமின்நிலையத்தை முற்றுகையிடுவது,சாலை மறியல் என போராட்டம் இறுக்கமடைந்து அடுத்தக்கட்டத்தை தொட்டுள்ளது.


இரண்டாவது கட்டப் போராட்டம்,போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு செல்வது ஆகியவை ’மாமா’ மன்மோகன் சிங்கின் தயவால்தான்! தலைநகரில் தமிழக அரசு பிரதிநிதிகளையும்,போராட்டக்குழு பிரதிநிதிகளையும் சந்தித்த ’மாமா’ மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என்று ’மாமா’க்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு பேசியுள்ளார்.

போராட்டக்குழுவினர் தமிழகம் வருவதற்குள்ளாகவே, கூடங்குளம் அணுமின்நிலையத்தை  திறப்பதற்கு உதவுமாறு ஜெயாவுக்கு கடிதமும் எழுதிவிட்டார்.இதன் மூலம் கூடங்குளம் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தி இருப்பதுடன்,போராட்டக்குழுவின் முகத்தில் கரியையும் பூசிவிட்டார்.இதை உடனடியாக புரிந்துகொண்ட போராட்டக்குழு அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

’மாமா’, ஜெயாவுக்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியை தொடங்கினால் 2000 மொகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யபடும் என்றும் இதில் தமிழகத்துக்கு 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்காவிட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்காமல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்றும் நைச்சியமாக எழுதியுள்ளார்.

இக்கடிதத்திற்கு பிறகு திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.இப்படி ஜெயா கூறி இருப்பதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா?,எந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பார்?,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கா அல்லது போராட்டக்குழுவிலிருந்து பிரிந்து வந்துள்ள பிரஜாதிபதிக்கு ஆசி வழங்கி இருக்கிறாரே அப்படிபட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்ப்போம்!


ஜெயா இப்படி பேசியிருப்பது மத்திய அரசோடும்,காங்கிரசோடும் தனக்குள்ள அரசியல் உறவு பற்றிய ராஜ தந்திர காய் நகர்த்தல்தான் ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்ட அறிவிப்பாகும்.

எது, எப்படி ஆயினும் இப்போராட்டத்தை கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.

உலக அளவில் அணுமின்சார உற்பத்தில் இந்தியா 15-வது இடத்தில் தான் உள்ளது.இந்தியா அணுசக்தியின் மூலம் 4780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.இது நாட்டின் மொத்த மின்சாரத்தேவையில் வெறுமனே 2.8 சதவீதம் மட்டுமே.

20 அணு உலைகளை கொண்டுள்ள இந்தியா ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 239 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.


ஆனால்,தனது நாட்டின் மொத்த மின் தேவையில் 74.12 சதவீதத்தை அணுமின்சாரத்தின் மூலம் பெறும் பிரான்ஸ் ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 916 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.இந்த நாடே ஜப்பானின் அணு உலை விபத்துக்கு பிறகு தனது நாட்டின் அணுமின்சார உற்பத்தியை விரைவில் பாதியாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.உலகின் பலநாடுகளும் இப்படி அறிவித்துள்ளன.


ஆனால் இந்தியாவோ இதற்கு நேர்மாறாக 2030-க்குள் 60 ஆயிரம் மெகாவாட்ஸ்  அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

உலக அளவில் காலாவதி ஆகிப்போன அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டும் ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாகத்தான் ’மாமா’ மன்மோகனும் இந்திய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக வாலாட்டுகின்றனர்.

அணு உலை விபத்து என்பது இயற்கை சீற்றங்களால் மட்டுமே ஏற்படும் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை இந்திய ஆட்சியாளர்கள் மக்களிடையே உருவாக்கப்பார்க்கிறார்கள்.இயற்கை சீற்றங்களால் ஏற்படும்  விபத்து எப்போதாவது ஏற்படுவது.ஆனால் பெரும்பாலான அணு உலை விபத்துகளும், அணு கசிவும் மனிதத்தவறுகளால் தான் ஏற்படுகிறது.


உலகில் உள்ள அனைத்து அணு உலைகளுமே மேம்படுத்தப்படாத பழமையான தொழிட்நுட்பத்தை கொண்டவைகள்தான்.அதிலும் ரஷ்யாவின் அணு உலை தொழிட்நுட்பம் தற்காப்பு திறனற்றதாகும்.இதனால் சிறு மனித தவறுகள் நேர்ந்தாலும் கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவுகொள்வதோடு.பல நூற்றாண்டுகளுக்கு கதிர்வீச்சின் அபாயத்தை எதிர்கொள்ளவும் நேரிடும்.
ஆகவே,கூடங்குளம் அணு உலை விவகாரம் அவ்வட்டார மக்களின் விவகாரம் மட்டுமல்ல.ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்தினால் ஐரோப்பா முழுவதுமே அணுக்கதிர்வீச்சு பரவியது.ஜப்பானின் அணு விபத்தின் மூலம் அணுக்கதிர்வீச்சு அமெரிக்காவிற்குள்ளும் பரவியுள்ளதாக செய்திகள் கூறிகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையில் ஏற்படும் விபத்து தமிழகம் கேரளம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுக்கவே அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ளது.

மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு போராட்டத்தை குறைந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும்.போராட்டத்தின் இறுக்கம் மட்டுமல்ல அதனோடு விரிவாக்கமும் சேரும் போதுதான் வெற்றிக்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது என்பதை போராட்டக்குழுவிற்கு இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!