விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Tuesday, 6 July 2010

மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.


மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.
 “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது, என்ற பழமொழி அது தோன்றிய போது நிலவிய உழவுத் தொழிலின் அவலத்தை மட்டுமல்ல,அக்காலசமூக அவலத்தையும் தன்னுள்ளே புதைத்து வைத்துள்ளது.இந்த அவலம் தோன்றுவதற்குரிய சமூக,அரசியல்,பொருளாதார அடிப்படைகளையும்,இந்த அவலத்தை எதிர்த்த அக்காலத்து மக்களின் உணர்வுகளையும்,எண்ணங்களையும் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத தேவையுள்ளது.
        எனென்றால் ஒவ்வொரு சமூகமும் அவற்றின் வளர்ச்சியும்,அவற்றுக்கிடையிலான தொடர்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வெவ்வேறானவைகள் அல்ல.ஒரு சமூக வளர்ச்சியின் தொடர்ச்சிதான் அடுத்த சமூகமாக உருவெடுக்கிறது.ஆகவே ஒன்று மற்றொன்றின் வாழ்விலும்,வளர்ச்சியிலும் தவிர்க்கவியலாத பாத்திரம் ஆற்றுகிறது.இவைகளைப் பற்றி தெளிவாக வரையறுத்து நாம் புரிந்து கொண்டால்தான் நிலவுகிற சமூகத்தின் அவலங்களையும்,அதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மால் உருவாக்கிகொள்ளமுடியும்.ஆகவே இன்றைய நமது விவசாயத்துறை அவலத்தையும் அதற்கான காரணங்களையும் அதைபற்றி நாம் வாழும் சமூகத்தின் மனப்போக்கையும்,இது எழுவதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்க,பண்டைய நமது சமூகத்தின் வரலாற்றில் இருந்து தொடங்கி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
        இதுவரை வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ்சமூகத்தின் வரலாற்றை கி.மு 200 இருந்து கி.பி 250 வரை சங்ககாலம் என வரையறுத்துள்ளனர்.வரலாற்று ஆய்வாளர்கள் தொகுத்துள்ள சங்ககால வரலாற்றில் இருந்து நாம் நாமது தேடலை தொடங்குவது தான் இப்போதைக்கு நமக்குள்ள ஒரே வழியாகும்.
        சங்ககாலம் என்று எடுத்துக்கொண்டால் இக்காலமக்களின் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை பற்றி அக்கால இலக்கியங்களில் இருந்து தான் தெளிவுபடுத்திகொள்ள வேண்டியிருக்கிறது.இக்காலத்தில் எழுதப்பட்ட எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவைகள் அக்கால சமூகமக்களின் வாழ்வை பதிவுசெய்துள்ளன. இக்காலம் புராதன பொதுவுடமை சமூகம் வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த காலமாகும்.இச்சமூகத்தின் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே இருந்துள்ளது.இதனால் விவசாயமே சமூகத்தில் மிக உயரிய தொழிலாக மக்களால் போற்றப்பட்டது.வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த இக்காலத்தில் இச்சமூகத்திற்கே உரிய ஏற்றதாழ்வுகள் இருந்துள்ளது.சமூகவளர்ச்சியின் விளைவாக பல்வேறு தொழில்கள் தோன்றி இதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் பல  பிரிவுகளாக இருந்துள்ளது.இந்தப்பிரிவுகளுக்கு இடையில் பலஏற்றதாழ்வுகள் இருப்பினும் ஒன்று மற்றொன்றை இழிவாக பார்க்கவில்லை.
ஒரே குடும்பத்தில் பல தொழில்களை செய்பவர்கள் இருந்துள்ளனர் என்பது அன்றைய சமூகத்தின் எதார்த்தமான நிகழ்வாக இருந்துள்ளது.புராதன பொதுவுடைமை சமூகத்தில் சமூக சொத்தாக இருந்த நிலங்கள் மேலை நாடுகளை போன்று தனியுடைமையாக மாறாமல் அதற்கு மாறாக அரசர்களிடம் வேறொரு வடிவில் சமூகசொத்தாக மாற்றப்பட்டது. இதனால் விளைபொருட்களை பங்கிட்டுக் கொள்வதில் ஆளுவோர்க்கும்,உழைப்பாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவைகள் பகை முரண்பாடுகளாக உருவெடுத்துவிடவில்லை.
        தமிழ்ச்சமூகத்தில் வர்க்கவேறுபாடுகள் வளர்ந்து வந்த சூழலில் தான் கி.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சமண,பவுத்த சமய பிரச்சாரகர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளனர்.இச்சமயங்கள் இரண்டுமே வட இந்தியாவில் பார்ப்பனியம் சமூகத்தில் எற்படுத்திய சகிக்க இயலாத, இழிவான ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை.ஒரு மனிதனின் பிறப்பின் அடிப்படையில் தான் அவனின் தொழிலும்,சமூகத்தகுதியும் தீர்மானிக்கப்படுகிறது என்ற பார்ப்பனிய கோட்பாட்டை அறிந்திராத தமிழ்ச் சமூகத்தில் அதற்கு எதிரான கோட்பாடுகளை உடைய சமண,பவுத்த கோட்பாடுகள்,தமிழ் மக்களை பெரிதும் கவரவில்லை.குலச்சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் பார்ப்பனிய கற்பனை கடவுளர்களுக்கு எதிராக கடவுள் மறுப்பு கொள்கையை போதித்த இம்மதக்கோட்பாடுகள், தம்மூதாதையர்களை தமது குலதெய்வங்களாக வணங்கிய தமிழ் மக்களிடம் தேவை அற்ற ஒன்றாகவே இருந்துள்ளது.மேலும் தமிழர்கள் சமயங்களை உருவாக்கிகொள்வதற்கான தேவைகள் சங்ககாலத்தில் உருவாகாததால் தமிழர்கள் சமயமற்றவர்களாகவே வாழ்ந்தனர்.தமிழ்ச்சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக உருவெடுக்காத போதும்,நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வுஎதையும் இச்சமயங்கள் வைக்கவில்லை.இது போன்ற காரணங்களால் சமண,பவுத்த சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்கு பெறமுடியவில்லை.
        சமண,பவுத்த சமயங்களுக்கு பின்னர் தமிழ்ச்சமூகத்தில் ஊடுறுவிய பார்ப்பனியம் அன்றையப் ஆளும்வர்க்கத்தால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.உயிர்வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் அரசர்களுக்கே சொந்தமாக இருந்ததால் சாதி,தீண்டாமை ஆகிய பார்ப்பனியத்தை கடைபிடிக்க தமிழ்மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.இதன்மூலம் தமிழ்ச்சமூகத்தில் வேறேப்போதும் இல்லாத சுரண்டலும்,ஒடுக்குமுறையும்,இழிவுபடுத்தலும் பெரும்பான்மை மக்களாகிய உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டது.சமூகம் முழுமையும் பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்மக்கள் கூறுபோடப்பட்டனர்.வர்க்கமுரண்பாடுகள் எந்த அளவிற்கு சமூகத்தில் வளரதொடங்கியதோ அந்த அளவிற்கு சொத்துடைமை வர்க்கத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் உருவெடுத்தது.இப்போதுதான் சமண,பவுத்த சமயங்களின் கோட்பாடுகள் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களுக்கு அதாவது பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்தமாக இவைகள் உருவெடுத்தன.இதே அளவுக்கு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாகிய அரசு வேறெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் கருவியாக தன்னை வளர்த்துக்கொண்டது.இச்சூழலின் தேவையை ஒட்டி அக்காலசமூகத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகத்தான் திருவள்ளுவரின் திருக்குறல் அமைந்துள்ளது.
        இந்த அடிப்படையில் தான் திருக்குறலில் உள்ள உழவு என்ற அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.உழவுத்தொழிலின் மேன்மையையும், உழவர்களின் மேன்மையையும் திருவள்ளுவர் புகழ்ந்து போற்றுவதில் இருந்தே உழவையும்,உழவனையும் இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் சமூகத்தில் நிலவியுள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.உழவையும்,உழவனையும் இழிவாகபார்க்கும் கண்ணோட்டத்தை பார்ப்பனிய கோட்பாடுகளே சமூகத்தில் உருவாக்கியது.இந்த வரையறுப்பின் அடிபடையில் தான் சங்ககால தமிழ்ச்சமூகத்தின் பிற்பகுதி சாதிய வெறுபாடுகளால் இழிந்து போனது.
        ஆளுவோரின் சித்தாந்தமாக பார்ப்பனியம் மாறி அது உழவையும்,உழவனையும் இழிவானவைகளாக ஆக்கியது.இதன் நோக்கம் உழைப்பாளிகளிடம் இருந்து உழைப்பின் பலன்களை அபகரிப்பது தான்.அக்காலச்சமூகத்தில் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே விளங்கியதோடு அரசர்களின் செல்வ செழிப்பிற்கான ஊற்றுகண்ணாகவும் விளங்கியது.அதோடு பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தவும்,நிலைப்படுத்தவும் நிலங்களே பார்ப்பனர்களுக்கும்,அரசர்களுக்கும் சிறந்த கருவியாகவும் பயன்பட்டது.இதனால் உழவையும்,உழவனையும் பார்ப்பனியம் இழிவாக ஆக்கிய போதும் அதை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தமும்,கட்டாயமும் அரசர்களுக்கு இருந்தது.
        நிலங்கள் அனைத்தும் அரசர்களுக்கே சொந்தமாக இருந்தது. அவற்றை தாம் விரும்பிய தனக்கு நம்பகமான ஆட்களிடம் மட்டுமே பயிரிட தந்தனர். இந்த நிலங்களை நம்பியே பெரும்பான்மை மக்கள் வாழ்ந்ததும் அரசர்களின் தேவைகளை,விருப்பங்களை மீறுகிறபோது,மீறுகிறவர்கள் தமது வாழ்க்கைகான ஆதாரத்தை-உழைப்பதற்கான உரிமையை இழக்க வேண்டியதாகியது.ஒவ்வொரு கிராமமும் சுயதேவை உடைய கிராமமாகவும் உழவுத் தொழிலோடு பிற கைத்தொழில்கள் இணக்கமாக இருந்ததும், சமூகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவரவர் சாதியின் அடிப்படையில் வேலை உத்திரவாதம் செய்யப்பட்டு இருந்ததாலும்,யாரும் இதில் இருந்து தப்பிச் சென்று இதற்கு வெளியில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பில்லை.இதுதான் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் உயிர்வாழ்வதற்கான அடிப்படையாக இருந்துள்ளது.
        சங்ககால சோழமன்னர்களில் சிறந்தவனாக கருதப்படும் கரிகால் சோழன் காவிரிக்கு கரை எடுத்தததும்,கல்லணை கட்டி உழவுத்தொழிலை மேம்பாடடைய செய்ததும் இதன் அடிப்படையில தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
        சங்ககாலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியம் தன்னை வலுப்படுத்தி கொண்டு மொத்த சமூகத்தையும் சாதிய சமூகமாக மாற்றியமைத்தது.பார்ப்பனியம் அன்றாட வாழ்ககை முறையாக்கப்பட்டது.உழைப்பாளர்களான சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும்,சொத்துரிமை உட்பட அனைத்து உரிமைகளும் இல்லாதவர்களாகவே ஒடுக்கப்பட்டு இருந்தனர்.இவர்களால் உருவாக்கப்படும் செல்வம் அனைத்தையும் நிலஉடைமையாளர்களே அபகரித்துக்கொண்டு அனுபவித்தனர்.உழைப்பாளிகளோ முழு அடிமைகளாக்கப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு பார்ப்பனிய இழிவை ஏற்று கொண்டு உயிர்வாழும் உரிமை மட்டுமே தரப்பட்டு இருந்தது.உழைப்பாளர்களின் உழைப்பை முற்றாக அபகரித்து வாழ்ந்த நில உடைமையாளர்களோ செல்வ செழிப்போடு வாழ்ந்தனர்.ஆகவே இச்சமூகத்தில் சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும் நிலம்,விளைச்சல் ஆகியவற்றில் எவ்வித உரிமையும் அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்ததால் இதில் கணக்கு பார்க்க வேண்டிய தேவை எதுவும் அவர்களுக்கு எழவாய்ப்பில்லை.அதே நேரத்தில் நில உடைமையாளர்கள் தாம் விரும்பிய அளவிற்கு மட்டுமே உழைப்பாளர்களுக்கு கூலியாக தந்துள்ளனர்.நில உடைமையாளர்கள் எவ்விடத்திலும் நிலத்திலோ,விளைச்சலிலோ தமது பங்காக உழைப்பெதையும் செலுத்தாத போது இவர்களுக்கு இழப்பு எற்படுவதற்கான அடிப்படைக் காரணம் ஏதும் இல்லை.வெள்ளம்,வறட்சி,போர் ஆகியவற்றால் உழவு தொழிலில் இழப்பு எற்பட்டாலூம் அதுவும் உழைப்பாளர்களின் உழைப்புக்கு ஏற்பட்ட இழப்பே தவிர நில உடைமையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பல்ல. ஆகவே உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது என்ற பழமொழி சங்ககாலத்தில் எழுவதற்கான அடிப்படை ஏதுமில்லை என்பது தெளிவாகிவிடுகிறது!. தொடரும்..................

1.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I!http://suraavali.blogspot.com/2010/06/blog-post_16.html

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

baskar said...

இன்றைய சமூக அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் போக்க பொருள்முதல்வாத வரலாற்று பார்வை அவசியம் என்பதையும், அறிதற்க்கரிதான செய்திகளை தொகுத்து வழங்கியமைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும். இருப்பினும் தாங்கள் எழுதுவது மாக்சிய அறிமுகம் உள்ளோரை நோக்கி மட்டும் அல்லாமல் அனைவரையும் நோக்கியது என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இருக்க புராதன பொதுவுடமை சமூகம், வர்க்கசமூகம்,வர்க்கமுரண்பாடுகள், வர்க்கவேறுபாடுகள், ஒரு சமூகத்தில் இருந்து அடுத்த சமூகம் போன்ற சொற்பதங்கள் மார்சிய அறிமுகமற்ற நண்பர்களுக்கு புரிந்துகொள்ள சிரமமானதகவே இருக்கும் என கருதுகிறேன். கட்டுரையின் சாரத்தை புரிந்து கொள்ள அவசியமான சமூகம் மற்றும் வர்க்கம் குறித்து நட்சத்திர குறியிட்டு சிறுகுறிப்பாவது கொடுத்திருக்கலாம். மேலும் தம்மூதாதையர்களை தமது குலதெய்வங்களாக வணங்கியமை, சமண,பவுத்த சமய பிரச்சாரகர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தது,சமண,பவுத்த சமயங்களுக்கு பின்னர் தமிழ்ச்சமூகத்தில் ஊடுறுவிய பார்ப்பனியம் அன்றையப் ஆளும்வர்க்கத்தால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது, வர்க்கமுரண்பாடுகள் வளரதொடங்கியபின் சமண,பவுத்த சமயங்களின் கோட்பாடுகள் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களுக்கு அதாவது பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்தமாக இவைகள் உருவெடுத்தல் போன்றவற்றிக்கு இலக்கிய சான்றுகளாக உள்ள வரிகளை சான்றுகளாக கொடுப்பதன் மூலம் கட்டுரையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கலாம் ஏனெனில் வரலாறு பார்பனர்களால் திரித்து கூறப்பட்டு அதனை நம்பிக்கொண்டிருக்கும் சமூகத்தை நோக்கி வரலாற்றை சொல்லமுனைந்திருப்பதால் அது அவசியமானது என கருதுகிறேன். இறுதியாக தங்களின் எழுத்துநடை ஏட்டில் உள்ள மார்சியத்தை வெளிக்கொணரும் நடையில் இல்லாதது வருத்தத்தையும் வேதனையையும் கொள்ளவைக்கிறது .

கபிலன் said...

மேலும் தமிழர்கள் சமயங்களை உருவாக்கிகொள்வதற்கான தேவைகள் சங்ககாலத்தில் உருவாகாததால் தமிழர்கள் சமயமற்றவர்களாகவே வாழ்ந்தனர்.

இது சரியான கருத்து அல்ல. ஆரிய வருகைக்கு முன்னரே இந்தியாவில் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. ஹரப்பா, மொஹஞ்சிதாரோ கல்வெட்டுகளில் பசுபதியை(சிவபெருமான்) மக்கள் வணங்குவதாக இருக்கிறது. அவர்கள் பூர்வக்குடி மக்கள். ஆனால், தமிழ்மக்களா என்பது இன்னும் தெரியவில்லை.ஆக, ஆரியர்களின் கடவுளாக விஷ்ணுவும், திராவிடர்களின்(தமிழனின்) கடவுளாக சிவனும் இருந்திருக்க வேண்டும். ஆகையால் தான், சிவபக்தனான ராவணனை, விஷ்ணுவான ராமன் வதம் புரிந்ததாக ஆரிய புராணங்கள் சொல்கின்றன.

அதனால், தமிழர்கள் சமயமற்றவர்களாக இருந்தனர் என்பது தவறு. இன்னும் சொல்லப் போனால், ஹிந்து சமயத்தை, ஆரிய வருகைக்கு முன்னரே கடைப்பிடித்தவர்கள் திராவிடர்கள்.