விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Wednesday, 23 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1


இந்தத் தலைப்பைப் படித்தவுடனே பலருக்கும் வியப்பையும் ஆச்சரியத்தையும் சிலருக்கு ஆத்திரத்தையும் கூட ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம்.உண்மை கசக்கத்தான் செய்யும்.வேறு வழியில்லை இதை பற்றி நாம் விவாதிப்பதைத்தவிர!. இப்படி செய்வது நம்மை நாமே புண்படுத்திக்கொள்வதற்காக அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இதைப்பற்றி பரிசீலிக்காமல் இருந்ததும், இருப்பதுமே தோல்விகள் தொடர்கதையாவதற்கு காரணமாகும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களாகினும்,இன்றைய இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களாயினும்,ஈழம் முதல் உலகில் எந்த பாகத்தில் வாழும் தமிழனும் நிம்மதியாக வாழ்ந்ததாகவோ,வாழ்வதாகவோ நாம் அறிந்தவரையில் ஆதாரம் ஏதுமில்லை.

தமிழர்களின் தோல்வியின் வரலாறு 1500 ஆண்டுகால பழமையானது.இப்படி 1500 ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்த நாம் இன்றுவரை அதிலிருந்து மீண்டெழவேயில்லை.தோல்வியே தொடர்கதையாகிப்போனது நமக்கு! இந்த நீண்ட நெடிய காலத்தில் நாம சந்தித்த தோல்விகள் கூறித்து தந்தை பெரியாரைத்தவிர வேறு யாரும் பரிசீலித்ததாக தெரியவில்லை.ஆனால்,அவரின் பரிசீலனையும்,செயல்பாடும் கூட அவரின் காலத்திலேயே, அவரின் கண் முன்னாலேயே மீண்டும் ஒரு தோல்வியை தழுவிக்கொண்டுவிட்டது.

1500 ஆண்டுகளுக்கு முன் நாம் தோல்வி அடைந்ததற்கு எது காரணமோ ,அடிப்படையோ அதுதான் இன்றுவரை நமது தோல்விகளுக்கு அடிப்படையும், காரணமும் ஆகும்.உலகில் இந்த நீண்ட நெடியகாலத்தில் ஆயிரமாயிரம்  மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், நமது தோல்விக்கான அடிப்படையில் மட்டும் இன்றுவரை மாற்றமேதும் இல்லை.இது வியப்பையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம்.இது இயங்கியலுக்கு புறம்பானதாகவும் கூட நீங்கள் கருதலாம்.மேலோட்டமாக பார்க்கும் போது, இது அப்படித்தான் தோன்றினாலும் நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும் போது இதுவே உண்மையாக உள்ளது.

சமூகம்,பொருளாதாரம்,பண்பாடு,நாகரீகம் ஆகிய துறைகளில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை இன்றைய நிலையோடு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்.ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நமது வினையாற்றல்களின் விளைவாக உருவான,உருவாக்கப்பட்ட மாற்றங்கள் இல்லை.இவைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்களால்,செலுத்துபவர்களால் அவர்களின் தேவைக்கும்,நலன்களுக்கும் உகந்தவாறு திணிக்கப்பட்ட,திணிக்கப்படும் மாற்றங்களாகும்.

மாற்றங்கள் திணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவைகள் என்பதால், இந்த மாற்றங்களை நம்மீது திணித்தவர்களின் தேவையும்,நலன்களுமே பிரதானமானது என்பதால், அதனால் ஏற்பட்ட வளர்ச்சியும்,மாற்றங்களும் இயற்கையானதாக அமையவில்லை.அதற்கு மாறாக நான்குதலை,எட்டு கைகளும் உடைய பார்ப்பன கடவுள்களை போன்றும்,ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் விசித்திரமான உருவங்களை போன்றும் விகாரமாக, இயற்கைக்கு புறம்பானதாக காட்சித்தருகிறது.
உடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அளவுக்கு, இச்சமுக மாற்றம் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கவில்லை.1500 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்ட தோல்விக்கு பின்னர் நம்மீது திணிக்கப்பட்ட பண்பாடும்,வாழ்வியலும் வடிவமாற்றத்தை கண்டிருக்கிறதே அன்றி,அவைகள் மறைந்து போய்விடவில்லை.மேலும், மேலும் அவைகள் தமக்கே உரித்தான வகையில் நேர்மையற்ற முறையிலும்,கூர்மையாகவும் மாற்றம் அடைந்துள்ளன.

எனவே,இவைகளைப்பற்றி நன்கு பரிசீலித்து ,ஆய்வுக்குட்படுத்தி அவற்றை அடையாளம் காணும்போதுதான், அவைகளை தூக்கி எறிவதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.ஆகவே,இனி அவற்றைப் பற்றி முடிந்தவரையில் கூர்மையாகவும்,அதே நேரத்தில் சுருக்கமாகவும் பரிசீலிப்போம்.இந்தப் பரிசீலனை நாம், நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தமிழர்களின் வரலாற்றில் வசந்தகாலமாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் காலம் சங்க காலமேயாகும்.இக்காலம் தமிழர்களின் வாழ்வில் வசந்தகாலமாக விளங்கியதற்கான அடிப்படைகளைப்பற்றி, அதற்கு பிந்தைய நமது வாழ்வியலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது சங்கக்காலத்தில் நாம் இன்றுள்ள பார்ப்பனிய சாதி மதமற்று வாழ்ந்த வாழ்வியலே அடிப்படை என்பதை நம்மால் அறிய முடிகிறது.மதமும்,சாதியும் ஏற்படுவதற்குரிய சமூக அடிப்படையேதும் சங்கக்காலத்தில் தமிழ் சமூகத்தில் எழவில்லை.இதே நிலை நமக்கு மட்டுமல்ல விந்திய மலை கடந்த, இன்றைய வட இந்தியாவிற்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது.

சாதியும்,மதமும் இச்சமூகங்களில் இல்லாததால் அக்காலகட்டத்தில் இச்சமூகங்களின் வாழ்வு மனிதகுல வாழ்வின் ஆரம்ப நிலையிலும் இல்லை.உலகில் ஏனைய சமூகங்களைப் போன்றே இயற்கையான வளர்ச்சியை உள்ளடக்கியே இருந்துள்ளது.இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் சங்ககாலத்தைப் போன்று வடக்கே ஹரப்பா,மொகஞ்சதாரோ ஆகிய நாகரிங்கள் உள்ளன.

அதன் பின்னர் ஆரிய வருகை அதற்கெதிரான பூர்வகுடி மக்களின் போராட்டம் ஆகியவற்றில் பூர்வகுடி மக்களின் தோல்வி,இனக்கலப்பு ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னரே பார்ப்பனிய பண்பாடு,நாகரீகம்,சமூக வாழ்வியல் ஆகியவை தோல்வியடைந்த பூர்வகுடி மக்கள் மீது வெற்றியாளர்களின் திணிப்பாக அமைந்தது.

ஆனால் இந்த ஆரிய வெற்றியாளர்களின்  திணிப்பு  விந்திய மலைக்கு வடக்கில் நடந்ததேயன்றி தெற்கே நிகழவில்லை.ஆரியம் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பார்ப்பனியமாக வளர்த்தெடுக்கப்பட்டு, விந்திய மலைக்கு வடக்கே ஆழ வேரூன்றி, நிலைப்பெற்றது. இன்றைய வட இந்திய மக்களிடையே நிலைநாட்டப்பட்டுள்ள பார்ப்பனிய வாழ்வியலும்,பண்பாடும் ஆரிய வருகைக்கும், அதன் வெற்றிக்கும் எது சவாலாகவும்,இடையூறாகவும் அமைந்திருந்ததோ அது மீண்டும் ஒரு முறை நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

அதாவது ஆரிய வெற்றிக்கு சவாலை ஏற்படுத்தியது அன்றைய வட இந்திய பூர்வகுடி மக்களின் சாதி,மத மற்ற வாழ்க்கையும் அதனால் அவர்களிடையே ஆழ நிலைபெற்றிருந்த ஒற்றுமை உணர்வும்தான்.இவற்றை தகர்த்தெரியும் உள்ளடக்கத்துடனேதான் பார்ப்பனியம் உருவாக்கப்பட்டது.
பார்ப்பன மதமும் அதன் நடைமுறை வடிவமாக சாதியும் உருவாக்கப்பட்டு, அவைகள் சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.இந்த மாற்றங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக படிப்படியாக உருவாக்கப்பட்ட மாற்றங்களாகும்.இவைகள் , இவைகளை உருவாக்கியவர்களின் நோக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்த்ததைவிட மேலும் கூடுதலான பலனைத்தந்தது.மக்களிடையேயான ஒற்றுமை உணர்வும்,தன்மானமும் முற்றாக துடைத்தெறியப்பட்டது.

மக்கள் சாதியாக கூறுபோடப்பட்டு ,ஒவ்வொரு சாதியும் கீழிருந்து மேலாக,ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு நெருக்கமான கட்டமைப்பாக்கப்பட்டது.இதற்கு இசைவான முறையில் ஒன்றின் வாழ்வு,இன்னொன்றை சார்ந்ததாகவும்,இந்த சார்புத்தன்மை, ஒன்றின் வாழ்வை மற்றவை பாதிக்ககூடியதாகவும், இவைகளை ஏற்க மறுத்தால் அதற்கு வெளியில் வாழ முடியாத சூழலும் உருவாக்கப்பட்டது.

அதாவது அன்றைய வாழ்வின் அடிப்படையான நிலங்கள் அனைத்தும் மன்னனுக்கு சொந்தமானதாகவும்,இந்த கட்டமைப்பை ஏற்பவர்கள் மட்டுமே இதைச்சார்ந்து வாழ அனுமதிக்கப்பட்டதாலும்,இதை எதிர்த்து முறியடிப்பதற்கு தடையாக சாதி மக்களை கூறுப்போட்டுவிட்டதாலும் அதை ஏற்பதைத் தவிர மக்களுக்கு வேறுவழியில்லை.
மேலே விவரிக்கப்பட்ட வாழ்வியல் முறையும், அதற்குரிய அடித்தளமும் உருவாக்கப்பட்டு சமூக வாழ்வியலாக நிலைநாட்டப்பட்டது.

இப்படி வெற்றியடைந்த பார்ப்பனியத்தை எதிர்த்துதான் சாங்கியம்,சமணம்,பெளத்தம் ஆகிய வாழ்வியல் முறைகள் வட இந்தியாவில் உருவாகின.ஆனால் அவைகளும் தான் போதித்த, பார்ப்பனியத்தை எதிர்த்த வாழ்வியல் முறையை நிலைநாட்டுவதற்கான சமூக அடித்தளமின்மையால் நாளடைவில் பார்ப்பனியத்தால் உள்ளிருந்தே செரிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டது.

இப்படி வட இந்தியாவில் பார்ப்பனியம் வெற்றிக்கொடி நாட்டினாலும்,அது விந்திய மலைக்கு தெற்கில் நிகழவில்லை.பிற்காலத்தில் தெற்கில் ஊடுறுவிய பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களிடையே பார்ப்பனியத்தை நிலைநாட்டினார்கள்.படிப்படியாக ஊடுறுவிய பார்ப்பனர்களும்,பார்ப்பனியமும் அரசுகளின் செல்வாக்கை பெற்றனர்.

வடக்கில் பூர்வகுடி மக்களை வெற்றிக்கொண்டதால், தாம் உருவாக்கிய பண்பாட்டை மக்கள் மீது வெற்றியாளர்களுக்குரிய அதிகாரத்தின் மூலம் நிர்பந்தமாக திணித்தனர்.ஆனால் அதே பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் தெற்கே ஊடுறுவல்காரர்கள் என்பதால் தமது பண்பாட்டை ஆட்சியாளர்கள் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகாரணமாக தமது அணுகுமுறையை அதற்கேற்ப அமைத்துக்கொண்டனர்.

எனவே தெற்கே இவர்களின் அணுகுமுறை நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.இவற்றைக்கொண்டு ஆட்சியாளர்களின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

இவைகளினால் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகளையும்,மாற்றங்களையும் அவைகள் தென்னிந்திய பிரதேசங்களில் ஒரே சீரான விளைவுகளை ஏற்படுத்தியதா? அல்லது அவைகளில் ஏற்றாத்தாழ்வுகள் ஏதேனும் உண்டா? அவைகள் என்னென்ன என்பதைப் பற்றி அடுத்தத்தொடரில் பார்ப்போம்…..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ஆத்மா said...

பதிவு கொஞ்சம் அதிகமா இருக்கு படிச்சிட்டு வாரன் பொருத்துக்கோங்கோ...