விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Saturday, 15 October 2011

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

“கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடு”,என்ற ஒற்றை கோரிக்கையுடன் இரண்டாவது கட்டப் போராட்டம் கூடங்குளத்தில்  நடைபெற்றுவருகிறது.முதற்கட்ட போராட்டம் போலல்லாது உண்ணாவிரதம் என்பதை தாண்டி அணுமின்நிலைய பணிகளை முடக்கும் வகையில், அங்கு வேலைக்கு செல்வோரை தடுப்பது,அணுமின்நிலையத்தை முற்றுகையிடுவது,சாலை மறியல் என போராட்டம் இறுக்கமடைந்து அடுத்தக்கட்டத்தை தொட்டுள்ளது.


இரண்டாவது கட்டப் போராட்டம்,போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு செல்வது ஆகியவை ’மாமா’ மன்மோகன் சிங்கின் தயவால்தான்! தலைநகரில் தமிழக அரசு பிரதிநிதிகளையும்,போராட்டக்குழு பிரதிநிதிகளையும் சந்தித்த ’மாமா’ மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என்று ’மாமா’க்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு பேசியுள்ளார்.

போராட்டக்குழுவினர் தமிழகம் வருவதற்குள்ளாகவே, கூடங்குளம் அணுமின்நிலையத்தை  திறப்பதற்கு உதவுமாறு ஜெயாவுக்கு கடிதமும் எழுதிவிட்டார்.இதன் மூலம் கூடங்குளம் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தி இருப்பதுடன்,போராட்டக்குழுவின் முகத்தில் கரியையும் பூசிவிட்டார்.இதை உடனடியாக புரிந்துகொண்ட போராட்டக்குழு அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

’மாமா’, ஜெயாவுக்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியை தொடங்கினால் 2000 மொகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யபடும் என்றும் இதில் தமிழகத்துக்கு 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்காவிட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்காமல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்றும் நைச்சியமாக எழுதியுள்ளார்.

இக்கடிதத்திற்கு பிறகு திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.இப்படி ஜெயா கூறி இருப்பதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா?,எந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பார்?,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கா அல்லது போராட்டக்குழுவிலிருந்து பிரிந்து வந்துள்ள பிரஜாதிபதிக்கு ஆசி வழங்கி இருக்கிறாரே அப்படிபட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்ப்போம்!


ஜெயா இப்படி பேசியிருப்பது மத்திய அரசோடும்,காங்கிரசோடும் தனக்குள்ள அரசியல் உறவு பற்றிய ராஜ தந்திர காய் நகர்த்தல்தான் ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்ட அறிவிப்பாகும்.

எது, எப்படி ஆயினும் இப்போராட்டத்தை கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.

உலக அளவில் அணுமின்சார உற்பத்தில் இந்தியா 15-வது இடத்தில் தான் உள்ளது.இந்தியா அணுசக்தியின் மூலம் 4780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.இது நாட்டின் மொத்த மின்சாரத்தேவையில் வெறுமனே 2.8 சதவீதம் மட்டுமே.

20 அணு உலைகளை கொண்டுள்ள இந்தியா ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 239 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.


ஆனால்,தனது நாட்டின் மொத்த மின் தேவையில் 74.12 சதவீதத்தை அணுமின்சாரத்தின் மூலம் பெறும் பிரான்ஸ் ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 916 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.இந்த நாடே ஜப்பானின் அணு உலை விபத்துக்கு பிறகு தனது நாட்டின் அணுமின்சார உற்பத்தியை விரைவில் பாதியாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.உலகின் பலநாடுகளும் இப்படி அறிவித்துள்ளன.


ஆனால் இந்தியாவோ இதற்கு நேர்மாறாக 2030-க்குள் 60 ஆயிரம் மெகாவாட்ஸ்  அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

உலக அளவில் காலாவதி ஆகிப்போன அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டும் ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாகத்தான் ’மாமா’ மன்மோகனும் இந்திய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக வாலாட்டுகின்றனர்.

அணு உலை விபத்து என்பது இயற்கை சீற்றங்களால் மட்டுமே ஏற்படும் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை இந்திய ஆட்சியாளர்கள் மக்களிடையே உருவாக்கப்பார்க்கிறார்கள்.இயற்கை சீற்றங்களால் ஏற்படும்  விபத்து எப்போதாவது ஏற்படுவது.ஆனால் பெரும்பாலான அணு உலை விபத்துகளும், அணு கசிவும் மனிதத்தவறுகளால் தான் ஏற்படுகிறது.


உலகில் உள்ள அனைத்து அணு உலைகளுமே மேம்படுத்தப்படாத பழமையான தொழிட்நுட்பத்தை கொண்டவைகள்தான்.அதிலும் ரஷ்யாவின் அணு உலை தொழிட்நுட்பம் தற்காப்பு திறனற்றதாகும்.இதனால் சிறு மனித தவறுகள் நேர்ந்தாலும் கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவுகொள்வதோடு.பல நூற்றாண்டுகளுக்கு கதிர்வீச்சின் அபாயத்தை எதிர்கொள்ளவும் நேரிடும்.
ஆகவே,கூடங்குளம் அணு உலை விவகாரம் அவ்வட்டார மக்களின் விவகாரம் மட்டுமல்ல.ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்தினால் ஐரோப்பா முழுவதுமே அணுக்கதிர்வீச்சு பரவியது.ஜப்பானின் அணு விபத்தின் மூலம் அணுக்கதிர்வீச்சு அமெரிக்காவிற்குள்ளும் பரவியுள்ளதாக செய்திகள் கூறிகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையில் ஏற்படும் விபத்து தமிழகம் கேரளம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுக்கவே அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ளது.

மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு போராட்டத்தை குறைந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும்.போராட்டத்தின் இறுக்கம் மட்டுமல்ல அதனோடு விரிவாக்கமும் சேரும் போதுதான் வெற்றிக்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது என்பதை போராட்டக்குழுவிற்கு இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கூடல் பாலா said...

போராட்டம் கேரளாவை எட்டவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதுதான் ...இந்நேரத்தில் கேரளாவையும் போராட்டம் எட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் .தற்போதைய நிலவரப்படி போராட்டத்தில் தினமும் சுமார் 200 மலையாளிகள் பங்கெடுத்து வருகிறார்கள் .முக்கியமாக இதே அணு உலையை கேரளத்தில் அமையவிடாமல் தடுத்த போராட்டக்குழு இங்கு வந்துள்ளது ....

SURYAJEEVA said...

தங்கள் உணர்வு சரியானதே, இனைய ஊடகம் மட்டுமே இவ்விஷயத்தில் சரியான தகவல்களை சேர்த்த வண்ணம் உள்ளது.. இடையில் அதையும் கெடுக்க நாலு பேர் இருக்க தான் செய்கிறார்கள்... பணம் எதிர்காலத்தை மறைக்கிறது.. அவ்வளவே