சமச்சீர்கல்வி விவகாரத்தில் வினவும் அதன் தோழமை அமைப்புகளும்,எப்படியெல்லாம் முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது என்பதையும் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிகொண்டுள்ளது என்பதையும் பாகம்-4 வரை எழுதியுள்ளோம்.இறுதியாக புதிய ஜனநாயகம் இதழ் தமது தோழமை அமைப்பான மக இக-வின் புதிய கலாச்சாரத்தோடும் மட்டுமல்ல தனக்குள்ளேயே முரண்பட்டு நிற்கிறது என்பதை சென்றத் தொடரில் எழுதியிருந்தோம்.சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற எமது முதலாவது கட்டுரையில் “ஜெ தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் காலாகாலமும் தாம் அனுபவித்துவரும் சுகபோகங்கள்,இனிஎக்காலத்திலும் கேள்விகளுக்கு இடமில்லாமல் தொடரவேண்டும் என்ற பேராசை,அகம்பாவம் அதன் கண்ணை மறைக்க கார்ப்பரேட் மூலதனத்துடன் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது.இப்படி மண்ணைக் கவ்வுவது ஒன்றும் பார்ப்பனக்கும்பலுக்கு புதியது அல்ல.காலனி ஆட்சிகாலத்திலேயே,தான் காலாகாலமும் அனுபவித்து வந்த மனுதரும குலக்கல்விக்கு எதிரான,ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்கலே கல்வி முறையை எதிர்த்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் காலனி ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வியை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது,என்று தெரிந்தவுடன் தான் கீழே விழுந்த அதே வேகத்தில்,மெக்காலே கல்வியை தனதாக்கிகொண்டது.தற்போதும் பார்ப்பனக்கும்பல் சமச்சீர்கல்வியை எதிர்த்து மண்ணைக் கவ்வினாலும்,கீழே விழுந்த அதே வேகத்தோடு அதை தமதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”,என்று எழுதியிருந்தோம்.நாங்கள் எமது கட்டுரையில் மாக்சிய இயங்கியலின் அடிப்படையில் முன்னறிந்து கூறிய படியே ஜெயா தலைமையிலான பார்ப்பன கும்பல், ”சமச்சீர்கல்வியை தான் எதிர்க்கவில்லை என்றும்,அது தற்போது தரமற்றதாக அதாவது அப்பாடநூல்கள் தரமற்றவைகளாக உள்ளன.அதை மேம்படுத்தவே சமச்சீர்கல்வி நடைமுறையை இவ்வாண்டு தான் நிறுத்திவைத்ததாகவும் ஆனாலும் சமச்சீர்கல்வியை இந்தகல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,எனது அரசு இந்த ஆண்டே அதை நடைமுறைப்படுத்தும். சமச்சீர்கல்வி என்பது பொது பாடநூல்கள் மட்டுமல்ல,அதற்கு தேவையான அடிப்படைகட்டுமான வசதிகள்,மற்றும் ஏனைய வசதிகளை உருவாக்கித் தரவேண்டும்,இந்த அடிப்படையான வசதிகளை இந்த ஆண்டே உருவாக்க எனது அரசு ஏனைய துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியாக ரூபாய் 1082.75 கோடியை ஒதுக்கியுள்ளதாக”, தற்போது நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
இந்த நிதியைக்கொண்டு அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கூடுதல் வகுப்பறைகள்,கழிப்பறை வசதி,குடிநீர்வசதி,சுற்றுச்சுவர் ஆகியவை உருவாக்கப்படும்,ஆசிரியர்பற்றாக்குறையை போக்க 30,036 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்,மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வைபோக்க ஒரேமாதிரியான புத்தகப்பைகள்,கணித உபகரணப்பெட்டி வழங்கப்படும்.இதோடு மாணவர்களுக்கு தனியார்பள்ளிகளை போன்று செயற்கைகோள் உதவியுடன் கணிணி மூலம் கற்பிக்கப்படும்.மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்த பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்.மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க கல்விமுறை முப்பருவமாக மாற்றம் செய்யப்படும்”, என்று மிகவும் ஆரவாரமாக அறிவித்துள்ளார்.
மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் சமச்சீர்கல்வியை ரத்து செய்து, உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பள்ளிகள் திறந்து இரண்டு மாத காலமாக புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு சென்று வந்த,மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும்,தான் சம்பாதித்துக் கொண்ட வெறுப்பை இல்லாமல் செய்துவிடுவதோடு,சமச்சீர் கல்வி நடைமுறையை தமதாக்கி கொள்ளவும்,அதனால் கிடைக்கும் அனைத்து நலனையும் தமதாக்கி கொள்ளவும் முயற்சிக்கிறார்.
இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் தான் அனுபவித்து வரும் சுகபோகங்களுக்கு பாதகம் வராமல் தடுத்துவிடுவதோடு,சமச்சீர்கல்வி மூலமும் தமது நலன்களைக் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.என்னதான் சமச்சீர்கல்வி மூலம் அனைத்து மாணவர்களும்,ஒரேவிதமான கல்வியை பெற்றாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க போதுமான ஆசிரியர்களை நியமித்தாலும்,அப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்களை,அவர்களை தெரிவுசெய்யும் போது அதிகாரவர்க்கத்தின் மூலம் அவர்களுக்கு தரப்படும் சிரமங்கள் மூலம், அதாவது நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் தாங்கள் நியமனம் பெறுவதற்காக அரசின் செல்வாக்குள்ள நபர்களின் சிபாரிசு,அதிகாரவர்க்கத்தின் மூலம் அளிக்கும் லஞ்சம் ஆகிய நிர்வாக ரீதியான வழிமுறைகள், புதிதாக நியமிக்க படும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 4000 இருந்து 5000 வரை மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பும்,புதிய ஆசிரியர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையும் முற்றாக துடைத்தெரிந்து விடும்.இதனால் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கும் திறன் தற்போது நிலவுவதைக்காட்டிலும் மேம்படுவதற்கான அடிப்படை ஏதுமில்லை.
ஏற்கனவே அரசின் ஏனைய துறைகளைப் போன்று கல்வித்துறையும் லஞ்சம்,ஊழல் முறைகேடுகள் ஆகியவற்றின் மூலம் முற்றாக சீரழிந்து கிடக்கிறது.இதில் ஆசிரியர்களையும் அதிலும் குறிப்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பொருப்பை ஒப்படைத்து,இவர்களிடமே பணமும் தந்து,கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுகிறது.இதனால் இவர்கள் பள்ளி தலைமையாசிரியர் என்பதை விட ஒப்பந்ததாரராகவே உருமாற்றப்படுகின்றனர்.இவர்கள் ஏனைய ஒப்பந்ததாரர்களிடம் உள்ள கேடுகெட்ட அனைத்து பண்புகளையும் பெற்றுவிடுகின்றனர்.இப்படிப்பட்ட தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கற்பிக்கும் பணிகளில் இருந்து முற்றாக ஒதுங்கிவிடுவது பள்ளிக்கட்டிட்டம் கட்டுவதில் ஊழல் செய்து சம்பாதிப்பது ஆகிய செயல்கள் ஏனைய ஆசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,அவர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையையும் ஒன்றுமில்லாமல் செய்து அவர்களின் கற்பிக்கும் ஆர்வத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது.இது மட்டுமல்ல மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டத்திற்கு வழங்கும் நிதியை ஊராட்சிமன்றத்தலைவர் மற்றும் தலைமையாசிரியரின் பெயர்களில் கூட்டுக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இப்பணத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு பங்கை தந்துவிட்டு,ஏனையப் பணத்தை கையாடல் செய்வது தான் இவர்களின் முழுமுற்றான பணியாகவும் இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகாரவர்க்கமும்,சமூகத்தில் வசதிபடைத்தோரும் முழுக்கவே தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே படிக்கவைக்கின்றனர்.இதனால் அரசுப் பள்ளிகளை சீரழிப்பதில் அதிகாரவர்க்கத்திற்கும்,ஆட்சியாளர்களுக்கும் எவ்வித தயக்கமும் இருக்காது,ஆகவே பார்ப்பன ஜெயா கும்பல் ஆரவாரமாக அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்துமே மக்களை திசைதிருப்பும் தந்திர நடவடிக்கைகளே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டதாலேயே, அதை படிக்கும் நமது பிள்ளைகளுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக நாம் கருதிக்கொள்ளக்கூடாது.இப்போது உள்ளது போலவேதான் நிலைமைகள் அப்படியேத் தொடரும்.உயர்கல்வி கற்பது அரசு வேலைவாய்ப்புகளை பெறுவது ஆகியவை முழுமுற்றாக பணத்தால்தான் தீர்மாணிக்கப்படும்.நாயோடு உடன் பிறந்தது அதன் வால் என்றால் இந்த சமூக அமைப்போடு உடன் பிறந்தது ஊழலும்,லஞ்சமும் ஆகும்.நாய் உயிரோடு இருக்கும் வரை அதன் வால் ஆடுவதை எப்படி நம்மால் தடுத்து நிறுத்த முடியாதோ, அதே போன்றுதான் நிலவுகிற இந்த சமூக அமைப்பு இருக்கும் வரை லஞ்சம்,ஊழல் ஆகியவற்றை எவராலும் ஒழித்துவிட முடியாது.
உண்மையிலேயே லஞ்ச,லாவண்யமற்ற ஒரு சமூகத்தை நீங்கள் விரும்பினால்,அதற்கு தற்போது நிலவும் இந்த சமூக அமைப்பு முற்றாக துக்கியெறியப்பட்டு,அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் குழுக்களுக்கு வரவேண்டும்.சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் முதற்கொண்டு அரசின் அனைத்து அங்கங்களுக்குமான பணியாளர்கள் அனைவருமே உழைக்கும் மக்களால்தான் தெரிவு செய்ய படவேண்டும்.இவர்கள் தவறு இழைக்கும் போது அவர்களை திருப்பி அழைக்கும் அதிகாரமும் உழைக்குமக்கள் குழுக்களுக்கு இருக்க வேண்டும்.இதுதான் மட்டுமே லஞ்சத்தையும்,ஊழலையும் தற்போது சமூகத்தில் நிலவும் அனைத்து அநீதிகளையும் களைவதற்கான ஒரேமாற்று வழிமுறையாகும்.இதை சாதிப்பதற்கு தேவை புதிய ஜனநாயக புரட்சி.வாருங்கள் உழைக்கும் மக்களே புதியதொரு சமூக அமைப்பை உருவாக்க ஒன்று சேருவோம்! போராடுவோம் வாருங்கள்!
3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
தொடர்புடைய கட்டுரைகள்:
2..சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

3 comments:
புதிய ஜனநாயக புரட்சியில் பாராளுமன்றம் இருக்குமா?
புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
அதை எப்படி நடத்துவது?
இதற்கும் நேர்மையான பதில் தேவை.
பதிவர் 'கடவுள்'அவர்களுக்கு, கட்டாயம் நீங்கள் எழுப்பும் வினாக்களுக்கு விடையை தருகிறோம்.அதை ஒரு தனி இடுக்கையாகத்தான் கூற முடியும்.விரைவில் எதிர்பாருங்கள்.ஆரோக்கியமான விதாதத்திற்கு நன்றி.தொடர்ந்து விவாதிப்போம்
வாலை நிமிர்த்த முடியாது எனில் வெட்டிவிடுவதுதான் தீர்வாகும். ஆனால் உழைக்கும் மக்களிடையே மானமும் அறிவும் மலர்ந்து விடக்கூடாது என்பதில் ஆளும் அதிகார வர்க்கம் மிகச் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருகிறதே. டாஸ்மாக், இலவயங்கள் போன்ற எலும்புத் துண்டுகளுக்கு இரையாகிக் கிடக்கும் உழைக்கும் வர்க்கம் அவற்றைப் புறக்கணிக்கும் காலமே புதிய ஜனநாயகத்தின் விடிவாக அமையும். பாவலர் பொன்.க. புதுகை
Post a Comment